search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது

    • திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலை ஆகியவை வழங்கப்படும்.
    • 5-ந்தேதி சப்பரத் தேரில் ரத உற்சவம் நடைபெறுகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா இன்று (சனிக்கிழமை) மாலை தொடங்குகிறது. இதையொட்டி மாலை 6 மணி அளவில் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலையில் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் வீதி உலா வருவர்.

    அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி திருக்கல்யாண விழா நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வைத்து அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் அம்மன் மண்டபத்தில் எழுந்தருளியதும் சிறப்பு பூஜை நடக்கிறது. அதைதொடர்ந்து அன்ன வாகனத்தில் ஆசிரமத்திற்கு எடுத்து வருவார்கள்.

    ஆசிரமம் சோழன் திட்டை அணைக்கட்டு கரையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில் மணமகளான அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்த பல்லக்கில் பூ மாலை, தோரணம் கட்டி, மேளதாளம் முழங்க ஆசிரமத்தில் இருந்து வீதி வழியாக பக்தர்கள் வெற்றிலை, பூ, மாலை, திருமணப்பட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூலத் தட்டுடன் மேள தாளத்துடன் ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலை வந்தடைவர்.

    அன்று இரவு 9 மணிக்கு மேல் அலங்கார மண்டபத்தில் வைத்து ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தாணுமாலயசாமி கரத்தில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருடவாகனத்தில் திருமால் வீற்றிருக்க அவரது முன்னிலையில் தாணுமாலய சாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்படும். திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலை ஆகியவை வழங்கப்படும்.

    மறுநாள் 5-ந் தேதி மாலையில் இந்திரன் தேராகிய சப்பரத் தேரில் ரத உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ஆராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×