search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய விளையாட்டு போட்டி"

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றுள்ளது.
    • துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

    இதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41 நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது.

    துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங்; வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்திய அணி இதுவரை மொத்தம் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

    • துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் பதக்கம் வென்றார்.
    • துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றுள்ளது.

    ஹாங்சோவ்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டி அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் 2 பதக்கங்களை வென்று அசத்தினார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதேபோல், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி  அணிவெள்ளி வென்றது.

    • ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 3 இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
    • மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்குகின்றன. தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது.

    இதற்கிடையே, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. 3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • மற்றொரு தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன் 2-வது இடத்தை பிடித்தார்.
    • ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் 10.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

    சண்டிகார்:

    இந்திய கிராண்ட் பிரீ 5 தடகள போட்டி சண்டிகாரில் நேற்று நடந்தது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடர் ஓட்டத்துக்கான தேர்வாக இது இருந்தது.

    400 மீட்டர் ஓட்டம் ஏ மற்றும் பி என இரு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் முதலிடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 52.40 வினாடியில் கடந்தார்.

    ஹிமான்சி மாலிக், ஐஸ்வர்யா மிஸ்ரா போன்ற முன்னணி வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு அவர் முதல் இடத்தை பிடித்தார். 54.40 வினாடியில் கடந்தது அவரது சிறந்த நிலையாகும்.

    மற்றொரு தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன் 2-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 52.57 வினாடியில் கடந்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த பி. ராஜி 53.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

    ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் 10.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

    • கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
    • ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது.

    கோவை:

    ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள வீரர்-வீராங்கனைகள் பட்டியலை தேசிய விளையாட்டு ஆணையம் வெளியிட்டு உள்ளது.

    இதில் கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களில் வித்யா 400 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டிக்கு நித்யா தேர்வாகி இருக்கிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ள நித்யா, வித்யா ஆகிய 2 பேரும் சிறு வயது முதலே தடகள விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர்கள் பள்ளிப்படிப்பு மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார்கள். இது அவர்களின் தந்தை ராமராஜூக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் மகள்களின் எதிர்கால கனவுக்கு உறுதுணையாக இருந்தார்.

    ராமராஜ், கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வாடகை வீட்டில் வசித்த போதிலும் ராமராஜ் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் குழந்தைகளை ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். அங்கு வித்யாவும், நித்யாவும் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கடினமாக படித்தனர். தடகள விளையாட்டு போட்டிகளிலும் ஜொலித்தனர்.

    இது அவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது. வித்யா தற்போது கேரள மாநில ரெயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நித்யா சென்னை வருமான வரித்துறையில் அதிகாரியாக உள்ளார்.

    சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது சகோதரிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வித்யா கூறுகையில், நாங்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக பங்கேற்பது பெருமையாக உள்ளது. இதற்காக நாங்கள் விளையாட்டு மட்டுமின்றி பொருளாதார நிலையிலும் பல்வேறு தடைகளை தாண்டி இந்த நிலைக்கு வந்து உள்ளோம். இது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். அரியானா மாநிலம் சண்டிகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வித்யா பதக்கம் வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

    நித்யா கூறுகையில், நாங்கள் 8-ம் வகுப்பு படிக்கும்போதே தடகள போட்டிகளில் சாதிக்க தொடங்கி விட்டோம். 10-ம் வகுப்பு படித்தபோது தேசியஅளவில் முதலாவதாக பதக்கத்தை தட்டிப்பறித்தேன். நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் நாங்கள் இருவரும் பங்கேற்பது மனதளவில் சற்று நெருக்கடியாக உள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அடுத்தாண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும்.

    நாங்கள் இதுவரை தடகள போட்டிகளுக்காக சொந்த காசை செலவழித்து வருகிறோம். ஆசிய விளையாட்டு போட்டியில் பெரியளவில் சாதித்தால் எங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடை க்க வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் சகோதரிகள் பங்கேற்பது மிகவும் அரிதான நிகழ்வு தான். அப்படியான நிலையில் நாங்கள் 2 பேரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றால் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை கிடைக்கும்.

    எங்களின் தந்தை ராமராஜ் கோவையில் தற்போதும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தாயும், தந்தையும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தர வேண்டும். வசதியாக வாழவைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நாஙகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று அடுத்தாண்டு நடக்க உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவோம், நிச்சயமாக சாதனை படைப்போம் என்று தெரிவித்து உள்ளார்.

    • சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு குழு போட்டியில் பங்கேற்க ஆசிய அளவில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகளுக்கு தான் அனுமதி அளிக்க வேண்டும் என்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிபந்தனையாகும். இதனால் ஆசிய தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய ஆண்கள் கால்பந்து அணி, 11-வது இடத்தில் இருக்கும் இந்திய பெண்கள் கால்பந்து அணி ஆகியவற்றுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குரும் தலையிட்டு இந்திய கால்பந்து அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் உள்பட பலரும் வற்புறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் அணிகள் பங்கேற்பதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி இந்திய கால்பந்து அணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து நேற்று மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வருகிற ஆசிய விளையாட்டு போட்டியில் நமது தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி தகுதி பெறாத இவ்விரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய கால்பந்து அணிகளுக்கு விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கி இருப்பதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே, பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.

    இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா (65 கிலோ), உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளிக்க ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இருவரும் ஆசிய விளையாட்டுக்கான இந்திய மல்யுத்த அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுவதால் 2-வது கட்ட வீரர்களே அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    • இந்தியாவுக்காக ஆடுவது உண்மையிலேயே பெருமையான உணர்வாகும்.

    மும்பை:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சமீபத்தில் அறிவித்தது.

    உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுவதால் 2-வது கட்ட வீரர்களே அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணியின் கேப்டனாக சி.எஸ்.கே.வின் தொடக்க வீரரும், நம்பிக்கை நட்சத்திரமுமான ருதுராஜ் கெய்க் வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம்துபே, ஜிதேஷ்சர்மா, வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஸ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மவி, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற்று உள்ளனர். யாஷ் தாக்கூர், சாய்கிஷோர், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, சாய் சுதர்ஷன் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட் டுப் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படு வதை உறுதி செய்வதே எனது நோக்கமாகும்.

    எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சிறப்பானதாக கருதுகிறேன். ஆசிய விளையாட்டு போட்டியில் நாட்டிற்காக பதக்கம் வெல்வதில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகம் அளிக்கும். இந்தியாவுக்காக ஆடுவது உண்மையிலேயே பெருமையான உணர்வாகும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று.

    இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆசிய போட்டிக்கான இந்திய ஆண்கள் அணி விவரம் வருமாறு:

    ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங்.

    மாற்று வீரர்களின் பட்டியலில் யாஷ் தாக்குர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டுக்கான இந்திய பெண்கள் அணி விவரம் வருமாறு:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, திதாஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னுமணி, கனிகா அகுஜா, உமா ஷெட்டி, அனுஷா பரேட்டி.

    • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வுக்கான போட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி நடத்துகிறது. ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணி வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பி வைக்க ஜூலை 15-ந் தேதி கடைசி நாளாகும்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து இருப்பதுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியை தங்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சத்யவார்த் காடியன், ஜிதேந்தர் கின்ஹா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளது. அவர்கள் தங்கள் எடைப்பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுடன் ஆகஸ்டு 5 முதல் 15-ந் தேதிக்குள் நடைபெறும் தகுதி போட்டியில் ஒரு முறை மோதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.
    • பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் ஆசிய, காமன் வெல்த்தில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கடந்த 7-ந்தேதி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.

    அன்றைய தேதியில் பாலியல் புகார் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சாக்ஷி மாலிக் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம். தீர்வு கிடைக்காவிட்டால் புறக்கணிப்போம். இது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

    நான், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் ஒன்றாகவே இணைந்து நிற்கிறோம். ஒன்றாகவே இணைந்து நிற்போம். 15-ந் தேதிக்கு பிறகு போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்வோம். எங்களை சமாதானப்படுத்த தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.

    பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரிஜ்பூஷன் சிங்கை வருகிற 15-ந்தேதிக்குள் கைது செய்யாவிட்டால் எங்களது போராட்டம் மீண்டும் நடைபெறும் ஜந்தர்மந்தரில் இருந்து 17-ந்தேதி போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம். புகார் கொடுத்தவர்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார். மிரட்டல் காரணமாக புகார் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள் அச்சத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்தோனேசியா சென்றுள்ள ஜப்பான் அணியில் 4 வீரர்கள், இரவு விடுதி ஒன்றில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். #AsianGames #AsianGame2018 #Japan
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் கூடைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 4 வீரர்கள் போட்டி நன்னடத்தை விதிகளை மீறியதற்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வியாழன் அன்று கத்தாருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர், ஓட்டல் ஒன்றுக்கு அணியின் சீருடையுடன் சென்றுள்ள அந்த 4 வீரர்களும் மது அருந்தியுள்ளனர். அப்போது, ஜப்பானை சேர்ந்த உள்ளூர் பெண் அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். 

    இதனை அடுத்து, 4 பெண்களுடன் ஓட்டல் அறைக்குள் நுழைந்த 4 வீரர்களும் மறுநாள் காலை வரை அங்கு இருந்துள்ளனர். விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறி போட்டி விதிமுறைகளை மீறிய அந்த 4 வீரர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

    அதற்கு முன்னதாக அவர்கள் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு திரும்ப அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை முடிந்த பின்னர், தண்டனை அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூறியுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த ஆசிய போட்டியின் போது, பத்திரிகையாளர் ஒருவரின் உடமையை திருடி ஜப்பானை சேர்ந்த நீச்சல் வீரர் தோமிடா 18 மாத தடைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×