search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian navy"

    • இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக காந்தி மிகப்பெரும் போராட்டம் துவங்க இந்த சம்பவம் துவக்கமாக அமைந்தது.
    • ஜூன் 9ம் தேதி வரை ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறது

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

    இது நடந்து 130 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு நடத்தப்படவிருக்கும் நினைவு நிகழ்ச்சிகளில், இந்திய கடற்படை பங்கேற்கிறது. இதற்காக கடற்படையின் போர்கப்பலான ஐ.என்.எஸ். திரிசூல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு சென்றடைந்தது. பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் டர்பன் நகருக்கருகே அமைந்துள்ளது.

    இந்திய சுதந்திரத்தின் முக்கியமான தருணங்களையும் நிகழ்வுகளையும், நினைவு கூறும் விதமாக, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்னும் பெயரில் இந்திய கடற்படை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஐ.என்.எஸ். திரிசூல் போர்கப்பலின் டர்பன் நகர பயணமும் அமைந்துள்ளதாக இந்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

    ஜூன் 6 முதல் 9 வரை இக்கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் 1893ம் வருடம் நிகழ்ந்த அச்சம்பவத்தை நினைவு கூறவும், இந்திய-ஆப்பிரிக்க உறவுகளில் ஒரு புத்தாக்கம் உண்டாக்கவும் இயலும். அப்பொழுது காந்தியின் நினைவுத்தூணுக்கு மலர்களால் அஞ்சலி செலுத்தப்படும். மேலும் அந்த சில நாட்களில், பல தொழில்முறை மற்றும் சமூக நிகழ்ச்சிகளிலும் இக்கப்பல் பங்கேற்கும்.

    1893ம் வருடம் தாதா அப்துல்லா என்பவருக்கு வக்கீலாக ஆஜர் ஆவதற்காக பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி டர்பன் நகருக்கு வந்திறங்கினார். ஜூன் 7, 1893 அன்று பிரிட்டோரியா செல்லும் வழியில் முதலில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் வரும் பொழுது, முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், ஒரு ஐரோப்பிய பயணியின் தூண்டுதலால், பரிசோதகரால் இறக்கி விடப்பட்டார்.

    நிறவெறி உச்சத்தில் இருந்த அக்காலத்தில், முதல் வகுப்பு பயணம் வெள்ளையரல்லாதவர்களுக்கும், கூலி வேலை செய்பவர்களுக்கும் மறுக்கப்பட்டிருந்தது.

    காந்தி இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக மிகப்பெரும் போராட்டம் துவங்கவும், பின்னாளில் சத்யாகிரக போராட்டம் நடத்தவும் இந்த நிகழ்ச்சியே துவக்கமாக அமைந்தது.

    1997ம் வருடம் ஏப்ரல் 25 அன்று முன்னாள் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலா தலைமையில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான விழாவில், மறைந்த காந்திக்கு "ஃப்ரீடம் ஆஃப் பீட்டர்மாரிட்ஸ்பர்க்" விருது வழங்கப்பட்டது. அப்பொழுது அடக்குமுறைக்கு எதிரான காந்தியின் தியாகத்தையும், ஈடுபாட்டையும் மண்டேலா நினைவு கூர்ந்தார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தொவிக்கப்பட்டுள்ளது.

    • இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி பாராட்டி உள்ளார்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார்.

    புதுடெல்லி:

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இது வரலாற்று மைல்கல் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு அரபிக்கடலில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சவாலான விஷயம், இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மன உறுதி, திறமையை நிரூபித்திருப்பதாக கடற்படை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக்-29கே விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இது தன்னம்பிக்கையை நோக்கிய கடற்படையின் உத்வேகத்தை குறிக்கிறது, என்றார்.

    இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

    விக்ராந்த் கப்பலில் போர் விமானம் தரையிறங்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல்களை தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகளின் உயரடுக்கு குழுவில் இந்தியாவும் இணைந்தது.

    • கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும்.
    • எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டுள்ளன.

    மும்பை:

    இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதேபோல் கடற்படையில் 17 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர் மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர் மூழ்கி கப்பல்கள் ரஷியா, ஜெர்மனி தயாரிப்புகள் ஆகும்.

    இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டில் பிரான்சின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2007-ம் ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர் மூழூகி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது.

    முதல் நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐ.என்.எஸ். காந்தேரி, 2021-ல் ஐ.என்.எஸ். கரஞ்ச், ஐ.என்.எஸ். வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன.

    இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

    மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் புதிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 24 மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி கப்பலாகும்.

    ஐ.என்.எஸ். வகிர் நீர்மூழ்கி கப்பல் 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல், மின்சாரத்தில் இயங்கும்.

    எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டு உள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான்பகுதி, நிலப்பகுதிகளை குறி வைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.

    இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கி இருக்க முடியும். அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகள் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது.

    கல்வாரி ரகத்தில் 6-வது மற்றும் இறுதி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வகிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வி பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
    • நிகழ்ச்சியில் ஆலோகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    இந்திய கடற்படை அலுவலர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வியில் முதுகலை பட்டபடிப்பு மற்றும் பி.எச்.டி. பட்டபடிப்பு வழங்கவும், எஸ்.ஆர்.எம். மாணவர்கள், பேராசிரியர்கள் கடற்படை தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும் இந்திய கடற்படை, கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை, காட்டங்குளத்தூர் எஸ். ஆர். எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பிரிவு ரியர் அட்மிரல் பி. சிவகுமார், கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சி.முத்தமிழ் செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர். எம். மருத்துவம் மற்றும் உடல்நலம் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ. ரவிக்குமார், பதிவாளர் சு. பொன்னுசாமி, கூடுதல் பதிவாளர் டி. மைதிலி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் பேராசிரியர் வி. பி. நெடுஞ்செழியன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், டீன்கள் பங்கேற்றனர்.

    • ஆண் மாலுமிகள் பெறும் அதே பயிற்சி முறைகளை பெண் மாலுமிகளும் பெறுவார்கள்.
    • அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்க்க முயற்சி

    புதுடெல்லி:

    இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தன்னிறைவு பெறும் என மத்திய அரசிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ராணுவம் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    இந்திய கடற்படையில் முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னிவீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 341 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவார்கள். அக்னிவீரர் திட்டத்தின்கீழ் முதல் முறையாக கடற்படையில் பெண் மாலுமிகள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    ஆண்கள் பெறும் அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். கப்பல்கள், விமான தளங்கள், விமானங்களில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். ஒரு மாலுமிக்கு அளிக்க கூடிய அதே பயிற்சி முறைகள் அவர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி முறையில் எந்தவித வேற்றுமையும் இருக்காது. ஒரு தனிநபரின் திறமையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதுதவிர, பாலின சமத்துவ கடற்படையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் பார்க்கிறோம்.

    அடுத்த ஆண்டில் இருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். இதுவரை 7 முதல் 8 பிரிவுகளில் மட்டுமே அவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கப்பல் தயாரிப்பு நிறுவனம், ஒரே ஆண்டில் 3வது பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்துள்ளது.
    • 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்து செல்லும் திறன் கொண்டது.

    மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும், கப்பல் தயாரிப்பு நிறுவனமான ஜி.ஆர்.எஸ்.இ., இந்திய கடற்படைக்காக 3-வது மிகப் பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.

    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு பிராந்திய இந்தியக் கடற்படையை சேர்ந்த மனைவியர் நலச் சங்கத் தலைவர் மதுமதி ஹம்பிஹோலி இந்த ஆய்வுக் கப்பல் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு கடற்படை கமாண்டர் துணை அட்மிரல் ஹம்பிஹோலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 


    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஐ.என்.எஸ். இக்சாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல், 110 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது. இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த முக்கியப் பங்காற்றும்.

    கடந்த 60 ஆண்டுகளில், ஜிஆர்எஸ்இ நிறுவனம் 800க்கும் மேற்பட்ட கப்பல்களை உருவாக்கி உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டவை இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கப்பல்கள், இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படை, நட்பு நாடுகளான மொரீஷியஸ், சீஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சந்தேகத்திற்கிடமான படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.
    • எச்சரிக்கை விடுக்கும் முறையில் படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    தமிழக மீனவர் வீரவேல் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள பால்க் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை கப்பல் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. 21ந் தேதி அதிகாலையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கண்ட இந்திய கடற்படையினர் அந்த படகை நிறுத்துமாறு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் படகு நிற்காததால், அதை நிறுத்தும் வகையில் எச்சரிக்கை முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த படகில் இருந்தவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த நபர், முதலுதவி சிகிச்சைக்கு பின், இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

    பின்னர் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்பு.
    • துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சி நடைபெற்றது.

    இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது. இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி எதிர்ப்புப் போர், துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டன.

    இந்தப் பயிற்சியில் கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டன. அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கமாண்டிங் ரியர் அட்மிரல் ஹிராடா தோஷியுகி தலைமையிலான இசுமோ மற்றும் டகானாமி கப்பல்கள் பயிற்சிகளை மேற்கொண்டன. நேற்றுடன் அந்த பயிற்சி முடிவுக்கு வந்தது. 

    2012 ஆண்டு தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் கடற்சார் பயிற்சியின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதன்மையை ஒருங்கிணைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப் பந்தாட்டப் போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
    • இந்திய கடற்படை அணி அணி வெற்றி பெற்று கோப்பையையும், முதல்பரிசு தொகையான ரூ.1 லட்சத்தினையும் வென்றது.

    சீர்காழி:

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 50வது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடை பந்தாட்டப் போட்டிகள் நிறைவு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் அனிதாராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்கு னர்கள் பிரவீன்வசந்த், அனுஷா பிரவீன், அலெக்சாண்டர், ரினீஷாஜேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார். அகில இந்திய அளவில் 8 அணிகள் பங்கேற்று கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

    இதில் இந்திய கடற்படை அணி அணி வெற்றி பெற்று கோப்பையையும் முதல்பரிசு தொகையான ரூ.1 லட்சத்தினையும் வென்றது.

    இரண்டாமிடத்தை இந்திய ராணுவ அணி (சிவப்பு) பெற்று பரிசு தொகை ரூ.75 ஆயிரத்தை வென்றது.

    மூன்றாமிடத்தை இந்திய ராணுவம் (பச்சை) அணி பெற்று பரிசு தொகை ரூ.50 ஆயிரத்தையும், 4ம் இடத்தை ஜேப்பியார் அணி வென்று பரிசுதொகை ரூ.25 ஆயிரத்தை வென்றது.

    வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை, பரிசு தொகையை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக தலைவர் ஆதவாஅர்ஜூன் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் கல்வி நிறுவனங்களின் முதல்வ ர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நிறைவில் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங் நன்றி கூறினார்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் திட்டத்தை திரும்ப மத்திய அரசு மறுத்து விட்டது. இதனிடையே அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் நடைமுறையை ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்திய கடற்படையில் சேருவதற்கு இதுவரை மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேச சேவைக்காக பணியின் போது உயிரை தியாகம் செய்யும் வீரர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு

    அக்னிபாத் திட்டத்திற்கு, வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் ஆட் சேர்ப்பு குறித்து பாதுகாப்புத்துறை சார்பில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

    அப்போது பேசிய ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, இந்திய ராணுவத்தில் ஒழுக்கம்தான் அடித்தளம் என்றார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தீவைப்பு உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும் அவர் கூறினார். ராணுவத்தில் சேர விரும்புபவர்களுக்கும் எந்த போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை என்ற சான்றிதழ் தேவை என்றும், இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தும் என்றும் அதன் அடிப்படையிலேயே சான்றிதழ் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 1.25 லட்சமாக உயரும் என்றும் அவர் தெரிவித்தார். முப்படைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17,600 பேர் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்றனர் என்றும், ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வீர்கள் என்று யாரும் அவர்களிடம் கேட்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பிறகு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பில் வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீடு அறிக்கப்பட்டுள்ளது, வன்முறை சம்பவங்களின் எதிரொலியாக இல்லை என்றும், அவர் விளக்கம் அளித்தார். அக்னிபாத் திட்டத்தில் இணையும் அக்னி வீரர்கள் பணியின் போது நாட்டிற்காக உயிரை தியாகம் செய்திருந்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்தார்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு போர் கப்பல்களிலும் பணி வழங்கப்படும் என்றும் வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி குறிப்பிட்டார். அக்னிபாத் திட்டத்தில் சேரும் முதல் பேட்ஜ் கடற்படை அக்னி வீரர்களுக்கு நவம்பர் 21 முதல் ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகள் தொடங்கும் என்றார்.

    இந்திய விமானபடையில் அக்னிவீரர்களுக்கான ஆன்லை தேர்வு செயல்முறை முதல் கட்டமாக ஜூலை 24ம் தேதி தொடங்கும் என்றும், ஏர் மார்ஷல் எஸ்கே ஜா குறிப்பிட்டார். இதில் தேர்வு செய்யப்படும் முதல் பேட்ஜ் வீரர்களுக்கு டிசம்பர் 30க்குள் பயிற்சிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

    கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல் திட்டம்-75ன் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இணைக்கப்படுவதன் மூலம் இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்ந்துள்ளது.
    மும்பை:

    கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல் திட்டம்-75ன் கீழ் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை இணைக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மூன்று கப்பல்கள் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையுடன் இணைத்து இயக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நான்காவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வேலா, மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இன்று இணைக்கப்பட்டது. பின், இந்த நீர்மூழ்கிக் கப்பலை கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் இயக்கினார்.

    இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங்

    மத்திய அரசுக்கு சொந்தமான மசகான் டாக் என்கிற கப்பல் தயாரிப்பு நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பலை கட்டமைத்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் இணைத்ததன் மூலம், இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்ந்துள்ளது.

    இதுகுறித்து கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் கூறியதாவது:-
    ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் முழு அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. இன்றைய சிக்கலான பாதுகாப்பு சூழ்நிலையில், இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், கடற்படையின் திறனை மேம்படுத்துவதிலும் இது பங்கு வகிக்கும்.

    பி-75ன் திட்டம் இந்தியா-பிரான்ஸ் இடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. இந்த நீடித்த கூட்டாண்மை புதிய உச்சத்தை அடைந்துள்ளதை குறிக்கிறது. திட்டம் 75-ன் பாதியை நாம் கடந்துவிட்டோம்.

    கடற்படைப் பணியாளர்களின் தலைவராக இருந்தபோது, கொரோனா காலம் சவாலாகவும், பதற்றமும் இருந்தது. கப்பல்களில் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமில்லை, ஆனால் நாங்கள் அனைத்தையும் சமாளித்தோம்.

    சமீபத்தில் ஐஎன்எஸ் விக்ராந்தின் கடல் சோதனையை வெற்றிகரமாக நடத்தினோம். ஆகஸ்ட் 2022க்குள் ஐஎன்எஸ் விக்ராந்தை இயக்க முடியும்.

    சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் சமீபத்தில் கொள்முதல் செய்திருப்பது இயக்கவியலை மாற்றக்கூடும், எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. சபரிமலையில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு
    ×