search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alzarri Joseph"

    • 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • அல்ஜாரி ஜோசப் ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தின் மூலம் 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 34 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த இன்னிங்சின் 19-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட அல்ஜாரி ஜோசப் பந்தை கவர்ஸ் திசையில் அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார்.

    அப்போது அந்த திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பீல்டர் பந்தை எடுத்து வேகமாக ஜான்சனிடம் வீசினார். அவரும் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடித்தார். ஆனால், பந்துவீச்சாளர் உட்பட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் அதற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதையடுத்து இந்த காட்சி மைதானத்தில் உள்ள பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.

    அப்போது ஜான்சன் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடிக்கும் போது ஜோசப் கிரிஸிற்குள் வரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவர் ரன் அவுட் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கள நடுவர் ஜோசப்பிற்கு அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த ரன் அவுட்டிற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் கிரிக்கெட் விதிமுறைகளின் படி அல்ஜாரி ஜோசப்பிற்கு ரன் அவுட் கொடுக்கவில்லை என நடுவர் தெரித்தார். இதையடுத்து தொடர்ந்து பேட்டிங் ஆடிய அல்ஜாரி ஜோசப் 5 பந்தில் 2 ரன்கள் அடித்தார்.

    கிரிக்கெட் விதிமுறைகளின் படி ஒரு பீல்டரால் மேல்முறையீடு செய்யப்படும் வரை, எதிரணி வீரர் சட்டத்தின் கீழ் அவுட்டாக இருந்தாலும், எந்த நடுவரும் பேட்ஸ்மேனையும் நடுவர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்தது கனவு போன்று உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் கூறினார். #IPL2019 #AlzarriJoseph
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 137 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களில் சுருண்டது. ஐ.பி.எல்.-ல் ஐதராபாத் அணி 100 ரன்னுக்குள் முடங்குவது இதுவே முதல் நிகழ்வாகும்.

    மும்பை வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 3.4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் வார்னர் (15 ரன்) கிளன் போல்டு ஆனதும் அடங்கும். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலரின் அற்புதமான பந்து வீச்சாக இது பதிவானது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சோகைல் தன்விர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே (சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாக இருந்தது. அந்த 11 ஆண்டு கால சாதனையை ஜோசப் முறியடித்தார்.

    வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 22 வயதான ஜோசப்புக்கு இது தான் முதல் ஐ.பி.எல். ஆட்டமாகும். மலிங்கா தாயகம் திரும்பியதால் களம் காணும் வாய்ப்பை பெற்ற ஜோசப் தனது அறிமுக ஆட்டத்திலேயே பிரமாதப்படுத்தி விட்டார்.

    ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட அல்ஜாரி ஜோசப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல்.-ல் எனது முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட் வீழ்த்தியதை என்னால் நம்ப முடியவில்லை. கனவு போன்று உள்ளது. இதை விட பெரிதாக நான் எதையும் எதிர்பார்க்க முடியாது. நிச்சயம் இது மறக்க முடியாத நினைவாக இருக்கும்.

    எனது திறமை மீது நம்பிக்கை வைத்து திட்டமிட்டு பந்து வீசினேன். அதற்குரிய பலன் தான் இது. வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியதும் ஏன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்று கேட்கிறீர்கள். எனது கவனம் எல்லாம் ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் தான் இருந்தது. உண்மையிலேயே நான் விக்கெட் வீழ்த்துவதை கொண்டாடுவதில்லை. வெற்றியைத் தான் கொண்டாடுகிறேன்.

    எனது குறிக்கோள் விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்ல, அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும். வெற்றிக்காக மட்டுமே விளையாடுகிறேனே தவிர, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த கோப்பையை வெல்ல விரும்புகிறேன்’ என்றார்.

    6 விக்கெட்டுகளில் எதை சிறந்ததாக கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, வெற்றியை உறுதி செய்த கடைசி விக்கெட் தான் என்று பதில் அளித்தார். ஜோசப்புக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘இன்னொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் எங்களை பெருமைப்படுத்தி விட்டார்’ என்று ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.

    ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர்குமார் கூறுகையில், ‘நல்ல தொடக்கம் கிடைத்தும் (முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்தனர்) அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். மும்பை வீரர் பொல்லார்ட் ஆரம்பத்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை( 8 ரன்னில் தப்பியவர் பிறகு 4 சிக்சருடன் 46 ரன் எடுத்தார்) நழுவ விட்டது பின்னடைவாகி விட்டது. அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் இதை விட குறைந்த ஸ்கோரை சேசிங் செய்ய வேண்டியது வந்திருக்கும்.

    இந்த ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. ஆடுகளம் ஈரப்பதத்துடன், வேகம் குறைந்து காணப்பட்டது. இத்தகைய ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. ஆனாலும் 137 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான். நாங்கள் முழு திறமையை வெளிபடுத்தி நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்கி இருக்க வேண்டும். முதல் 3 ஓவர்களுக்கு பிறகு எங்களது பேட்டிங் சொதப்பி விட்டது’ என்றார்.  #IPL2019 #AlzarriJoseph
    ×