search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess"

    • தேசிய அளவில் பார்வையற்றவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது.
    • சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள விசாலயன் கோட்டை சேது பாஸ்கரா வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அளவில் பார்வையற்ற வர்களுக்கான முதலாவது ''சேது பாஸ்கரா பிடே தரவரிசை சதுரங்க போட்டி'' நடந்தது.

    போட்டியை சேது பாஸ்கரா கல்வி குழுமங்களின் தலைவர் சேது குமணன் தொடங்கி வைத்தார். இதில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களை சேர்ந்த சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 162 பேர் பங்கேற்றனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் சேது பாஸ்கரா கல்வி குழுமம் சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூ தன்ரெட்டி வழங்கினார். அவர் பேசுகையில், உலக தரமான கல்வியுடன் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்க ளை திறம்பட செய்து வருகிறது, சேது பாஸ்கரா கல்வி குழுமம்.

    இங்கு படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய நிலையில் உயர்ந்து சிறப்பிடம் பெறுவார்கள். கண்பார்வையற்ற வர்களுக்கான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள். குறைபாடுள்ளவர்கள் முன்னேறுவதை அனை வரும் பாராட்ட வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் திருப்பதி, கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குநர் கோபால், ஆலோசகர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட மற்றும் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
    • மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மகிழஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி பக்கிரிசாமி- புவனேஸ்வரி தம்பதியின் மகள் மகிஷா. இவர் மகிழஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் துணையுடன் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.

    இதுகுறித்து மாணவி கூறியதாவது:-

    வறுமையான குடும்பத்தில் பிறந்து, இடிந்துள்ள வீட்டில் வசிக்கும் நான் பள்ளி ஆசிரியர் உதவியுடனும், எனது 67 வயது பாட்டி பத்மாவதி துணையுடன் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் என்னால் முறையாக பயிற்சி எடுக்கவும், அதற்கான சாதனங்களை வாங்குவதற்கும் முடியவில்லை. எனவே, கருணை மனம் கொண்டவர்களும், தமிழக அரசும் எனக்கு உறுதுணையாக ஆதரவளித்தால் மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.
    • 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.

    அதையடுத்து, மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். அதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஸ்டிரா உள்பட, 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டியில், செமி பைனலில், மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவரை எதிர்த்து விளையாடிய நவீன்குமார் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில், தமிழக மாணவரை எதிர்த்து விளையாடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

    தேசிய அளவில் சாதனை படைத்து, தமிழகத்துக்கும், நாமக்கல் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர் நவீன்குமாரை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பள்ளி தலைமை யாசிரியர் ஆன்ட்ரூஸ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • சிவகங்கை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சுந்தரநடப்பு தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் 234 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்தார். முன்னதாக மாணவர்களுடன் கலெக்டரும் செஸ் விளையாடி உற்சாகப்படுத்தினார். இதில் முதல்வர் இக்னேஷியல்தாஸ், செயலாளர் கண்ணன், பிரகாஷ், மணிமாறன் மற்றும் மாவட்ட செஸ் வீரர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்தார்
    • இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன் லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அரை இறுதியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல் செனை (நார்வே) ஜெர்மனியின் வின்சென்ட் நெய்மரை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இன்று கார்ல்சென்-அர்ஜூன் எரிகைசி மோதினர்.

    இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் கார்ல்சென் 2.5-0.5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளார்.

    இறுதி போட்டியை டை பிரேக்கருக்கு கொண்டு செல்ல இந்திய வீரர் அர்ஜூன் இறுதி போட்டியின் 2-வது சுற்றில் ( 4 ஆட்டம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    • கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    ஓமலூர்:

    ஓமலூர் ஒன்றியம் கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியில் கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணேசன் தொடங்கி வைத்தார். போட்டியில் ஆட்டோமேட்டிக் பகுதியில் சேர்ந்த இளைஞர் அன்பரசு முதல் பரிசை தட்டிச் சென்றார் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் 2-ம் பரிசும் நந்தகோபால் 3-ம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    இதில் துணைத் தலைவர் மகாலட்சுமி வார்டு உறுப்பினர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் பூவராகவன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    • செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    புளியங்குடி:

    சென்னையில் நடைபெறும் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.

    புளியங்குடி கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிகள் செஸ் தம்பி லோகோவை 200 கிலோ கோலப் பொடியில் 4 மணி நேரத்தில் வரைந்து அசத்தினர்.

    மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஓவியம் வரைந்த மாணவிகளையும், செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும் பள்ளி சேர்மன் சுபாஷ் கண்ணா, நிர்வாக இயக்குனர் பார்கவி கண்ணா, பள்ளி தலைமை ஆசிரியை அன்னகளஞ்சியம் ஆகியோர் பாராட்டினர்.

    • சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் செஸ் போட்டியை விளக்கும் வகையில் ரங்கோலி இடம் பெற்றிருந்தது.
    • சமூக ஆர்வலர்கள் டிக்சன் குமார், ஓபேத் ஜெடி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சகி-ஒன் ஸ்டாப் சென்டர் சார்பில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் முத்து மாரியப்பன் வரவேற்று பேசினார். சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் செஸ் போட்டியை விளக்கும் வகையில் ரங்கோலி இடம் பெற்றிருந்தது. சமூக ஆர்வலர்கள் டிக்சன் குமார், ஓபேத் ஜெடி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கனகராஜ் செஸ் ஒலிம்பியாட் குறித்து உரையாற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தை மணி, வார்டு கவுன்சிலர்கள் கலாநிதி, வினோதினி, செல்வவிநாயகம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், சகி-ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் “மலைகள்” என அழைக்கப்படுகின்றன.
    • வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.

    சங்க இலக்கியங்களில் தற்போது செஸ் என்றழைக்கப்படும் விளையாட்டுக்கு மூலமான வல்லாட்டம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் காணப்படுவதாலும் கீழடி அகழாய்வில் ஆட்டக்காய்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும் இது கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே விளையாடப்படும் விளையாட்டு என்பது உறுதியாகிறது. பரிபாடலில் இவ்விளையாட்டை வல்லுப்போர் எனப்போருடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளதால் இது சதுரங்க விளையாட்டை ஒத்த விளையாட்டாகவும் கருதப்படுகிறது.

    கி.பி.18ஆம் நூற்றாண்டு உடைய நூலான குற்றாலக் குறவஞ்சியில் வல்லாட்டக் குறிப்புகள் வருவதால் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலும் வல்லாட்டம் தமிழர்களால் விளையாடப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.

    வல்லாட்டம் போர்முறை விளையாட்டு என்பதால் இது தமிழர் சமுகத்தில் காய்கள் நகர்த்தி விளையாடும் விளையாட்டுகளின் பரிணாம வளர்ச்சியாகவே சங்கக்காலத்தில் விளங்கியுள்ளது.

    காடுகளில் வேட்டைச் சமூகமாக வாழும் காலத்தில் விரட்டுதல், தாண்டுதல் பயிற்சிக்காகப் பழங்காலத்தில் விளையாடிய எட்டுக்கோடு விளையாட்டாகவும் பின்னர் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த காலத்தில் விளையாடிய ஆடு புலி ஆட்டம் ஆகவும் மன்னர் ஆட்சிக்காலத்தில் வல்லாட்டமாகவும் பிற்காலத்தில் இது சதுரங்கம் ஆகவும் பரிணமித்து உள்ளது.

    " மூன்று புலிகளும் இருபத்தியொரு ஆடுகளும் கொண்ட ஆடு புலி ஆட்டம் கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து பிறந்த ஆட்டமாக இருக்க வேண்டும். புலி திரியும் காடுகளில் ஆடுகளைக் காப்பாற்ற முற்பட்டவனின் முயற்சி இது.

    அரசு இயந்திரம் மிகப்பெரிய வளர்ச்சியினைப் பெற்ற பிறகு பிறந்த மற்றொரு ஆட்டம் சதுரங்கம். அரசன், மதகுரு, குதிரை வீரன், யானை எனப் போர்ப் பயிற்சிக்கான விளையாட்டாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு மன்னர்களும் இதனை ஆடியிருக்கிறார்கள்.

    'ராஜாக்கள் ஆனைக்கொப்பு ஆடுவாரைப்போல' என்கிறது திருவாய்மொழியின் நம்பிள்ளை ஈட்டு உரை. சதுரங்கம் என்பதனை ஆனைக்கொப்பு என்ற சொல்லால் அக்காலத் தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. "- பேராசிரியர் தொ. பரமசிவன்.

    வல்யானை அல்லது வல்விலங்கு என்பது சங்க இலக்கியங்களில் போர் யானைகளைக் குறிக்கும் சொல்லாகும். வல்லாட்டம் பழங்காலத்தில் வல்யானைப் போர் என்று யானைப் போராக பழங்குடியினரிடையே தோன்றியதென்பதால், பாதுகாப்பான கட்டங்கள் "மலை" என்று குறிப்பிடப்படுவதோடு "வெட்டு" போன்ற சொற்களையும் கொண்டுள்ளது. யானையடி என்ற சொல் யானையின் நேரான நகர்வினைக் குறிக்கும். யானைகுப்பு என்ற விளையாட்டைக் குறிக்கும் சொல் யானை இளவரசர் என்று பொருள் தருகிறது.

    பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் "மலைகள்" என அழைக்கப்படுகின்றன. இவற்றால் வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.

    " குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

    உண்டாகச் செய்வான் வினை."

    எனும் குறளுக்குத் தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது குன்றின் மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பது போல் மிகவும் பாதுகாப்பானது எனப் பொருள். இந்தக் குறளில் யானைப் போர் மற்றும் பாதுகாப்பான மலை ஆகிய பலகை விளையாட்டு குறியீடுகளைக் காணலாம். இந்த மலைக் கட்டங்களே சதுரங்கத்தின் கருப்புக் கட்டங்களாகப் பின்னர் மாற்றமடைந்துள்ளன.

    வல்லாட்டமானது யானைப்போராகவும் யானை விளையாட்டாகவும் தமிழகத்தில் உருவாகி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் யானை விளையாட்டு என்றே பரவியுள்ளது. சீன நாட்டின் சதுரங்கமும் யானை விளையாட்டு என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக இவ்விளையாட்டு ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.

    வல்லாட்டத்தில் சங்கக்கால ஆட்சி முறையான எட்டு முக்கியத் தலைமை கொண்ட எண்பேராயம் எனும் முறையில் காய்களும் அதற்கான கட்டங்களும் அமைந்துள்ளன.

    தமிழ்நாட்டு மன்னர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தவர்களை எண்பேராயம் என்று பகுத்துக் காட்டுவது சங்கக்கால வழக்கம். இவர்களை முறையே...

    செயலாளர்

    காவல்

    ஊர் தலைவர்

    படைத்தலைவர்

    தொண்டர் படை

    யானை படை

    குதிரை படை

    உழவர் படை

    என உணர்ந்து கொள்ளலாம். இந்த எண்பேராயத்தின் வெளிப்பாடாகவே வல்லாட்டத்தில் எட்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    வல்லாட்ட விளையாட்டில் தொடக்கக் காலத்தில் இராணி என்ற காயே கிடையாது. ஏறக்குறைய 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு படைத்தலைவரின் காய் மேற்கத்திய நாடுகளின் சதுரங்க விளையாட்டு ஒழுங்குபடுத்தலில் இராணிக் காயாக மாற்றி விளையாடப்பட்டது.

    - கோடி

    • சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
    • இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சேலம்:

    சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற நாளை(வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 188 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மலைப் பகுதியான ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வுக் கோலங்கள் வரைதல், பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், செல்பி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    • தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் ஒலிம்பியாட் கோலம் வரையப்பட்டது. மேலும் சிலம்பம், வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 4 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளையும், 19 நபர்களுக்கு தலா ரூ.1,000-க்கான வங்கி வரைவோலைகளையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசாக வழங்கினார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் 188 நாடுகளை குறிக்கும் வகையில், 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவிகள் பறக்க விட்டனர்.மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழாவிற்கு வருகை தந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் ஒலிம்பியாட் சின்னம் அச்சிட்ட தொப்பிகள் அணிந்து வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு–வலர் கதிரேசன், உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, செஸ் சங்கத்தினர், பயிற்சி–யாளர்கள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இந்த ேபாட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசி யேஷன் சார்பில் 9 வயதிற்கு ட்பட்டோர் பொது மற்றும் குழந்தைகள் செஸ் போட்டி கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    34-வது தமிழ்நாடு மாநில அளவிலாள இந்த ேபாட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவிற்கு செஸ் அசோசியேஷன் மாவட்ட துணை தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டத்த லைவர் சுந்தரம் வர வேற்றார்.

    கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினர். புரவலர்கள் தேவி உலகுராஜ், சண்முகசுந்தரம், செஸ் அசோசியேஷன் துணை செயலாளர் ஜீவா, கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    அதிக புள்ளிகள் அடிப்ப டையில் வீரர்கள் சென்னை நிஜேஷ், ஆரவ் (தலா 8 புள்ளிகள்), வேலூர் மிதுன் பிரனவ் (7.5 புள்ளிகள்), சென்னை அஷ்வ சண்முகம், விஷ்ருத், செங்கல்பட்டு பிரிதிவ் ஆரோக்யதாஸ் (தலா 7 புள்ளிகள்), ஈரோடு குரு பிரனவ், ஜெய் தட்ஷின், திருப்பூர் ரித்திக், செங்கல்பட்டு அரிக்ஸாண்டர் ஜானி (தலா 6.5 புள்ளிகள்), திருச்சி பவித்ரா, செங்கல்பட்டு ஸ்ரீநிகா, அரியலூர் ஷர்வானிகா (தலா 7.5 புள்ளிகள்), சென்னை பூஜா ஸ்ரீ (7 புள்ளிகள்), திருவள்ளூர் ஹர்ஷிதா, மதுரை தீப்தாஸ்ரீ ரவி கணேஷ், சென்னை சனா (தலா 6.5 புள்ளிகள்), சென்னை அருஷி தினேஷ், ஆயுஷி தினேஷ், கன்னியாகுமரி பெசிலிகா பியான்ஸ் (தலா 6 புள்ளிகள்) பெற்றனர்.

    சர்வதேச ஆர்பிட்டர் பழனியப்பன், மாநில ஆர்பிட்டர் அதுலன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வீரர், வீராங்க னைகள் சுற்றுவாரியாக பெற்ற புள்ளி அடிப்ப டையில் பரிசுக்கு உரியோரை தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த செஸ் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×