search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு
    X

    பாகிஸ்தானில் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு

    • தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும், அரசுக்கு வந்த பரிசுப்பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் அதிபர் பிறப்பித்தார்.

    நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் செயல்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் 331 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 311 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் வரலாற்றில் உச்சபட்ச விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 331 ரூபாய்-க்கும், டீசல் 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    Next Story
    ×