search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simona Halep"

    டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் கனெக்டிகட் ஓபனில் இருந்து விலகியுள்ளார். #SimonaHalep
    உலக டென்னிஸ் தரவரிசையில் சிமோனா ஹாலெப் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இவர் கடந்த வாரம் நடைபெற்ற சின்சினாட்டி ஒபன் இறுதிப் போட்டியில் கிகி பெர்ட்டென்ஸ் இடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவிறவிட்டார்.

    வருகிற 27-ந்தேதி கிராண்ட் ஸ்லாம் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு சிறப்பான வகையில் தயாராகுவதற்காக கனெக்டிகட் ஓபனில் இருந்து விலகியுள்ளார்.



    இதுகுறித்து ஹாலெப் கூறுகையில் ‘‘அமெரிக்க ஓபனுக்கு திரும்ப நேரம் தேவைப்படுகிறது. நான் இந்த தொடரில் விளையாட உண்மையிலேயே அதிக ஆர்வமாக இருந்தேன். ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்கி என்னை பார்க்க வந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னுடைய காலில் அதிக வலி இருப்பதாக உணர்கிறேன். இதனால் ஓய்வு தேவைப்படுகிறது’’ என்றார்.
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #RogersCup2018 #SimonaHalep
    டோராண்டோ:

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), 3-ம் நிலை வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சிமொனா ஹாலெப் 7-6 (8-6), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் சிமோனா ஹாலெப் வென்ற 3-வது பட்டம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் பெற்ற 18-வது பட்டம் இதுவாகும்.



    வெற்றி குறித்து சிமோனா ஹாலெப் கருத்து தெரிவிக்கையில், ‘உண்மையிலேயே இந்த போட்டியில் நான் சோர்வடைந்து விட்டேன். இந்த வாரம் மிகவும் கடினமாக இருந்தது. இதுபோன்ற போட்டிகளில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் இடையே போதிய இடைவெளி தேவையானதாகும். ஸ்லோனே ஸ்டீபன்சுக்கு எதிராக ஒவ்வொரு முறை விளையாடும் போதும் எனது ஆட்ட திறன் மேம்படுகிறது. என்னை பொறுத்தமட்டில் இது சிறந்த விஷயமாகும். ஸ்லோனே ஸ்டீபன்ஸ் மனரீதியாக வலுப்பெற்று இருக்கிறார். அவர் வலுவான போட்டியாளர்’ என்றார்.

    ரோஜர்ஸ் கோப்பை முடிவை தொடர்ந்து வெளியிடப்பட்ட உலக தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர். மார்டின் டெல்போர்டோ (அர்ஜென்டினா) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் பின்தங்கி 4-வது இடத்தை பெற்றுள்ளார். டிமிட்ரேவ் (பல்கேரியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), மரின் சிலிச் (குரோஷியா), டோமினிச் திம் (ஆஸ்திரியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் முறையே 5 முதல் 10 இடங்களில் நீடிக்கின்றனர். கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும், கிவிடோவா (செக் குடியரசு) 2 இடங்கள் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஸ்விடோலினா (உக்ரைன்) 2 இடம் சரிந்து 7-வது இடத்தையும், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 2 இடம் சறுக்கி 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி) 10-வது இடத்தில் தொடருகிறார்.  #RogersCup2018 #SimonaHalep 
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #RogersCup #Tsitsipas #RafaelNadal #SimonaHalep
    டோராண்டோ:

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார்.

    மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 6-7 (4), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை சிட்சிபாஸ் தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்திருக்கிறார். இதன் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்-10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.



    சிட்சிபாசுக்கு நேற்று 20-வது வயது பிறந்தது. இந்த வெற்றிகளை நம்ப முடியவில்லை என்றும், ஒரு தொடரில் இதைவிட பெரியதாக சாதிக்க முடியாது என்றும் மகிழ்ச்சி ததும்ப சிட்சிபாஸ் கூறினார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறுகிறார்.

    முதல் சர்வதேச பட்டத்துக்கு குறி வைத்துள்ள சிட்சிபாஸ் இறுதி ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரபெல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.



    பெண்கள் ஒற்றையரில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினாவையும் (உக்ரைன்) புரட்டியெடுத்தனர்.

    மகுடத்துக்கான இறுதிசுற்றில் ஹாலெப், ஸ்டீபன்ஸ் மோதுகிறார்கள். அண்மையில் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ், ஹாலெப்பிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் நடால், ஹெலப் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #nadal #simonahalep

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-ம் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதினர். இதில் நடால் 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரின் சிலிக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்சலார்ட்ஸ் மேனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கிரிஸ் இளம்வீரர் டிசிடிசிபாஸ் 6-3, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.



    இதேபோல் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), ஸ்வெரேவ் (ஜெர்மனி), ராபின் ஹாஸ் (டென்மார்க்), கரேன் கசனோஸ் (ரஷியா) கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹெலப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.



    மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் கார்சியாவிடம் தோற்று வெளியேறினார்.#nadal #simonahalep
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் தோல்வியை தழுவினார்.
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் தங்களது 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப்(ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சு-வெய் ஹிசை (சீனதைபே) 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி வீழ்த்தினார். 32 வயதான சு-வெய், விம்பிள்டனில் முதல் முறையாக 4-வது சுற்றை எட்டினார். போட்டித் தரநிலையில் முதல் 10 இடங்களை பெற்ற வீராங்கனைகளில் தற்போது 9 பேர் தோற்று வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது. 
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹோராசியா ஜிபல்லோசை (அர்ஜென்டினா) பந்தாடினார்.

    2017-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான 5-ம் நிலை வீரர் மரின்சிலிச்(குரோஷியா) 6-3, 6-1, 4-6, 6-7 (3), 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 82-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் குடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதே போல் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோ 7-6 (7), 7-6(6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னணி வீரர் வாவ்ரிங்காவுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிளாரி லுவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த சாய்சாய் ஜெங்கை (சீனா) 7-5, 6-0 என்ற நேர் செட்டிலும், சுலோவக்கியாவின் சிபுல்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஹோகன்னா கோன்டாவையும் (இங்கிலாந்து) தோற்கடித்து 3-வது சுற்றை உறுதி செய்தனர்.

    ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- விஷ்ணு வர்தன் கூட்டணி 7-6 (7-5), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து)- வெஸ்லி கூலோப் (நெதர்லாந்து) இணையை வென்றது.

    மற்றொரு ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் கிராஜிசெக்குடன் இணைந்து களம் இறங்கினார். இவர்கள் 6-7 (5), 6-7 (3), 6-7(2) என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சான்டர் அரென்ட்ஸ்- மிடில் கூப் இணையிடம் தோற்று வெளியேறினர்.  #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal  #tamilnews
    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது.

    இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மோதினர்.

    ஆட்டத்தின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றிலும் 4-4 என கடும் போட்டி அளித்தார் ஸ்டீபன்ஸ்.

    அதன்பின்னர், சுதாரித்து ஆடிய ஹெலப் சிறப்பாக ஆடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றினார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் ஹெலப் அபாரமாக விளையாடினார்.
    இதனால் மூன்றாவது சுற்றை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.

    இறுதியில், 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஹெலப். இந்த போட்டி சுமார் 2 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

    முதல் முறையாக கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலப்புக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் மோதுகிறார்கள். #FrenchOpen2018 #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஹெலப் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றது இல்லை. பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதி ஆட்டத்தில் (2014, 2017) தோற்று இருக்கிறார். இதேபோல இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளார். இதனால் இந்த முறை முதல் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.



    ஸ்டீபன்ஸ் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். பிரெஞ்சு ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் 5-வது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    களிமண் தரையில் விளையாடுவதில் ‘கிங்’காக திகழும் நடால் இறுதிப்போட்டியில் 7-ம் நிலை வீரரான டொமினிக் தியம்பை (ஆஸ்திரியா) சந்திக்கிறார். அவர் அரை இறுதியில் 7-5, 7-6 (12-10), 6-1 என்ற கணக்கில் இத்தாலி வீரர் மார்கோவை வீழ்த்தினார். #FrenchOpen2018 #SimonaHalep
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் நம்பர் ஒன் வீரரும், 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 70-ம் நிலை வீரர்மேக்ஸ்மிலன் மார்ட்ரெரை (ஜெர்மனி) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 1-6, 2-6, 7-5, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து 7-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ரபெல் நடால்-டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் மோதுகிறார்கள்.

    இன்னொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 16-ம் நிலை வீராங்கனை எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-7 (5-7), 3-6 என்ற நேர்செட்டில் 14-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். வெற்றி பெற்ற டாரியா கசட்கினா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7-வது இடத்தில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, உக்ரைன் வீராங்கனை லிசி சுரெங்கோவை சந்தித்தார். இதில் முகுருஜா முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது லிசி சுரெங்கோ காயம் காரணமாக விலகினார். இதனால் முகுருஜா வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    இத்தாலி ஓபன் டன்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார். #ItalianOPen
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான சிமோனா ஹாலெப், 4-ம் நிலை வீரரான எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.

    4-ம் நிலை வீரரான ஸ்விடோலினாவின் ஆக்ரோஷத்திற்கு ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஸ்விடோலினா 6-0, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஆர் பராஹ் - ஜே கேபல் ஜோடி 3-6, 6-4, 10-4 என சவுசா - கர்ரேனோ பஸ்டா ஜோடியை வீழ்த்தியது.



    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் டி ஸ்சூர்ஸ் - ஏ. பார்ட்டி ஜோடி பி ஸ்ட்ரைகோவா- ஹ்லாவாக்கோவா ஜோடியை 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    இத்தாலி ஓபன் டென்னிசில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறினர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அனெட் கோன்டாவீட் (எஸ்தோனியா) 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா அஸ்டாபென்கோ (லாத்வியா) தன்னை எதிர்த்த ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். தோல்வியை தழுவிய கோன்டாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.



    சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) மோத இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஹாலெப் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியதுடன், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) விரட்டி கால்இறுதிக்குள் நுழைந்தார். மரின் சிலிச் (குரோஷியா), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி), டேவிட் கோபின்(பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (5), 4-6 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாஸ் (உருகுவே)- மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையிடம் தோற்று நடையை கட்டியது.  #RafaelNadal #SimonaHalep
    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கால்இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவிடம் தோல்வி அடைந்தார். #SimonaHalep #MadridOpen
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். இதில் பிளிஸ்கோவா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் மாட்ரிட் ஓபனில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஹாலெப்பின் ‘வீறுநடை’ முடிவுக்கு வந்தது.


    கரோலினா

    மற்றொரு கால்இறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 4-6, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் புயல் மரிய ஷரபோவாவை (ரஷியா) தோற்கடித்தார்.

    ஆண்கள் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் டேவிட் கோபினை (ஸ்பெயின்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார்.

    இதன் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் கூட்டணி 6-4, 6-7 (4), 5-10 என்ற செட் கணக்கில் ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா)- மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.   #SimonaHalep #MadridOpen
    ×