search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு: எடியூரப்பா அறிவிப்பு
    X

    தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு: எடியூரப்பா அறிவிப்பு

    • நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம்.
    • தேவகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்தார். அவருக்கு நேற்று சபையில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன்பிறகு இறுதியில் எடியூரப்பா உணர்ச்சி பூர்வமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ள வரை பா.ஜனதாவை பலப்படுத்த நேர்மையாக உழைப்பேன். கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சிலர் மோடி, பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்க்கும் மாய உலகில் வாழ்கிறார்கள். இதனால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அவர்களின் இந்த மாய உலகம் மிக விரைவிலேயே நொறுங்கிவிடும்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். எனக்கு பா.ஜனதா அநீதி இழைத்ததாகவும், புறக்கணித்து விட்டதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடி என்னை ஓரங்கட்டியதே இல்லை. பிரதமர் மோடி எனக்கு உரிய பதவி மற்றும் கவுரவத்தை வழங்கினார். இதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    கட்சி எனக்கு கொடுத்த பதவி, வாய்ப்புகளை நான் மறக்கவே மாட்டேன். தேவகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி. அவரை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இந்த வயதிலும் தேவகவுடா பிரச்சினைகளை பற்றி பேசுகிறார். நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ். தான் காரணம். நான் அங்கு பயிற்சி பெற்றதால் தான் எனக்கு பல பதவிகள் கிடைத்தன.

    நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனால் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    Next Story
    ×