search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiappar Temple"

    • நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது.
    • நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.

    நெல்லையில் உள்ள டவுனில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ள இந்த கோவிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்துக்கு மேலாக ஒரு வெள்ளைநிற நந்தி படுத்திருக்கிறது. அடுத்து உள்ளே சென்றால் சுமார் 9 அடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.

    மூலவரை சுற்றி 3 பிரகாரங்கள் இருக்கின்றன. முதல் பிரகாரத்தில் எல்லா கோவில்களை போல தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் உள்ளன. கோவிந்தபெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.

    2-வது பிரகாரம் சற்று பெரியது. இங்கு ஏழிசை சுரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. அவற்றை தட்டிப்பார்த்தால் சுரங்களின் ஒலி கேட்கும். இந்த பிரகாரத்தில் தான் தாமிரசபை உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலட்சுமி, சனீ்ஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

    3-வது பிரகாரம் மிகவும் பெரியது. 3 யானைகள் கூட இதில் சேர்ந்து நடக்கலாம். அவ்வளவு அகலம் கொண்டது. இந்த பிரகாரத்தில் இருந்து அம்மன் மண்டபம் வழியாக அம்மன் சன்னிதிக்கு செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், அய்யப்பன், வடிவு அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோருக்கு தனி சன்னிதிகள் இருக்கின்றன. கோவிலின் மிகப்பெரிய உள்தெப்பம் இருக்கிறது.

    இந்த 3-வது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சன்னதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய் வள்ளி, தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்று அருள்புரிகிறார் முருகன். இந்த கோவிலில் உள்ள விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகப்பெருமான் ஆறுமுகப்பெருமான் என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலில் சிவபெருமான் நெல்லையப்பராக காட்சி அளிக்கிறார். அன்னை காந்திமதி அம்பாள் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். நெல்லையப்பர் கோவில் இரு மூலவரை கொண்ட துவிம்மூர்த்தி என்ற வகை கோவில் ஆகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னிதிகளில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள முக்கிமான 5 சிவசபைகளில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி கோவில் தாமிர சபையை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய 5 முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பு.

    வியப்பை ஏற்படுத்தும் கோபுரங்கள்

    நெல்லையப்பர் கோவிலில் தெற்கு பிரகாரத்துக்கு நடுவே தட்சணாமூர்த்தி சன்னதிக்கு முன்னதாக சங்கிலி மண்டபம் எனும் அற்புதமான கலை நுட்பத்துடன் கூடிய பகுதி அமைந்துள்ளது. அதை ஒட்டி நடுகோபுரமும் கொள்ளை அழகு. பிரகார மண்டபத்தில் உயரமாக பெரிய கல்தூண்கள் அந்த இடத்தையே அழகூட்டி காட்டுகின்றன.

    கோவிலில் உள்ள தெற்கு பிரகாரம் சுமார் 387 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 42 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கோவிலுக்கு திருப்பணி செய்தவர்களும், மன்னர் பெருமக்களும் சிலையாக காட்சி தருகின்றனர்.

    இதைபோல் மேற்கு பிரகாரமும் பிரமிக்கத்தக்கது. இது சுமார் 285 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 40 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்து பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இதன் நடுவே மேலகோபுரம் அமைந்துள்ளது. இங்கே உள்ள சுதை வடிவிலான பிள்ளையார் நம்மை கொள்ளை கொள்கிறார். சுமார் 387 அடி நீளமும் 42 அடி அகலமும் கொண்டு அமைந்திருக்கிறது வடக்கு பிரகாரம். இந்த பிரகாரத்தில் நின்றசீர் நெடுமாறன் அரங்கம் அமைந்துள்ளது. மேலும் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு எடுக்கப்படும் ஆறுகால தீர்த்தக்குண்டம் இங்கே உள்ளது.

    அடுத்து ஈசான மூலையில் யானை கூடம் அமைந்துள்ளது. கிழக்கு பிரகாரம் சுமார் 295 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் அமைந்துள்ளது. இதன் வடக்கு பக்கம் 78 தூண்களுடன் சோமவாரம் மண்டபம் அமைந்துள்ளது.

    நெல்லையப்பர் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும், அதேபோல் காந்திமதி அம்பாள் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும் அமைந்துள்ளது. இந்த சிறப்புமிக்க 2 கோபுரங்களும் பார்க்கவே அவ்வளவு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு

    இந்த கோவிலில் கிழக்கு நோக்கிய சன்னிதி வாயிலின் இருபக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் வெட்டுப்பட்ட லிங்கத்திருமேனியாய் காட்சி அளிக்கிறார் நெல்லையப்பர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலை வரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு வேறு எங்கும் காண முடியாத அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு ஒன்று உறைந்து கிடக்கிறது. அது கம்பி வேலியிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் தாளலயம் பற்றியும், தாளத்தில் உள்ள அங்கங்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

    சீர் கொண்டு செல்லும் அம்பாள்

    பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு சீர் கொண்டு செல்வது போல் காந்திமதி அம்பாளும் தனது திருக்கல்யாணத்தின் போது சீர் கொண்டு செல்கிறாள்.

    ஐப்பசி பிரம்மோற்சவத்தின் முதல் 10 நாட்கள் அம்பாள் சிவனை மணக்க வேண்டி தவமிருபார். 10-ம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வார். 11-ம் நாள் மகாவிஷ்ணு தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று அம்பாளை மனம் செய்வார். திருக்கல்யாணத்தின்போது அம்மன் சீர் கொண்டு செல்கிறார். அப்போது பக்தர்கள் மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

    பெருமை சேர்க்கும் மண்டபங்கள்

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் வகையில் பல மண்டபங்கள் உள்ளன.

    அவைகளின் விவரங்கள்:-

    ஆயிரம் கால் மண்டபம்

    இந்த மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றமுடையது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

    ஊஞ்சல் மண்டபம்

    96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களை உடையது இந்த மண்டபம். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும், ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இந்த மண்டபத்தில் தான் நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

    சோமவார மண்டபம்

    இந்த மண்டபம் சுவாமி கோவிலில் வட பக்கத்தில் அமைந்துள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கு இங்கு வைத்து பூஜை நிகழ்கிறது. இந்த மண்டபம் 78 தூண்களை உடைய பெரிய மண்டபம் ஆகும்.

    சங்கிலி மண்டபம்

    சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பதால் இந்த மண்டபம் சங்கிலி மண்டபம் என பெயர் பெற்றுள்ளது. 1647-ம் ஆண்டு வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் சிலைகள் கண்ணை கவரும்.

    மணிமண்டபம்

    இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் மணிமண்டபம் என்று பெயர் பெற்றது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இந்த மண்டபம். ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணை தட்டினாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். சுவரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான சுவரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டின் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசை தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    வசந்த மண்டபம்

    100 தூண்களை உடைய இந்த மண்டபத்தில் கோடைகாலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலைவனம் 1756-ம் ஆண்டு திருவேங்கிட கிருஷ்ண முதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

    சிறப்பு பெற்ற சிற்ப தூண்கள்

    நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன. ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு மறுபக்கம் தன் பெரிய பிள்ளைக்கு சோறு ஊட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்து செல்லும் அக்கால கணவன்-மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம் தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனை கொல்ல வந்து கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன் போன்ற ஒரு சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைபாடுகள் காண்போரின் மனதை கொள்ளை கொள்ள செய்யும்.

    இந்த சிற்பங்களில் எலும்பு, நரம்பு, நகம் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால், முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

    • 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார்.
    • விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும்.

    நெல்லையப்பர் கோவில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் அமையப்பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை-மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இன்று காலை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக இன்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேரோட்டம் தொடங்கியது. பின்னர் 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார். அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் வடக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், சந்திரசேகர், கிட்டு, உலகநாதன், 25-வது வார்டு வட்ட செயலாளர் டவுன் பாஸ்கர், சுற்றுச்சூழல் அணி அமிதாப், நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தற்காலிக கழிப்பிடங்கள், மாநகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடங்கள், வாகன நிறுத்தங்கள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ரதவீதிகள் முழுமையும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையா் கவிதா பிரியதர்ஷினி, கோவில் செயல் அலுவலா் அய்யர் சிவமணி மற்றும் நிா்வாக அதிகாாிகள் செய்திருந்தனா்.

    தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாகம் தீர்க்கவும், பசியாற்றவும் தன்னார்வலர்கள், பல்வேறு கட்சியினர் சார்பில் ரதவீதிகளில் அன்னதானம், தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர். ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதினர். பாராயணங்களும் பாடினர். சிறுவர்கள் கூட்டமாக கூடி இசை வாத்தியங்கள் வாசித்தனர்.

    சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும். இதன் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, அலங்கார தட்டுகளை சேர்த்து உயரம் சுமார் 70 அடியாக கொண்டுள்ளது. திருவாரூர் ஆழித்தேர் உயரத்தில் அதிகம் என்றாலும் முழுக்க முழுக்க மூங்கில் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ஹிட்டாச்சி எந்திரங்களும், ஹைட்ராலிக் பிரேக் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டு இழுக்கப்படுகிறது. உயரத்தில் 2-வது பெரிய தேரான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தேர் மூங்கில் பிரம்புகள் மற்றும் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ராட்சச எந்திரங்கள் மூலம் இழுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லையப்பர் தேர் முழுக்க முழுக்க மனித சக்திகளால் மட்டுமே இழுக்கப்படுகிறது. தேர் இழுக்க 300 அடி நீளத்தில் 4 வடம் பயன்படுத்தப்படுவதுடன், தேர் திரும்பவும், தேரை நிறுத்தவும் சறுக்கு கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

    • விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • இன்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும்.

    ஆனி பெருந்திருவிழா

    அதில் முக்கியமாக ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆனி பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் சுவாமி-அம்பாள் ரதவீதிகளில் வெள்ளி வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7-ம் திருநாளான நேற்று காந்திமதி அம்பாள் தவழ்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவான இன்று காலை சுவாமி நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி உள்பிரகாரம் வருதல் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8 மணிக்கு சுவாமி நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இன்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம், வீதி உலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்தலும் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து இரவு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணி முதல் 10.30 மணிக்குள் நாட்டிய நாடகம் நடக்கிறது.

    ஆனித்திருவிழாவின் முக்கிய சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள்ளாக சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளல் நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்ளாக பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    தேரோட்டத்தை யொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர் உள்ளிட்ட 5 தேர்களையும் தயார்படுத்தும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. ரதவீதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த தேர்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு தொடர்ந்து சாரம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேரில் பிரம்மா குதிரைகளை செலுத்துவது போன்ற பொம்மைகள் பொருத்தப்பட்டது.

    தேர் சட்டங்கள் அமைத்து அலங்கார பதாகைகள் அமைக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் பிடித்து இழுக்க தேரில் 2 வடங்கள் கட்டப்பட்டது. துவார பாலகர்கள் தேரின் 4 பகுதிகளிலும் யாழிகள் அமைக்கும் பணியும் முடிவ டைந்தது. தேரோட்டத்தின்போது மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியா வசிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதவீதிகள் முற்றிலுமாக மாநகராட்சி தூய்மை பணி யாளர்களால் தூய்மைப் படுத்தப்பட்டு உள்ளது.

    • சுவாமி நடராஜபெருமான் திருவீதி உலா நடந்தது.
    • வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணம் பாடப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    7-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காந்திமதி அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தொடர்ந்து பல்லக்கு சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இரவில் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், காந்திமதி அம்பாள் காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியருக்கு சோடஷ உபசார தீபாராதனை நடந்தது.

    பின்னா் பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்சவாத்திய இசையில் மங்களவாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது.

    இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனா். தொடர்ந்து சுவாமி நடராஜபெருமான் திருவீதி உலா நடந்தது. கோவிலில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பாம்பே சாரதாவின் பத்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி கோலத்திலும், பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு தேர் கடாட்ச வீதி உலாவும், சுவாமி தங்ககைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை, படப்பு தீபாராதனையும் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. 8 மணிக்கு வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். இதையொட்டி தேர்களை அலங்காரம் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

    தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    கோவில் பகுதியில் கூடுதலாக 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    • தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லை யப்பர் கோவில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லை யப்பர் கோவில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவில் காலை, மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் 9-வது திருநாளில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் டவுனில் 4 ரத வீதிகளிலும் வலம் வரும். அதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தவழ்ந்த கோலத்தில் காட்சி

    இதற்கிடையே திருவிழா வின் 7-ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் தவழ்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    தொடர்ந்து சப்பரத்தில் சுவாமி அம்பாள் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர். தொடர்ந்து இன்று மாலை யும் அதே தவழ்ந்த கோலத்தில் வெள்ளி வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருகிறார்.

    • நாளை சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார்.
    • தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    நேற்று 6-வது நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி, டவுன் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் இரவிலும் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இரவில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை (சனிக்கிழமை) 8-வது நாள் திருவிழாவில் மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா செல்கிறார். இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் தேரை பார்வையிட்டு, தொடர்ந்து வீதி உலா செல்கிறார்கள்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணி அளவில் சுவாமி, அம்பாள் தேர்களில் எழுந்தருளுகிறார்கள். காலை 7.30 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்காக தேர்களை தயார் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது.
    • நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி நடந்தது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடக்கிறது

    விழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நந்திதேவர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. தொடா்ந்து அனுப்புகை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.

    பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரைவாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகனங்கள் பஞ்ச வாத்ய இசையில் மங்கள வாத்யங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

    கோவில் நின்ற சீர்நெடுமாறன் கலையரங்கத்தில் ஆன்மிக பக்தி சொற்பொழிவு, பேராசிரியர் ஞானசம்பந்தனின் தமிழ் இனிமை பட்டிமன்றம் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி நடந்தது. தேர் இழுப்பதற்கான வடம், லோடு ஆட்டோகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டு, தேரில் பொருத்தும் பணி நடைபெற்றது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

    • இன்று இரவு சுவாமி-அம்பாள் வீதிஉலா நடக்கிறது.
    • தேரோட்டம் 2-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் டவுன் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் வீதிஉலா வந்தனர்.

    மேலும் பக்தி இசை, பரதநாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா மற்றும் இரவில் பாடகி மகதியின் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். டவுன் ரதவீதிகளில் வந்து, மாநகராட்சி சார்பில் தேரோட்டம் அன்று செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    2-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இரவில் சுவாமி நெல்லையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், அஸ்திரதேவருக்கு சோடச உபசார தீபாராதனையும், தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடந்தது.

    பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரைவாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்சவாத்திய இசையில் மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.

    நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவையொட்டி நந்தினியின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், பிரியா பிரபுவின் பக்தி சொற்பொழிவும், பார்கவி சந்திரசேகரின் பக்தி இன்னிசையும், தாமிரசபை நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தாமோதர தீட்சிதரின் இன்னிசை சொற்பொழிவும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேர் 3-வது பெரிய தேர் என்ற பெருமை மிக்கதாகும். சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும். இந்த தேர் 85 அடி உயரமாகும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு, தேரில் கூண்டுகளை பிரித்து சுத்தம் செய்யும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று தேரில் சாரம் கட்டி சீரமைக்கும் பணி நடைபெற்றது. சுவாமி-அம்பாள் தேர்களில் சாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    • பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் கோவிலின் வெளியே வந்தனா்.

    நெல்லை:

    தென் தமிழ்நாட்டின் ஜீவநதியாம் தாமிரபரணி ஆற்றின் அருகே அமைந்துள்ள டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வெள்ளி சப்பரத்தில் வீதி உலா

    திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் சுவாமி நெல்லையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், அஸ்திர தேவா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராத னையும், அதனை தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடை பெறுகிறது.

    பக்தர்கள் தரிசனம்

    பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்ச வாத்ய இசையில் மங்கள வாத்யங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடைபெறுகிறது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாரா யணமும் பாடப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.

    தேர்களில் சாரம் கட்டும் பணி

    விழாவின் சிகர நிகழ்ச்சி யாக வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. மொத்தம் உள்ள 5 தேர்களில் நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேர் என்ற பெருமை மிக்கதாகும். சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும். இந்த தேர் 85 அடி உயரமாகும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் கூண்டு களை பிரித்து சுத்தம் செய்யும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று தேரில் சாரங்களை பொருத்தி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் சுவாமி-அம்பாள் தேர்களில் சாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணியையொட்டி அந்த பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொது மக்கள் அந்த வழியாக செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி வைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    பேனர்கள் அகற்றம்

    அதன் பேரில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் இன்று 4 மண்டலங்களிலும் பிளக்ஸ், பேனர்களை அகற்ற அவர் உத்தரவிட்டிருந்தார்.

    மாநகர பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அந்தந்த பகுதி மண்டல அலுவலர்கள் கணக்கெடுத்து அவற்றில் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டவை களை அகற்றும்படி அவர் தெரிவித்திருந்தார்.அதன் பேரில் கடந்த சில வாரங்களாக மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    டவுன் ரத வீதிகளில்...

    இந்நிலையில் நெல்லை யப்பர் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ரத வீதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தினார்.இதையடுத்து அவற்றை அகற்றும் பணி சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் இன்று நடைபெற்றது.

    டவுனில் 4 ரத வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமலும் வைக் கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை தூய்மை இந்தியா திட்ட பரப்புரை யாளர்கள் மனோஜ், சேக், முத்துராஜ், மாரியப்பன் ஆகியோர் அகற்றி மாநகராட்சி குப்பை லாரியில் ஏற்றிச் சென்றனர்.

    • இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதபடி வேலியிட்டு காத்ததால் இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் ஏற்பட்டது.

    புண்ணிய திருத்தலத்தலமான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்தோ்த் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான 517-வது ஆனிபெருந்தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திரதேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.

    நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றிவர, ஆனிப் பெருந்திரு விழாவின் பூர்வாங்க பூஜைகளில் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ, கவுன்சிலர்கள் கிட்டு, உலகநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெறும். கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மீக கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியாக, ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற் பார்வையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×