search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol"

    • வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை புரட்டிப் போட்ட 'மிச்சாங்' புயல் மழையால் 5 நாட்கள் ஆகியும் வெள்ளம் ஒரு சில பகுதிகளில் வடியவில்லை. வடசென்னை மற்றும் தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கவும், தண்ணீரை வெளியேற்றவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    வெள்ளம் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது. தாழ்வான பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்டது. மீத முள்ள பகுதிகளில் இரவு, பகலாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று இரவு வரை 97 பகுதிகளில் வெள்ளம் நீர் வடியாமல் இருந்தது. இன்று காலையில் அது 56 ஆக குறைந்தது. சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அதில் 300-க்கும் குறைவான தெருக்களில் மட்டுமே இன்னும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளம் வடியாத பகுதிகளில் கூடுதல் மோட்டார் பம்ப் செட்டுகள், அமைக்கப்பட்டு வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் 363 பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருந்தது. விடிய, விடிய நடந்த நடவடிக்கையின் மூலம் 328 இடங்களில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் 35 பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை இன்று இரவுக்குள் வெளியேற்றி விடுவோம். நிலைமை சீராகி விடும்.

    வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அனைத்து சுரங்கப்பாதையிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. 1178 மோட்டார் பம்புகள் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போர்க் கால அடிப்படையில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

    தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்கள் தவிர பிற பகுதிகள் அனைத்திற்கும் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிசன்கள் 7, 19, 20, 23, 29, 30, 34, 53, 151, 156, 174, 177, 189, 181, 183, 193, 198 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது.

    சேலம்:

    மிச்சாங் புயலால் கடந்த 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் சென்னைக்குள் செல்லும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பால், காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு லாரிகள் செல்ல தொடங்கி உள்ளன. இதனால் சேலத்தில் இருந்து சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இதே போல நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதனால் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட 60 ஆயிரம் லாரிகளில் 35 ஆயிரம் லாரிகள் தற்போது ஓட தொடங்கி உள்ளன. மேலும் 25 ஆயிரம் லாரிகள் தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை நம்பி உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் மேலும் பல பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட அந்த லாரிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது .

    மேலும் கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளது. இதனால் அந்த லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி நிறுவனங்கள் இலவச வாகன சரிபார்ப்பு முகாம்கள் நடத்தி வாகனங்களை இலவசமாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
    • புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் இன்னும் மழை வெள்ளபாதிப்பில் இருந்து மீளாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவுப்படி நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள், மற்றும் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் இன்னும் வடியவில்லை.

    பழவேற்காடு ஆண்டார்மடம், தாங்கள் பெரும்புலம் , எடமணி, வைரங்குப்பம், நக்கத் துறவு, கோரை குப்பம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் படகில் சென்று வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.

    பலத்த காற்று காரணமாக பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக இன்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் மழைவெள்ளம் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.


    பொன்னேரி அடுத்த சின்ன காவனம், பெரிய காவனம், உப்பளம் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர், மற்றும் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று இரவு அவர்கள் மின்சாரம் வழங்க கோரி பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பங்குகளில் பெட்ரோல் டீசல் இல்லாததால் பொன்னேரியில் இருந்து பாட்டில்களில் வாங்கப்படும் பெட்ரோலை சிலர் ஒரு லிட்டர் ரூ.140 -க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு மற்றும் அனுப்பப்பட்டு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறுகள் வன்னிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குழாய் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன.

    கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 34 மின் மோட்டார்கள் நீரில் மூழ்கி பழுதானது. இதனால் 5 நாட்களாக கிராமங்களுக்கு குடிநீர் அனுப்பவில்லை. பழதடைந்த மின்மோட்டர்களை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் சன்முகநாதன்,மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாகப் பொறியாளர் அமலதீபன், உதவிப் பொறியாளர்கள் சம்பத், தமிழ்மணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1146 ஏரிகளில் 784 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்திர் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலக்காடு-சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுவதும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் 10-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வெள்ள பாதிப்புக்கு பிறகு மின்சார ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று முதல் சீரானது. ஆனாலும் ஒரு சில ரெயில்கள் மாற்றுப்பாதை மற்றும் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 8 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. எண் 06061 தாம்பரம்-நாகர்கோவில், எண்.06044 தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரெயில், எண்.22652 பாலக்காடு-சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுவதும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல எண்.06062 நாகர்கோவில்-மங்களூரு சிறப்பு ரெயில், எண்.06055 மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் ஆகியவை நாளை (9-ந்தேதி) ரத்து செய்யப்பட்டு உள்ளது. எண்.06063 மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் 10-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • மின்தடை ஏற்பட்டதாலும் வெள்ளம் சூழ்ந்ததாலும் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை.
    • ஒரு சில பங்க்கள் மட்டுமே செயல்பட்டன.


    சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் வெள்ள நீர் புகுந்தது. தரைக்கு அடியில் இருந்த டேங்கில் வெள்ள நீர் புகுந்து கலந்தது. மின்தடை ஏற்பட்டதாலும் வெள்ளம் சூழ்ந்ததாலும் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை. ஒரு சில பங்க்கள் மட்டுமே செயல்பட்டன.

    இந்த நிலையில் தண்ணீர் வடிந்த பிறகும் நிலையங்கள் செயல்படவில்லை. பெட்ரோல்-டீசலுடன் மழைநீர் கலந்ததால் அதனை தனியாக பிரித்த பிறகு தான் விற்பனை செய்ய வேண்டும். அந்த பணியை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலுடன் கலந்த தண்ணீரை பிரிப்பது கடினம். ஆனால் டீசலுடன் கலந்த தண்ணீரை எளிதாக பிரித்து விடலாம். எனவே தண்ணீர் கலந்த எண்ணையை பிரித்து எடுத்த பிறகு தான் விற்பனை செய்ய முடியும் என்பதால் இன்னும் முழு அளவில் பெட்ரோல் பங்க்கள் செயல்படவில்லை என உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அரியலூரில்கூட்டுறவுத்துறையின் பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையம்

    அரியலூர்,  

    அரியலூர் அண்ணாநகர் பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு உள்ளது. இதனை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆனந்தவேல், டி.எஸ்.பி. சங்கர்கணேஷ், கூட்டுறவு சரக இணைபதிவாளர் தீபாசங்கரி, துணை பதிவாளர் அரப்பலி, மேலாண்மை இயக்குனர் பழனியப்பன், செயலாளர் சுப்பிரமணியன், இந்தியன் ஆயில்கார்ப்பரேசன் அதிகாரிகள் சுர்ஜன், கார்த்திக், ராஜீவ்சரன், ஒன்றியகவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் அரியலூர் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அகரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). இவருக்கும் குள்ளஞ்சாவடியை சேர்ந்த மற்றொரு பாலாஜி (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலாஜி தனது மோட்டார் சைக்கிளில் அகரம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது அங்கு இருந்த பாலாஜி உட்பட 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்தபோது, அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    அங்கிருந்து பாலாஜி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து பாலாஜி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் குள்ளஞ்சாவடியை சேர்ந்த பாலாஜி (23), வன்னியர் பாளையத்தை சேர்ந்த ராகுல் (23), குள்ளஞ்சாவடியை சேர்ந்த குமரகுரு (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும், அரசுக்கு வந்த பரிசுப்பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் அதிபர் பிறப்பித்தார்.

    நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் செயல்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் 331 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 311 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் வரலாற்றில் உச்சபட்ச விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 331 ரூபாய்-க்கும், டீசல் 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    • ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
    • நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது.

    இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றன.

    தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • என்னுடைய இடத்தை மீட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பெட்ரோல் கேனை போலீசார் கண்டுபிடித்து அதனை பறித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது அம்மாபேட்டை அருகே உக்கடை ஊராட்சி வேளாளர் தெரு சேர்மன்நல்லூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (வயது 52) என்பவர் பெட்ரோல் கேனை மறைத்து வைத்துக் கொண்டு தனது மனைவி செல்வியுடன் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தார்.

    பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு தங்கராசு, சரவணகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

    மகன்கள் இருவரும் மாற்றுத்திறனாளி ஆவர்.

    எனக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.

    மேலும் அந்த நபர் வேலியை புல்டோசர் வைத்து இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே என்னுடைய இடத்தை மீட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து மனு அளித்து வெளியே வரும்போது கலியபெருமாள் வைத்திருந்த பெட்ரோல் கேனை போலீசார் கண்டுபிடித்து அதனை பறித்தனர்.

    பின்னர் அவரிடம் எதற்காக பெட்ரோல் கேன் கொண்டு வந்தார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
    • இதில் தொடர்புடையதாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 26) இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் வீட்டு கதவில் இருந்த திரைச் சேலை மட்டும் எரிந்து சாம்பலானது.

    இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ேலும் இவ்வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு பாலாயி குடிகாடு பகுதியை சேர்ந்த கவிக்குமார் (வயது 26), பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த முரளிதரன் (வயது 28), ஏனாதி மேலத்தெரு பகுதியை சேர்ந்த ரெங்கநாத் (வயது 26) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

    மேலும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
    • கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    மும்பை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

    ஆனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

    இதனால் இந்நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது.

    கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது.

    இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

    எண்ணெய் நிறுவனங்கள் 2 வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. அவை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகும். கச்சா எண்ணையின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணை நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணையை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    ×