search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Shivakumar"

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.
    • தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பெங்களூரு:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. மேலும் இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதற்கிடையே கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார், எங்களிடம் நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று கூறினார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையமும் 10ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 108.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 219 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டமும் 78.70 அடியாக உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18ஆயிரத்து 145 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

    தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லமான கிருஷ்ணாவில் முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல் அமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான சிவகுமார் ஆகியோர் மைசூரு, மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மைசூரு, மண்டியா மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரை உடனடியாக நிறுத்திவிட்டு கர்நாடக விவசாயிகளுக்கு முடிந்த அளவு தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்த கூட்டம் முடிந்ததும் துணை முதல்அமைச்சர் டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்குமேல் எங்களிடம் போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் உரிய மனுதாக்கல் விரைவில் செய்யப்படும்.

    மேலும் தண்ணீர் திறப்பின் கட்டுப்பாடு தற்பொழுது வரை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் கர்நாடக மாநில பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் காங்கிரஸ் அரசு தண்ணீர் வெளியேற்றி வருவதாக குற்றம் சாட்டி அரசியல் செய்து வருகின்றனர்.

    வறட்சி காலத்தில் தற்போது போல் பா.ஜ.க. அரசு காலத்தில் தமிழகத்திற்கு ஆணைய உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து கடந்த கால குறிப்புகள் எங்களிடம் உள்ளது. அதை தக்கசமயத்தில் வெளியிட்டு இந்த பிரச்சினையில் அரசியல் செய்துவரும் எதிர்கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டப்படும்.

    மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும்.

    மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் முதலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம். ஆனால் அவர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. விவசாய தேவைகளை விட குடிநீர் தேவைக்காக தண்ணீரை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த சூழலில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் பொம்மை அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு முன் அவரது ஆட்சிக் காலத்திலும், தமிழகத்திற்கு நெருக்கடியான காலங்களில் தண்ணீர் வழங்கப்பட்டது. தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் தண்ணீர் விடப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டது. இது பற்றிய பதிவுகள் உள்ளன. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
    • தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் தெரிவித்தார்.

    பெங்களூரு:

    டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும்' என உத்தரவிட்டார்.

    இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளியேறியது.

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறுகையில், 'தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

    இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்துவிடும்படியும், வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறக்கவும், செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலை காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்ததாகவும், சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. மேகதாது அணை இருந்திருந்தால் தமிழகம் எதிர்பார்க்கும் தண்ணீரை திறந்து விட்டிருக்க முடியும். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார்.
    • அப்போது, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்

    பெங்களூரு:

    தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேற்று சந்தித்தார்.

    அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார். எனவே, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்

    இந்நிலையில், துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறுகையில், கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம்.

    எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.

    நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போதுமே கர்நாடக அரசு கட்டுப்படும்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும் என தெரிவித்தார்.

    • அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும்.
    • பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாததாலும், கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை என்று நேற்று முன்தினம் டெல்லியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

    காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுடன் சண்டை போட நமக்கு விருப்பம் இல்லை. காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் கர்நாடகத்தின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. இங்குள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்காரர்கள் நமது சகோதரர்கள். அவர்களுடன் நாம் யுத்தம் (போர்) செய்ய முடியாது.

    ஓசூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கானோர் பெங்களூருவுக்கு வேலைக்காக வருகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு செல்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.

    சட்டசபை தேர்தலின் போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அன்னபாக்ய திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். 5 கிலோ அரிசி கொடுப்பது தொடங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 5 கிலோ அரிசிக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளோம். அதன்படி, பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குக்கு பணத்தை டெபாசிட் செய்வோம். அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும். ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. பா.ஜனதாவினர் தான்முதலில் அரிசி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு உரிய பணத்தை கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி, அரிசிக்கு பதில் பணம் கொடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. தற்போது 10 கிலோ அரிசி கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகின்றனர்.

    இதன்மூலம் பா.ஜனதாவினரின் இரட்டை வேடம் வெளியே வந்துள்ளது. சட்டசபை கூடுவதால் அரசுக்கு எதிராக சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவதாக பா.ஜனதாவினர் அறிவித்துள்ளனர்.பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தட்டும், சந்தோஷம். அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். அதே நேரத்தில் பா.ஜனதாவினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது பற்றியும் போராட்டம் நடத்தட்டும்.

    கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை பெற மற்ற மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நமக்கு தேவையான அரிசி நிரந்தரமாக கிடைக்க வேண்டும். ஒரு மாதம் மட்டும் கிடைக்கும் அரிசியை வைத்து, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாது. இருப்பினும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை.
    • மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மத்திய மந்திரிகளை நேரில் சந்திக்கும் நோக்கத்தில் டெல்லி சென்றுள்ளார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை அவர் நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரினார். மேகதாது திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்க கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை. அதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) உள்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளன. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காவிரி நிர்வாக ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை. இந்த முறை தண்ணீர் வழங்க வாய்ப்பு இல்லை.

    அனைத்து மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாநாடு கர்நாடகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு வருகிற 8 அல்லது 9-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. மேகதாது திட்டம் குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    இந்த திட்டம் எந்த அளவுக்கு காலதாமதம் ஆகிறதோ அந்த அளவுக்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கும். இதனால் மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்படும். ரூ.9 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.13 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    நன்றாக மழை பெய்யும்போது காவிரி ஆற்றில் 700 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கடலுக்கு சென்று கலந்துள்ளது. அதில் நாம் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பது 40 டி.எம்.சி. மட்டுமே. மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து அந்த மாநிலத்திற்கு விவரிக்க முயற்சி செய்கிறோம். அரசியலை தாண்டி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
    • பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக அரசின் கன்னட வளா்ச்சித்துறை சாா்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அனைத்து தரப்பு மக்களும் சமமாக வாழும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவர் கெம்பேகவுடா. பெங்களூருவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். கெம்பேகவுடா ஜெயந்தியை பெங்களூருவில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும். மாநில அளவிலான கெம்பேகவுடா ஜெயந்தி விழா ஹாசனில் நடத்தப்பட்டுள்ளது.

    நாளை (இன்று) முதல் வருகிற 5-ந் தேதி வரை பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கெம்பேகவுடா ஜெயந்தி விழாவை நடத்தி சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். கெம்பேகவுடா ஒக்கலிகர் சமூகத்திற்கு மட்டுமே சேர்ந்தவர் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. அவர் ஒக்கலிகர் சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர் கர்நாடகத்தின் சொத்து, நமது தேசத்தின் சொத்து. இதை நாம் மறக்கக்கூடாது.

    பெங்களூருவின் வளர்ச்சிக்கு நான் நேர்மையான முறையில் முயற்சி செய்து வருகிறேன். இதற்கு ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு, ஆலோசனை தேவை. எங்களுக்கு எதிராக எவ்வளவு விமா்சனங்களை கூறினாலும், நாங்கள் அதுபற்றி கவலைப்பட மாட்டோம். மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

    பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தனியாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். மனிதர்களின் குணங்களில் நம்பிக்கை மிகவும் சிறந்த குணம். மக்கள் அந்த நம்பிக்கையை எங்கள் மீது வைத்துள்ளனர். பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக மேகதாது திட்டத்தை அமல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் குப்பை கழிவுகள் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

    இதில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, முன்னாள் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எடியூரப்பா தர்ணாவில் ஈடுபடுவதில் சிறந்தவர்.
    • லஞ்சம் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    காங்கிரஸ் தொண்டர்களுடன் நான் ஆலோசிக்கும் போது கிரகஜோதி உள்ளிட்ட அரசின் இலவச திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மக்களிடம் இருந்து ரூ.200 முதல் ரூ.1,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு கூறினார்கள். இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு அரசு சார்பில் ரூ.22 கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே கிரகஜோதி உள்ளிட்ட பிற இலவச திட்டங்களுக்கு ஆன்லைன், அரசு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும் போது ஒரு ரூபாய் கூட மக்கள் கொடுக்க வேண்டாம்.

    அதையும் மீறி லஞ்சம் கேட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்கலாம். இதற்காக இலவச வாடிக்கையாளர் சேவை மைய எண் வழங்கப்படும். அதன்மூலமாக மக்கள் புகார் அளிக்கலாம். அப்படி யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. மேலும் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

    லஞ்சம் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அன்ன பாக்ய திட்டத்திற்கு கர்நாடகத்திற்கு அரிசி கொடுக்க மத்திய அரசு மறுத்துள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தர்ணா நடத்துவேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். எடியூரப்பா தர்ணாவில் ஈடுபடுவதில் சிறந்தவர். விதானசவுதாவில் தனியாக நின்று தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்.

    அன்னபாக்ய திட்டத்தின்படி 5 கிலோ அரிசி பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்த முன்வரவில்லை. அவர்களால் 5 கிலோ அரிசியால் தங்களது வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் வயிறு நிரம்பியவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துவதாக கூறி வருகின்றனர். மின் கட்டண உயர்வுக்கு காரணம் யார்? என்று கூறினால், பலர் வீட்டுக்கு செல்ல நேரிடும். நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தவன். அதுபற்றி பேச விரும்பவில்லை. எங்களது ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு.

    பெங்களூரு:

    துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. அவர், 2 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்துள்ளார். இதற்கு முன்பு தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி இருந்தேன். மூத்த தலைவர்களின் அனுபவத்தை பெறுவதில் தவறு எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவர்களது ஆட்சி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம்.

    அதனை கேட்டு தற்போது செயல்படுத்த முடியும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. பசவராஜ் பொம்மை பெங்களூரு பொறுப்பையும் நிர்வகித்து இருந்தார். அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு. குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சியில் தார்மீக குருக்கள் பேச இருப்பது சபாநாயகர் எடுத்திருக்கும் முடிவு. சபாநாயகர் எடுக்கும் முடிவில் அரசு தலையிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக மக்கள் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல.. கடுந்தன்மை.

    மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாக அம்மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்துக்கான நீர்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் விளக்கம் அளித்து இருந்துள்ளார். அதில், வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா நீதிமன்றம் செல்வதை நிறுத்திவிட்டு, மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    டிகே சிவக்குமாரின் இந்த கருத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பதில் அளித்துள்ளார். அதில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை; டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது!" என்றார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,

    "தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகமும் வீணாக அடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும்" என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கூறியிருக்கிறார். கர்நாடக துணை முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் இனிப்பு கலந்திருக்கிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும்.

    "பகையாடி கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு என்றொரு பழமொழி உண்டு. அதைத் தான் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கையில் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதிக்காது. தமிழகத்தை பகைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது எந்த காலத்திலும் நடக்காது. அதனால் தான் தமிழகத்தை புகழ்ந்து, ஏமாற்றி அனுமதி பெற்று அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்க்கூடாது."

    "மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறார். கடந்த காலங்களில் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் என்றாவது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறதா? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் சொத்துகளும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு பலநூறு கோடி. பெங்களூருவில் மட்டும் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்களை அப்போதிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பா ஊக்குவித்தார். இது தமிழர்கள் மீதான பெருந்தன்மையா?"

    "2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாடிய பயிர்களைக் காக்க வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போதும் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஆம்னி பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன."

    "பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினார்கள். இப்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தான் அப்போதும் உள்துறை அமைச்சர். இப்போதைய துணை முதலமைச்சர் சிவக்குமார் தான் அப்போதும் செல்வாக்கு மிக்க அமைச்சர். ஆனால், அவர்கள் அப்போது தமிழர்கள் மீது பெருந்தன்மை காட்டவில்லை. ஆனால், இப்போது தமிழர்கள் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?"

    "மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை. கர்நாடக துணை முதலமைச்சரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையை இழந்து விடக் கூடாது. மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட வல்லுனர்களைக் கொண்டு நடத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும். அதற்கு மாறாக, கர்நாடகத்துடன் எந்தவிதமான பேச்சுக்களிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
    • வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது என டிகே சிவக்குமார் பேச்சு

    கர்நாடக அரசு மேகதாது என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை தொடங்கி உள்ளது.

    தற்போதைய துணை முதல்வரான டி.கே.சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

    'தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது. தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையால் தமிழகத்திற்கு அதிக பயன் உள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கீடு நீர் கிடைக்கும்' என்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

    ஆனால் தமிழகம் தரப்பில் இந்த விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை. அணை கட்டும் முயற்சியை தடுப்பதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு மோதலுக்கு தயாராகிவிட்டது. இதன் காரணமாக மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    • கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
    • காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதற்கு, தமிழ் நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

    "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துனை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

    "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177,25 டிஎம்.சி. நீரை மாதாந்திர அட்டவணை படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மான்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."

    "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகானாத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன்கீழ் 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படி, பன்மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது."

    "காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்."

    "ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்."

    "கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிங்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன்மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

    • சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
    • அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×