search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் கோவிலில் இன்று நள்ளிரவு பக்தர்களின் கண்களை குளமாக்கும் சப்தாவர்ண காட்சி
    X

    சுசீந்திரம் கோவிலில் இன்று நள்ளிரவு பக்தர்களின் கண்களை குளமாக்கும் சப்தாவர்ண காட்சி

    • சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றது.
    • சப்தம் என்றால் 7 என்று பொருள்.

    பண்டைய காலத்தில் இருந்து, மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சுசீந்திரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானது, 'சப்தாவர்ண காட்சி' ஆகும்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கூட இந்த கோவிலை காண வருகிறார்கள். சிவன்- விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் ஒன்று கூடி இந்த கோவிலில் கொன்றையடியில் அருள்பாலிப்பது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அதிசயம் ஆகும்.

    சப்தாவர்ணம்

    கோவில் மார்கழி பெருந்திருவிழாவையொட்டி 9-ம் நாள் விழாவான இன்று (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. 60 அடி உயரத்தில் 5 அடுக்கு கொண்ட சுவாமி தேர், 40 அடி உயரம் கொண்ட அம்மன் தேர் இவை தவிர 14 அடி இந்திரன் தேர் மற்றும் 28 அடி பிள்ளையார் தேரும் சுசீந்திரம் ரதவீதிகளில் வலம் வருகிறது.

    மார்கழி திருவிழாவின் 3-ம் நாள் கோட்டார் விநாயகர், வேளிமலை முருகன் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி சிலைகள் (சிவனின் மைந்தர்கள்) பெற்றோரின் தலமான சுசீந்திரத்துக்கு ஊர்வலமாக கொண்டு வருவார்கள். மைந்தர்கள் இருவரும் ஒருவாரம் தந்தையுடன் தங்கி இருந்து விழாவை சிறப்பிப்பார்கள். அவர்கள் இங்கு தங்கும் காலத்தில் தாணுமாலய சுவாமி நகர்வலம் வரும்போது அவர்களும் உடன் செல்வார்கள்.

    திருவிழாவின் 9-ம் நாள் விழாவான இன்று அவர்கள் தங்கள் தந்தையை விட்டு பிரிந்து அவரவர் இருப்பிடங்களுக்கு செல்லும் காட்சியே சப்தாவர்ணம் என்று அழைக்கப்படுகிறது.

    சப்தாவர்ணம் என்பது 7-வது பிரகாரத்தில் மட்டும் அதாவது சுசீந்திரம் நகரத்தின் பெரிய வீதியில் மட்டும் சுவாமிகள் எழுந்தருளுவது ஆகும். பெரிய வீதி என்பது 4 ரதவீதிகளையும் குறிக்கும். சப்தம் என்றால் 7 என்று பொருள். இதன் காரணமாக சப்தாவர்ணம் என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

    விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதே மனநிலையில் தெய்வங்கள் இருக்கும் என்று பக்தர்கள் உணருகிறார்கள்.

    கண்கலங்க வைக்கும்

    இன்று நள்ளிரவில் ஒரு வாகனத்தில் விநாயகரும், 2 வாகனங்களில் முருகனும் எழுந்தருளுவார்கள். இன்னொரு வாகனத்தில் சிவன் எழுந்தருளுவார். பிரம்மனின் அன்ன வாகனத்தில் அம்பாள் எழுந்தருளுவார். இவர்கள் அனைவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் காட்சி காண வந்த பக்தர்களை கண் கலங்க வைக்கும்.

    சப்தாவர்ண நிகழ்ச்சி முடிந்த உடன் பெரும்பாலான பக்தர்கள் இரவு சுசீந்திரத்தில் தங்குவார்கள். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தெப்பக் குளத்தில் நீராடி, கோவிலின் சித்திர மண்டபத்தில் நடை பெறும் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை காண செல்வார்கள். குறிப்பாக புதுமண தம்பதிகள் ஏராளமாக கூடுவார்கள்.

    Next Story
    ×