என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shai Hope"

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 69 பந்துகளில் 109 ரன் குவித்தார்.

    நேப்பியர்:

    வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

    அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஷாய் ஹோப் நேற்று அடித்த சதம் 19-வது ஒருநாள் சதமாகும். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் பிரையன் லாராவின் (19 சதங்கள்) சாதனையை ஷாய் ஹோப் சமன் செய்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் (25 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் சேர்த்தது.
    • வங்கதேச அணியால் 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    வங்கதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அலிக் அதானாஸ் 33 பந்தில் 52 ரன்களும், ஷாய் ஹோப் 36 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.

    பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளது. ரொமாரியோ ஷெப்பர்டு, அகீல் ஹொசைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • 311 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
    • கடைசி விக்கெட் ஜோடி 50 ரன்கள் குவித்து ஆட்டமிக்காமல் உள்ளது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் கேம்பல் மற்றும் சாய் ஹோப் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கேம்பல், டெஸ்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதனைத் தொடர்ந்து சாய் ஹோப்புடன் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் சதம் அடித்து அசத்தினர்.

    அவரும் சதம் அடித்த சிறிது நேரத்தில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வந்த கேப்டன் சேஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் வெஸ்ட் 311 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் 41 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் 50 ரன் முன்னிலைக்குள் இந்தியா கடைசி விக்கெட்டை வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் உடன் ஜோடி சேர்ந்த ஜெய்டன் சீல்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் தேவையான நேரத்தில் ரன்களும் அடித்தார். மறுமனையில் க்ரீவ்ஸ் நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்திய பவுலர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. தேனீர் இடைவேளை வரை இந்த ஜோடி தாக்குப்பிடித்தது.

    4ஆவது நாள் தேனீர் இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 361 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 91 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஜஸ்டின் க்ரீவ்ஸ்- ஜெய்டன் சீல்ஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 12.1 ஓவர்கள் தாக்குப்பிடித்து 50 ரன்கள் குவித்துள்ளது. க்ரீவ்ஸ் 35 ரன்களுடனும், சீல்ஸ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னில் சுருண்டது.
    • 270 ரன் பின்தங்கியதால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில் சதம் அடிக்க இந்தியா 518 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் 248 ரன்களில் ஆல்அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் 270 ரன்கள் பின்தங்கி, வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர் டி.சந்தர்பால் (10), அடுத்து வந்த அலிக் அதானேஸ் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3ஆவது விக்கெட்டுக்கு ஜான் கேம்பல் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இருவரும் அரைசதம் விளாசினர். அத்துடன் இன்றைய 3ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது நாள் ஆட்ட முடிவில 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. கேம்பல் 87 ரன்களுடனும், ஷாய் ஹோப் 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 97 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    நாளை காலை உணவு இடைவேளை வரை இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினால், இந்திய அணிக்கு நெருக்கடி உண்டாகும்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 335 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 287 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கேப் டவுன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 128 ரன்னில் அவுட்டானார். ரோமன் பாவெல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். குயிண்டன் டி காக் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பவுமா சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பவுமா 118 பந்தில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 41.4 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 48 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.

    • அதிரடியாக விளையாடி சதம் அடித்த சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    • சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை ஹோப் (41 பந்துகளில்) பதிவு செய்தார்.

    வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்பிடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்பர்டாஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கின.

    முதலில் பேட்டிங் செய்த கயனா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சாய் கோப் 106 ரன்கள் குவித்தார். 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பார்பர்டாஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.


    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு கட்டத்தில் 53 பந்தில் 69 ரன்கள் எடுத்திருந்த அவர் 16-வது ஓவரில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை ஹோப் (41 பந்துகளில்) பதிவு செய்தார்.

    மேலும் சிபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்து 2-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முதலிடத்தில் ஆண்ட்ரே ரசல் 2018-ல் 40 பந்துகளில் ட்ரினிடாட் அணிக்கு எதிராக 100 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். 

    • வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
    • சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி நேற்று ஆன்ட்டிகுவா நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிராவ்லி 48 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.5 ஓவரிலேயே இலங்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சதம் விளாசிய ஷாய் ஹோப் (109) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் டோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன். அப்போது நீங்கள் நினைப்பதை விட எப்போதுமே உங்களுக்கு களத்தில் அதிக நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வார்த்தைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டது.

    செபார்ட் சிறப்பாக விளையாடினார். இத்தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியை பெற்றுள்ள நாங்கள் அதை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என்று நம்புகிறேன். எங்களின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். இதே போன்ற துவக்கத்தை அடுத்த போட்டியில் அவர்கள் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும் உலகின் சிறந்த அணியாக நீங்கள் இருப்பதற்கு சில கேட்ச்களை தவற விடக்கூடாது. இதே நல்ல செயல்பாடுகளை நாங்கள் அடுத்த போட்டிகளிலும் தொடர்வதற்கு பார்க்க வேண்டும்.

    என்று கூறினார்.

    • அல்ஜாரி ஜோசப், கோபத்தில் வெளியேறியதால் 10 வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் செய்தது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    பார்படாஸ்:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட்ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றியுடன் தொடர் சமனில் இருந்தது.

    இந்நிலையில், தொடரை வெல்லும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் இன்று பார்படாசில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

    முன்னதாக, இங்கிலாந்து பேட்டிங் செய்த போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் மற்றும் கேப்டன் ஹோப் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. அல்ஜாரி ஜோசப் பந்து வீசும் போது அவருக்கு தேவையான இடத்தில் பீல்டரை வைக்குமாறு கூறினார். இதற்கு கேப்டன் ஹோப் மறுப்பு தெரிவித்தார்.

    அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜோசப்புக்கு விக்கெட் கிடைத்தது. ஆனால் அதை கொண்டாடமல் கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து ஜோசப் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களுடன் பீல்டிங் செய்தனர். சிறிது நேரம் கழித்து ஜோசப் மைதானதிற்குள் நுழைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.
    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி அசத்தியது.

    லண்டன்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

    இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 263 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி, தொடரையும் கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    முதலாவது இன்னிங்சில் 4-வது ஓவரின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது 2 பேர் ஸ்லிப்பில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை.

    அடுத்த பந்தின்போது ஸ்லிப்பில் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால் கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த ஓவரை ஜோசப் மெய்டன் ஓவராக வீசினார்.

    பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப்பிடம் எதுவும் தெரிவிக்காததால் அந்த ஓவர் முடிந்தபின் ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.

    அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால், மாற்று வீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். இதனால் பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

    • சாய் ஹோப் 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
    • நூறாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஹோப் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சாய் ஹோப் 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

    நூறாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஹோப் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள வீரர்கள் யாரும் தாங்கள் விளையாடிய ஐம்பதாவது மற்றும் நூறாவது போட்டியில் சதம் விளாசியது கிடையாது. ஆனால் சாய் ஹோப் தனது நூறாவது போட்டியில் அடித்த சதத்தின் மூலம் சாதனையை படைத்துள்ளார்.

    ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக தனது ஐம்பதாவது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த சாய் ஹோப் 170 ரன்கள் அடித்த வேளையில், நூறாவது ஒருநாள் போட்டியிலும் 115 ரன்கள் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50-வது மற்றும் நூறாவது போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஒருநாள் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களை எடுத்தது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதமடித்து 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் சதமடித்தார்.
    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    முல்தான்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றியது. கொரோனா பரவலால் ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஷமார் புருக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 70 ரன்னில் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பஹர் சமான் 11 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் வெளியேறினார். மொகமது ரிஸ்வான் 59 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ×