search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yediyurappa"

    • தங்கள் சமூகத்தினருக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக பஞ்சாரா சமூகத்தினர் கூறி உள்ளனர்.
    • கர்நாடக மக்கள்தொகையில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சேர்ந்து 24 சதவீதம் உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பட்டியலின சமூகத்திற்கான இடஒதுக்கீடு தொடர்பாக, பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் புதிய முடிவை எடுத்தது. கல்வி மற்றும் வேலைகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து பஞ்சாரா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடஒதுக்கீட்டு சதவீதத்தை பிரித்ததால் தங்கள் சமூகத்தினருக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக பஞ்சாரா சமூகத்தினர் கூறி உள்ளனர்.

    இன்று ஷிமோகா மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். பேரிகார்டுகளை தள்ளிவிட்டு முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மத்திய அரசின் பரிந்துரையை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பஞ்சாரா சமூகத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    பஞ்சாரா சமூகம் மாநிலத்தில் ஒரு பட்டியலின சமூகத்தின் துணை சாதியாகும். கர்நாடக மக்கள்தொகையில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சேர்ந்து 24 சதவீதம் உள்ளனர்.

    முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 2பி பிரிவில் இருந்து முஸ்லிம்களை நீக்கவும் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, முஸ்லிம் தலைவர்களும் பாஜக அரசை விமர்சித்துள்ளனர்.

    வொக்கலிகர்கள் மற்றும் வீரசைவ-லிங்காயத்துகளுக்கு அந்த 4 சதவீதத்தை பிரித்து கொடுக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா இன்று சென்றார்.
    • சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் எடியூரப்பாவின் காரை சூழ்ந்துகொண்டு கெரோ செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தில் பாஜக-வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா இன்று சென்றார்.  விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு கெரோ செய்தனர். இதனால் அப்செட் ஆன எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.

    • இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
    • ராகுல் காந்திக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

    விஜயாப்புரா :

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொண்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் எங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. எங்கள் இரட்டை என்ஜின் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கூறி வருகிறோம். கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

    பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இணையானவர் இல்லை. வெளிநாட்டிற்கு சென்று நமது நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று ராகுல் காந்தி குறை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம்.
    • தேவகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்தார். அவருக்கு நேற்று சபையில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன்பிறகு இறுதியில் எடியூரப்பா உணர்ச்சி பூர்வமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ள வரை பா.ஜனதாவை பலப்படுத்த நேர்மையாக உழைப்பேன். கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சிலர் மோடி, பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்க்கும் மாய உலகில் வாழ்கிறார்கள். இதனால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அவர்களின் இந்த மாய உலகம் மிக விரைவிலேயே நொறுங்கிவிடும்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். எனக்கு பா.ஜனதா அநீதி இழைத்ததாகவும், புறக்கணித்து விட்டதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடி என்னை ஓரங்கட்டியதே இல்லை. பிரதமர் மோடி எனக்கு உரிய பதவி மற்றும் கவுரவத்தை வழங்கினார். இதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    கட்சி எனக்கு கொடுத்த பதவி, வாய்ப்புகளை நான் மறக்கவே மாட்டேன். தேவகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி. அவரை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இந்த வயதிலும் தேவகவுடா பிரச்சினைகளை பற்றி பேசுகிறார். நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம். நான் அங்கு பயிற்சி பெற்றதால் தான் எனக்கு பல பதவிகள் கிடைத்தன.

    நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனால் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
    • வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை.

    பெங்களூரு :

    சிவமொக்காவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சிவமொக்கா மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (நேற்று) மட்டும் ரூ.1,000 கோடிக்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயரை சூட்ட மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு ஒரு வரைவு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    ஷராவதி அணையில் நீரில் மூழ்கிய நிலங்களின் விவசாயிகளுக்கு மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதுகுறித்து ஒரு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். சிவமொக்கா-சிகாரிபுரா-ராணிபென்னூர் ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இதற்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை. குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவமொக்காவின் வளர்ச்சிக்கு இருபெரும் தலைவர்களான எடியூரப்பாவும், ஈசுவரப்பாவும் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    • கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கும்.
    • எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யக்கூறி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையோ, கட்சி மேலிடமோ ஆர்வம் காட்டவில்லை. இதன் ரகசியம் என்ன என்று எனக்கு தெரியும்.

    எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டிருந்தார். தற்போது மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால், எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவியை கொடுக்க வேண்டி இருக்கும் என்ற காரணத்தால் பா.ஜனதாவினர் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாமல் இருக்கிறார்கள். இதன்மூலம் பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.

    ஆர்.எஸ்.எஸ்.சின் பேச்சை கேட்டுக்கொண்டு எடியூரப்பாவை தரம் தாழ்த்த பார்க்கிறார்கள். தற்போது எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்காதது தான். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக மந்திரிசபையில் 6 இடங்களை காலியாக வைத்திருக்கும் பசவராஜ் பொம்மை, முக்கியமான துறைகளை தன்னிடமே வைத்திருப்பது ஏன்?.

    ஏனெனில் அப்போதுதான் அவரால் பல்வேறு ஊழல்களில் ஈடுபட முடியும். மொத்தம் உள்ள துறைகளில் 4-ல் ஒரு பங்கு துறைகள் பசவராஜ் பொம்மையிடமே உள்ளன. அவற்றை விட்டுக்கொடுக்க அவரால் முடியாது. பசவராஜ் பொம்மை, கட்சி மேலிட தலைவர்களிடம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அழுத்தம் கொடுத்தால் கண்டிப்பாக அனுமதி கிடைக்கும். ஆனால் அதை அவர் செய்ய மாட்டார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
    • பா.ஜ.க. கட்சியின் வலுவான தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என எடியூரப்பா கூறினார்.

    பெங்களூரு:

    கர்நாடக பா.ஜ.க. கட்சியின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் உயர்நிலை குழு உறுப்பினருமான எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 10 அல்லது 12-ம் தேதிக்கு முன்னதாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 140 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

    காங்கிரஸ் கட்சியில் முதல் மந்திரி யார் என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தாங்கள் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தனித்தனியாக யாத்திரையை தொடங்கியுள்ளனர்.

    ராகுல் காந்தி உங்கள் தலைவரா? எங்கள் கட்சியின் வலுவான தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். அவரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள். அதனால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் தலைமையில் கர்நாடகம் உள்பட வரும் அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    நமது கட்சியினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை நீங்கள் செய்தால், நமது கட்சி 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

    அதிகாரம், பணம், படை பலம், மது, சாதி, மதம், வெறுப்புகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த காங்கிரசின் நாட்கள் முடிந்துவிட்டது. அது தற்போது எடுபடாது என கூறினார்.

    • இன்னும் 3 சதவீத பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது.
    • இந்த விமான நிலையம் பிப்ரவரி 27-ந்தேதி நடக்கிறது.

    சிவமொக்கா:

    மலைநாடு மாவட்டமான சிவமொக்காவில் சோகானே பகுதியில் விமான நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் நேற்று சோகானே விமான நிலைய பகுதிக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அப்போது அவர் விமான நிலைய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னா் அவா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டிலேயே மிக குறைந்த செலவில் ரூ.449.22 கோடியில் மிக நவீனமுறையில் சிவமொக்கா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இன்னும் 3 சதவீத பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த பணிகள் கூடிய விரைவில் முடிந்துவிடும். இந்த விமான நிலைய திறப்பு விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது.

    இதில் கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்துக்கு அடுத்து மிகவும் நவீன முறையில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இரவு நேரங்களிலும் விமானங்கள் தரையிறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒரே ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அதே ஆட்சியில் விமான நிலையம் திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விமான நிலைய பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிவமொக்கா மக்களின் நீண்டநாள் கனவு நனவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா, கலெக்டர் செல்வமணி, போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள்.
    • லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன.

    பெங்களூரு :

    கொப்பலில் நேற்று காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    1991-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் அப்போது நான் தோல்வி அடைந்தேன். அதில் தோல்வி அடைந்ததால் எனக்கு பயன் ஏற்பட்டது. அதனால் தான் நான் முதல்-மந்திரி ஆனேன். கொப்பலில் பேசிய பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடப்பதாக கூறியுள்ளார்.

    ஆனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கொள்ளை அடிப்பதை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. தங்களது இரட்டை என்ஜின் அரசு என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் கொப்பல் நீரேற்று திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்ததா?. மராட்டியத்திலும் பா.ஜனதா அரசு தான் உள்ளது. அந்த அரசிடம் இதுபற்றி பேசாதது ஏன்?.

    இந்த பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள். இது லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன. பணி நியமனங்கள், பணி இடமாற்றங்கள் என அனைத்திலும் லஞ்சம் வாங்கப்படுகிறது. பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மந்திரி ஈசுவரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

    நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு தலா 7 கிலோ இலவச அரிசி வழங்கினேன். அதை பா.ஜனதா அரசு 5 கிலோவாக குறைந்துவிட்டது. எனது ஆட்சியில் 15 லட்சம் வீடுகளை ஏழை மக்களுக்கு கட்டி கொடுத்தேன். கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அங்கு அரசு துறைகளில் 35 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பினோம். அந்த பகுதிக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறப்பு அந்தஸ்தை பெற்று கொடுத்தோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்த கல்யாண கர்நாடக பகுதிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா மக்களுக்கு 600 வாக்குறுதிகளை அளித்தது.

    அதில் இதுவரை 25 வாக்குறுதிகள் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் பசவராஜ் பொம்மை செயல்படுகிறார். பிரதமர் மோடியின் முன்பு அவர் கைகட்டி நிற்கிறார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • கர்நாடகத்தில் அரசியல் ரீதியாக என்னை யாராலும் ஒழிக்க முடியாது.
    • பா.ஜனதா ஒற்றுமையாக உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா.

    இவர் தான் தென்இந்தியாவில் கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி பீடத்தில் ஏற்றியவர். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எடியூரப்பா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்துவதற்கு முன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், கூட்டணி ஆட்சி 2019-ம் ஆண்டு ஜூலையில் கவிழ்ந்தது. இதையடுத்து 2019-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி மீண்டும் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

    வயது முதிர்வு காரணமாக கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் 2021-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதிதனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவுக்கு பா.ஜனதா ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் பா.ஜனதா தேர்தல் குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கொப்பல் உள்பட 10 மாவட்டங்களில் பா.ஜனதா அலுவலக திறப்பு விழா நேற்று கொப்பலில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலை வரை மூத்த தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். நேற்று மாலையில் அவரை பா.ஜனதா தலைவர்கள் நேரில் சென்று விழாவுக்கு வருமாறு கூறி அழைப்பிதழ் வழங்கினர்.

    தன்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் கூறிவிட்டதாக தெரிகிறது. தன்னை கட்சியில் ஓரங்கட்டுவது குறித்து அவர் தனது கடும் அதிருப்தியை தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் எடியூரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, விழாவுக்கு வரும்படி கேட்டு கொண்டார்.

    தனது அதிருப்தியை வெளிப்படுத்தியபோது எடியூரப்பாவை அருண்சிங் சமாதானப்படுத்தினார். இதையடுத்து எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் கொப்பலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி அலுவலக திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.

    எடியூரப்பாவின் அதிருப்தி பா.ஜனதாவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொப்பலுக்கு புறப்படும் முன்பு பெங்களூருவிலும், அதன் பிறகு கொப்பலிலும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுகிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன். கொப்பல் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது இல்லை என்று முடிவு எடுத்ததாக சொல்வதில் உண்மை இல்லை. அந்த கூட்டத்தில் நான் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்திருந்தேன். சில கட்டாயம் எழுந்ததால் நான் அந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்தேன்.

    கர்நாடகத்தில் அரசியல் ரீதியாக என்னை யாராலும் ஒழிக்க முடியாது. அரசியலில் யாரும் யாரையும் அழிக்க முடியாது. எனக்கு என்று தனி பலம் உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை நான் பலப்படுத்தினேன். கட்சியை ஆட்சியில் அமர வைத்தேன். அதற்காக நான் பாடுபட்டேன். இது ஒட்டுமொத்த கர்நாடகத்திற்கும் தெரியும். அதனால் கட்சியில் நான் ஓரங்கட்டப்படுவதாக கூறுவதில் அர்த்தம் இல்லை.

    பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரது தலைமையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். பா.ஜனதா ஒற்றுமையாக உள்ளது. அதனால் எங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.

    பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு வருகிறோம். எனது மகன் விஜயேந்திராவை சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுமாறு கூறியுள்ளேன். கட்சியும் அவரை அந்த தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் கட்சியின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • எடியூரப்பா மீது சட்ட விரோத நில முறைகேடு பற்றி விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.
    • வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் வழக்கில் இருந்து விலகினார்.

    புதுடெல்லி:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. இவர் மீது சட்ட விரோத நில முறைகேடு பற்றி விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது.

    இதை எதிர்த்து எடியூரப்பா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் வழக்கில் இருந்து விலகினார்.

    • காங்கிரசால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
    • மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவே காரணம்.

    பெங்களூரு :

    தாவணகெரே மாவட்டம் ஒன்னாளியில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரேணுகாச்சார்யாவின் வீட்டுக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அங்கு எடியூரப்பா அருகில் கண் கலங்கியபடி ரேணுகாச்சார்யா இருந்தார். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என்று எடியூரப்பாவிடம் ரேணுகாச்சார்யா கேட்டுக் கொண்டார். பின்னர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மிகப்பெரிய தலைவர் எடியூரப்பா. அவர், தேர்தலில் போட்டியிடுவது இல்லை, கட்சியை வளர்க்கும் பணியில் மட்டும் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். எடியூரப்பா தனது முடிவை திரும்ப பெற வேண்டும். அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வு பெறக்கூடாது.

    மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவே காரணம். அவர் கட்சி வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எடியூரப்பா பற்றி பேசும் போது ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுதார்.

    ×