search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • தமிழக வீரர்கள் 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர்.

    19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா இன்றுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.

    ஆசிய வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடி சாதனை படைத்த வீரர்- வீராங்கனைகளுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட நம் வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்துகள்.

    குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் - 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.

    நம் வீரர்- வீராங்கனையரின் இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள்- இளம்பெண்களை விளையாட்டுத்துறையை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கச் செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
    • வருகிற 10-ந் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி முதல் முறையாக 3 இலக்க பதக்கத்தை தொட்டு புதிய வரலாறு படைத்தது.

    100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். இது அவர் தனது 'எக்ஸ்' பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனையாகும். 100 பதக்க மைல்கல்லை எட்டி வியக்கத்தக்க சாதனையால் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தியாவின் இந்த வரலாற்று சாதனைக்கு வழி வகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் நம்மை பெருமைப்படுத்திவிட்டனர்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவும், வருகிற 10-ந் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.

    இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.
    • இதில் 16- 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.

    ஆரம்பம் முதலே இந்திய அணியின் அதிரடியாக ஆடி கோல்களை போட்டனர். முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 7-0 என முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 16-0 என அபார வெற்றி பெற்றது.

    லலித் உபாத்யாய், வருண் குமார் ஆகியோர் தலா 4 கோல்களும், மன்தீப் சிங் 3 கோல்களும், அபிஷேக், அமித் ரோஹிதாஸ், ஷம்ஷெர் சிங், சஞ்சய் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    • ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 3 இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
    • மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்குகின்றன. தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது.

    இதற்கிடையே, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. 3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • மற்றொரு தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன் 2-வது இடத்தை பிடித்தார்.
    • ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் 10.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

    சண்டிகார்:

    இந்திய கிராண்ட் பிரீ 5 தடகள போட்டி சண்டிகாரில் நேற்று நடந்தது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடர் ஓட்டத்துக்கான தேர்வாக இது இருந்தது.

    400 மீட்டர் ஓட்டம் ஏ மற்றும் பி என இரு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் முதலிடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 52.40 வினாடியில் கடந்தார்.

    ஹிமான்சி மாலிக், ஐஸ்வர்யா மிஸ்ரா போன்ற முன்னணி வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு அவர் முதல் இடத்தை பிடித்தார். 54.40 வினாடியில் கடந்தது அவரது சிறந்த நிலையாகும்.

    மற்றொரு தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன் 2-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 52.57 வினாடியில் கடந்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த பி. ராஜி 53.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

    ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் 10.01 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

    • கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
    • ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது.

    கோவை:

    ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள வீரர்-வீராங்கனைகள் பட்டியலை தேசிய விளையாட்டு ஆணையம் வெளியிட்டு உள்ளது.

    இதில் கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களில் வித்யா 400 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டிக்கு நித்யா தேர்வாகி இருக்கிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ள நித்யா, வித்யா ஆகிய 2 பேரும் சிறு வயது முதலே தடகள விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர்கள் பள்ளிப்படிப்பு மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார்கள். இது அவர்களின் தந்தை ராமராஜூக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் மகள்களின் எதிர்கால கனவுக்கு உறுதுணையாக இருந்தார்.

    ராமராஜ், கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வாடகை வீட்டில் வசித்த போதிலும் ராமராஜ் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் குழந்தைகளை ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். அங்கு வித்யாவும், நித்யாவும் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கடினமாக படித்தனர். தடகள விளையாட்டு போட்டிகளிலும் ஜொலித்தனர்.

    இது அவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது. வித்யா தற்போது கேரள மாநில ரெயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நித்யா சென்னை வருமான வரித்துறையில் அதிகாரியாக உள்ளார்.

    சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது சகோதரிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வித்யா கூறுகையில், நாங்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக பங்கேற்பது பெருமையாக உள்ளது. இதற்காக நாங்கள் விளையாட்டு மட்டுமின்றி பொருளாதார நிலையிலும் பல்வேறு தடைகளை தாண்டி இந்த நிலைக்கு வந்து உள்ளோம். இது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். அரியானா மாநிலம் சண்டிகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வித்யா பதக்கம் வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

    நித்யா கூறுகையில், நாங்கள் 8-ம் வகுப்பு படிக்கும்போதே தடகள போட்டிகளில் சாதிக்க தொடங்கி விட்டோம். 10-ம் வகுப்பு படித்தபோது தேசியஅளவில் முதலாவதாக பதக்கத்தை தட்டிப்பறித்தேன். நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் நாங்கள் இருவரும் பங்கேற்பது மனதளவில் சற்று நெருக்கடியாக உள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அடுத்தாண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும்.

    நாங்கள் இதுவரை தடகள போட்டிகளுக்காக சொந்த காசை செலவழித்து வருகிறோம். ஆசிய விளையாட்டு போட்டியில் பெரியளவில் சாதித்தால் எங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடை க்க வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் சகோதரிகள் பங்கேற்பது மிகவும் அரிதான நிகழ்வு தான். அப்படியான நிலையில் நாங்கள் 2 பேரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றால் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை கிடைக்கும்.

    எங்களின் தந்தை ராமராஜ் கோவையில் தற்போதும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தாயும், தந்தையும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தர வேண்டும். வசதியாக வாழவைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நாஙகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று அடுத்தாண்டு நடக்க உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவோம், நிச்சயமாக சாதனை படைப்போம் என்று தெரிவித்து உள்ளார்.

    • ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளன.
    • இந்திய மகளிர் கால்பந்து அணியில் மூன்று தமிழக விராங்கனைகள் இடம்பிடித்தனர்.

    1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ம் தேதி துவங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.

     

    இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில், ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை இந்திய மகளிர் கால்பந்து அணியில் தமிழகத்தை சேர்ந்த சௌமியா, இந்துமதி மற்றும் சந்தியா என மூன்று வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள்: ஸ்ரேயா ஹூடா, சௌமியா நாராயணசாமி, பந்தோய் சானு, அஷ்தலதா தேவி, ஸ்வீடி தேவி, ரிது ராணி, டால்மியா சிபீர், ஆஸ்டம் ஒரான், சஞ்சு, ரஞ்சனா சானு, சங்கீதா பாஸ்ஃபோர், பிரியண்கா தேவி, இந்துமதி கதிரேசன், அஞ்சு தமங், சௌமியா குகுலோத், தங்மேய் கிரேஸ், பியாரி சாசா, ஜோதி, ரேனு, பாலா தேவி, மனிஷா மற்றும் சந்தியா ரங்கநாதன்.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது. இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்தியா அனுப்பும் 'மெகா' எண்ணிக்கை கொண்ட அணி இதுதான். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் அதிகபட்சமாக 572 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டு 16 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 34 வீரர்கள், 31 வீராங்கனைகள் அடங்குவர். இதற்கு அடுத்தபடியாக கால்பந்து அணியில் 44 வீரர், வீராங்கனைகளும், ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

    பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ரக்பி ஆகிய விளையாட்டுகளில் வீரர்கள் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா (65 கிலோ) தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும், அவரது பெயரை மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்கும் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்ததால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் இடம் பெற்று இருப்பவர்களில் நீரஜ் சோப்ரா, ஜோதி யர்ராஜி (தடகளம்), பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து (பேட்மிண்டன்), ஷிவதபா, நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பவானி தேவி (வாள்வீச்சு), பிரித்விராஜ் தொண்டைமான், மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), சரத்கமல், சத்யன், மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), மீராபாய் சானு (பளுதூக்குதல்), டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி (செஸ்), சவுரவ் கோஷல், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ்), ரோகன் போபண்ணா, ராம்குமார் (டென்னிஸ்) உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    • சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு குழு போட்டியில் பங்கேற்க ஆசிய அளவில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகளுக்கு தான் அனுமதி அளிக்க வேண்டும் என்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிபந்தனையாகும். இதனால் ஆசிய தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய ஆண்கள் கால்பந்து அணி, 11-வது இடத்தில் இருக்கும் இந்திய பெண்கள் கால்பந்து அணி ஆகியவற்றுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குரும் தலையிட்டு இந்திய கால்பந்து அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் உள்பட பலரும் வற்புறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் அணிகள் பங்கேற்பதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி இந்திய கால்பந்து அணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து நேற்று மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வருகிற ஆசிய விளையாட்டு போட்டியில் நமது தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி தகுதி பெறாத இவ்விரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய கால்பந்து அணிகளுக்கு விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கி இருப்பதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே, பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம்.
    • தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா. ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஜன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார்களை தெரிவித்து டெல்லியில் மல் யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    முன்னணி வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும் இப்போராட்டம் தொடர்ந்தபடி இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோருக்கு தகுதி தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு நேரடியாக கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் இருவருக்கும் இந்த சலுகையை இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி வழங்கியது. இதற்கு இளம் வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அவர்கள் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மற்றொரு வீராங்கனையான சாக்ஷி மாலிக் கூறியதாவது:-

    நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராவதற்கு அரசாங்கத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தோம். ஆகஸ்டு 10-ந் தேதிக்கு பிறகு தகுதியை சோதிக்குமாறு கோரியிருந்தோம். இதையடுத்து அரசாங்கம் கால அவகாசம் வழங்கியது.

    வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் அரசாங்கத்தின் முடிவு, மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சியாகும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற காரணத்திற்காக எனது பெயரும் பரிசீலிக்கப்படும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால் நான் மறுத்து விட்டேன். தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை.

    அனைவருக்கும் நீதியும் நியாயமான தேர்வுக்கான வாய்ப்பும் கிடைக்க வேண்டும். மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை உடைக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது.

    அரசாங்கத்தின் இந்த செயலுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.

    இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா (65 கிலோ), உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளிக்க ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இருவரும் ஆசிய விளையாட்டுக்கான இந்திய மல்யுத்த அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×