search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samayapuram mariamman temple"

    • சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
    • அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.

    சக்தி தீர்த்தம்

    தென்னகத்தின் பெருமைமிக்க காவேரியின் உபநதியான வெருவளை வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் தெற்கு தேரோடும் வீதியின் தென்புறத்தில் உள்ள புகழ்பெற்ற தீர்த்தமாகும். இத்தீர்த்தம் அருகே உள்ள படித்துறையில் சுப்பிரமணிய கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களது முடி காணிக்கையினையும், புனித நீராடுதலையும், ஆதி முதல் இன்றளவும் இங்கு மேற்கொள்வதை வழக்கமாக கொள்கின்றனர். அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இங்கு நீராடி வழிபாடு மேற்கொண்ட பின்னரே பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணத்தை செய்து முடிப்பர். இங்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், ஆடி 18 தீர்த்தவாரியும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. அதுசமயம் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் இத்தீர்த்தத்தில் நீராடி மகாமாரியின் அருளை பெற்று செல்கிறார்கள்.

    மகமாயி தீர்த்தம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வடமேற்கே, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜய நகர நாயக்கர் கால கோவில் திருப்பணிகளில் இந்த குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப்பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பல கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்று இருப்பதையும் காணமுடிகிறது.

    இத்திருக்குளத்திற்கு பெருவளை வாய்க்கால் வழியாக நீர் கொண்டுவரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர் வெளியேறும், நிலத்தடி நீர்வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பாகும். பிற காலங்களில் மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்பஉற்சவபெருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு முதல் நாளும், சித்திரை தெப்பமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாட்களில் மாரியம்மன் மேற்கு கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குகிறாள்.

    முற்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த இக்குளம் தற்போது கோவில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்தி வருவது இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக்கு ளத்தில் பலவகையான தீபங்களை மிதக்கவிட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகின்ற ஐதீகமும் உள்ளது.

    சர்வேஸ்வரன் தீர்த்தம்

    இத்தீர்த்தம் வடமேற்கேயுள்ள வாயு மூலையில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலின் தீர்த்த வளாக பகுதியில் கோவில் பணியாளர் குடியிருப்புகள் உள்ளன. புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகா மகத்திற்கு முன்பும், கங்கா தேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகணம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமக குளத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தான் வரலாற்று சிறப்பு பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்கு பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தத்தை தன்னகத்தே அதிசய மகாமக தீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கி யதாக காணப்படுகிறது. இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தத்தில் கும்பகோணத்தில் நடைபெறும் ஒவ்வொரு மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரம்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின்போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச்செல்வது வழக்கம்.

    ஜடாயு தீர்த்தம்

    கனகாம்பிகை உடனுறை ஸ்ரீமுக்தீஸ்வரர் கோவிலின் தெற்கேயும், மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கேயும் அமைந்திருப்பது வரலாற்று சிறப்பு பெற்ற ஜடாயு தீர்த்தமாகும். ஜடாயுவிற்கு இறைவன் முக்தி கொடுத்ததாக கூறப்படும் புகழ்பெற்ற தலம் இதுவே ஆகும். ஜடாயுவின் தாகத்தை தணிக்கவும், ராவணன் சீதையை கடத்தி சென்ற விபரத்தை ராமனிடம் கூறும்வரை தன் உயிர் பிரியாமல் இருக்க ஜடாயு மகேஸ்வரனிடம் வேண்ட மகேஸ்வரனால் பிரசித்தி பெற்றதாகவும் இத்தீர்த்தம் கருதப்படுகிறது. இன்றும் வற்றாத நீர்நிலையை கொண்டு இந்த தீர்த்தம் விளங்குகிறது. மேலும் உயிர்பிரிந்த ஜடாயு தன்னுடைய தந்தை தசரதனுக்கு நண்பன் என்பதால் ஜடாயுவிற்கு ஈமக்கடன்களை செய்ய ராமன் முடிவு செய்தான். தன் கை அம்பினால் ராமன் பூமியில் நீர் ஊற்று ஒன்றினை உண்டாக்கினான். அதுவே ஜடாயு தீர்த்தம் என்பதாயிற்று என்ற மற்றொரு புராண குறிப்பும் இதற்கு கூறப்படுகிறது.

    கங்கை தீர்த்தம்

    இக்கோவிலின் உப கோவிலான உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலின் கிழக்கில் அமைந்திருப்பது கங்கை தீர்த்தமாகும். இது அருள்மிகு மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கே அமைய பெற்றுள்ளது. காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என கொண்டி ருந்த விக்கிரமாதித்தன் தமது இஷ்ட தேவதையான காளி பூஜைக்கு நித்திய பூஜைகளை செய்ய கங்கா தேவியிடம் வேண்டினான். கங்கையும் அங்கு பிரத்தியம்சமாய் தோன்றினாள். இதுவே கங்கை தீர்த்தம் என்னும் வற்றாத தீர்த்தமாகும். மகளிவனத்து மாகாளி வீற்றிருக்கும் இந்த இடத்திலுள்ள தீர்த்தம் வற்றாத தன்மையை கொண்டதாகும். திருமண தடைகள், தீராத நோய்கள், பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.

    மூளைக்கோளாறு, குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்த அற்புத மருந்தாக இந்த புனித தீர்த்தம் இன்றும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகிறது.

    அம்பாளின் அளவிலா கருணையினாலும், பேரொளியினாலும் இந்த தீர்த்தத்தை பயன்படுத்தும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நிலைகளில் நலன் பயப்பதாக அறியப்படுகிறது. அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும். செய்வினை மற்றும் மந்திர சக்தியை இக்கோவில் தீர்த்தம் கட்டுப்படுத்தும். அனைத்து திருக்கோவில்களிலும் இறை சக்தியை நிலை நிறுத்த இத்தீர்த்தம் மிகப்புனிதமாக பயன்படுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் புனித தீர்த்தம், காவேரியின் உபநதியாக இருப்பதால் இதில் குளித்தவுடன் சகலவித பாவங்களும், வியாதிகளும் அம்பாளின் அனுக்கிரகத்தால் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இப்புனித நீரில் அம்பாளின் நாமத்தை மூன்று முறை உச்சரித்து மூழ்கி எழுந்தால் இதுவரை கண்டிராத உள்ளத்தூய்மை, உடல் தூய்மை ஆகியன ஏற்பட்டு புத்துணர்ச்சியை அடைந்து மக்கள் மனநிறைவு பெறுவது கண்

    கொள்ளா காட்சியாகும்.

    • இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
    • ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

    அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்தி களின் வேண்டுகோளுக்கிணங்க மாயா சூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இக்கோவில்.இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மேலும் இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

    ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது செழிப்பை யும், வளத்தையும் உணர்த்து வதாகக் கூறுவர். கோவில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்று களைக் கொண்ட இக்கோவிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோவிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    திருவிழாக்கள்

    தைப்பூசத் திருவிழா, பூச்சொரி தல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறாள்.

    தேர்த்திருவிழா மகிமை

    பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோற்சவத்தை குறிக்கும். இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும் இன்பதிருவிழா என்றே கூறலாம். இவ்விழாவில் கொடியேற்று விழா, வானறு பாடகள் திருவிழா, தேர்விழா மற்றும் தீர்த்த விழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இத்தகைய வைபவங்கள் மிகச்சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் இவ்விழா பிரசித்திபெற்றது என கூறப்படுகின்றது.

    அன்று காலை 10 மணிக்கு அம்பாள் கோவிலில் இருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேருகிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்பாள் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதேதுவங்குகிறது. பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்கு நோக்கி புறப்படும் திருத்தேர், ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.

    இத்தருணத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் அம்பாளின் அருளை பெற பல ஊர்களில் இருந்தும் அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர் பவனி மேற்கு வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் கோவிலின் திருவீதி முன்பு திருத்தேர் நிலைக்கு வந்து சேர்கிறது. இரவு 10 மணி வரை திருத்தேரில் பொதுமக்களுக்கு அம்பாள் காட்சி தருகின்றாள். இரவு 10.30 மணிக்கு திருத்தேரை விட்டு இறங்கி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள்.

    அம்பாளை நேரடியாக சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் திருத்தேர் உலா மூலம் தாங்கள் காணத்துடித்த அம்மனை நேரடியாக கண்டு அருள்பெறும் வாய்ப்பினை பெறுகிறார்கள். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள். முதியவர்கள். இயலாதோர் மற்றும் பிறர் அம்பாளின் அருளை பெற இத்திருத்தேர் திருவிழா மிகச்சிறந்த வாய்ப்பினை தருகிறது. வலம் வரும் அன்னையின் அருளை மக்கள் அனைவரும் பெற்று புத்து யிருடன் தங்கள் இல்லம் நோக்கி செல்கின்றனர்.

    அன்னை நம் துன்பங்களையும், அறியாமையால் நமக்குள் இருக்கும் ஆணவத்தையும் அடியோடு அகற்றுகிறாள். திருத்தேர் பவனி வரும் அம்பாள் தன்னுடைய அருளை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களுக்கு எந்தவித பேதமும் இன்றி ஏகமனதாய் வழங்குகிறாள். ஆம்னா என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அத்தகைய ஆன்மாக்களாகிய நாம் ஒன்றுகூடி ஒருமித்த மனநிலையில் அன்னை மகமாயியை தியானிக்க நமது ஆன்மா முக்திபெறும் என்பது இதன்வழி அறியப்படுகின்றது.

    தலவிருட்சம் வேப்பமரம்

    மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் வேப்ப மரமாகும். சுமார் 1,000 வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் இம்மரம் தற்பொழுது காப்பு விண்ணப்ப சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மையிடமாக திகழ்கிறது.அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும்பொழுது தல விருட்சத்திற்கு பூஜைகள் நிகழ்த்துவது வழக்கமான ஒன்றாகும். வேப்பமரம் என்றாலே அது மகமாரியின் மறு பிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்தி கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில்நிலைப்பெறுடையதாக கருதப்படுகிறது.

    பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இந்த வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் புற்றில்தான் ஆயிரம் கண்ணுடையாளின் அழகிய செப்புத்திருமேனி எடுக்கப்பட்டது. தற்பொழுது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறாள். நலன் பயக்கும் வேப்ப மரம் அன்னையின் திருவுருவமாக வணங்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம் பூவை நெற்றியில் உள்ள வைரத்தில கத்திற்கும் தொடர்பு படுத்தி கூறுவர். எனவே சிறப்பு பெற்ற இத்தல மரம் இன்றும் பக்தர்களுக்கும் பொதுமக்களு க்கும் பெரிதும் பயன்பாடு கொண்டதாக போற்றி வணங்கப்படுகிறது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம்

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ" "பசித்தோர் முகம் பார் பரம் பொருள் அருள்கிட்டும்" என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்ன தானத்திற் கென தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடை யாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதான திட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் 23.3.2002 முதல் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாய் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் நடைபெற்று வருகிறது. இதற்கென திருக்கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அன்னதான திட்டத்திற்கு பெறப்படும் நன்கொடைகள், உபயங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்கென பேணப்பட்டு வரும் தனிக்கணக்கில் சேர்க்கப்பட்டு இத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில் நன்கொடை வழங்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் நன்கொடையாளர்கள் ஆகிய அனைவரும் இத்திரு க்கோவிலுக்கு நன்கொடை வழங்கலாம். இத்திட்டதிற்கு செலுத்தப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி விலக்கு பெறும் வசதியும் உள்ளது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் புகழ் பெற்ற ஓவியங்கள்

    ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதால், 2010-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி குடமுழுக்குக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2017 பிப்ரவரி 6-ந்தேதி குட முழுக்கு நடத்தப்பட்டது. குட முழுக்கு நடைபெற்ற பின்னர், இரண்டாம் உள் பிரகாரப் பகுதி விசாலமான இடமாக மாறியுள்ளது.

    இப்பகுதியின் மேல்தளத்தில் மிகப்பெரிய அளவில் அம்மனின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 56 அடி நீளம், 36 அடி அகலத்தில் அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சமயபுரம் மாரியம்மனைச் சுற்றி அன்னப்பூரணி, ராஜராஜேசுவரி, கருமாரி, மூகாம்பிகை, தேவி கருமாரி, அபிராமி, மகாலட்சுமி, பிரத்யங்கிராதேவி அம்மன் ஓவியங்கள் அமைந்துள்ளன.

    தென்கிழக்குப் பகுதியில் விநாயகர் சன்னதிக்கு அருகில் மிகவும் நேர்த்தியாக, எத்திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தை தரிசிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியமும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மேலும் பக்தி கணபதி, பாலகணபதி உள்ளிட்ட 8 வகை விநாயகர்களுடன் முருகன், விநாயகர் வழிபடும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியமும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தென் மாவட்ட ங்களில் இருந்தும், டெல்டா மாவட்ட ங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோவிலை வந்தடையலாம்.

    சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவர்கள் முசிறி, நொச்சியம், நெ.1 டோ ல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக சமயபுரம் வந்தடையலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் சத்திரம் பேருந்து நிலையம், திருவானை க்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோயிலை வந்தடையலாம்.

    சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை போன்ற வட மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் பெரம்பலூர், சிறுகனூர், இருங்களூர் வழியாக சமயபுரம் கோவி லுக்கு வந்து சேரலாம்.

    தொடர்பு முகவரி

    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

    சமயபுரம்,

    மண்ணச்சநல்லூர் வட்டம்,

    திருச்சி மாவட்டம் - 621112.

    தொலைபேசி எண்

    0431- 2670460

    • சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நாளில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியும், அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை வசந்த மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், செண்பகம், சரக்கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இரவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • 18-ந்தேதி தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளுகிறார்.
    • 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். இந்த விழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக நேற்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி இக்கோவிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை மேல் வைத்து ஒரு தங்க குடத்திலும், 25 வெள்ளி குடங்களிலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பட்டர்கள் புனித நீரை எடுத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோவில் குருக்கள் யானை மீது தங்க குடத்தில் புனித நீரை எடுத்து மேள, தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க, கடைவீதி, சன்னதி வீதி வழியாக மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து திருமஞ்சனத்துடன் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் அம்மன் வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று, தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான்காவது சுற்று, கீழரத வீதி மேல ரத வீதி வடக்கு ரதவீதியில் ஐந்தாவது சுற்றாகவும் பஞ்சப்பிரகார சுற்றுகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    நேற்று இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 2022-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து இந்த வழியாக சென்று அம்மனை தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நேற்று பக்தர்கள் வரிசை மண்டபம் திறக்கப்பட்டது.

    இந்த மண்டபம் வழியாக வரிசையில் வரும் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கிய பின், மூலஸ்தான விநாயகரை வணங்கி அதைத்தொடர்ந்து உற்சவர் அம்மன் சன்னதி, கருப்பண்ணசாமியை வணங்கிய பிறகு ராஜகோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    • திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்.
    • கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், எஸ்.எஸ். தடுப்புகள், கண்கவர் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதனை செயல்படுத்திடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25.04.2022 அன்று ஆணையர் அலுவலக வளாகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.

    ஒப்பந்த காலத்திற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடமானது, 3 தளங்களுடன், 33,202 சதுரடி பரப்பளவில், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான தனி அலுவலர்களின் அறைகள், தலைமைப் பொறியாளரின் அறை, இணை ஆணையர்களின் அறைகள், உதவி ஆணையர்களின் அறைகள், திருப்பணி பிரிவு, பொறியியல் பிரிவு, உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

    திருச்சி மாவட்டம், சமயபுரம், மாரியம்மன் கோவிலில் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், கோவில் வரிசை வளாகத்தில் 4 நுழைவு மண்டபங்கள், 4 அவசர கால வழிகள், காத்திருப்பு கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறைகள், கோவில் பயன்பாட்டிற்கான கடைகள், மருத்துவ மையம், கட்டண சீட்டு விற்பனை மையம், பிரசாத விற்பனை நிலையம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், எஸ்.எஸ். தடுப்புகள், கண்கவர் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமர குருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த விழா நாளை தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 17-ந்தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்சபூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம், (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர, சதாசிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்சப்பிரகார உற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி 6-ந்தேதி இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு ஆகிறார். 14-ந்தேதி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 15-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள் வட காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து வெள்ளி விமானத்தில் அம்மன் எழுந்தருளி இரவு 12 மணிக்கு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16-ந்தேதி இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார்.

    17-ந்தேதி இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 9-ந் தேதி பங்குனி கடைசி வார ஞாயிற்றுக் கிழமையையொட்டி 5-வது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் எடுத்து ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

    மேலும் பாதயாத்திரையாகவும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதைதொடர்ந்து இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நிறைவு பெற்றது.

    • தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில் திருச்சி மாவட் டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் முதன்மையானதாக திகழ்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பூச்சொரிதல், சித்திரை தேரோட் டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    வேறு எந்த கோவிலிலும் காண முடியாதபடி இந்த கோவிலில் அஷ்டபுஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவங்கள் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமலும் பக்தர்களை காத்து வருகிறார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

    பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வசக்தியையும் பெற்று, படைத்தல் (கொடியேற்றுதல் முதல் திருநாள்), காத்தல் (ரிஷப வாகன காட்சி 5-ம் திருநாள்), அழித்தல் (திருத்தேர் 10-ம் திருநாள்), மறைத்தல் (ஊஞ்சல் பல்லக்கு உற்சவம் 11-ம் திருநாள்), அருள்பாலித்தல் (தெப்பம் 13-ம் திருநாள்) ஆகிய 5 தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் அருள்புரிந்து வருவதாக புராண மரபு கூறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 10-ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியாக சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தையொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி மற்றும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை தலையில் சுமந்து தாரை, தப்பட்டைகள் முழங்க நேற்றிரவு முதல் இன்று காலை வரை சமயபுரத்திற்கு ஊர்வலமாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் சமயபுரம் முழுவதும் பக்தர்கள் தலைகளாகவே காணப்பட்டன.

    தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையத்தை அடைந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.

    திருச்சி மாநகர நாடார் நற்பணிக்குழு சார்பில் சமயபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    11-ம் திருநாளான நாளை அம்மன் வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 12-ம் திருநாளன்று முத்துப்பல் லக்கிலும் வீதியுலா நடக்கிறது. விழாவின் 13-ம் நாளான வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 12 மணிக்கு மேல் பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.

    மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறுகிறது. இந்த சித்திரை தேர்த்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • ஜூலை 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • யாக சாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலின் முன்பகுதியான கிழக்குப் பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது.

    மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில், ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இடையாற்று மங்கலத்தை சேர்ந்த பொன்னர் -சங்கர் என்ற உபயதாரர்கள் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.

    அதைத் தொடர்ந்து, ராஜகோபுரத்தில் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து செல்லும் காட்சி, அக்னிசட்டி ஏந்தி பெண் பக்தர் நடந்து வருவதைப் போன்ற அழகிய சிற்பம், விரதமிருந்து அலகு குத்தி நடந்து வரும் பக்தர் போன்ற சிற்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டு தரமான முறையில் வர்ணம் தீட்டும் பணி நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜகோபுரம் கட்டுமான பணிக்கு அமைக்கப்பட்டிருந்த சவுக்கு கட்டைகளால் ஆன சாரங்களை பிரிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து ராஜகோபுரம் தண்ணீரால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் யாக சாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.
    • திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இந்த பூஜை நடைபெற்றது. பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சமயபுரம் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் பரமானந்தம், உள்துறை கண்காணிப்பாளர் அழகர்சாமி, அலுவலக பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், ஆதார் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று பணம் செலுத்தும் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேற்கண்ட பொருட்கள் விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பூஜையில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை தொடர்ந்து ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அந்த சிற்பங்களுக்கு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து அடுத்த மாதம்(ஜூலை) 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு கட்டமாக ராஜகோபுரத்தின் தரை தளத்தில் இருந்து ஏழு நிலைகள் வரை ஆயிரக்கணக்கான சவுக்குக் கட்டைகளால் கட்டப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

    ×