search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா: இன்று  முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார்
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா: இன்று முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார்

    • 18-ந்தேதி தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளுகிறார்.
    • 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். இந்த விழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக நேற்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி இக்கோவிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை மேல் வைத்து ஒரு தங்க குடத்திலும், 25 வெள்ளி குடங்களிலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பட்டர்கள் புனித நீரை எடுத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோவில் குருக்கள் யானை மீது தங்க குடத்தில் புனித நீரை எடுத்து மேள, தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க, கடைவீதி, சன்னதி வீதி வழியாக மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து திருமஞ்சனத்துடன் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் அம்மன் வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று, தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான்காவது சுற்று, கீழரத வீதி மேல ரத வீதி வடக்கு ரதவீதியில் ஐந்தாவது சுற்றாகவும் பஞ்சப்பிரகார சுற்றுகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    நேற்று இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×