search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambati Rayudu"

    • பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.
    • ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்கள் சிலர் தான். அந்த வகையில் பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.

    நடந்து முடிந்த ஐபிஎல் கோப்பையையே கேப்டன் டோனி, ராயுடுவை அழைத்து சென்று வாங்கினார். இதன் பின் ஓய்வை அறிவித்த அம்பாதி ராயுடு சர்வதேச அளவிலான லீக் தொடர்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரிலும் விளையாட அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிலும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2017ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் மும்பை அணி நிர்வாகத்துடன் அம்பாதி ராயுடு கைகோர்த்துள்ளார். அந்த அணியில் பொல்லார்ட், டுவைன் பிராவோ உள்ளிட்டோர் ஏற்கனவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் இருந்து இறங்கியதும் அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர்.
    • அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்துவிட்டார்.

    ஐதராபாத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு விரைவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க அமராவதிக்கு வந்தார்.

    அப்போது அமராவதியை தலைநகராக இருக்க வேண்டுமென கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும், அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாய சங்கத்தினர் அம்பத்தி ராயுடுவின் காரை வழிமறித்தனர்.

    அவரை இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர், அவர் காரில் இருந்து இறங்கியதும் அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர். அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்துவிட்டார். மேலும் அமராவதிக்கு தான் தனது ஆதரவு என்று கூறி ஜெய் அமராவதி என முழக்கமிட வற்புறுத்தினர்.

    அதற்கும் அவர் மறுத்து கண்டிப்பாக அமராவதி தான் ஆந்திராவின் நிரந்தர தலைநகராக இருக்கும் என கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். இதன் காரணமாக அமராவதி போராட்ட பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும்.
    • அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து ஐபிஎல் போட்டி மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5-வது முறை கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

    இந்நிலையில் தற்போது டோனி என்டர்டெயின்மென்ட் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் படத்தை தமிழில் எடுத்தும் முடித்துள்ளார்.

    அந்த வகையில் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து "எல் ஜி எம்" என்கிற படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் டோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.


    இந்த இசை வெளியீட்டு விழாவின் போது சென்னை அணியில் ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக யோகி பாபுவிற்கு சி.எஸ்.கே அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதா? என்று ஆங்கர் பாவனா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு டோனி கூறியதாவது:-

    யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும். அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான். யோகி பாபு சரியான முறையில் கால்சீட் கொடுக்க வேண்டும்.

    எல்லா போட்டிகளிலும் அவர் விளையாடும் அளவிற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதோடு பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தால் நிர்வாகத்திடம் நான் பேசத் தயார்.

    பந்துவீச்சாளர்கள் ஸ்டம்பை நோக்கி பந்து வீசமாட்டார்கள். பேட்ஸ்மேனை நோக்கியே பந்து வீசுவார்கள் அதையும் அவர் கையாள முடியுமா? அதற்கான திறன் இருக்கிறதா என்று யோகி பாபுவே முடிவு செய்யட்டும்.

    என டோனி பதிலளித்து இருந்தார்.

    • முதல்வருடன் நடந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவில்லை.
    • பொதுப்பணி சேவைக்கு செல்லும் முன் மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்கிறேன்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் குண்டூரில் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு கூறியதாவது:-

    முதல்வருடன் நடந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவில்லை. கிரிக்கெட் மற்றும் விளையாட்டு துறை குறித்து மட்டும் ஆலோசிக்கப்பட்டது.

    எனது அரசியல் பயணம் விரைவில் இருக்கும். அதற்கு முன்பு மக்கள் மனநிலை அறிந்து, என்னால் என்ன செய்ய முடியும் என்று முடிவு செய்த பிறகே அரசியலுக்கு வருவேன்.

    பொதுப்பணி சேவைக்கு செல்லும் முன் மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்கிறேன்.

    இந்நிலையில், நான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவது உறுதி என்ற பிரசாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது.

    அடுத்த தேர்தலில் எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் 2 அல்லது 3 மாதங்களில் எனது அரசியல் களம் நுழைவு குறித்த செயல் திட்டத்தை அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் அவர்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 என்கிற லீக் போட்டிகளானது முதல் சீசனாக இந்தாண்டு நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கிறது.

    அதில் சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரை தலைமையாக கொண்ட இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சிஎஸ்கே அணியில் இருந்த உதவி பயிற்சி நிர்வாகிகள் அனைவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.


    மேலும் இந்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பிசிசிஐ தொடர்புடைய அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்த ராயுடு தற்போது அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமே வழங்கி உள்ளது. அதேபோன்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பிராவோவும் இந்த தொடரில் ஒரு வீரராக விளையாடுகிறார்.

    இப்படி அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த லீக் போட்டியில் விளையாடும் அந்த வாய்ப்பு குறித்து அம்பத்தி ராயுடுவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரானது ஜூலை 14-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஏழு வீரர்களை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோரும் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

    அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர், ஜெரால்டு கோட்சே ஆகியோரும் தற்போது இடம் பிடித்துள்ளனர். அதனைத்தவிர்த்து மீதமுள்ள வீரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் சிஎஸ்கே அணியில் இருந்தபோதுதான் நிகழ்ந்துள்ளது.
    • பழைய பிரச்சினையை மனதில் வைத்து வேண்டுமென்றே நான் கழட்டிவிடப்பட்டிருக்கலாம்.

    ஆந்திராவை சேர்ந்த சிஎஸ்கே பேட்ஸ்மேனும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு, நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடருடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.

    இந்நிலையில் ஐசிசி உலக கோப்பை 2019 தொடரில் வேண்டுமென்றே நான் கழட்டிவிடப்பட்டிருக்கலாம் என அம்பதி ராயுடு கூறியுள்ளார்.

    இது குறித்து ராயுடு கூறியதாவது:-

    எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் தேர்வாளர்களாக இருந்தவர்களிடம் சில பிரச்சினை ஏற்பட்டதே, நான் 2019 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகாமல் போனதற்கு காரணமாக இருந்திருக்கலாம். பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் 2018-ல், 2019 உலகக் கோப்பை தொடருக்கு ஏற்ப தயாராகும் படி தெரிவித்தார்கள். ஆனால் பழைய பிரச்சினையை மனதில் வைத்து வேண்டுமென்றே நான் கழட்டிவிடப்பட்டிருக்கலாம்.

    சிஎஸ்கே அணியில் இணைந்த பிறகு வீட்டில் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் சிஎஸ்கே அணியில் இருந்தபோதுதான் நிகழ்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    2019 உலக கோப்பை பட்டியலில் பிரதனமாக இருந்தவர் அம்பத்தி ராயுடு. ஆனால் கடைசி நேரத்தில் சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான அனுபவத்தை பெற்ற ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், 3டி (மூன்று பரிணாமங்களிலும்) அம்சம் கொண்ட வீரராக விஜய் சங்கர் இருப்பதாக, அவரது தேர்வுக்கு அப்போது தேர்வு குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் விளக்கமும் அளித்தார்.

    இதை கிண்டல் செய்யும் விதமாக 3டி கண்ணாடி ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார் அம்பத்தி ராயுடு. அப்போது அவரது டுவிட் வைரலானது.

    ராயுடு இந்தியாவுக்காக 55 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், மொத்தமாக 1736 சர்வதேச ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 சதமும், 10 அரைசதமும் அடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என இரு அணிகளுக்கு மட்டுமே விளையாடியிருக்கும் இவர். 6 முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த வீரராக உள்ளார்.

    • ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
    • இந்த தொடருடன் சென்னை அணியின் அம்பதி ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார்.

    அமராவதி:

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

    இந்த தொடருடன் சென்னை அணியின் அம்பதி ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார்.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு, ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை இன்று சந்தித்தார். அப்போது சிஎஸ்கே வென்ற ஐ.பி.எல். கோப்பையை காண்பித்து மகிழ்ந்தார். ஐ.பி.எல். 2023 போட்டியில் வெற்றி பெற்றதற்காக சிஎஸ்கே அணிக்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, ஆந்திராவில் விளையாட்டு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்லேன் என அம்பதி ராயுடு முதல் மந்திரியிடம் தெரிவித்தார், அதற்கேற்ப திட்டம் வகுக்கப்படும் என முதல் மந்திரி உறுதியளித்தார்.

    • அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் டோனி கவுரவித்தார்.
    • நாட்டுக்காக விளையாடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுவதாக ராயுடு கூறி உள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு கூறியிருந்தார். அதன்படி இன்று ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அனைத்து வகை இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

    நேற்று சென்னை அணி வெற்றி பெற்றதும் பரிசளிப்பு விழாவில் அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் டோனி கவுரவித்தார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அவர் இடம்பெற்ற அணி 6 முறை இறுதிப்போட்டியில் வென்றுள்ளது. 6 முறை ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்திய அம்பதி ராயுடு இன்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.

    "15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்து சீனியர் அணி வரை நாட்டுக்காக விளையாடியதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததில் பெருமை கொள்கிறேன்" என அம்பதி ராயுடு கூறி உள்ளார்.

    • அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
    • அதன்பின் 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த சீசன் தான் தான் விளையாடும் கடைசி தொடர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ராயுடு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர். மும்பை மற்றும் சென்னை என்று 2 சிறந்த அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள்.

    இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,329 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 28.29 ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 127.29 ஆக உள்ளது. அவருடைய அதிகபட்ச ரன்களாக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்துள்ளார்.

    • பெண் குழந்தைகள் கிடைப்பது எல்லாம் வரம் என்று கூறி அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
    • அவருக்கு சிஎஸ்கே வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. அம்பதி ராயுடு தனது ஐபிஎல் வாழ்க்கையில் இன்றுவரை 200 போட்டிகளில் விளையாடி 28.37 சராசரியுடன் 4312 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அம்பதி ராயுடுவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளங்களில் அவரது இரண்டாவது மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


    பெண் குழந்தைகள் கிடைப்பது எல்லாம் வரம் என்று கூறி அந்த பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படமானது வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராயுடுவுக்கு சிஎஸ்கே வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் ரசிகர்களுடன் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளவும் சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

    இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    அம்பதி ராயுடுவின் சர்ச்சைக்குரிய வகையிலான ‘ட்வீட்’டுக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான வகையில் பதில் அளித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வியாழக்கிழமை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அம்பதி ராயுடுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

    இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ‘‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் (3 dimensions) சிறந்து விளங்கக்கூடியவர் என்பதால் விஜய் சங்கரை தேர்வு செய்தோம்’’ என இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார்.

    மேலும், ‘‘அம்பதி ராயுடுக்கு போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சரியாக விளையாடவில்லை’’ என்றார். இதை மேற்கோள்காட்டி த்ரீ டைமன்சன் வார்த்தையை சுட்டிக்காட்டும் வகையில் ``உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக ‘3டி கிளாஸ்’ ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அம்பதி ராயுடு.



    அம்பதி ராயுடுவின் இந்தப் பதிவு குறித்து தற்போது விஜய் சங்கர் பேசியுள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர்  இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒரு கிரிக்கெட்டர் உலகக்கோப்பை போன்ற ஒரு தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி உணருவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

    ஒரு வீரரின் பார்வையில் அந்த வலி எனக்குப் புரியும். அதே நேரம் ராயுடு என்னைக் குறிவைத்து அப்படி டுவீட் செய்யவில்லை என்பதும் தெரியும். அந்த நேரத்தில் அவரின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த டுவீட்டை போட்டிருப்பார். அப்போது அவர் என்ன சூழ்நிலையில் இருந்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார்.
    இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார். #WolrdCup2019 #GautamGambhir #AmbatiRayudu
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் சேர்க்கப்படாதது குறித்து விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது விவாதத்திற்குரியது தான். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஏறக்குறைய சராசரி 48 ரன் வைத்துள்ள அதுவும் 33 வயதுடைய ஒரு வீரரை (அம்பத்தி ராயுடு) சேர்க்காதது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. மற்ற வீரர்கள் தேர்வில் புறக்கணிக்கப்பட்டதை விட ராயுடுவை சேர்க்காதது தான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், இதயத்தை நொறுக்குவதாகவும் உள்ளது.

    ராயுடுவுக்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன். 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது எனக்கும் இதே நிலை ஏற்பட்டது. உலக கோப்பை போட்டிக்கு நம்மை தயார்படுத்தி வரும் நிலையில் அணியில் இடம் இல்லை என்றால் அதனால் ஏற்படும் வேதனை எத்தகையது என்பதை நான் அறிவேன். உலக கோப்பை போட்டியில் ஆட வேண்டும் என்பது தான் இளம் வயதில் இருந்தே ஒரு வீரரின் கனவாக இருக்கும். அதனால் தான் நான் ராயுடுவுக்காக வருந்துகிறேன்.

    ரிஷாப் பான்ட் சேர்க்கப்படாதது அவருக்கு அது பின்னடைவு என்று சொல்ல முடியாது. அவர் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார். அதனால் அவருக்கு இது பின்னடைவு அல்ல. அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். இதே போல் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு விவகாரம் குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கக்கூடாது.

    ஒரு நாள் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக மாற்று விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் சொன்னது போல், விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷாப் பான்டை விட தினேஷ் கார்த்திக் சிறந்தவராக இருக்கலாம். அது மட்டுமின்றி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய ஆற்றலும் அவருக்கு உண்டு. அந்த அடிப்படையிலும் தேர்வாளர்கள் யோசித்து இருக்கலாம்.

    ஆனால் என்னை கேட்டால், 2-வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் பொருத்தமானவர் என்று சொல்வேன். பேட்டிங்கில் 4-வது வரிசையில் ஆடுவதற்குரிய திறமை அவரிடம் இருக்கிறது. மொத்தத்தில் அணியில் யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்பது முக்கியம் அல்ல. உலக கோப்பையை வென்று நாட்டிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    மற்றொரு இந்திய முன்னாள் வீரர் முரளிகார்த்திக் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் அம்பத்தி ராயுடுவுக்காக வருத்தப்படுகிறேன். அவர் 4-வது வரிசையில் வேகப்பந்து வீச்சையும், சுழற்பந்து வீச்சையும் நன்றாக எதிர்கொண்டு ஆடக்கூடியவர்.

    விஜய் சங்கரை காட்டிலும் அம்பத்தி ராயுடு நல்ல சராசரி வைத்துள்ளார். நடுநிலையோடு, ஒரு கிரிக்கெட் வீரராக கருத்து சொல்ல வேண்டும் என்றால் மிடில் வரிசையில் விஜய் சங்கரை விட ராயுடு சிறப்பாக விளையாடக்கூடியவர். ராயுடுவின் கடந்த கால ஆட்டங்கள், சராசரியை பார்த்து தான் இதை சொல்கிறேன்’ என்றார்.

    உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள இந்திய விக்கெட் கீப்பரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘உலக கோப்பை அணிக்கு தேர்வானதால் பரவசத்தில் உள்ளேன். இதன் மூலம் இந்த (உலக கோப்பை) இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. ஒரு அணியாக நாங்கள் நிறைய சாதித்து இருக்கிறோம். அந்த பயணத்தில் நானும் பங்கெடுத்து இருக்கிறேன். அதனால் தான் இந்த அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

    ஒரு பேட்ஸ்மேனாக ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. 4-வது வரிசையில் அணிக்கு வலு சேர்க்கக்கூடிய அளவுக்கு திறமை எனக்கு உண்டு. நல்ல நிலையில் இருந்தும், ஆஸ்திரேலிய தொடருக்கு என்னை தேர்வு செய்யாதது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நன்றாகவும், வலுவாகவும் உள்ளது. உலக கோப்பை போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். அணியாக ஒன்றிணைந்ததும் அசத்த தொடங்கி விடுவோம்’ என்றார். #WolrdCup2019 #GautamGambhir #AmbatiRayudu
    ×