search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம்"

    • இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது.
    • மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் குரு பெயர்ச்சியை யொட்டி வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி 23-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு ஹோம பூஜை நடக்கிறது.

    5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. கோவிலில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலைமாலை, வெள்ளை அரளிமாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லை பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பயன்பெறலாம். என குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் சுசீந்திரம் தாழக்குளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேசுவரா கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர்கோவில், தாழக்குடி ஜெகதீஸ்வரர் கோவில், திருப்பதிசாரம் சடையப்பர் கோவில், அழகிய பாண்டியபுரம் மகாதேவர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குரு பகவான் சன்னதி உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்படும்.
    • தமிழ் புத்தாண்டையொட்டி வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அது போல தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு கனி காணும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின்படியும் நடப்பது வழக்கம். இதனால் சித்திரை விஷு கணி காணும் நிகழ்ச்சி இந்த ஆண்டு கேரள முறைப்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பக்தர்கள் விஷு கனி காணும் வகையில் அன்று ஒரு நாள் மட்டும் பார்வைக்கு வைக்கப்படும். தாணுமாலய சாமி சன்னதி எதிரே உள்ள செண்பகராமன் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தியின் திரு உருவம் பல வண்ண மலர்களால் வரையப்பட்டு இருக்கும். அதன் அருகே ஆள் உயர கண்ணாடி வைக்கப்பட்டு அதன் மீது தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு, காய்கனிகள் அனைத்தும் படைத்து பக்தர்கள் காணும் வகையில் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்கப்படும்.

    தமிழ் புத்தாண்டையொட்டி காலை மற்றும் மாலை வேளையில் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர்கவிதா பிரியதர்ஷினி தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் தாணுமாலய தொண்டர் அறக்கட்டளையினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதம்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
    • இன்று இந்திரன் தேராகிய சப்பரத்தில் உற்சவமும், ஆராட்டு விழாவும் நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிகள் வழங்கினர்.

    விழாவில் நேற்று சனி பிரதோஷ வழிபாட்டுடன் திருக்கல்யாண விழா நடந்தது. சனி பிரதோஷ வழிபாட்டையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் கோவிலில் உள்ள அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவிலை சுற்றி 3 முறை ஸ்ரீ பலி விழா நடந்தது.

    தொடர்ந்து தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அம்மனுக்கு திருமஞ்சள்நீராட்டு வைபவம் நடந்தது. பின்னர் அம்மனை மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் ஆசிரமம் கிராமத்தில் எடுத்து வந்து ஆசிரமம் சோழன் திட்டை அணைக்கட்டில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    மாலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து பல்லக்கில் பூமாலை, தோரணம் கட்டி ஆசிரமத்தில் இருந்து வெற்றிலை, பூ மாலை, திருமணப்பட்டு, மஞ்சள், குங்குமம், சீர்வரிசை பொருள்கள் அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக தாணுமாலய சாமி கோவிலை வந்தடைந்தனர்.

    இரவு 8 மணிக்கு மேல் அலங்கார மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த தாணுமாலய சாமி கையில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருட வாகனத்தில் திருமால் வீற்றிருக்க அவரது முன்னிலையில் தாணுமாலய சாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்பட்டது. திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக தாணுமாலய பக்தர் சங்கம் சார்பில் சந்தனம், குங்குமம், வெற்றிலை சுருள் ஆகியவை வழங்கப்பட்டது. சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க உறுப்பினர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருமணம் முடிந்த தம்பதிகளான உமா மகேஸ்வரர் மற்றும் திருமால், அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்த சங்க நிர்வாகிகளும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் இந்திரன் தேராகிய சப்பரத்தில் உற்சவமும், இரவில் ஆராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், திருக்கோவில் நிர்வாகத்தினரும் பக்த சங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.

    • திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலை ஆகியவை வழங்கப்படும்.
    • 5-ந்தேதி சப்பரத் தேரில் ரத உற்சவம் நடைபெறுகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா இன்று (சனிக்கிழமை) மாலை தொடங்குகிறது. இதையொட்டி மாலை 6 மணி அளவில் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலையில் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் வீதி உலா வருவர்.

    அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி திருக்கல்யாண விழா நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வைத்து அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் அம்மன் மண்டபத்தில் எழுந்தருளியதும் சிறப்பு பூஜை நடக்கிறது. அதைதொடர்ந்து அன்ன வாகனத்தில் ஆசிரமத்திற்கு எடுத்து வருவார்கள்.

    ஆசிரமம் சோழன் திட்டை அணைக்கட்டு கரையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில் மணமகளான அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்த பல்லக்கில் பூ மாலை, தோரணம் கட்டி, மேளதாளம் முழங்க ஆசிரமத்தில் இருந்து வீதி வழியாக பக்தர்கள் வெற்றிலை, பூ, மாலை, திருமணப்பட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூலத் தட்டுடன் மேள தாளத்துடன் ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலை வந்தடைவர்.

    அன்று இரவு 9 மணிக்கு மேல் அலங்கார மண்டபத்தில் வைத்து ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தாணுமாலயசாமி கரத்தில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருடவாகனத்தில் திருமால் வீற்றிருக்க அவரது முன்னிலையில் தாணுமாலய சாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்படும். திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலை ஆகியவை வழங்கப்படும்.

    மறுநாள் 5-ந் தேதி மாலையில் இந்திரன் தேராகிய சப்பரத் தேரில் ரத உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ஆராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
    • தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    சிவராத்திரியையொட்டி சனி பிரதோஷ விழாவும் சேர்ந்து வருவதால் அன்று நான்கு கால பூஜையுடன் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மாலை 6 மணிக்கு கோவிலில் உள்ள அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்படும். இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மூன்று முறை ஸ்ரீபலி விழா நடக்கிறது. பின்னர் தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு தங்கு அங்கி சார்த்தப்படும். நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால பூஜையும், மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு 3-வது கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறும்.

    அதிகாலை 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீ பலி விழா நடக்கிறது. சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், திருக்கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
    • திருக்கல்யாண நிகழ்ச்சியில் தாம்பூலப்பை வழங்கப்படுகிறது.

    சுசீந்திரம் தாணுமா லயன் சுவாமி கோவி லில் மாசி திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 4-ந்தேதி அறம் வளர்த்த அம்மன், பறக்கை காசி விஸ்வநாதர் கோவிலில் கதிர் குளிப்பு நிகழ்ச்சியில் அலங்கார கோலத்தில் ஆசிரமம் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.

    அன்று மாலையில் ஆலய பணியாளர்கள் அம்மனின் சார்பில் சீர் வரிசைகளை நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் அலங்கார கோலத்தில் ஆசிரமம் கோவிலில் இருந்து எழுந்தருளும் அறம் வளர்த்த அம்மன் பக்தர்கள் புடை சூழ, மேள தாளங்கள் முழங்க வாகன பவனியாக சுசீந்திரம் கோவில் வந்தடைகிறார்.

    திருக்கல்யாணம் தொடர்ந்து அன்று இரவு 7.30 மணிக்கு விஷ்ணு சுவாமி முன்னிலையில் அலங்கார மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் அறம்வளர்த்த அம்மன் கழுத்தில் சிவபெருமான் மங்கல நாண் பூட்டும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மங்கல கயிறு, தேங்காய், வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூலப்பை வழங்கப்படுகிறது.

    மறுநாள் மாலை 5 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தைப்பூசத்தை முன்னிட்டு காலை, மாலை வேளையில் வாகன பவனி நடக்கிறது.
    • நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.

    பின்னர் அங்கிருந்து அதிகாலை 5.30 மணிக்கு மேளதாளத்துடன் நெற்கதிர்களை ஊர்வலமாக கொண்டு வந்து தாணுமாலய சாமி சன்னதியில் வைப்பார்கள். அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு செய்த பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்கள் வாழ்வும் செழிப்படையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    இதேபோன்று கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அன்றைய தினம் தைப்பூசம் வருவதையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் காலை மற்றும் மாலை வேளையில் வாகனபவனியும் நடக்கிறது.

    • மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது.
    • மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மேலும் மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சாமிக்கு மேல் உள்ள 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக உள்ளது.
    • இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவனின் முகத்தோற்றம் சிவசொரூபமாகவே உள்ளது.

    தாணுமாலயசாமி கோவில் கருவறையில் லிங்க வடிவமுள்ள பெருமானின் மீது சார்த்தப்படும் தங்க கவசத்தில் சுவாமியின் உருவமும், ஒன்றின்மேல் ஒன்றாக பதினான்கு சந்திரப்பிறைகளும் அதன் மீது ஆதிசேஷனாகிய பாம்பு காட்சி அளிக்கிறது.

    14 நாட்களில் வருகின்ற சந்திரனின் பிறைகள் உச்சியில் சிறியதில் இருந்து தொடங்கி கீழ்பாகம் பெரிதாகி முடிவில் பவுர்ணமி போன்று இறைவனின் முகம் தெரிவதாக சந்திரனின் வளர்ச்சியை நமக்கு காட்டுகின்றது. 14 நாட்கள் கழித்து அமாவாசையான இருளை காண்கிறோம்.

    இறைவன் மீது கொண்ட பக்தியால் தினந்தோறும் அவரை வழிபட்டு வருவோமானால் முடிவில் மெய்ஞானமாகிய பூரண ஒளியில் இறைவனை காண முடியும். அவரை விட்டு விலக, விலக பக்தியென்ற பேரன்பு குறையும் தருணத்தில் மாயை என்ற இருளில் மூழ்குகின்றோம் என்ற உயர்ந்த தத்துவத்தையும் நமக்கு உணர்த்துகின்றது, பிறைகள் நிறைந்த கவசக்காட்சி. இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவனின் முகத்தோற்றம் சிவசொரூபமாகவே உள்ளது.

    கருவறை திருநடையில் இருந்து இறைவனை நேராக நாம் காணும் போது வலதுபுறம் சற்று தள்ளி இருப்பதை காண முடிகிறது. சிவலிங்கத்தின் அருகே இடதுபுறம் சிறிது இடைவெளியிருக்கும்

    இடத்தில் அரூபமான சக்திக்கு இடமளித்து சக்தியில்லையேல், சிவமில்லை என்ற தத்துவப்படி லிங்க வடிவில் மும்மூர்த்திகளையும் செயல்பட வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார் தாணுமாலய பெருமான். சாமிக்கு மேல் உள்ள 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக உள்ளது.

    • மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.
    • இன்று காலையில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா நாட்களில் தினமும் வாகன பவனியும், ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி களும் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெளிநாட்டினரும் தேரோட்டத்தை கண்டு ரசித்தனர். இதைத் தொடர்ந்து இரவு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும் அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம் பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் மருங்கூர் முருகபெருமான், கோட்டார் ஏழகரம் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசாமி ஆகியோர் எதிரே காட்சியளித்தனர். அப்போது அனைத்து தெய்வங்களுக்கும் தீபாராதனை நடந்தது. இரு முருகப்பெருமானும் விநாயகரும் தாணுமாலயசாமியை வலம் வந்து எதிரே நிற்க தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னும் அசைந்து அசைந்து செல்லுவதும் பின்னர் திரும்புவதுமாக பலமுறை நடந்தது.

    இதைத் தொடர்ந்து பெண்கள் குலவையிட்டு மங்கள ஒலி எழுப்பி மேளதாளங்கள் முழங்க 3 வாகனங்களில் இருந்த சாமிகளும் கோவிலை சென்ற டைந்தனர். சப்தாவர்ணம் நிகழ்ச்சியை காண குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.அய்யப்பப் பக்தர்களும் ஏராளமானோர் கோவிலில் குவிந்திருந்தனர். இதனால் இரவும் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    சப்தாவர்ணம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பெரும்பாலான பக்தர்கள் கோவிலிலேயே தங்கினார்கள். இதைத் தொடர்ந்து இன்று காலையில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.

    • சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றது.
    • சப்தம் என்றால் 7 என்று பொருள்.

    பண்டைய காலத்தில் இருந்து, மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சுசீந்திரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானது, 'சப்தாவர்ண காட்சி' ஆகும்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கூட இந்த கோவிலை காண வருகிறார்கள். சிவன்- விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் ஒன்று கூடி இந்த கோவிலில் கொன்றையடியில் அருள்பாலிப்பது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அதிசயம் ஆகும்.

    சப்தாவர்ணம்

    கோவில் மார்கழி பெருந்திருவிழாவையொட்டி 9-ம் நாள் விழாவான இன்று (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. 60 அடி உயரத்தில் 5 அடுக்கு கொண்ட சுவாமி தேர், 40 அடி உயரம் கொண்ட அம்மன் தேர் இவை தவிர 14 அடி இந்திரன் தேர் மற்றும் 28 அடி பிள்ளையார் தேரும் சுசீந்திரம் ரதவீதிகளில் வலம் வருகிறது.

    மார்கழி திருவிழாவின் 3-ம் நாள் கோட்டார் விநாயகர், வேளிமலை முருகன் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி சிலைகள் (சிவனின் மைந்தர்கள்) பெற்றோரின் தலமான சுசீந்திரத்துக்கு ஊர்வலமாக கொண்டு வருவார்கள். மைந்தர்கள் இருவரும் ஒருவாரம் தந்தையுடன் தங்கி இருந்து விழாவை சிறப்பிப்பார்கள். அவர்கள் இங்கு தங்கும் காலத்தில் தாணுமாலய சுவாமி நகர்வலம் வரும்போது அவர்களும் உடன் செல்வார்கள்.

    திருவிழாவின் 9-ம் நாள் விழாவான இன்று அவர்கள் தங்கள் தந்தையை விட்டு பிரிந்து அவரவர் இருப்பிடங்களுக்கு செல்லும் காட்சியே சப்தாவர்ணம் என்று அழைக்கப்படுகிறது.

    சப்தாவர்ணம் என்பது 7-வது பிரகாரத்தில் மட்டும் அதாவது சுசீந்திரம் நகரத்தின் பெரிய வீதியில் மட்டும் சுவாமிகள் எழுந்தருளுவது ஆகும். பெரிய வீதி என்பது 4 ரதவீதிகளையும் குறிக்கும். சப்தம் என்றால் 7 என்று பொருள். இதன் காரணமாக சப்தாவர்ணம் என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

    விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதே மனநிலையில் தெய்வங்கள் இருக்கும் என்று பக்தர்கள் உணருகிறார்கள்.

    கண்கலங்க வைக்கும்

    இன்று நள்ளிரவில் ஒரு வாகனத்தில் விநாயகரும், 2 வாகனங்களில் முருகனும் எழுந்தருளுவார்கள். இன்னொரு வாகனத்தில் சிவன் எழுந்தருளுவார். பிரம்மனின் அன்ன வாகனத்தில் அம்பாள் எழுந்தருளுவார். இவர்கள் அனைவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் காட்சி காண வந்த பக்தர்களை கண் கலங்க வைக்கும்.

    சப்தாவர்ண நிகழ்ச்சி முடிந்த உடன் பெரும்பாலான பக்தர்கள் இரவு சுசீந்திரத்தில் தங்குவார்கள். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தெப்பக் குளத்தில் நீராடி, கோவிலின் சித்திர மண்டபத்தில் நடை பெறும் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை காண செல்வார்கள். குறிப்பாக புதுமண தம்பதிகள் ஏராளமாக கூடுவார்கள்.

    ×