search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket World Cup"

    • டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை www.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் வருகிற 15-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ந் தேதி விற்பனையாகிறது.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு காரணங்களுக்கான சில போட்டிகள் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடப்பட்டது.

    இந்த நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நேற்று வெளியிட்டது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் போட்டி உள்ள 9 ஆட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் மோதும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந் தேதி நடக்கிறது. இதேபோல இந்தியா-நெதர்லாந்து அணிகள் நவம்பர் 12-ந் தேதி மோத இருந்த போட்டி நவம்பர் 11-ந் தேதியில் நடக்கிறது.

    மேலும் பாகிஸ்தான்-இலங்கை, பாகிஸ்தான்-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா போட்டிகளின் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன.

    உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ந் தேதி தொடங்கும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்தியா அல்லது மற்ற அணிகளுக்கான டிக்கெட்டுகள் அன்று முதல் விற்பனையாகிறது.

    இந்தியா மோதும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31 முதல் விற்பனையாகும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8-ந் தேதி எதிர் கொள்கிறது. அதை தொடர்ந்து 11-ந் தேதி ஆப்கானிஸ்தானுடனும், (டெல்லி), 19-ந் தேதி வங்காளதேசத்துடனும் (புனே) மோதுகிறது. இந்த 3 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 31-ந் தேதி விற்பனையா கிறது.

    இந்திய அணி அக்டோபர் 22-ந் தேதி நியூசிலாந்துடனும் (தர்மசாலா), இங்கிலாந்துடன் 29-ந் தேதியும் (லக்னோ), இலங்கையுடன் நவம்பர் 2-ந் தேதியும் (மும்பை) மோதுகின்றன. இந்த 3 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் நவம்பர் 5-ந் தேதி (கொல்கத்தா), நவம்பர் 12-ந் தேதி நெதர்லாந்துடன் (பெங்களூர்), மோதவுள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 2-ந் தேதி விற்பனையாகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14-ந் தேதி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ந் தேதி விற்பனை ஆகும்.

    அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ந் தேதி விற்பனையாகிறது. இந்திய அணி திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தியில் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் வருகிற 30-ந் தேதி விற்பனை செய்யப்படும்.

    டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை www.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் வருகிற 15-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இது டிக்கெட் வாங்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.
    • கடந்த உலக கோப்பையில் ரோகித் சர்மா 5 சதம் அடித்தார்.

    கொல்கத்தா:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    இந்தநிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான கங்குலி விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பை போட்டி எல்லா அணிகளுக்கும் நெருக்கடியாகவே இருக்கும். கடந்த உலக கோப்பையில் ரோகித்சர்மா 5 சதம் அடித்தார். இதனால் இந்த உலக கோப்பையிலும் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதேபோல் நியூசிலாந்து அணியையும் சாதாரணமாக கருத முடியாது.

    பாகிஸ்தானும் அரையிறுதிக்கான வாய்ப்பில் இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியில் மோத வேண்டும் என்று விரும்புகிறேன். உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தை நடத்தும் வாய்ப்பு கொல்கத்தாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1987-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதேபோல 1996-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. தற்போது இந்த உலக கோப்பையிலும் அரையிறுதி வாய்ப்பு கொல்கத்தாவுக்கு கிடைத்துள்ளது.

    • புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் எப்போது அனுப்புவது என்பதை அமைச்சகம் முடிவு செய்யும்.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்பு குழு இந்தியா செல்கிறது.

    லாகூர்:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு குழு இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி செல்ல அரசாங்கம் அனுமதி வழங்குவதற்கு முன்பு மைதானங்களை ஆய்வு செய்வதற்காக அக்குழு அனுப்பப்பட உள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பாதுகாப்பு குழுவை இந்தியாவுக்கு எப்போது அனுப்புவது என்பதை வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும். பாகிஸ்தான் விளையாடும் இடங்கள் மற்றும் அணிக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, பிற ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்பு குழு இந்தியா செல்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.
    • என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இஸ்லாமாபாத்:

    50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

    10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமான மகிழ்ச்சியுடன் இருக்கும். இதில் ஒட்டு மொத்த அழுத்தமும் வித்தியாசமானது. நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.

    ஆனால் நாங்கள் அங்கு உலக கோப்பையில் விளையாட செல்கிறோம். எனவே அதுபற்றிதான் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டு உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் அதில் எந்த பலனும் இல்லை.

    என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
    • முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன.

    ஹராரே:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன. அந்த அணிகள் தகுதி சுற்றில் விளையாடுகிறது.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    ஜூலை 9-ந் தேதி வரை நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாளம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்று உள்ளன.

    இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக் கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். நாளைய தொடக்க ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-நேபா ளம், வெஸ்ட்இண்டீஸ்-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    • 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.
    • இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது:-

    2023 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும். எப்போதும் 2-3 வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன்வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும் என ஷாய் ஹோப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. வெஸ்ட் இண்டீஸ் தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 421 ரன்கள் குவித்தது. 3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் 86 பந்தில் 101 ரன்களும், தொடக்க வீரர் லிவிஸ் 54 பந்தில் 50 ரன்களும், அந்த்ரே ரஸல் 25 பந்தில் 54 ரன்களும் அடித்தனர்.

    50 ஓவர் உலகக்கோப்பையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. மேலும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்னை எட்டும் முதல் அணியாக இங்கிலாந்து இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

    இந்நிலையில் நாங்கள்தான் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற சாதனையை படைப்போம் என ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாய் ஹோப் கூறுகையில் ‘‘500 ரன்களை எட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. முயற்சி செய்தால் இந்த அரிய சாதனையை எங்களால் படைக்க இயலும். 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற பெயர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிகப்பெரிய பேட்டிங் ஆர்டரை வைத்திருக்கும் எங்களால் இந்த சாதனையை எட்ட முடியும்’’ என்றார்.



    வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பிராத்வைட் கூறுகையில் ‘‘இந்த சாதனையை உங்களால் எட்ட முடியுமா?, அதற்கான சாத்தியக்கூறுகள் உங்களிடம் உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக இருக்கு என்பேன். எனினும், அதிகாரப்பூர்வமான ஆட்டங்களில் 10-ம் நிலை வீரர்கள் வரை சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க வாய்ப்பில்லை. இதனால், எதார்த்தமான ஸ்கோர் குறித்து நாம் பேசுவது அவசியம்’’ என்றார்.
    நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இதற்குமுன் 10 அணிகளும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதின.

    முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 179 ரன்னில் சுருண்டது, பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது சமி, பும்ரா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இந்த அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து சில சந்தேகம் உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட கேப்டன் விராட் கோலி முடிவு செய்ததார்.

    இந்தியா 37.1 ஓவர்கள் வீசியது, இதில் சாஹல் (6), குல்தீப் யாதவ் (8.1) மற்றும் ஜடேஜா (7) ஆகியோர் 21.1 ஓவர்கள் வீசினர். அதேபோல் நேற்றைய வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று பேரும் இணைந்து 29.3 ஓவர்கள் வீசினர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.

    ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்களா? அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா களம் இறங்குமா? என்பது தென்ஆப்பிரிக்கா போட்டியின்போதுதான் தெரியவரும்.
    வங்காளதேசத்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், டோனி சதம் அடித்து அசத்தினர்.
    கார்டிப்:

    10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று இந்திய அணி, வங்காளதேசத்தை கார்டிப்பில் எதிர்கொண்டது. பயிற்சி ஆட்டம் என்பதால் இரு அணிகளிலும் தலா 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மோர்தசா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அங்கு நிலவிய மேகமூட்டமான சூழல் தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு உதவியது. ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ஆனால் போக போக ஆடுகளத்தன்மை பேட்டிங்குக்கு உகந்ததாக மாறியது. கேப்டன் விராட் கோலி தனது பங்குக்கு 47 ரன்கள் (46 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். விஜய் சங்கர் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.


    102 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (22 ஓவர்) பறிகொடுத்து இந்திய அணி தடுமாறிய நிலையில் 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும், டோனியும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். அவ்வப்போது பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட இவர்கள் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் சதம் அடித்தார். 4-வது பேட்டிங் வரிசையில் யார்? ஆடுவார் என்ற புதிருக்கு ராகுலின் பேட்டிங் விடை அளிப்பதாக அமைந்தது.

    அணியின் ஸ்கோர் 266 ரன்களாக உயர்ந்த போது லோகேஷ் ராகுல் 108 ரன்களில் (99 பந்து, 12 பந்து, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். மறுமுனையில் டோனி அதிரடியில் பின்னியெடுத்தார். அபு ஜெயத்தின் பந்துவீச்சில் சிக்சர் அடித்து மூன்று இலக்கத்தை கடந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சதம் அடித்த டோனி 113 ரன்களில் (78 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்), ஷகிப் அல்-ஹசனின் சுழலில் ‘கிளன் போல்டு’ ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 21 ரன்கள் எடுத்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 7 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வங்காளதேச அணி மொத்தம் 9 பவுலர்களை பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது.

    அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 90 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், எம்எஸ் டோனி சதம் அடித்த வங்காளதேசத்திற்கு 360 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
    உலகக்கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தை கார்டிபில் எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 1 ரன் எடுத்த நிலையிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் 102 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



    லோகேஷ் ராகுல் 99 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எம்எஸ் டோனி 78 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 113 ரன்கள் குவித்து வெளியேறினார். இருவரின் சதத்தால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.

    பின்னர் 360 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    யார்க்கர் பந்துடன் தனது ‘ஸ்லோ பால்’ பந்து வீச்சு முறையுடன் எதிரணியை அச்சுறுத்தும் மலிங்கா, அதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ்க்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சின் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். அத்துடன் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவிற்கு ‘ஸ்லோ பால்’-களை அற்புதமாக வீசக்கூடியவர்.

    140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய மலிங்கா, திடீரென 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் மிகவும் மெதுவாக வீசுவார். இதனால் பேட்ஸ்மேன்கள் திணறிவிடுவார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் ‘ஸ்லோ பால்’கள்தான் முன்னணி பேட்ஸ்மேன்களை வெளியேற்றும். யார்க்கருக்குப் பிறகு இதுதான் மலிங்காவின் பிரம்மாஸ்திரமாகும்.

    தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது. இதில் இலங்கை 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 44.5 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இந்த போட்டி முடிந்த பின்னர் லசித் மலிங்காவிடம் சென்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். தன்னுடைய மிகப்பெரிய பலமாக கருதப்படுவதின் ரகசியத்தை பற்றி கேட்கிறாரே? என்று நினைக்காமல் உடனடியாக அதுபற்றி கற்றுக் கொடுத்தார்.

    மிகப்பெரிய தொடரில் மோதும் நிலையில் இப்படி கற்றுக் கொடுத்துள்ளீர்களே? என்று மலிங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு மலிங்கா கூறுகையில் ‘‘ஸ்டாய்னிஸ் என்னிடம் வந்து ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். ஷார்ட் பார்மட் போட்டியில் விதவிதமான பந்துகளை (variation) வீசுவது முக்கியமானது. எந்தவொரு வீரர் விரும்பினாலும், எல்லாவித டிப்ஸ்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு ‘ஸ்லோ பால்’கள் வீசுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தேன். அவருடன் இதை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி’’ என்றார்.
    ஆப்கானிஸ்தானை 160 ரன்னில் சுருட்டியதுடன், 17.3 ஓவரில் சேஸிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    இங்கிலாந்து அணி உலகக்கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்டது. லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜாப்ரா ஆர்சர் (3), ஜோ ரூட் (3) ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ரன்னில் சுருண்டது.

    ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. முகமது நபி 44 ரன்களும், தவ்லாட் ஜத்ரான் 20 ரன்களும் அடிக்க ஆப்கானிஸ்தான் கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    அதன்பின் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆட்டமிழக்காமல் 46 பந்தில் 89 ரன்கள் குவிக்க 17.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ×