search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband and wife"

    • திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.
    • இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (42). இவர் தனது மனைவி பாப்பா என்பவருடன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுத்த வந்தார்.

    பின்னர் திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்றினர்.

    பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுந்தரம் கூறியதாவது:-

    கொங்கர் பாளையம் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் எனக்கு 82 சென்ட் நிலம் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 2008 -ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் எனது மனைவி வாணிபுத்தூரை சேர்ந்த ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார்.

    அதற்கு என் மனைவி எனது பெயரில் உள்ள நில பத்திரத்தை அந்த நபரிடம் கொடுத்து கைரேகை வைத்து கடன் பெற்றார். இந்த 60 ஆயிரம் கடனுக்காக நாங்கள் இதுவரை 2 லட்சத்து 94 ஆயிரம் வட்டி கொடுத்து விட்டோம். ஆனால் அவர் எங்களிடம் வாங்கிய பாத்திரத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

    தற்போது திடீரென அந்த நபர் எங்கள் நிலத்தை வேறு ஒருவர் பெயரில் கிரையம் செய்து விற்று விட்டதாக கூறுகிறார். இது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் எங்களை திட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

    அந்த இடத்தை வாங்கியவரும் எங்களை மிரட்ட தொடங்கினார். எங்களிடம் மோதினால் ஊரை விட்டு பஞ்சாயத்து மூலமாக தீர்மானம் போட்டு ஒதுக்கி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

    இன்னும் ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே எங்கள் நிலத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இதுதொடர்பான மனுவையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.

    தீ குளிக்க முயன்றதை அடுத்து சுந்தரம் மற்றும் அவரது மனைவியை சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு, ஆக. 10-

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே செயல்பட்டு வரும் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே வேம்பத்தி சிந்தகவுண்டம்பாளையம் ராம்தாஸ் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (45). இவரது மனைவி பழனியம்மாள்.

    தம்பதியினர் 2 பேரும் சம்பவத்தன்று பவானி புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரித்தபோது தம்பதியினர் வைத்திருந்த பையில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் கஞ்சாவை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சூரம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி விற்ற 1 பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    • கார்-பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியானார்கள்,2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
    • விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சென்னை அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 37). இவர் அதே பகுதியில் உள்ள பிரபல மோட்டார் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிதாஷா (32). இவர்களுக்கு ஜெனிதாஸ்ரீ (9) என்ற மகளும் பிரணவ் ஆதித்யா (4) என்ற மகளும் உள்ளனர்.மனோஜின் சொந்த ஊர் நெல்லை ஆகும்.

    இன்று அதிகாலை மனோஜ் தனது மனைவி, குழந்தைகளுடன் காரில் நெல்லைக்கு புறப்பட்டார். காரை மனோஜ் ஓட்டினார்.

    இன்று மதியம் விருதுநகர் 4 வழிச்சாலையில் கார் வந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் வந்தபோது சாத்தூரில் இருந்து விருதுநகருக்கு பயணிகளை ஏற்றி வந்த பஸ் 4 வழிச்சாலையில் திடீரென திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த மனோஜ் ஓட்டி வந்த கார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த மனோஜ், நிதாஷா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஜெனிதாஸ்ரீ, பிரணவ் ஆதித்யா படுகாயம் அடைந்தனர். காருக்குள் சிக்கியிருந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வந்தால் அது உறவை பலப்படுத்தாது. அது கண்டிப்பாக உறவை பலவீனப்படுத்திவிடும் என்பதுதான் உண்மை.
    கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டை என்றால் அது சரியாகிவிடும். பெரிய சண்டைகள் அடிக்கடி வந்தால் அது உறவை பலப்படுத்தாது. பாதிக்கவே செய்யும்.  கணவன் மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்தும் என்று சிலர் சொல்கிறார்கள் மனதில் உள்ளவற்றை சண்டையின் மூலம் கொட்டி தீர்த்தால் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்பது அவர்களின் வாதம். ஆனால் சண்டை என்பது அடிக்கடி வந்தால் அது கண்டிப்பாக உறவை பலவீனப்படுத்திவிடும் என்பதுதான் உண்மை.

    என்னைப் பொறுத்தவரை கணவன் மனைவி இடையே சண்டையே வரக்கூடாது. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? எளிது கணவன் மனைவிக்கு பிடித்தவைகளை மட்டுமே செய்ய வேண்டும். மனைவி கணவனுக்கு பிடித்தவைகளை மட்டுமே செய்ய வேண்டும். இதற்கு இருவரும் பிடித்தவை பிடிக்காதவை எவை என தெரிந்திருக்கவேண்டும். பிடித்தவற்றை செய்கிறீர்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் பிடிக்காதவற்றை செய்யவேக்கூடாது. அப்படி இருந்தால் நிச்சயமாக கணவன் மனைவி உறவை பலப்படுத்தும்.

    இது படிப்பதற்கு மிக எளிதாகத் தோன்றினாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனால் இருவரும் மனசு வைத்தால் மிக எளிமையாக இவற்றை நடைமுறைப்படுத்தலாம். ஒரு வெற்றி அல்லது சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்றால் நாம் சிறிது உழைக்க வேண்டும் அல்லவா? நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் உயிருக்கு உயிராய் வாழவேண்டும் என்று நினைத்தால் அதற்காக சிறிது கஷ்டப்படதான் வேண்டும்.

    இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் எதையும் விட்டுக் கொடுக்காமல் தனக்கு தான் தன்துணை எல்லா விஷயங்களையும் விட்டுத்தர வேண்டும் என்று நினைப்பதுதான். அப்படி இல்லாமல் இருவரும் விட்டுக் கொடுத்து மட்டும் வாழ பழகிக்கொண்டால் இல்லர வாழ்க்கை சிறப்பாக இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்த்துவந்தால் எப்படிப்பட்ட துன்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வந்தாலும் அவற்றை நீங்கள் எளிதாக எதிர்கொள்ளமுடியும். எல்லா நிலையிலும் நீங்கள் சந்தோஷமாக வாழமுடியும்.
    தீர்க்கமுடியாத பிரச்சனை என்றால் அது மாமியார் மருமகள் சண்டைதான். முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியில் எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    வெவ்வேறுவிதமான பழக்கவழக்கங்களில் வளர்ந்த இரண்டு நபர் திருமணத்தில் இணையும்போது ஏற்படும் அனுசரணை இல்லாத நிலைதான் ஒட்டுமொத்த குடும்பத்திலும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. முறையற்ற தொடர்புகள், பொருளாதாரச் சிக்கல் போன்றவையும் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

    குறிப்பிட்ட கலாசாரம், பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வளர்ந்த பெண்கள் திருமணமாகி வேறொரு கலாசாரத்துக்குள் செல்லும்போது அதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றனர். அந்தத் தடுமாற்றம் அவர்களது கணவன்மாரிடம் நேரடியாக வெளிப்படுகிறது. பெற்றோர் மனைவி இருவரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு புது மாப்பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது.

    திருமணமான பின்பு கணவன் மனைவிக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. திருமணத்துக்கு முன்புவரை சாப்பாடு ஊட்டிவிட்டு, தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு... என மகனை அரவணைத்த அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும், திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவிக்குச் செய்யும் அதீத பணிவிடைகள் வலியை ஏற்படுத்தும். இதை ஆண்கள் உணர வேண்டும்.

    மாமியார் என்பவர் குனியக் குனியக் கொட்டுபவர், மகனை தன் கையில் வைத்துக்கொள்வார்' என்று மகள்களுக்குப் பல அம்மாக்கள் 'அட்வைஸ்' பண்ணிப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதுண்டு. அதே மனப்பான்மையில் புகுந்தவீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு மாமியார் சாந்த சொரூபியாக இருந்தாலும் பத்ரகாளியாகவே தெரிவார். அதனால் திருமணமான புதிதில் மனைவியிடம் அம்மாவைப் பற்றிய மனத்தாங்கல்களை ஆண்கள் கூறக்கூடாது.

    'மாமியார் என்னும் கேரக்டரையே எனக்குப் பிடிக்காது' என்றுகூறும் மனைவிகளுக்கு, 'உன்னுடைய அம்மாவும் மாமியார் ஸ்தானத்தில் இருப்பவர்தான்' என்பதைக் கணவன் நாசூக்காக எடுத்துக்கூற வேண்டும். 'உன்னை எப்படி உன் அம்மா அப்பா செல்லமாக வளர்த்தார்களோ... அதே போலத்தான் என்னையும் என் அம்மா, அப்பா வளர்த்தார்கள்' என்று தங்கள் பெற்றோரைப் பற்றி மனைவியிடம் கூறவேண்டும்.

    தான் நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் தனிக்குடித்தனம் செல்ல அடம்பிடிக்கும் மனைவியிடம், 'என் அம்மா, அப்பா இல்லாம நான் இல்ல. அவங்க என்னை அம்போன்னு விட்டிருந்தா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்ட' என்று சாதுவாக சொன்னால் போதும், மனைவி அப்படியே 'இம்ப்ரஸ்' ஆகிவிடுவார்.

    'உன் மனைவிக்கு நான் இருக்கிறது பிடிக்கவில்லையா' என்று கேட்கும் அம்மாக்களிடம், 'அப்படியில்லம்மா, அவக்கிட்ட பேசி புரிய வைக்கலாம், நான் பேசி சரி பண்றேன்' என்று நிதானமாக எடுத்துக் கூறினால் எந்த அம்மாவும் ஏற்றுக் கொள்வார்.

    திருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் எப்படி இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அம்மா அப்பாவிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டியது தலையாய கடமை. அம்மாவிடமும் சரி, மனைவியிடமும் சரி, நடந்து முடிந்த எதிர்மறையான நிகழ்வுகளைக் கூறி எந்த இடத்திலும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

    உலகத்திலேயே ஒருவருக்குத் துரோகம் நினைக்காதது அம்மா, அப்பா மட்டும்தான் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. உங்களை நம்பி வரும் மனைவியையும் ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள்.
    கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுக்கியது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியில் வசித்தவர் மணி (வயது 81). நெசவு தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (71). மகன் கார்த்திகேயன் (45). இருவரும் நெசவு தொழிலாளிகள்.

    இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மணி நேற்றுமுன்தினம் இறந்தார். நேற்று மாலை மணி உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாடையில் தூக்கி வைத்தனர். பின்னர் இறுதி ஊர்வலம் தாரை தப்பட்டையுடன் புறப்பட தயாரான போது மிகவும் துக்கத்தில் இருந்த லட்சுமி, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, லட்சுமி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி லட்சுமி உயிரை விட்டது, இறுதி சடங்கில் வந்திருந்த பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுக்கியது.
    செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள்.
    வீட்டின் செல்வ செழிப்புக்கு உறுதுணையாகும் பெண்கள், வீட்டுப்பராமரிப்பில் மட்டுமே பெண்கள் கவனம் செலுத்தி வந்த காலங்கள் எல்லாம் பழங்கதையாகிப்போயிற்று. நாகரீக உலகில் ஆண்களின் சேமிப்புகளை முறையாக முதலீடு செய்வதற்கும் செல்வம் சேர்க்கும் அவர்களது முயற்சியில் உதவிடவும் இன்றைய பெண்கள் தயாராகி வருகின்றனர்.

    வீட்டின் சேமிப்பை வளப்படுத்துவதில் ஆண்களின் முதல் சொத்தாக விளங்குவது அவர்களது இல்லத்தரசிகளே. செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள். இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பதில் உங்கள் கணவருக்கு நீங்கள் சிறந்த துணையாக முடியும்.

    எதற்கும் திட்டமிடுவது தான் முதல் படி. `திட்டம் சரியாக இருந்தால் பாதி வெற்றி அடைந்தாயிற்று’ என்னும் ஆங்கில பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

    உங்கள் செலவுகளை- அடிப்படை செலவுகள், அதிக அவசியமல்லாத செலவுகள், சொத்துக்கள் மீதான முதலீட்டு செலவுகள் மற்றும் சேமிப்புக்கள் என வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.

    மளிகை, மருந்து, வாடகை, வீட்டுப்பணியாள் சம்பளம், கல்விக்கட்டணம், மின் கட்டணம், டெலிபோன் கட்டணம் போன்றவை அடிப்படை செலவுகளாகும். சுற்றுலா, சினிமா, உணவு விடுதிகளுக்கு செல்லுதல் போன்றவை அதிக அவசியமல்லாத செலவுகளாகும். வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவை சொத்துக்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளாகும். தங்க ஆபரணங்கள், வங்கி டெபாசிட்டுகள், பங்கு வர்த்தக முதலீடுகள் போன்றவை சேமிப்புகளாகும்.



    மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள். வரவோ செலவோ அவற்றை தனித்தனியாக எழுதி வையுங்கள். என்னென்ன வகைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை சரியாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

    உதாரணமாக பேப்பர்காரர், காய்கறிக்காரர், பால்காரர், சலவை தொழிலாளி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, வீட்டுப்பணியாளருக்கு கொடுத்த முன்பணம், வங்கியில் செலுத்த வேண்டிய பணவிடை, மற்றும் காசோலை பற்றிய தகவல்களை ஞாபகமாக எழுதி வையுங்கள். அந்தந்த செலவுகள் முடிந்ததும் அதையும் மறக்காமல் குறிப்பெடுங்கள்.

    ஒவ்வொரு இனத்துக்கும் நீங்கள் திட்டமிட்ட செலவு அதனை மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு இனத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்து விட்டதாக தெரிய வந்தால், வேறு ஏதாவது ஒரு செலவை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்று பாருங்கள்.

    பல நேரங்களில் உபரி வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. உதாரணமாக, போனஸ் பணத்தில் தனக்கொரு செல்போன் அல்லது லேப்டாப் அல்லது கேமராவை வாங்கலாமென கணவர் நினைக்கும் போது, தங்க ஆபரணங்கள் வாங்குவதே சரி என மனைவி கருதலாம். இதுபோன்ற தருணங்களில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை இருவரும் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது.

    கல்வி, மருத்துவம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை தருவது மிகவும் சரியானது. செலவுகளை கட்டுப்படுத்தி மாதாந்திர வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக்கொண்டால் அவற்றை சிறப்பான அளவில் முதலீடு செய்யலாம்.
    விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
    பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.

    எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

    மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் - மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.



    கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.

    கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.

    பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.
    புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கோரிமேடு ராம்நகரை சேர்ந்த சூரியகுமார். இவரது மனைவி உஷாராணி (வயது 45) ஜிப்மர் ஊழியர். கணவன்-மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சாமிஜோசப் (60) என்பவர் 3 சீட்டுகள் போட்டிருந்தார். மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 3 சீட்டுக்கு பணம் கட்டி வந்தார்.

    சீட்டு காலம் முடிந்ததும் சாமிஜோசப் தான் செலுத்திய சீட்டுக்கான பணம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை கேட்டார். அதற்கு உஷா ராணியும், சூரியகுமாரும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    பலமுறை நேரில் சென்று கேட்டும் அவர் பணத்தை கொடுக்காததால் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதையடுத்து சாமிஜோசப் புதுவை கோர்ட்டில் முறையிட்டார். இதை விசாரித்த நீதிபதி இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. இதற்கான காரணத்தையும் தீர்வையும் பார்க்கலாம்.
    அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் அனைத்து இல்லற வாழ்விழும் மந்தம் தட்டும். தாம்பத்திய வாழ்க்கை ஓய்ந்து விடும். ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விடும். இது இயல்பு தான். எனினும் 100ல் 10 பேர் 60 70 வரையிலும் அன்பும் பாசமும் வழியும் வாழ்வை பெறுகின்றனர். இவர்கள் வரம் பெற்றவர்களா?

    தாம்பத்திய வாழ்வில் கசப்பு ஏன்? மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி? என பிரபல மனோதத்துவ மருத்துவர்கள் விளக்குகின்றனர். படித்து பயன் பெறுங்கள்.

    தாம்பத்தியத்தில் கசப்பு வந்து விட்டதா? எப்படி கண்டுபிடிப்பது?

    * வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் உடல் அலுப்பாக இருக்கிறது என்று தாம்பத்தியத்தை ஒதுக்குகிறீர்களா? இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா? இரண்டாவது ஒன்று தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தாம்பத்தியம் கசப்பை கக்க தொடங்கியுள்ளது என புரிந்துக்கொள்ளுங்கள்.

    * மனைவியை எரிந்து கொட்டி திட்டிவிட்டு பின் மன்னிப்பு கேட்பீர்களா? இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா? இங்கு தாம்பத்தியம் எந்த நிலையில் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்.

    * உணவில் ருசி இருந்தும் நாவில் தென்படவில்லையா?

    * வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைந்து விட்டதா?

    * விடுமுறைகளில் இருவரும் சேர்ந்து செலவிட்ட தருணங்களை இப்போதும் காண முடிகிறதா?

    * வீட்டில் பட்ஜட், குழந்தைகள் பற்றி மட்டும் தான் பேச்சு எழுகிறதா? கேலி கிண்டல் செய்து சிரித்து பேசும் தருணங்கள் இப்போது எல்லாம் கிடைப்பதில்லையா?

    இதுவெல்லாம் தாம்பத்தியம் கசந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறிகள்.

    எப்படி சரி செய்வது?

    * விடுமுறைகளை வீட்டில் கழிக்காமல் கணக்கிட்டு வெளியே சென்று வாருங்கள்.

    * கோபத்தில் திட்டினால் அன்று இரவு உணவு வேலையில் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். சண்டைக்குப்பின் வரும் கூடல், சாதாரணத்தை விட இனியது.

    * மனைவி தாய் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டால் அனுப்பி வையுங்கள். பிரிவின்போது ஒரு ஏக்கம் வரும். நினைவெல்லாம் உங்களிடம் தான் இருக்கும். 2 நாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் உங்களிடம் திரும்பி வந்து விடுவார். குட்டி குட்டி பிரிவுகள், சண்டைகள் நன்மைதான்.

    * பிள்ளைகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் தனிமையை ரசித்து அனுபவியுங்கள். பாட்டி தாத்தா இல்லை எனில் பள்ளிக்கு சென்று விடும் நேரத்தில் பாச வலையை வீசுங்கள்.

    * காமம் இல்லையெனினும், காதலோடு அவ்வப்போது தொட்டு துணையின் பரிசத்தை உணருங்கள்.

    * மற்றவர்களை பற்றி பேசுவது தவறு என்றாலும், 4 சுவற்றிற்குள் எதுவும் தவறில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையின் தோழர்களை பற்றி கோபமாக குறை சொல்வதை குழந்தையாக பாவித்து ரசித்து கேளுங்கள்.

    * இரண்டாவது ஹனிமூன் தவறில்லை. ஒப்புக்கொள்ளுங்கள்.

    * பணிக்கு செல்லாமல் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். துணையுடன் இனிமையான விசயங்களை பகிர்ந்து பொழுதை போக்குங்கள். தவறில்லை.

    இதுபோன்ற விசயங்களை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே ஈர்ப்பு என்றென்றும் குறையாமல் இருக்கும். வீடும் வசந்தமாக மாறும். 
    தேனி அருகே கணவன்- மனைவியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ். இவரது மனைவி துர்காதேவி (வயது 25). அதே வீட்டில் 2 மாதத்துக்கு முன்பு கலையரசன் (43) என்பவர் 3 ஆண்டு ஒத்திக்கு வீட்டை எடுத்து அவரது மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    பாக்கியராஜ் மற்றும் கலையரசன் குடும்பத்தினரிடையே மோட்டார் இயக்குவது மற்றும் இ.பி. பில் கட்டுவதில் 2 மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சினை முன் விரோதமாக மாறி பாக்கியராஜ், கலையரசன் குடும்பத்தினரை வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த முன் விரோதம் கைகலப்பாக மாறியது.

    சம்பவத்தன்று இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கலையரசன் அவரது மனைவி மற்றும் மகன்கள் துர்காதேவியை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த பாக்கியராஜூம் தாக்கப்பட்டார்.

    இதில் காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து துர்காதேவி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் கலையரசன், அவரது மனைவி மற்றும் மகன்கள் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மேலூர் கொட்ட நாதம்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34). இவரிடம் கட்டக்காளைபட்டியைச் சேர்ந்த சரவணன் (42), அவரது மனைவி கங்காதேவி ஆகியோர் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வாங்கி இருந்தனர்.

    வெகு நாட்களாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. எனவே சீனிவாசன் பணத்தை திருப்பிக்கேட்டபோது சரவணனும், கங்காதேவியும் மறுத்து விட்டனர்.

    இது தொடர்பாக சீனிவாசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து சரவணன், கங்காதேவியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×