search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசி தரூர்"

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
    • பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.

    திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தனது சக ஊழியரான பிரகாஷ் என்பவரின் 2½ வயது மகனுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியான வித்யாரம்பம் நடத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். வித்யாரம்பம் சடங்கின்படி ஒரு குழந்தை தனது முதல் எழுத்துக்களை ஒரு தட்டில் அரிசியை நிரப்பி அதில் எழுத தொடங்கும். ஆசிரியர்கள், அறிஞர்கள் போன்றோர் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள்.

    பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இருப்பினும் ஒவ்வொரு நாளும் கற்றல் நடத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

    வீடியோவில் சசிதரூரின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் அனந்த பத்மநாபனுக்கு அவரது விரலால் ஓம் ஹரி ஸ்ரீ என்பதை எழுத வைப்பதுபோல் காட்சி உள்ளது.

    • நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது.
    • ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான்.

    புதுடெல்லி :

    டெல்லியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பல இடங்களுக்கு பெயர் மாற்றப்பட்டு இருப்பது குறித்து அவர் பேசினார்.

    அவர் கூறும்போது, 'ஆங்கிலேயர்களின் தெளிவற்ற பெயர்களைக் கொண்ட இடங்களின் பெயரை மாற்றுவதையும், அதற்கு பதிலாக இந்தியர்களின் பெயரை சூட்டி கவுரவப்படுத்துவதையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் பம்பாய், மெட்ராஸ் மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது என்று எனக்கு தெரியவில்லை' என கூறினார்.

    டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையை, கடமைப்பாதை என பெயர் மாற்றியது குறித்து சசிதரூர் கூறுகையில், 'இது வெறும் அரசியல். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஏனெனில் ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான். இதுபோன்ற விஷயங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

    • மணிப்பூரில் நடந்த கலவரத்தில் இதுவரை 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

    கடந்த 3-ம் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

    ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    • தனியார் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது.
    • ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாகும்.

    மும்பை :

    காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர், மும்பையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆளும் பா.ஜனதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாகும். பத்திரிகையாளர்களின் சுதந்திரத்திற்கு எங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும்.

    2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால் " இந்து பாகிஸ்தானை" அவர்கள் உருவாக்க முயற்சிப்பார்கள் என்று எச்சரித்தேன்.

    2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்த அரசு முத்தலாக் மற்றும் காஷ்மீரின் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் எனது கணிப்பு சரியாகும் நாள் தொலைவில் இல்லை என்று தோன்றியது.

    ஆனால் கொரோனா தொற்று தான் நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது. தொற்றுநோயை கையாளுவதற்கான அவசர தேவை காரணமாக நாடாளுமன்றம் செயல்படுவது ஸ்தம்பித்தது.

    தனியார் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒவ்வொரு தன்னாட்சி நிறுவனத்திற்கும் தலைமை பதவிக்கு ஆட்களை நியமிக்கும்போது அவர்களின் அரசாங்க விசுவாசம் சோதிக்கப்படுகிறது.

    சுதந்திரமான மற்றும் நேர்மையான நபர்களை நியமித்ததன் மூலம் தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி அதிகாரம் காப்பாற்றப்பட்ட காலம் முன்பு இருந்தது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மற்றும் ஜே.எம். லிண்டே ஆகியோரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2024 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது.
    • நாடு முழுவதும் சுவடு பதித்துள்ள ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ்தான்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, எதிர்க்கட்சிகளை ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒன்றுபடுத்தி இருக்கிறது.

    எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்று சேரவும், ஒருவர் ஓட்டை மற்றவர் பிரிப்பதை நிறுத்தவும் ஒரு காரணத்தைக் கண்டுள்ளன. 2024 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது.

    தங்கள் மாநிலங்களில் காங்கிரசை எதிர்த்து வந்த டெல்லியின் ஆம் ஆத்மி, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ், உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி, தெலுங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி, கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவை ஒன்றுபட்டுள்ளன.

    ஒன்றுபட்டால் வாழ்வோம், பிரிந்தால் வீழ்வோம் என்ற பழமொழியின் உண்மையை பல கட்சிகள் உணரத்தொடங்கி உள்ளன.

    நாடு முழுவதும் சுவடு பதித்துள்ள ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். நாடாளுமன்ற தேர்தலில் 200 இடங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும்தான் நேரடி போட்டி.

    மற்ற எதிர்க்கட்சிகள் ஒரு மாநிலத்தில் வலுவாக இருக்கின்றன. மேலும் ஒன்றல்லது 2 மாநிலங்களில் இருக்கின்றன. இந்த சூழ்நிலைகளில், நாங்கள் உண்மையில் ஒரு மாற்றை வழங்குவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிப்போம்.

    நான் கட்சித்தலைவராக இருந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கு சிறிய கட்சிகளில் ஒன்றை எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஊக்குவிப்பேன். எனது பார்வையில், ஒற்றுமைதான் முக்கியம்.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை அவரது பாட்டி இந்திராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு இணையாகப் பார்க்கிறீர்களா என கேட்கிறீர்கள். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலும், பதவி பறிப்பிலும் மக்களின் அனுதாபம் கிடைத்திருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியின் தலைவருக்கு சிறைத்தண்டனை விதித்து, நாடாளுமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை தடுப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மக்கள் உணர்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது
    • எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும்.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட அறிக்கை, நாட்டையே அதிர்வில் ஆழ்த்தி உள்ளது.

    இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசு தரப்பில் ஏற்காத நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அலுவல் எதையும் நடத்த முடியாமல் முடங்கிப்போயின.

    இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாடு சந்தித்து வருகிற பிரச்சினைகளை விவாதிப்பதற்கான இடம்தான் பாராளுமன்றம். இதன் மூலம், எம்.பி.க்களின் அக்கறைகளைப் பற்றியும், எம்.பி.க்கள் எவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் குறித்தும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

    ஆனால் துரதிரஷ்டவசமாக மத்திய அரசு இதன் நன்மையை கண்டு கொள்ள வில்லை. எனவேதான் அவர்கள் (அரசில் அங்கம் வகிக்கிறவர்கள்) விவாதங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதன் விளைவுதான், நாம் பாராளுமன்றத்தின் 2 நாட்களை இழந்து இருக்கிறோம்.

    அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது, நாட்டின் மக்களைப் பாதிக்கிறது என்பதால்தான் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு விரும்புகின்றன. இது போதுமான முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், அரசு விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. ஆனால் தனக்கு தர்ம சங்கடமாக அமைகிற எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க அரசு விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையொட்டி சசி தரூருக்கு பதில் அளிப்பதுபோல பா.ஜ.க. எம்.பி. மகேஷ் ஜேத்மலானி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தூண்டுதலால்தான் அதானியின் நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு செய்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

    இதில் மத்திய அரசு செய்வதற்கு என்ன இருக்கிறது? இதில் மத்திய அரசின் பங்களிப்பு என்ன என்பதை யாரும் கூறவில்லை. எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். அவர்கள் சில முதலீடுகளைச் செய்வது என்று தீர்மானித்து செயல்பட்டிருக்கிறார்கள்.

    இந்த முதலீடுகளில் தவறுகள் நேர்ந்திருந்தால் இது பற்றி இந்திய பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி) மற்றும் பாரத ரிசர்வ் வங்கிதான் விசாரிக்கும். அவர்கள் விசாரித்து அதன் அறிக்கை வரட்டும். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர்.
    • பண்ட் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10-ல் சரியாக ஆடவில்லை.

    கிறிஸ்ட்சர்ச்:

    இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் மழையால் பாதியில் ரத்தானது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் இன்று நடைபெறுகிறது.

    இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி ஆடி வருகிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சனுக்கு முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது போட்டியில் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பிடித்தார். இந்நிலையில் அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட சரியாக ஆடாமல், ரன்களை குவிக்காமல் இருக்கிறார்.

    இதையடுத்து ரசிகர்கள் அணியில் இருந்து ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளித்து விட்டு சாம்சனை அணியில் ஆட வைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 3-வது போட்டியிலும் சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை.

    இந்நிலையில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து ரிஷப் பண்ட் ஓய்வு எடுக்க வேண்டும் என சசி தரூர் பரிந்துரைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    பண்ட் 4-வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரை ஆதரிப்பது அவசியம் என வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகிறார். பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர். அவர் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10-ல் சரியாக ஆடவில்லை.

    சாம்சனின் ஒருநாள் போட்டிகளில் சராசரி 66. அவர் தனது கடைசி 5 போட்டிகளிலும் ரன்களை அடித்துள்ளார் ஆனாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    • காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.
    • பொதுத் தேர்தல் போல் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    பொதுத்தேர்தல் போல் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டன. அதன்பின் எல்லா மாநிலங்களில் இருந்தும் ஓட்டுப் பெட்டிகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    தமிழகத்தில் பதிவான ஓட்டுகள் 4 பெட்டிகளில் உள்ளன. அந்தப் பெட்டிகள் விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன.

    இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

    முதலில் அனைத்து ஓட்டு பெட்டிகளையும் திறந்து மொத்தமாக டிரம்மில் கொட்டி கலக்கப்படும். எந்த மாநிலத்தில் யாருக்கு எவ்வ ளவு வாக்குகள் என்பதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலந்த பிறகு நூறு நூறாக பண்டல் போடப்படும். அதன் பிறகு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சரி பார்க்கப்படும். பிறகு வேட்பாளர் வாரியாக வாக்குகள் பிரிக்கப் பட்டு எண்ணப்படும்

    ஓட்டு எண்ணிக்கை முடிந்து இன்று பிற்பகலில் முடிவுகள் வெளியாகும். அப்போது காங்கிரசின் புதிய தலைவர் யார்? என்பது தெரிந்துவிடும்.

    • இரு வேட்பாளர்களும் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.
    • நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி:

    2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த பின்னர், தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டுவருகிறார். ஆனால் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியின் மூடுத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கினர். அதேசமயம் ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் ஆக்குவதற்கு ஒரு குழுவினர் தீவிரம் காட்டினர். ஆனால் தலைவர் பதவியை ஏற்க ராகுல் சம்மதிக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே (வயது 80), சசி தரூர் (வயது 66) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கின்றனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களிக்கின்றனர். பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பார்.

    மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் வாக்குச் சீட்டுகள் ஒன்றாக கலக்கப்படும். 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 24 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சி தனது 137 ஆண்டு கால வரலாற்றில், தலைவர் பதவிக்கு 6-வது முறையாக உள்கட்சி தேர்தலை சந்திக்கிறது.
    • நேரு-காந்தி குடும்பத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர் நாற்காலி வெளியே செல்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சிக்கு வயது 137. இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டிருப்பது இது 6-வது முறை ஆகும்.

    இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார்.

    இன்றைய தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் என இருவர் களத்தில் நின்றாலும், யார் வெற்றி பெற்றாலும் அவர் தென் மாநிலத்தவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். மல்லிகார்ஜூன கார்கே, நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தை சேர்ந்த மூத்த தலைவர். அதே போன்று சசி தரூர் மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் ஆவார்.

    137 ஆண்டு கால காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வயது 80. சசி தரூருக்கு வயது 66.

    9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் ஓட்டு போட்டு, இவர்களில் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்போகிறார்கள்.

    இதற்கான வாக்குப்பதிவு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் சென்னை சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைமையகங்களிலும் இன்று நடக்கிறது.

    மல்லிகார்ஜூன கார்கேயும் சரி, சசி தரூரும் சரி இருவருமே, இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பம் நடுநிலை வகிக்கிறது, என்கிறார்கள்.

    ஆனாலும் மல்லிகார்ஜூன கார்கே, நேரு குடும்பத்தின் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். சசி தரூர், ஐ.நா. சபையின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விட்டு காங்கிரசில் சேர்ந்து அரசியல் களத்தில் குதித்தவர். அதனால்தானோ என்னவோ அவர் தன்னை மாற்றத்துக்கான வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

    இந்த தேர்தலின் முக்கியத்துவம் என்று எதைச்சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த விரிவான பதில் இது-

    "காங்கிரஸ் கட்சி தனது 137 ஆண்டு கால வரலாற்றில், தலைவர் பதவிக்கு 6-வது முறையாக உள்கட்சி தேர்தலை சந்திக்கிறது.

    ஊடகங்கள் 1939, 1950, 1997, 2000 ஆகிய 4 தேர்தல்களை முக்கியமாக காட்டுகின்றன. ஆனால், 1977-ம் ஆண்டும் தேர்தல் நடந்தது. அதில் பிரமானந்த ரெட்டி தலைவர் ஆனார்.

    பொதுவாகவே எப்போதுமே இத்தகைய பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் 'ஒருமித்த கருத்து மாடல்' என்பதில் நான் நம்பிக்கை வைத்து வந்துள்ளேன். நேருவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்த அணுகுமுறையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தவர் காமராஜர்தான்.

    என்னைப் பொறுத்தமட்டில், அமைப்பு தேர்தல்கள், உள்ளபடியே கட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்பதில் பெரிதான நம்பிக்கை இல்லை. தனிப்பட்ட நோக்கங்களை வேண்டுமானால் அது நிறைவேற்றலாம். ஆனால் ஒரு கூட்டுணர்வை உருவாக்குவதில் அவற்றின் மதிப்பு சந்தேகத்துக்கு உரியதுதான். ஆனாலும் கூட தேர்தல்கள் நடப்பது ஒரு விதத்தில் குறிப்பிடத்தக்கதுதான்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்துடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தல் அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் குறைந்ததுதான். இந்த இந்திய ஒற்றுமை நடைபயணம், காங்கிரசுக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் 1992-96 ஆண்டுகளில் நரசிம்மராவ் தலைவராக இருந்தார். அதன் பின்னர் சீதாராம் கேசரி தலைவர் பதவிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து 1998-ல் காங்கிரஸ் தலைவர் ஆனவர் சோனியா காந்தி. 2017 வரை அவர் நீடித்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ராகுல் காந்தி தலைவர் ஆனார். 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் பதவி விலக, மீண்டும் சோனியா காந்தி தலைவர் பதவிக்கு வந்தார்.

    இப்போது மீண்டும் நேரு-காந்தி குடும்பத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர் நாற்காலி வெளியே செல்கிறது. அந்த நாற்காலியில் அமரப்போகிறவர் மல்லிகார்ஜூன கார்கேவா அல்லது சசி தரூரா, அவர்கள் எத்தனை காலம் அந்த பதவியை அலங்கரிப்பார்கள். அறிவதற்கு வரலாறு ஆவலாய் காத்திருக்கிறது.

    • காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 17-ந்தேதி நடக்கிறது.
    • 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல், 17-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும், முன்னாள் மத்திய மந்திரி சசிதரூருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    இருவரும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    வாக்குப்பதிவு ஏற்பாடுகள்

    இந்த தேர்தலில் சென்னை உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைநகரங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் 17-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மேலும் டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்திலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இதற்கான விரிவான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஓட்டு பெட்டிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த தேர்தலில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் தங்கள் வாக்கினை சொந்த மாநிலங்களில் அல்லது டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்தான் (இரண்டில் ஒன்றை அவர்கள் விருப்பபப்படி தேர்வு செய்து) செலுத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் நேற்று அறிவித்துள்ளது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஓட்டு போடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாரபட்சமின்றி இருக்கவும், தேர்தல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த தகவல்களை கட்சி மேலிடம் சார்பில் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.
    • நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன்.

    சென்னை :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த நிர்வாகியும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தமிழக காங்கிரசில் உள்ள தேசிய கமிட்டி உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்பதற்காக நேற்று சென்னை வந்தார்.

    சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து சசிதரூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். புத்துயிர் ஊட்டுவேன். இதுவரை அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். தனக்கு பிரசாரம் மேற்கொள்ள நேரம் குறைவாக உள்ளது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆதரவு கேட்டு வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சசிதரூர் சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார்.

    ×