search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவ தீக்குளிக்க முயற்சி
    X

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவ தீக்குளிக்க முயற்சி

    • திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர்.
    • இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (42). இவர் தனது மனைவி பாப்பா என்பவருடன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுத்த வந்தார்.

    பின்னர் திடீரென அவர்கள் தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்றினர்.

    பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுந்தரம் கூறியதாவது:-

    கொங்கர் பாளையம் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் எனக்கு 82 சென்ட் நிலம் உள்ளது. இங்கு விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 2008 -ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் எனது மனைவி வாணிபுத்தூரை சேர்ந்த ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார்.

    அதற்கு என் மனைவி எனது பெயரில் உள்ள நில பத்திரத்தை அந்த நபரிடம் கொடுத்து கைரேகை வைத்து கடன் பெற்றார். இந்த 60 ஆயிரம் கடனுக்காக நாங்கள் இதுவரை 2 லட்சத்து 94 ஆயிரம் வட்டி கொடுத்து விட்டோம். ஆனால் அவர் எங்களிடம் வாங்கிய பாத்திரத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

    தற்போது திடீரென அந்த நபர் எங்கள் நிலத்தை வேறு ஒருவர் பெயரில் கிரையம் செய்து விற்று விட்டதாக கூறுகிறார். இது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் எங்களை திட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

    அந்த இடத்தை வாங்கியவரும் எங்களை மிரட்ட தொடங்கினார். எங்களிடம் மோதினால் ஊரை விட்டு பஞ்சாயத்து மூலமாக தீர்மானம் போட்டு ஒதுக்கி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

    இன்னும் ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே எங்கள் நிலத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இதுதொடர்பான மனுவையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.

    தீ குளிக்க முயன்றதை அடுத்து சுந்தரம் மற்றும் அவரது மனைவியை சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×