search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satyabrata sahoo"

    • தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
    • பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று நடத்திய ஆலோசனைக்கு பிறகு 176 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. எனவே மொத்த வாக்குச்சாவடிகள் 68,320-ஆக உயர்ந்துள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்கள் விலை வித்தியாசப்படுவதால் தேர்தல் செலவினத்துக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ள விலை பட்டியலை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 52,938 தனியார் கட்டிடங்கள் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளது.

    20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 டி வழங்கப்படும்.

    அதில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம். சிவிஜில் செயலி மூலம் மொத்தம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு எந்திரங்கள் பிரிக்கப்படும். இந்த தேர்தலில் அதிகளவில் ஆசிரியர்களே பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செலவு கணக்கை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
    • தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.

    பாராளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

    அந்த வகையில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார், சைதாப்பேட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வெங்கடேஷ், விருகம்பாக்கம் தினேஷ்குமார், வேலூர் பன்னீர்செல்வம், நசீர், சங்கரன்கோவில் பாலமுருகேசன், முதுகுளத்தூர் சதீஷ் தேவசித்தம், ராமச்சந்திரன், அழகுமலைகுமரன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களின் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் இனி தேர்தலில் போட்டியிட முடியாது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் இந்தப் பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் தேர்தல் அதிகாரி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    • நாடு முழுவதும் உள்ள தேர்தல் பார்வையாளர்கள், சட்டம்-ஒழுங்கு பணிகளை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயற்சிகளை அளித்து வந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்காக நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    மேலும் நாடு முழுவதும் உள்ள தேர்தல் பார்வையாளர்கள், சட்டம்-ஒழுங்கு பணிகளை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயற்சிகளை அளித்து வந்தார். 2 நாள்கள் டெல்லி பயணத்தை முடித்து விட்டு நாளை (வியாழக்கிழமை) அவர் சென்னை திரும்ப உள்ளார்.

    • தமிழகத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்போது 15 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.
    • தேர்தல் பணியாளர்கள் தொடர்பான பட்டியல் இதுவரை பெறப்படவில்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்போது 15 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். அதில், சென்னை மாநகராட்சியில் 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஆவடி, தாம்பரம், கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளுக்கு தலா 1 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    மேலும் கோவை சரகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனியும்; மதுரை சரகத்தில், மதுரை மற்றும் விருதுநகருக்கு 1 கம்பெனியும்; நெல்லை சரகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசிக்கு 2 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் 15 கம்பெனி துணை ராணுவத்தினரும் பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர்.

    7-ந் தேதியன்று வரும் 10 கம்பெனி துணை ராணுவத்தினரில், காஞ்சிபுரம் சரகத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; வேலூர் சரகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; விழுப்புரம் சரகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி; சேலம் சரகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களுக்கு ஒரு கம்பெனி;

    திருச்சி சரகத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனி; தஞ்சாவூர் சரகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு 2 கம்பெனி;

    மதுரை சரகத்தில் மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி; திண்டுக்கல் சரகத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி; ராமநாதபுரம் சரகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இடங்களுக்கு 1 கம்பெனி துணை ராணுவத்தினர் பிரித்து அனுப்பப்படுவார்கள். தற்போது மிகவும் குறைவான அளவு துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர்.

    தேர்தல் பணியாளர்கள் தொடர்பான பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. பட்டியல் பெறப்பட்டதும், அவர்களுக்கான பயிற்சி குறித்து முடிவெடுக்கப்படும். 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 5 பேர் என்ற அடிப்படையில் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அந்த வகையில், 3.32 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

    வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்களின் முதல்கட்ட சரிபார்த்தல் பணி முடிவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக, வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாகவும், பின்னர் வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து அவை மீண்டும் சரிபார்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய தோ்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.
    • கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தைக் குறிப்பிட்டு அதற்குக் கீழே இந்த கோடு வரைந்திருக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், புதிய உத்தரவுகளை வெளியிட, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்துத் துறைகளின் செயலா்களுக்கும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தோ்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். அதிலிருந்து புதிய திட்டங்கள் அல்லது புதிய உத்தரவுகளை வெளியிடக் கூடாது. இந்த விவகாரத்தில் கடந்த காலங்களில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதாவது, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகும், முன்தேதியிட்டு சில உத்தரவுகள் வெளியிடப்பட்டதாக புகாா்கள் எழுந்தன. தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே, இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்டது போன்ற தோற்றத்தை அவை வெளிப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

    எனவே, இதுபோன்ற புகாா்கள், குற்றச்சாட்டுகளை தவிா்க்க வேண்டுமென அனைத்து கூடுதல் தலைமைச் செயலா்கள், முதன்மைச் செயலா்கள், துறைச் செயலா்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    தோ்தல் தேதி தொடா்பான அறிவிப்பு ஊடகங்களில் வெளியானவுடன், அரசு உத்தரவுகளின் விவரங்களை பதிவிடும் பதிவேட்டில் நீளமாக ஒரு கோடு வரைந்து கொள்ள வேண்டும். அதாவது, கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தைக் குறிப்பிட்டு அதற்குக் கீழே இந்த கோடு வரைந்திருக்க வேண்டும்.

    இதை நகலெடுத்து இந்தியத் தோ்தல் ஆணையத்தால், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும்.

    மேலும், அந்த நகலை தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பிட வேண்டும். இந்த நடைமுறையால், தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுவதும், மற்றவா்கள் புகாா்கள் கூறுவதும் தவிா்க்கப்படும். தோ்தல் தேதி அறிவிக்கப்படும் தருவாயில், துறைச் செயலா்கள் யாரேனும் தலைமையிடத்தை விட்டு வெளியே சென்றிருந்தால் அவா்கள் தலைமையிடத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவருக்கு இந்தப் பணியைச் செய்திட அதிகாரம் அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.

    • விஜயதாரணி ராஜினாமா செய்ததால் விளவங்கோடு தொகுதி காலி என அறிவிப்பு.
    • திருக்கோவிலூர் தொகுதி காலி என இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி பா.ஜனதாவில் இணைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அவர், பா.ஜனதாவில் இணைந்ததும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

    உடனடியாக விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதனால் மக்களை தேர்தலுடன் விளவங்கோட்டிற்கு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை போலீஷ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.

    அப்போது விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யபிரதா சாகு கூறிகையில் "மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. சென்னையில் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்" என்றார்.

    திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கியதால், அவரது மந்திரி பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவி தானாகவே பறிபோகியுள்ளது. ஆனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

    தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் அவர் இன்னும் சிறைக்கு செல்லாமல் உள்ளார்.

    • வாக்குப்பதிவின்போது ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 100 சதவீதம் தேவை என்றால், 130 சதவீத அளவில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்க வேண்டும்.
    • போலீசார் தரப்பில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் அந்தந்த பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் தமிழக தேர்தல் அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அமலாக்க முகமைகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து நேற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் காணொலி காட்சி மூலம் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தேர்தல் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், புதுச்சேரி டி.ஐ.ஜி. ஆகியோரும் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவர்கள் எடுத்துரைத்தனர்.

    பாராளுமன்ற தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குதல், வெப் கேமராக்கள் மூலம் ஓட்டுப்பதிவை கண்காணிப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச்செல்வதை தடுப்பது, பண பட்டுவாடாவை தடுப்பது, தேர்தல் விதிமுறை மீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஆய்வு கூட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது. ஆய்வு கூட்டம் நிறைவடைந்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். எந்த அளவில் நாங்கள் தயாராக இருக்கிறோம்? என்பது பற்றி ஆய்வு செய்தனர். தேர்தல் நடத்த நாங்கள் தயார் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

    வாக்குப்பதிவின்போது ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 100 சதவீதம் தேவை என்றால், 130 சதவீத அளவில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்க வேண்டும். அந்த அளவில் தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்துடனும் விவிபாட் எந்திரம் இணைக்கப்படும். அதன் மூலம் ஒவ்வொரு வாக்காளரும் ஒப்புகை சீட்டைப் பார்த்து அவர்களின் வாக்கை உறுதி செய்துகொள்ள முடியும்.

    போலீசார் தரப்பில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் அந்தந்த பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பதற்றமான அல்லது பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஏனென்றால் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு சூழ்நிலைகள் மாறக்கூடும். எனவே அங்கு நிலவும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். அதற்கு காத்திருக்க வேண்டும். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகத்துக்கு ஆய்வுக்காக வரும்போது அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்ததும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
    • இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் மற்ற துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஆயத்தமாகி வருகிறது.

    இதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

    அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, சட்டம் ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தனர். அதுமட்டு மின்றி தலைமைத் தேர்தல் அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்தும் ஆலோசித்து வந்தனர்.

    கடந்த மாதம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக நிலவரம் குறித்து எடுத்து கூறி இருந்தார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்யவும், தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்யவும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அயஜ் பாதூ, தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மல்லிக் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்ததும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    தமிழகத்தில் இதுவரை தேர்தலுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது? வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் புதிதாக விண்ணப்பங்கள் வந்துள்ளதா? எந்த அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் கேட்டறிந்தனர்.

    இதுவரை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவே பாராளுமன்றத் தேர்தல் நடந்திருப்பதால் இப்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து விரைவில் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தவிர வாக்குப்பதிவு எந்திரங்கள் கையிருப்பு விவரம், எவ்வளவு மின் னணு எந்திரங்கள் இன்னும் தேவைப்படும் போன்ற விவரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1 மணிநேரம் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் மற்ற துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    அப்போது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக என்னென்ன தேவைப்படும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வருமான வரித்துறையினர் எவ்வளவு பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

    கூட்டம் முடிந்ததும் சென்னையில் தங்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை காலை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.

    இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக வாக்காளர் பட்டியல் முழுமையாக உள்ளதா?

    திருத்தங்கள், பெயர் சேர்த்தல் ஆகியவை சரிவர செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிகிறார்கள். நாளை மாலை வரை இந்த ஆலோசனை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு நாளை இரவு 9 மணிக்கு டெல்லி புறப்படுகின்றனர். அதன் பிறகு தமிழக நிலவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

    • கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படவில்லை.
    • புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    மடகாஸ்கர் உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கமிஷனர்கள், அதிகாரிகள், இந்தியாவுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலைப் பற்றி ஏற்கனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை காணொலி வாயிலாக வழங்கியுள்ளது.

    அதைத்தொடர்ந்து, தற்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 250 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் மதுரை, திருச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் 2 பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவினருக்கு வரும் 5 முதல் 9-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை பெற்ற அலுவலர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி அளிப்பார்கள்.

    இந்தியா முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டெல்லியில் தேர்தல் கமிஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் செலவினம் தொடர்பான முக்கியத்துவம் பெற்ற தமிழகத்தின் சார்பில் நானும், சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கியத்துவம் பெற்ற மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரியும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் ஐ.ஜி அல்லது போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. நிலையிலான ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் முதல் கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதும், அடுத்த கட்டமாக சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். தேர்தல் பணிகளுக்கு கூடுதல் அதிகாரிகள் தேவைப்படுவது குறித்து தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பிக்கும்.

    கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி அ.தி.மு.க. சார்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்கள் என 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவில் பதிவு தபாலில் அனுப்பப்படும்.

    புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளன.
    • அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் தனிச்செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளன.

    தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் அனுப்ப தனிச்செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அட்டை காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கம்.
    • வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    மாவட்டங்களில் உள்ள  வாக்காளர் பட்டியலில் விவரம் வெளியீடு:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 87 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 41 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 29 ஆயிரத்து 471 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 10,45,551 ஆண் வாக்காளர்களும், 10,77,438 பெண் வாக்காளர்களும், 287 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்து 276 வாக்காளர்கள் உள்ளனர். இதில் வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,09,906 ஆண்கள், 15,710,93 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 595 என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 11 ஆயிரத்து 573, பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 79 ஆயிரத்து 985-யும், பிற வாக்காளர்கள் 332 பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கமும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியும் உள்ளது.

    • தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.
    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த அக்டோபர் 27-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்தால்கூட, பெயர் சேர்த்தல், திருத்தம் போன்றவற்றுக்காக ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப் பின்னர்தான் பரிசீலிக்கப்படும்.

    தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.

    இதுதவிர, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், புதிய அட்டைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு எந்திரம் வைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த எந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தேசிய வாக்காளர் தினத்திற்கு பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்று, வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து மக்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள காலகட்டத்தில் வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மிச்சாங் புயல், மழை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×