search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRAI"

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சிம் கார்டு இல்லாத செல்போன் சேவை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL


    இந்தியா முழுக்க சிம்கார்டு இல்லாமல் செல்போன் பேசும் புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்தது. புதிய பி.எஸ்.என்.எல். சேவை விங்ஸ் என அழைக்கப்படுகிறது.

    தகவல் தொடர்பு துறையில் தனியாருக்கு போட்டியாக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தற்போது வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது.

    இந்த புதிய வசதிக்கு சிம்கார்டு தேவையில்லை. 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். இதற் கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு கட்டணம் செலுத்தியவுடன் 10 இலக்க எண் வழங்கப்படும்.

    வை-பை இணைப்பு அல்லது செல்போன் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். இது இண்டர் நெட் ‘புரோட்டோகால்’ மூலம் செயல்படக் கூடியது. எந்த நெட்வொர்க்கிற்கும் பேசலாம். பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை. வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.


    கோப்பு படம்

    மொபைல் போனில் இருந்து லேண்ட்லைனுக்கும் பேசலாம். சிக்னல் மோசமாக உள்ள பகுதியில் கூட இந்த தொழில்நுட்பம் மூலம் பேச முடியும். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எவ்வித கட்டணமின்றி பேசலாம். இப்போது ‘வாட்ஸ்-அப் கால், ஸ்கைப் போன்றவற்றின் மூலம்தான் தொடர்பு கொள்ள முடிகிறது.

    ஆனால் சிம்கார்டு இல்லாத இந்த புதிய வசதியின் மூலம் எவ்வித கட்டணமின்றி வெளிநாட்டில் உள்ளவர்கள் நம்நாட்டில் உள்ளவர்களுடன் பேசலாம். இதுதவிர வை-பை வசதி உள்ள பேருந்து நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுவான இடங்களுக்கு செல்லும்போது தங்கு தடையின்றி இந்த வசதியை பெற முடியும்.

    இதுகுறித்து சென்னை டெலிபோன்ஸ் துணை பொது மேலாளர் ஜி.விஜயா கூறியதாவது:-

    நாட்டிலேயே இந்த புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ். என்.எல்.தான் முதன் முதலில் அறிமுகம் செய்கிறது. இந்த வசதியை பெற பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த நெட்வொர்க் வைத்திருந்தாலும் பதிவு செய்யலாம். சிம்கார்டு இல்லாமல் 10 இலக்க எண் மூலம் பேசலாம்.

    வெளிநாட்டில் வசிக்க கூடியவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு கட்டணமின்றி செல்போன் மற்றும் லேண்ட்லைனில் பேச முடியும். இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டது. இதுவரையில் 4000 பேர் இந்த திட்டத்தில் சேர பதிவு செய்துள்ளனர். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் பி.எஸ்.என்.எல். விங்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைப்புக்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உருவெடுக்கிறது. #Vodafone #idea


    வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைப்புக்கு அரசு சார்பில் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் புதிய டெலிகாம் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கிறது. ஒட்டுமொத்த டெலிகாம் சந்தையில் 35 சதவிகித பங்கு மற்றும் 43 கோடி பயனர்களுடன் முதலிடம் பிடிக்கிறது. தற்சமயம் 34.4 கோடி பயனர்களுடன் பாரதி ஏர்டெல் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது.

    இருநிறுவனங்கள் இணைப்பு சார்ந்த விவரம் தெரிந்த மூத்த டெலிகாம் அதிகாரி கூறும் போது, இருநிறுவனங்கள் இணைப்புக்கு இறுதி ஒப்புதல் அளித்து விட்டது. இனி இருநிறுவனங்களும் கம்பெனிகள் பதிவாளர் மூலம் ஏற்கனவே பெற்ற அனுமதிகள் மூலம் இறுதிகட்ட பணிகளை துவங்குகின்றன.

    டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இதர நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு கட்டுப்படும் பட்சத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஜூலை 9-ம் தேதி மத்திய டெலிகாம் துறை இருநிறுவனங்கள் இணைப்புக்கு நிபந்தணைகள் நிறைந்த ஒப்புதலை வழங்கி, இணைப்பை பதிவு செய்ய நிபந்தனைகளை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் ரூ.7,268.78 கோடியை அரசாங்கத்திற்கு செலுத்தின. இதில் ரூ.3,926.34 கோடி ரொக்கமாகவும், ரூ.3,342.44 கோடி வங்கி கியாரண்டி மூலம் செலுத்தப்பட்டன.

    ஐடியா மற்றும் வோடபோன் இணைப்புக்கு பின் டெலிகாம் நிறுவன மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக தலைவராக குமார் மங்கலம் பிர்லாவும் புதிய தலைமை செயல் அதிகாரியாக பலேஷ் ஷர்மா செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒன்றிணைந்த நிறுவனத்தில் வோடபோன் நிறுவனம் 45.1% பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 26% மற்றும் பங்குதாரர்கள் 28.9 சதவிகித பங்குகளை வைத்திருப்பர்.  #Vodafone #idea
    இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோரை அச்சுறுத்தும் புதிய விதிமுறையை டிராய் விதித்து இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple



    ஆப்பிள் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடையே நிலவி வரும் போட்டி மேலும் சூடுபிடித்து இருக்கிறது. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

    இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின்  தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.என்.டி. (DND) என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி டி.என்.டி. 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் அனுமதிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை கோருவதால் டிராய் உருவாக்கியிருக்கும் செயலி பயனருக்கு தனியுரிமை பிரச்சனையை ஏற்படுத்தலாம் என ஆப்பிள் கருதுகிறது.



    ஐபோன் பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு ஆப்பிள் நிறுவனம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதன் காரணமாக பயனரின் தகவல் மற்றும் விவரங்களை சேகரிக்க கோரும் செயலிகளிடையே கடுமையான கட்டுப்பாடுகளை ஆப்பிள் விதித்து வருகிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்கும் கூகுள் நிறுவனம் இதுபோன்ற விதிமுறைகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை

    ஆன்ட்ராய்டு பயனர்கள் டி.என்.டி. செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளே ஸ்டோரில் இந்த செயலிக்கு பயனர்கள் மோசமான விமர்சனங்களையே வழங்கியிருக்கின்றனர். இந்த செயலியை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்வது குறித்து டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

    இந்த அறிக்கையில், நாட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும் தங்களது மொபைல் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். என எவ்வித இயங்குதளம் கொண்டிருந்தாலும் டி.என்.டி. 2.0 செயலியை நிச்சயம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை மொபைல் போன் நிறுவனங்கள் அன்றி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியதாகும்.



    "டிராய் விதிமுறைகளின் படி ஒவ்வொரு சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள், தங்களது ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற செயலிகளை இயக்க தேவையான அனுமதியை வழங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "விதிமுறைகளின் படி இதுபோன்ற செயலிகளை அனுமதிக்காத சாதனங்களில் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி சாதனங்களை தங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-இல் இருந்து நீக்க முடியும்."

    அந்த வகையில், டி.என்.டி. 2.0 செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் அனுமதிக்காத பட்சத்தில் நாட்டில் விற்பனையாகும் ஐபோன்கள் அனைத்திற்கும் 3ஜி, 4ஜி மற்றும் அடிப்படை டெலிகாம் நெட்வொர்க் சேவையை இழக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

    டிராய் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் விவகாரத்தை பொருத்த வரை இரண்டு தரப்புமே ஒரே விஷயத்துக்கு போராடி வருகின்றன. இரண்டு தரப்பும் தனது பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவே நினைக்கின்றன. மொபைல் போன்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை டிராய் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது, ஆப்பிள் நிறுவனமும் இதே நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.



    எனினும் ஆப்பிள் தனது பயனரின் தனியுரிமை எவ்வித காரணங்களாலும் பறிக்கப்பட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐபோனில் பயனரின் தனியுரிமை தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எவ்வித செயலியாக இருந்தாலும், அது அரசாங்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், பயனரின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க ஆப்பிள் தயாராக இல்லை. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை குறைக்க பல்வேறு ஸ்மார்ட் வழிமுறைகள் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இதனால் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் ஐபோனில் ஸ்பேம் அழைப்புகள் குறைக்கப்படுவதை விளக்கி, டிராய் செயலியை அனுமதிப்பதில் இருந்து விலக்கு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #telecommunications #Apple
    ஏர்செல் நிறுவனம் செலுத்திய வங்கி உத்தரவாத தொகையை அந்நிறுவனத்துக்கு திருப்பித்தர மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு டெலிகாம் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #Aircel



    ஏர்செல் நிறுவனம் செலுத்திய வங்கி உத்தரவாத தொகையை அந்நிறுவனத்துக்கு திருப்பித்தர மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு தொலைதொடர்பு விவகாரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனத்துக்கு இந்த உத்தரவு உதவியாக இருக்கும்.

    உத்தரவை தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.450 கோடிக்கும் அதிகமான தொகை கிடைக்கலாம் என்ற வகையில், தொகையை கொண்டு ஏர்செல் நிறுவனம் ஏற்கனவே செய்த செலவினங்கள், நிலுவையில் உள்ள ஊதியங்கள், இதர கட்டணங்களை செலுத்த முடியும். 

    மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு ஏர்செல் செலுத்த வேண்டிய ரூ.6,600 கோடி நிலுவை தொகையை முடிந்த வரை திரும்ப பெற முயற்சித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு பின்னடைவாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறை இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    2016-ம் ஆண்டு மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனம் சார்பாக வங்கி உத்தரவாத தொகையை பாரதி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியிருந்தது. ஏர்செல் அலைக்கற்றைகளுக்காக செலுத்த வேண்டிய கட்டணங்களை ஏர்டெல் நிறுவனம் வங்கி உத்தரவாத கட்டணமாக ரூ.411.22 கோடி, ரூ.39.33 கோடி மற்றும் ரூ.3.16 கோடிகளை மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்தி இருக்கிறது.

    இதுகுறித்த விவரம் அறிந்த வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கும் தகவல்களின் படி, முதற்கட்டமாக வங்கி உத்தரவாத தொகை ஏர்டெல் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும், பின் அதனை ஏர்செல் நிறுவனத்துக்கு வழங்கும் என தெரிவித்திருக்கின்றனர்.

    மத்திய தொலைதொடர்பு விவகாரங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு பொதுவாக வெளியிடப்படவில்லை. எனினும் ஏர்டெல் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில் “ஏர்செல் நிறுவனத்துக்கு வங்கி உத்தரவாத கட்டணத்தை வழங்க வேண்டியதில்லை,” என தெரிவித்துள்ளார்.

    ஏர்செல் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் தனது 3000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. #Aircel #bankruptcy
    ஆதார் அட்டை திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்பட்ட குறைந்தபட்ச தகவல்களை போலவே அப்ளிகேசன்களும் பயனர்களிடம் இருந்து குறைந்தபட்ச தகவல்களை சேகரிக்க வேண்டும் என டிராய் தலைவர் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா பெங்களூரூவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

    ஆதார் அட்டை திட்டத்தின் கீழ் மக்களின் பெயர், பிறந்த தேதி, மற்றும் முகவரி போன்ற குறைந்தபட்ச தகவல்களே மக்களிடம் இருந்து பெறப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில அப்ளிகேசன்கள் தேவை இல்லாமல் பல்வேறு தகவல்களை பயனர்களிடம் இருந்து பெருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
     
    தாங்கள் அளிக்கும் தகவல்களை அப்ளிகேசன்கள் எவ்வாறு பயன்படுத்துகிறது என்ற விழிப்புணர்வும் பயனர்களிடையே இல்லை. எனவே, மக்களிடம் இருந்து தேவையில்லாத தகவல்களை பெறுவதற்கு பதிலாக ஆதார் அட்டை திட்டத்தின் கீழ் மக்கள் அளித்துள்ள குறைந்தபட்ச தகவல்களை மட்டுமே அப்ளிகேசன்கள் பெற வேண்டும். ஆனால், இதனை சட்டமாக இயற்றி செயல்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைப்பு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும். 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வ சான்றிதழ் மூலம் நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும், சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும்.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டிருக்கும் பலத்த போட்டி காரணமாக இலவச வாயஸ் கால்கள் வழங்கப்படும் சூழலில் இருநிறுவனங்கள் இணைப்பின் மூலம், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் கடன் சுமையை சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது. இரண்டு நிறுவனங்களின் ஒன்றிணைந்த கடன் சுமை இந்திய மதிப்பில் ரூ.1.15 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    ஐடியா நிறுவனம் சார்பில் தேவையான வங்கி உத்தரவாதம், வோடபோன் இந்தியா கடன்களை ஏற்றுக்கொண்டதும், இருநிறுவனங்கள் இணைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஏப்ரல் 2018-இல் சேர்த்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சார்ந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஏப்ரல் 2018-இல் சேர்த்துள்ளன. இதே காலக்கட்டத்தில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    ஐடியா செல்லுலார் நிறுவனம் அதிகபட்சமாக 55.5 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐடியா செல்லுலார் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 21.67 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் சேவை வழங்கும் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் சுமார் 104.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இவற்றில் ஏர்செல், ரிலையன்ஸ் ஜியோ, எம்டிஎன்எல் மற்றும் டெலினார் நிறுவனங்களும் அடங்கும். என செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


    கோப்பு படம்

    இம்மாதம் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. டெலிகாம் துறையில் சீரான கனெக்டிவிட்டி நாடு முழுக்க வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் ராஜன் எஸ் மேத்யூ தெரிவித்தார்.

    இந்தியாவில் 30.86 கோடி வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. ஏப்ரல் 2018 காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் இந்தியா சுமார் 22.2 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள 22 டெலிகாம் வட்டாரங்களில் 12 இடங்களில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் வோடபோன் சேவையை பயன்படுத்தியதில் 2.42 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மகாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், உத்திர பிரதேசம் மேற்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
    விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை முறைப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த டிராய் பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை முறைப்படுத்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பரிந்துரை வழங்கியுள்ளது.

    இதன் மூலம் விளம்பரம் குறுந்தகவல்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பப்படுவதை உறுதி செய்ய முடியும். டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விளம்பர கொள்கையின் மூலம் குரல் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற தகவல் பரிமாற்றங்களை செய்யும் வாடிக்கைாயளர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.

    2010-ம் ஆண்டு முதல் இதுவரை மட்டும் சுமார் 23 கோடி வாடிக்கையாளர்கள் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவைக்கு பரிந்துரை செய்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. எனினும் பதிவு செய்யப்படாத விளம்பர நிறுவனங்கள் சார்பில் எண்ணற்ற அழைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக அமைகிறது. சமீப காலங்களில் இதுபோன்ற விளம்பர அழைப்புகள் அதிகரித்து இருக்கிறது.


    கோப்பு படம்

    டிராய் பரிந்துரை செய்திருக்கும் பிளாக்செயின் தொழில்நுட்பம் க்ரிப்டோகிராஃபி முறையில் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாத்து, அவசியம் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவற்றை வழங்கும் படி செய்யும். உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் வழிமுறையில் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றோர் மட்டுமே தகவல்களை இயக்க முடியும் அதுவும் சேவையை வழங்கும் போது மட்டுமே இவை வழங்கப்படும்.

    புதிய தொழில்நுட்பம் சார்ந்த விதிமுறைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களிடையே நடக்கும் தகவல் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. பிளாக்செயின் பயன்படுத்துவது சார்ந்த பரிந்துரை மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் மீதான விவாதங்கள் ஜூன் 11-ம் தேதி முதல் துவங்கும் என டிராய் தெரிவித்துள்ளது.
    இந்தியா முழுக்க அதிவேக 4ஜி சேவைகளை விரைவில் துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் பல்வேறு சலுகைகளை அறிவித்த நிலையில், விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் போட்டியை கருத்தில் கொண்டு அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெற்றிகரமாக துவங்குவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மிகமுக்கிய கட்டமாகும்.

    இந்த திட்டம் குறித்து பிஎஸ்என்எல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய 4ஜி சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.20 என்ற மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கும் என வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


    கோப்பு படம்

    பிஎஸ்என்எல் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படும் 4ஜி சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் புதிதாக யுனிவர்சல் சிம் அல்லது யுசிம் கார்டினை ரூ.20 கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். பின் 4ஜி சேவை துவங்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது ஸ்டோர் சென்று புதிய யுசிம் கார்டினை ரூ.20 விலையில் வாங்க முடியும். 

    பழைய வாடிக்கையாளர்கள் அதே நம்பரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மற்ற நிறுவன வாடிக்கையாளர்களும் தங்களது பழைய மொபைல் நம்பரை மாற்றாமல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்.

    முன்னதாக பிஎஸ்என்எல் 3ஜி சேவைகள் 2009-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்து வருகிறது. மார்ச் 2018 பிஎஸ்என்எல் நிறுவனம் 40 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்திருந்தது. 

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையின் மூலம் இதே மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 12 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கவர்ச்சிகர சலுகைகள், புதிய திட்டங்கள் மற்றும் சீரான சேவையை வழங்குவதே பிஎஸ்என்எல் சேவையில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
    ×