search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Care"

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
    • நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?

    ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.

    குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?

    புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.

    தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.

    தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

     பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.

    தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

     இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.

    • குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறை.
    • மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது.

    மாண்டிசோரி கல்வி முறை என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறையாகும், இது 1900-களின் முற்பகுதியில் மரியா மாண்டிசோரியால் உருவாக்கப்பட்டது. மாண்டிசோரி முறையானது கற்றல், தனிப்பட்ட கவனம் மற்றும் குழந்தையின் இயல்பான வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    இது குழந்தைகளுக்கு கற்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம், மேலும் அவர்கள் சுயமாகச் செயல்படுதல், ஆய்வு செய்தல் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழலைக் கையாளுதல் மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

    மாண்டிசோரி வகுப்பறைகளில், குழந்தைகள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்களைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட கல்விப் பொருட்களுடன் வேலை செய்கிறார்கள், மேலும் அவர்கள் அறையைச் சுற்றிச் செல்லவும் தங்கள் சொந்த வேகத்தில் வேலை செய்யவும் சுதந்திரமாக உள்ளனர்.

     சுதந்திரம், பொறுப்பு, கற்றல் மீதான காதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக பணியாற்றுகிறார்கள், ஒவ்வொரு குழந்தையையும் கவனித்து, தேவைப்படும்போது ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.

    மாண்டிசோரி அணுகுமுறையானது கலப்பு-வயது வகுப்பறைகள், சிறப்புக் கல்விப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியின் வேகத்திற்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

    மாண்டிசோரி கல்வியின் குறிக்கோள், குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் அன்பையும், அத்துடன் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான சமூக, உணர்ச்சி மற்றும் அறிவுசார் திறன்களையும் வளர்ப்பதற்கு உதவுவதாகும்.

    மாண்டிசோரி கல்வி முறையானது முறையான கற்பித்தல் முறைகளைக் காட்டிலும் குழந்தைகளின் இயல்பான ஆர்வங்கள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது. ஒரு மாண்டிசோரி வகுப்பறை நடைமுறையில் கற்றல் மற்றும் நிஜ-உலகத் திறன்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

     மாண்டிசோரி கல்வி முறை:

    * இதன் கல்வி முறை முழுமையாக செய்முறை தொடர்பானது.

    * குழந்தைகள் தாமாகவே செயல்முறை மூலம் கல்வி கற்பர்.

    * குழந்தைகள் தனித்தனியாகவோ / குழுவாகவோ இணைந்து தாமாக கல்வி கற்பர்.

    நன்மைகள்

    * மாணவர் படைப்பாக்கத் திறன் கூடும்.

    * தாமாகவே புதிது புதிதாக குழந்தைகள் கற்பர்.

    பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:

    * மொழி

    * கணிதம்

    * நடைமுறை வாழ்க்கை பயிற்சி

    * சமூகத்துடனான அணுகுமுறை

    * கலை

    * இசை-பலப்பல

    வயது முறை:

    * 0–18 வயது வரை

    * 0–3 வீட்டிலேயே இம்முறையில் கற்பிக்கலாம்.

    வகுப்பறைகள்:

    * பொதுவாக சாதாரண பள்ளிகளில் 16 வயது என்றால் 10 வது, 18 வயது என்றால் 12-வது என்ற அடிப்படையில் கற்பிக்கப்படும்.

    * மாண்டிசோரி பள்ளிக்கல்வி முறையில் ஒரே வகுப்பறையில் 3–6 வயதுடையவர்கள், மற்றொரு வகுப்பில் 6–9 வயதுடையோர், மற்றொரு வகுப்பில் 9–12 என்பது போல் வயதுக்கேற்ப பிரித்து கல்வி கற்பிப்பர்.

     பாடங்கள் தேர்வு

    இக்குழந்தை இப்பாடங்களைத்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தமக்கு பிடித்த பாடம் எதுவென்றாலும் அது கணிதமோ, அறிவியலோ, மொழியோ இன்ன பிற அவர்களுக்குப் பிடித்த வகுப்பில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்கலாம். ஆசிரியர்கள்

    * ஆசிரியர்கள் குழந்தைகளை கண்காணிப்பர்.

    * மாணவர் தாமாக கற்க அவர்களை வழிபடுத்துவர். அதுவும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதுபோல் அன்றி, எதுவாயினும் அதை குழந்தைகள் சுதந்திரமாக செய்ய அவர்களை அனுமதிப்பர். அதாவது கற்பிக்க மாட்டார்கள் ஆனால் அவர்களை செயல்படுத்தவிட்டு அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென நல்வழிப்படுத்துவர்.

    பிற பயிற்சிகள்

    நம் வீட்டில் நாம் ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் அதே இடத்தில் தான் வைக்க வேண்டும் என்பதை அறிவோம். இம்முறையை அவர்களுக்கு பயிற்சியாக வழங்குவர். அதாவது, ஒரு பொருள் என்றால் அதை இங்குதான் வைக்க வேண்டும், சோப்பு என்றால் குளியலறை, புத்தகம் என்றால் கற்கும் அறை என எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்குதான் வைக்க, அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவர்.

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    • தாய் என்பவள் இறைவனுக்கும் மேலாக மதிக்கப்படுகிறார்.
    • குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே'' என்ற பாடலுக்கு ஏற்ப குழந்தைகளை பெற்று அதன் ஒவ்வொரு வளர்ச்சிப்படி நிலையிலும் உரியவகையில் வளர்த்தெடுக்கும் பெரும் பொறுப்பு தாய்க்கே உள்ளது என்றால் அதை மறுப்பதற்கில்லை. ஒரு தாயின் செயற்பாடுகள், பழக்க வழங்கங்களை வைத்தே அவளின் பிள்ளைகளை மதிப்பிடுகிறார்கள் இதுவே யதார்த்தமாகும்.

    தாய் என்பவள் இறைவனுக்கும் மேலாக மதிக்கப்படுகின்றார். காராணம் பத்துமாதங்கள் ஒரு குழந்தையை கருவிலே சுமப்பது என்பது லேசான காரியமல்ல அவ்வாறு சுமந்து பிரசவ வலியைத் தாங்கி ஒரு குழந்தையை இந்த உலகிற்கு கொண்டுவருகிறாள். அதோடு அவளுடைய பங்களிப்பு நிறைவுபெறுவதில்லை.

    தாய் என்ற நிலையை அடைந்த பெண் பல பொறுப்புக்களை சுமந்துகொண்டு செயல்பட வேண்டியுள்ளது. இந்த சமுதாயத்துக்கு நல்லதொரு பிரஜையை உருவாக்கவேண்டிய பெரும்பொறுப்பும் தாய்க்கே உண்டு.

    இன்று உலகில் பலவகையான சிக்கல்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றார்கள், போதைப்பொருள் பாவனை, தவறான நபர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு என பல பிரச்சினைகள் இன்று தலைவிரித்தாடுகின்றது. அவற்றில் இருந்தெல்லாம் தன்னுடைய பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள ஒரு தாய் பல தியாகங்களை செய்யவேண்டியுள்ளது.

    குழந்தைகளை அளவுக்கு அதிகமாக கண்காணித்தாலும் அவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தப்படுத்திக்கொண்டு தவறுகளை செய்ய முற்படுகிறார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் அன்பு செலுத்தும் பழக்கத்தை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் பிறரை நேசிக்கும் பழக்கத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்வார்கள். அதுவே ஒரு நல்ல சமுதாயம் உருவாக வழிவகுக்கம். அத்தோடு பிள்ளைகளை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

    ஏனெனில் ஒவ்வொரு பிள்ளைக்கும் வெவ்வேறு விதமான திறமைகள் உண்டு. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர ஒப்பிட்டு குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் பன்முக வளர்ச்சியில் தாயின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது.

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் அநேகமான குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு குறைவாகவே கிடைக்கின்றது. காரணம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தாய்மார்கள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

    அதனால் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியாமல் இருக்கின்றது. இது குழந்தைகளின் முன்னேற்றப்பாதைக்கு சில நேரங்களில் நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். எவ்வளவு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்களின் குழந்தைகளுக்காகவும் நேரத்தை ஒதுக்கி ஒருமுகப்படுத்தும் மனநிலையுடன் குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்.

    பிள்ளைகள் ஏதேனும் ஒரு பொருளை கேட்டுக்கும் போது அது தேவைக்காக கேட்கின்றதா? அல்லது ஆசைக்காக கேட்கின்றதா என்பதை புரிந்து கொண்டு தேவைக்காக கேட்கும் எதையும் தாமதிக்காமல் பெற்றுக்கொடுங்கள். குறித்த காலத்தில் காட்டாத அன்பும், காலம் அறிந்து கண்டிக்காத செயலும் பிள்ளை வளர்ப்பில் தாய் நிச்சயமாக பின்பற்றவேண்டிய விஷயங்களாகும்.

    எனவே ஒரு தாய் குழந்தைகளிடம் காட்டும் அக்கறையும் அன்பும் பரிவும், நல்லொழுக்கமுமே அக்குழந்தைக்கு கிடைக்கின்ற மூலதனமாக அமைந்து எதிர்காலத்தில் அந்தக் குழந்தை நல்ல குழந்தையாக திகழ வழி வகுக்கும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு தாய்மாரும் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகாமல் இருப்பதே கட்டாயமாகும்.

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வருகிறது.
    • புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும்.

    வீட்டிற்கு ஒரு நூலகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வரும் இந்த சூழலில் வீட்டில் ஒரு சிறிய நூலகம் அமைக்க முயற்சிக்கலாம். அதில் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தையும் ஒதுக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தை நிரப்ப அவர்களாகவே ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குவார்கள்.

    அங்கு குடும்பமாய் அனைவரும் அமர்ந்து புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் தினமும் பத்து நிமிடமாவது புத்தகம் வாசிக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். வார விடுமுறை நாளில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து, வாரம் முழுமையும் வாசித்ததையும், வாசிக்கும் போது தங்களுக்குள் எழுந்த உணர்வுகளையும், வாசித்து முடித்த பின்பு தங்களுக்குள் எழுந்த மாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

    இந்த முயற்சியை பெற்றோர் முன்னெடுக்கும்போது குழந்தைகளும் தானாகவே முன் வந்து பின்பற்ற தொடங்குவார்கள். இந்த பழக்கத்தை குடும்பத்தின் அன்றாட வழக்கமாக்கி விட்டால் இது குடும்பத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைகளும் பின்பற்றும் குடும்ப பாரம்பரியமாகவே மாறிவிடும்.

    குடும்பமாக பல இடங்களுக்கு சென்று பொருட்களையும், உடைகளையும் பார்த்து பார்த்து வாங்கும் நாம், குடும்பமாய் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை பார்த்து பார்த்து வாங்கலாம். இந்த ஆண்டில் வாங்க வேண்டிய பொருட்களுக்கு பட்ஜெட் போடும்போது புத்தகங்கள் வாங்கவும் பட்ஜெட் போடலாம்.

     புதிய வீடு கட்டும் போது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான எல்லா அறைகளையும் கட்டும்போது புத்தகங்களுக்கு என்று தனி அறை கட்டி அதை மினி நூலகமாக மாற்றலாம். இட வசதி இல்லாதவர்கள் அறையாக கட்ட முடியாவிட்டாலும், தங்கள் வீட்டில் இருக்கும் இடத்தில் புத்தகங்களை வைப்பதற்கு ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாம். அந்த இடம் அனைவரின் கண்ணில் படும் இடமாக இருக்கட்டும்.

    அடிக்கடி புத்தகங்களைப் பார்க்கும் போது அதனை வாசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு சுயமாகவே ஏற்பட்டு விடும். அது மட்டுமின்றி வீட்டிற்கு வருகிற விருந்தினர்கள் பார்க்கும் இடத்திலும் புத்தகங்கள் இருந்தால் அது அவர்களையும் வாசிக்க தூண்டும்.

    அவர்களுக்கு உணவு விருந்து கொடுப்பதோடு சேர்த்து புத்தக விருந்தும் அளிக்கலாம். அதாவது புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். வாசிப்பு ஒரு மகத்தான செயல்பாடு. பாடப்புத்தகத்தையும், துறை சார் புத்தகத்தையும் கடந்து பிற புத்தகங்களை வாசிக்கும்போது பரந்துபட்ட அறிவும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் மன நிலையும் ஏற்படும். உட்கார்ந்து வாசிக்கும் போது நேரத்தை நாம் பயனுள்ளதாய் மாற்றுகிறோம்.

    ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் நம் நிலையில் இருந்து கடந்து மற்றவர் நிலையை, அவர்களது இன்ப துன்பங்களை புரிந்து கொள்கிறோம். வாசிப்பு, அறிவை பெருக்குவதையும் கடந்து நம்மை பக்குவப்பட்ட மனிதர்களாகவும் மாற்றுகிறது.

    எது சரி, எது தவறு என முடிவு எடுக்கும் புரிதலை தருகிறது. ஒரு தளத்தில் மட்டும் சாயாது நடுநிலையோடு பயணிக்க வாசிப்பு உதவுகிறது. இத்தகைய மகத்தான மாற்றத்தை நம்மில் விதைக்கும் வாசிப்பை நேசிப்போம். நாமும் வாசிக்க, பிறரையும் வாசிக்க வைக்க வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்!

    • பெண் குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு முக்கியமானது.
    • குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    பெண் குழந்தையின் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் தந்தையின் பங்கு முக்கியமானது. தந்தையுடன் அதிக பாசப்பிணைப்போடு வளரும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதையும் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிய தெளிவும், புரிதலும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ஆனால், நமது நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளின் வளர்ப்பில் பெரும்பாலும் தாயே அதிக பங்கு வகிக்கிறார். குழந்தைகள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். குடும்பத் தலைவர் என்ற பொறுப்பு வகிக்கும் தந்தையின் பிம்பம் கண்டிப்பானவர் என்றே குழந்தைகளுக்கு உருவகப் படுத்தப்படுகிறது. இதைத் தவிர்த்து, பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தந்தையையும் ஈடுபடுத்தும் வழிகளை இங்கு பார்ப்போம்.

    நேரடித் தொடர்பு:

    குழந்தை பிறந்தது முதலே அதன் வளர்ப்பிலும். பராமரிப்பிலும் தந்தையின் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். டயப்பர் மாற்றுவது. குழந்தையுடன் விளையாடுவது. குழந்தைவைத் தூங்க வைப்பது ஆகிய செயல்பாடுகளில் தந்தையையும் ஈடுபடுத்த வேண்டும். இதன்மூலம் மகளுக்கும், தந்தைக்கும் இடையேயான இணக்கத்தை அதிகப்படுத்த முடியும் குழந்தை வளரும் பருவத்தில், அதன் சிறு சிறு தேலை களை நிறைவேற்றும் பொறுப்பையும் தந்தையி வசமே ஒப்படைப்பது அவசியமாகும்.

    நேரம் செல்விடுவது:

    வளரும் பருவத்தில் மகளுக்கு தந்தையின் அரவணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். தந்தை, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லது, வீட்டுப்பாடங்களை சொல்லிக் கொடுப்பது, இருவரும் இணைந்து தங்களுக்குப் பிடித்த உணவை சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, செடிகள் வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இருவருக்கும் இடையே புரிதல் உண்டாகும். அதன்மூலம் ஒருவர் மற்றவரின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

    பொறுப்பை ஏற்க வைப்பது:

    பெரும்பாலான குடும்பங்களில், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமே தந்தையின் பொறுப்பாக இருக்கிறது. அதை தவிர்த்து குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். குழத்தை வளர்ப்பு தொடர்பான முடிவை எடுப்பதில் தந்தையையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். குழந்தைக்கு எந்த வயதில் எது தேவை, அதை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை தரலாம். ஆனால் அதை நிறைவேற்றும் பொறுப்பை தந்தையிடமே முழுமையாக ஒப்படைக்கலாம். இதன்மூலம் மகளின் நலன் மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களையும் தந்தை கவனித்து செய்ய முடியும்.

    உணர்வுகளை வெளிப்படுத்துவதும் இருவருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானதாகும். தனிப்பட்ட பல விஷயங்களை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வதில் தந்தை மகளுக்கு இடையே தயக்கம் இருக்கும். ஆனால் மகளின் உணர்வு சார்ந்த விஷயங்களில் கட்டாயம் தந்தையின் பங்களிப்பு இருக்க வேண்டும். பெண்கள் வளரும்போது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திப்பார்கள் அந்த நேரத்தில் தந்தையின் வழிகாட்டல் இருந்தால், மகள் சமூக ரீதியான மாற்றங்களை எளிதாக அணுக முடியும்.

    • ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும்போதே தடுப்பூசி போடப்படுகிறது.
    • தடுப்பூசி தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது.

    குழந்தை பிறந்ததும் தடுப்பூசி போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும் போதே தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை அட்டவணையில் பதிவிட்டு வழங்கப்படுகிறது.

    இந்த தடுப்பூசி மூலம் குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை தாக்கப்படும் நோய்களிலுருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இதில் முக்கியமானது எந்தெந்த நாட்களில் தடுப்பூசிகளை போட வேண்டுமோ அதை தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது. அது போல ஒவ்வொரு தடுப்பூசியும் எதற்காக போடப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    டிபிடி என்பது டிஃப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்ற நோய்கள் வராமல் தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் பாக்டீரியாவால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோய்களாக இருக்கிறது.

    டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகியவை காற்று, நீர், தொடுதல், இருமல், தும்மல் மற்றும் பிற முறைகள் மூலம் நபருக்கு நபர் பரவுகின்றன, அதேசமயம் டெட்டனஸ் பாக்டீரியா வெட்டுக்கள் மற்றும் காயங்கள் மூலம் உடலில் நுழைகிறது.

    டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் என்றால் என்ன.?

    டிப்தீரியா தொண்டை பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகள், பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.

    டெட்டனஸ் ஒரு பாக்டீரியா தொற்று. இது தசைகள் வலிமிகுந்த இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. தாடையனாது செயல்இழுக்கப்பட்டுவை திறக்க முடியாமல் செய்கிறது. டெட்டனஸ் உலகளவில் 10 சதவீதம் உயிரைக் கொல்கிறது. ஒழிப்பை இந்தியா நோக்கமாகக் கொண்டிருந்தாலும், கர்நாடகாவில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

    பெர்டுசிஸ் நோய் ஏற்பட்டால் குழந்தைகளால் சாதாரணமாக சுவாசிக்க முடியாது. தொடர்ந்து இருமல் இருந்து கொண்டே இருக்கும். அதோடு மட்டுமில்லாமல் இருமலோடு வாந்தி பிரச்சினையையும் ஏற்படுத்தும். மேலும் இவை தொடர்ந்து நீடிக்கப்பட்டு தண்ணீர் குடிப்பதில் பிரச்சினை, உணவு சாப்பிடுவதில் பிரச்சினை போன்றவையே ஏற்படுத்தும். இவற்றை கவனிக்காம விட்டால் நுரையீரலில் அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் நிமோனியா காய்ச்சல் மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

    2 மாதங்கள், 4 மாதங்கள், 6 மாதங்கள், 15 முதல் 18 மாதங்கள், 4 முதல் 6 ஆண்டுகள் இந்த ஊசியானது ஐந்து அளவுகளில் வழங்கப்படுகிறது.

    பக்க விளைவுகள்:

    ஊசி போட்ட இடத்தில் சிவந்து போதல் அல்லது அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு காணப்படும்.

    காய்ச்சல், பசியின்மை, தூக்கம், எரிச்சல், வாந்தி, வலிப்பு ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நல்லது.

    • வளரிளம் பருவம் மிக முக்கியமானது.
    • இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

    பள்ளியிலிருந்து உங்கள் குழந்தையின் ஆசிரியர், உங்கள் மகள் அல்லது மகனை பற்றி புகார் கூறும் நிலை பல பெற்றோர்களுக்கும் ஏற்படும் அனுபவம் தான். இவ்வளவு நாளாக நன்றாக இருந்த உங்கள் மகன் இப்பொழுதெல்லாம் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை.

    எப்பொழுதும் மற்ற பிள்ளைகளிடமே பேசிக்கொண்டிருக்கிறான். கண்டித்தால் உடனே அழுது விடுகிறானே தவிர மாறுவது இல்லை.

    அவன் நண்பர்களிடமும் அடிக்கடி சண்டை போடுகிறான், அடித்தும் விடுகிறான் என்று குறை கூறுவார்கள். இதை கேட்ட பெற்றோர்களுக்கு தன் மகன் ஏதோ பெரிய பிரச்சினையில் இருப்பதாக நினைத்து பயந்து போவார்கள். இது பயப்பட வேண்டிய ஒன்றில்லை. ஆனால் இந்த வளரிளம் பருவம் பற்றி புரிந்து கொண்டால் இந்த காலத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

    டீன் ஏஜ், அடலசன்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வளரிளம் பருவம் மிக முக்கியமானது. இந்த பருவத்தில் தான் குழந்தையாக இருக்கின்ற நாம் பெரியவர்களாக மாறுகின்ற காலம். இப்பருவத்தில் நம் உடலிலும் மனதிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும்.

    அசட்டு துணிச்சல் இருக்கும், நாம் யார் என நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோம், கனவுகள் அதிகம் வளரும், கூடவே குழப்பங்களும் பயமுறுத்தும், நண்பர்களோடு பயணிக்க ஆசைப்படும், பொழுதுபோக்குகளில் கவனம் செல்லும், பெற்றோர்களின் ஆசிரியர்களின் அதிகப்படியான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மனம் மறுக்கும், ஆண் பெண் உறவுகளைப் பற்றி ரகசியமாக தெரிந்து கொள்ள ஆசைப்படும்.

    இந்த பருவத்தை பெரியவர்களாகிய நாம் கடந்து வந்தாலும், நம் வீட்டு குழந்தைகள் இப்பருவத்தை கடக்கும் போது அவர்கள் நிலையிலிருந்து பார்க்காமல், அவர்களிடம் கண்டிப்பாக நாம் நடந்து கொள்வது சரியா? மனநல ஆலோசனைக்கு வரும் பல பெற்றோர்கள் கூறுவது என் பையன் அல்லது என் பெண் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறாள்.

    எதை சொன்னாலும் எதிர்த்து பேசுகிறாள். தான் சொல்வது தான் சரி என்று வாதிடுகிறாள். மரியாதை இல்லை என்பதுதான்.

    உண்மையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்த வளரிளம் பருவத்தில் குழந்தைகள் தங்களுடன் நெருக்கமாக உள்ளவர்களிடம் தங்களின் மன அலை சூழலை அப்படியே வெளிப்படுத்துகின்றனர். அதாவது தங்களுக்கு உள்ள குழப்பம், உலகை அறிந்து கொள்வதில்

    இருக்கின்ற ஆர்வம், கோபம் எரிச்சல் போன்றவற்றை பெற்ற தாய் தந்தையர்களை தவிர வேறு யாரிடம் காட்ட முடியும்? எனவே புரிந்து கொள்ளுங்கள்.

    அதேபோல் இந்த வயதில் நண்பர்களே பிரதானமாக தெரிவார்கள். அவர்கள் சொல்வதெல்லாமே சரியென்று தோன்றும். தன் நண்பன் சொன்னதை கேட்டு உங்களிடம் சண்டை போடுவார்கள். இது எதனால் என்றால் தன்னை பற்றி மதிப்பிடாமல் தன்னை அந்த நண்பன் ஏற்றுக்கொள்வதால்தான்.

    மற்றவர் தன் மேல் கொள்ளும் மதிப்பீட்டை பற்றி அதிகம் கவலைப்படும் வயது இது என்பதால் தன்னைப் போலவே இருக்கும் தன் நண்பர்கள் கூறுவதும் செய்வதும் இவர்களுக்கு தேவ வாக்காக இருக்கும்.

    உங்கள் குழந்தைகள் மேற்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இயல்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வாறில்லாமல் மிக அமைதியாக இருக்கிறார்கள் என்றால், ஒன்று அந்த குழந்தை தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும். அல்லது தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட பயந்து அடக்கி கொண்டுஉங்களுக்கு ஏற்றது போல் நடிக்க வேண்டும்.

    குழந்தை நடித்துக் கொண்டிருக்கிறது என்றால், அது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திடாது. இந்த வயதில் ஏற்படும் எந்த பழக்கமும் பொதுவாக தொடராது. பல மாதங்களாக எதிர்மறை நடத்தை இருந்தாலோ அல்லது அது தவறான விளைவுகளுக்கு வழிவகுத்தாலோ மட்டுமே அதை நாம் மாற்ற வேண்டும். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சரியாக புரிந்து கொண்டால் எப்படி சண்டித்தனம் பண்ணும் குழந்தையையும் மிக இயல்பாக வழிக்கு கொண்டு வர முடியும்.

    • குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும்.
    • குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்திச் செல்வது அவர்களை சரியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்.

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள். எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாகக் கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடை முறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    சமூக வளர்ச்சி

    குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை களைப் பெற்றோர் எவ்வாறு கையாள்கிறார்கள், எத்தகைய தீர்வை நாடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள். மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, சமூகத்துடன் எத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் விதம் போன்ற பல விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைத்தான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மன வளர்ச்சி

    பெற்றோர் பின்பற்றும் பாணிதான் குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்றுவது, பிறருடைய கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களைப் பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பிடூ

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டுவிடும். தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும்.

    நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். சின்னச்சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும்.

    குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள்.

    • தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது.
    • மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்.

    பொதுவாக குழந்தைகளை தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தற்போது மழை மற்றும் குளிர்வாட்டி வருகிறது. எனவே குழந்தைகளை குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத் தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்குச் சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளுக்குக் குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருடக் குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது எனச் சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல் இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரைப் பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்து சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு எனக் கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்குக் குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்கக் கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்துக் குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்குக் குளிக்க வைத்த பிறகு, உடலுக்குக் குளிக்க வைக்க வேண்டும். சளிப்பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும்.
    • குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான்.

    பொதுவாக குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் வரக்கூடிய தொண்டை வலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், நிமோனியா, காது வலி, ஆஸ்துமா மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவா்.

    மழை, பனிபொழிவு ஆகியவற்றால் குளிர்காலம் ஒரு மாயாஜால பருவமாக தென்படலாம். ஆனால் இது பல்வேறு விதமான நோய்கள் தலைதூக்கி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலமாகும்.

    குளிர்கால தொற்றுகள்

    குளிர்காலத்தில் சமூக பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வாமை, மோசமான காற்றின் தரத்தால் மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். குளிர்காலத்தில் வேறு சில நோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி, தொண்டை வலி, சோர்வு, வலுக்குறைவு, தசைவலி, இருமல் ஆகியவை குளிகாலத்தில் ஏற்படும் நோய்கள் ஆகும்.

    ஜலதோஷம்

    குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான். குளிர்காலத்தில் ஒரு முறையாவது அனைவருக்கும் ஜலதோஷம் வந்துவிடும். இதனை பருவமாற்றத்தின் அறிகுறியாக கருதினாலும், ஜலதோஷம் இறுதியாக நிமோனியா மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    சுவாசக்குழாய் தொற்று

    குளிர்காலத்தில் வறண்ட காற்றின் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற சுவாசக்குழாய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். மிகக் குளிர்ந்த வெப்பநிலையால் வெளிப்படும் நிமோனியாவால் லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நிமோனியாவிற்கு சிகிச்சை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததாகும். குளிர்காலத்தில் மூச்சுக்குழாய் அழற்சியானது , குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிக அபாயமானதாகும். சின்சிடியல் வைரசால் தூண்டப்படும் சுவாசத் தொற்றே மூச்சுக்குழாய் அழற்சி என்றழைக்கப்படுகிறது.

    நோரோ வைரஸ்

    இந்த வைரஸ் இரைப்பை குடல் அழற்சிக்கு வழிவகுக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை நோரோவைரசின் அறிகுறிகள் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவவும். சுகாதாரமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

    ×