search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi perukku"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது.
    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானிசாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையையொட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. அணை மேற்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதியை பொதுமக்கள் பார்வையிட ஆண்டு தோறும் ஆடி 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட வருவது வழக்கம். பவானிசாகர் அணையை முழுவதுமாக நடந்தே பார்ப்பது ரம்மியமாக இருக்கும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது. மேலும் அணை மேற்பகுதியில் உள்ள தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அணை மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கப்பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை. அதே சமயம் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர்.

    இதேபோல் நேற்று பவானிசாகர் அணை மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி அணை மேற்பகுதி வழியாக பூங்காவுக்குள் நுழைந்து வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த யானை மீண்டும் நீர்த்தேக்க மேற்பகுதியில் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானிசாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு இந்த தடை அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனின் வீடாகிய கடகத்தில், சனியின் நட்சத்திரமாகிய பூசம் 4 ஆம் பாதத்தில் 15° தாண்டி சஞ்சரிக்க ஆடிப்பெருக்கு நிகழ்கின்றது.
    • ஆறுகளை தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

    தமிழ் வருடத்தின் 12 மாதங்களிலும் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான பண்டிகைகள் நட்சத்திரத்தின் அடிப்படையிலோ திதியின் அடிப்படையிலோ கொண்டாடப்படுகின்றது.

    நட்சத்திரம் மற்றும் திதி தவிர்த்து தமிழ் தேதியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் சித்திரை முதல் நாள், ஆடி 18 ம் பெருக்கு, தைப் பொங்கல் ஆகும். சித்திரை முதல் நாள், தை முதல் நாள் ஆகிய இவ்விரு நாட்களும் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் ஆகும். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாட்டிற்கு மட்டுமின்றி சுப காரியங்கள் செய்வதற்கும் உகந்த நாள் ஆகும்.

    ஆடி 18 ம் தேதியோடு மட்டும் தான் பெருக்கு என்ற வார்த்தை இணைகிறது. ஜோதிட ரீதியாக ஆராயும் போது இதற்கு பெரிய காரணங்கள் ஏதும் கூறிவிட முடியாது. ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனின் வீடாகிய கடகத்தில், சனியின் நட்சத்திரமாகிய பூசம் 4 ஆம் பாதத்தில் 15° தாண்டி சஞ்சரிக்க ஆடிப்பெருக்கு நிகழ்கின்றது.

    இயற்கை தனது இடையறாத பணியைச் செய்து விவசாயம் செழித்து மக்கள் வளமான வாழ்வு வாழ சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களின் பங்கு மிகவும் அவசியமாகும். தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க அக்காலத்தில் காவிரியின் பங்கு மிகவும் அத்தியாவசியமானதாகவே இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் காவிரி ஆறு ஆரம்பமாகும் இடத்தில் மழை செழித்து தமிழகத்தில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இது இயற்கை நமக்கு வழங்கும் கொடை ஆகும்.

    ஆறுகளை தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை ஆகும். எனவே நமது வளமான வாழ்க்கைக்கு கட்டியம் கூறும் விதமாக காவிரித் தாயானவள் பெருக்கெடுத்து ஆடியும் ஓடியும் வரும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இது இயற்கையின் அமைப்பு. இதற்கு வேறு எந்த கற்பனையான காரணங்களையும் கூறி விட முடியாது.

    இந்நாள் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் நாளாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். இந்நாளில் பூஜை புனஷ்காரங்களுடன் காவிரித்தாயைப் போற்றி வணங்கும் மரபை தொன்று தொட்டு ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இன்றும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. காவிரிக்கரையோரங்களில் வாழும் மக்கள் ஆடிப்பெருக்கை சீர் மிகும் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இங்கு கூடும் மக்கள் தீபமேற்றி காவிரித்தாயைப் போற்றிப் பணிகின்றார்கள். பெண்கள் திருமாங்கல்ய சரடு அல்லது கயிற்றை பிரித்து மாற்றிக் கொள்கிறார்கள்.

    தமிழர்களாகிய அனைவரும் இந்நாளில் தங்கள் இல்லத்தை அலங்கரித்து பூஜை புனஷ்காரங்களுடன் இந்நாளை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் விவசாயம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆரம்பிக்கலாம். வீட்டிற்குத் தேவையான புதிய டீவி, ப்ரிட்ஜ், பீரோ போன்ற பொருள்கள் வாங்கலாம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கலாம். சாப்பாட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கலாம். தங்கம் வாங்கலாம்.

    திருமணம் தவிர்த்து வாஸ்து பூஜை, கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பித்தல், கிரஹப் பிரவேசம், வேறு வீடு மாறுதல், திருமணம் பேசி முடித்தல், குழந்தைக்கு பெயர் சூட்டல், வளைகாப்பு போன்ற சுப காரியங்களையும் இந்நாளில் செய்யலாம். இதன் மூலம் தொடர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் வெற்றியே உண்டாகும். இவ்வருடம்(2023)வரக்கூடிய ஆடிப் பெருக்கு கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளது.

    ஜோதிட கலாமணி

    கே. ராதா கிருஷ்ணன்.

    • ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் நீர்ப்பெருக்கெடுத்து வருதையே ஆடிப் பெருக்கு என ஆவலுடன் அழைக்ககின்றனர்.
    • மங்கலப் பெண்ணொருத்தி மஞ்சள் தடவிய நூல் கயிற்றை அங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொடுப்பாள்.

    காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளிலே ஆடிப் பெருக்கு என்னும் இவ்விழா சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தஞ்சை, திருச்சி மாவட்ட மக்களின் பங்கேற்பு இவ்விழாவில் மிகுதி. இவ்விழாவினைப் பற்றிய செய்திகள் பழைய நூற்கள் சிலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சோழன் கரிகால் பெருவளத்தானின் மகளாகிய ஆதி மந்தியின் கணவனாகிய ஆட்டனத்தியைப் பிரிந்து பேதுற்றதும் இவ்வாடிப் பெருக்கு விழாவில் தான் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர்.

    உழவிற்கு ஆதாரமாக இருப்பது நீர். அந்நீரினைப் போற்றிக்கொண்டாடுவதே இவ்விழா. ஆதலால் இவ் விழாவினை நீர் விழா என அழைப்பதிலும் தவறில்லை.

    ஒவ்வோராண்டும் ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரியாற்றில் இருகரை தழும்ப நீர் பெருக்கெடுத்து வரும். அதே போல் காவிரியாற்றின் கிளை ஆறுகளான வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, கல்லணைக் கால்வாய் போன்றவற்றிலும் நீர் மிகுதியான அளவிற்குத் திறந்து விடப்படும். இங்ஙனம், ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் நீர்ப்பெருக்கெடுத்து வருதையே ஆடிப் பெருக்கு என ஆவலுடன் அழைக்ககின்றனர்.

    விழா முறை

    இவ்விழாவில், ஆண்களின் பங்கேற்பை விடப் பெண்களின் பங்கேற்ப மிகுதி. இவ்விழா, ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் வருவதை அனைவரும் அறிந்திருப்பதால் பெண்கள் பத்து நாட்களுக்கு முன்னதாகவே முளைப் பாலிகைக்கு ஏற்பாடு செய்வர். ஒன்பதுவகைத் தானியங்களையும் ஒரு தட்டிலோ தாம்பாளத்திலோ எருவுடன் தூவி நீர் தெளித்து மூடி வைத்து வளர்ப்பர். அது வெள்ளை வெளேர் என்று நீண்டு செழிப்புடன் வளர்ந்திருக்கும். இதற்குத் தான் முளைப்பாலிகை என்பது பெயர்.

    கன்னிப்பொங்கலன்று பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்வலமாகச் சென்று கும்மி கொட்டுவதைப்போல இதற்கும் ஒன்று கூடி ஊர்வலமாக செல்வர். இதில் கன்னிப்பெண்களனறித்திருமணம் ஆனவர்களும் கலந்து கொள்வர். பெண்கள் தான் வளர்த்திருந்த முளைப்பாலிகையை ஒரு கையில் ஏந்தி வரிசையாக ஆற்றங்கரை நோக்கி அணிவகுத்துச் செல்லுங்காட்சி, கண் கொள்ளாக்காட்சியாகும்.

    செல்லும் போது நாற்சந்திகளிலும் மற்றும் குறிபிட்ட முக்கிய இடங்களிலும், வட்டமாக நின்ற கும்மியடித்துச் செல்வதும் உண்டு. இங்ஙமான இரண்டு மணிக்குப்புறப்பட்ட ஊர்வலம் ஆற்றகரையை அடைவதற்கு ஏறத்தாழ நான்கு அல்ல ஐந்து மணி ஆகும். அங்கே, சமதரையாக உள்ள ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச்சாணத்தால் மெழுகுவர் அவ்விடத்தில் சாணி உருண்டையாக உருவாக்கப்பட்ட பிள்ளையாரே வைப்பர்.

    பிள்ளையார் கிழக்கு நோக்கிய வண்ணம் இருக்கும். அதற்கு எதிரே தாம் கொண்டு சென்றிருக்கும் முளைப் பாலிகைத் தட்டுக்களை எல்லாம் வரிசையாக அடுக்கி வைப்பர். நாற்றங்கால் ஒன்று நடந்து வந்து அவ்விடத்தில் இளைப்பாறி இருப்பது போல் அக்காட்சி தோன்றும்.

    பின்னர்த்தாம் கொண்டு சென்றிருக்கும் பச்சரிசியை நீர் தெளித்துச் சர்க்கரையுடன் கலந்து வரிசையாக அடுக்குவர். அதன் பிறகு கற்பூரம் ஊதுவத்தி ஆகியவற்றைக் கொளுத்தி, சாம்பிராணி புகைப்பர் அனைத்துப்பெண்களும் பிள்ளையாரைப் பயபக்தியுடன் கீழே விழுந்து வணங்குவர். மங்கலப் பெண்ணொருத்தி மஞ்சள் தடவிய நூல் கயிற்றை அங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொடுப்பாள். வாங்கிக் கொள்ளும் சிலர் கழுத்தில் அணிந்து கொள்வார். சிலர் தம் கையன்றில் கட்டிக் கொள்வர்.

    இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களைப் நிகழ்த்துவர். ஒரு பெண் வெளியில் நின்று நல்ல இராகத்தோடு பாட, ஏனையோரும் அதனையே பாடி ஆடுவர். இது நீண்ட நேரம் நீடிக்கும். பின்னர்ப் பெண்கள் எல்லாம் தாம் கொண்டு வந்த முளைப்பாலிகைத் தட்டினை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்குவர். அப்படியே அதனைத் தண்ணீரில் பிய்த்து விடுவர். அத்துடன் காதோலை, கருகமணி போன்றவற்றையும் ஆற்றில் மிதக்க விடுவர். காதோலைசியைச் செய்விப்பர். இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் ஆற்றின் கரையிலேயே நடைபெறும்.

    சுவாமிமலையின் கண் ஓடும் காவிரியாற்றின் கரையில் ஒவ்வோர் ஆடிப்பெருக்கன்றும் ஏராளமான புத்தம் புதிய மணமக்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வருவதை இன்றும் காணலாம்.

    காவிரியாற்றில் நீர் பெருகுவதைப் போல இவர்களது வாழ்விலும் வளம் பெருகும் என்னும் நம்பிக்கையால் இந் நிகழ்ச்சியை ஆடிப்பெருக்கன்று வைத்துக் கொள்கின்றனர். இந்த ஆடிப்பெருக்கைச் சிலர் பதினெட்டாம் பெருக்கு எனவும் கூறி வருகின்றனர். இவர்கள் ஆடித்திங்களுக்குக் கொடுக்கும் மதிப்பினைவிடப்பதினெட்டாம் நாளுக்குக் கொடுக்கும் மதிப்பே அதிகம் எனத் தெரிகின்றது. ஏன் அந்தப் பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர் என்பது புதிராகவே உள்ளது.

    • தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.
    • ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது.

    பயிர்கள் நன்றாக வளர்வதற்காக நீர்வளம் அருளும் காவிரித்தாயை முதன்மையாக கொண்ட ஆறுகள் அனைத்தையும் போற்றி வழிபடுவது 'ஆடிப்பெருக்கு'.

    ஆறுகள் ஓடுகின்ற எல்லா ஊர்களிலும், நகரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆனால், காவிரி ஆடிப்பெருக்கு சற்றுக்கூடுதலான சிறப்புடையது.

    திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு பெண்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    ஆடிப்பெருக்கின்போது பராசக்தியை வழிபடுவதைப் போலவே காவிரித்தாயை வழிபடுகின்றனர்.

    தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.

    ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது. காவிரி படித்துறைகளில் 18 படிகளை அமைத்திருக்கின்றனர். ஆடி பதினெட்டாம் நாள், வெள்ளப்பெருக்கு அந்தப் பதினெட்டாம் படியைத் தழுவிச் செல்கிறபோது 'ஆடி பதினெட்டு' என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றன.

    ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா பெண்களுக்கே சிறப்பாக உரியது. அன்று பெண்கள் காலைப் பொழுதில் கரைகளில் வந்து கூடிக் காவிரித்தாயை வழிபடுவார்கள். இதற்கென்றே படித்துறைகள் பல உள்ளன.

    அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி முதலியவற்றை வைத்து வழிபட்டு அவற்றை ஆற்றோடு செலுத்துவார்கள்.

    மாலை நேரம் தயிரன்னம், புளிசாதம், சர்க்கரை பொங்கல் வகைகளை சமைத்து காவிரித் தாய்க்குப் படைப்பார்கள். பின்னர் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக பொழுதை போக்குவார்கள்.

    சிறுவர்கள் சப்பரங்களையும், தேர்களையும் உருவாக்கி அவற்றில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவார்கள்.

    கன்னிப்பெண்கள், தமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நேர்ந்துகொண்டு காவிரித்தாயை வழிபடுவார்கள்.

    இதற்காக அம்மன் முன் படைத்த மஞ்சள் கயிறுகளை ஒருவரது கழுத்தில் மற்றொருவர் சூட்டுவது வழக்கம். மஞ்சள் கயிற்றைச் சகோதரர் கையில் கட்டுவார்கள். இது காப்புக்கயிறு.

    பிரார்த்தனை பலித்து, திருமணம் முடிந்த பின் புதுமணத் தம்பதிகள் காவிரித்தாயை நன்றியுடன் போற்றுவதுண்டு. சிலர் தாலி மஞ்சள் கயிறுகளை மாற்றிப்புது மஞ்சள் கயிறுகளை அணிவார்கள். பழைய மஞ்சள் கயிறுகளை அருகிலுள்ள மரங்களில் கட்டுவார்கள்.

    • சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி.
    • ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும்.

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது ஆடிப்பெருக்கில்...

    காவிரி நீர் அபிஷேகம்!

    நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீ அசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!

    இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    சூரிய பூஜை காணும் முருகன்

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

    காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    • ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.
    • ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    தமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளன. ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

    ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

    அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

    ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

    ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

    அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

    எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான். 

    • தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.
    • இன்று மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல் ஆடி மாதத்தில் 18-ம் நாள் பெருக்கு அன்று காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளை பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். அங்கு மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.

    அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளான இன்று 18 வகையான நைவேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடத்தினர்.

    நெல்லை குறுக்குத் துறை தாமிர பரணி ஆற்றங்கரையில் சுப்பிர மணிய சுவாமி கோவில் படித்துறையில் திரளான பெண்கள் இன்று காலை முதலே திரண்டு தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மட்டுமல்லாது ஏற்கனவே திருமணமான பெண்களும் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர். இன்று மாலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் முன்பு தொடங்கி சந்திப்பு கைலாசநாதர் கோவில் வரை ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் ஜடாயு படித்துறையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • காவிரி கரைப்பகுதியில் பொதுமக்கள் புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானி, காவிரி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக உள்ளது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு இங்கு திதி கொடுப்பார்கள்.

    இதற்காக திதி கொடுக்க தனியாக இடங்கள் உள்ளன. மேலும் பொதுமக்கள் பரிகார பூஜை செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி செல்வார்கள்.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு அன்று புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொரோனா தற்போது குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை முதல்நாள் அன்று புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பவானி கூடுதுறையில் குவிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பவானி படித்துறையில் பாதுகாப்புக்காக 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதேபோல் கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரை போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்தகனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை, பிபி அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கை ஒட்டி பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடவும் பரிகாரப் பூஜைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

    தடையை மீறி புனித நீராட வருபவர்கள் பரிகார பூஜை செய்ய வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதுபற்றி தெரியாமல் இன்று காலை பவானி கூடுதுறையில் புனிதநீராட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் நுழைவாயில் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலிலும் இன்று அதிகாலை முதல் ஆடி பெருக்கையொட்டி பொதுமக்கள் ஏராளமான பேர் வந்தனர். ஆனால் காவிரி ஆற்றில் குளிக்கவோ பரிகார பூஜை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரைப்பகுதியிலும் பொதுமக்களுக்கு புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறுவதால் கொடிவேரி அணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அணை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணைக்கு வந்த பொதுமக்களை அவர்கள் திருப்பி அனுப்பினர்.

    • இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கொடுமுடியில் குவிய தொடங்கினர்.
    • பலர் கொடுமுடிக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி 18 திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதையொட்டி ஆடி 18 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காவிரியில் புனித நீராடியும், முளைப்பாரி ஆற்றில் விட்டும் காவிரி தாயை வணங்கியும், மகுடேசுவரரை தாசித்தும் செல்வது வழக்கம்.

    இதற்காக இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கொடுமுடியில் குவிய தொடங்கினர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதையடுத்து கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றில் துணி துவைக்க, நீராட, கால்நடைகள் குளிப்பாட்ட தடை விதிக்கப்பட்டது.

    இதனால் ஆற்றங்கரை பகுதி முழுவதும் தடை ஏற்படுத்தி போலீஸ், தீயணைப்பு துறை வீரர்களை கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதனால் பக்தர்கள் யாரும் எங்கும் சென்று காவிரி ஆற்றில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் பலர் கொடுமுடிக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர். தடை விதித்துள்ளதால் ஆற்றங்கரை ஓரத்தில் செல்லும் புகளூரான் வாய்க்காலில் குளித்தும், முளைப்பாரி விட்டும் சென்றனர்.

    இந்த நிலையில் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக கொடுமுடி பேரூராட்சி சார்பாக கோவில் முன்பு ஷவர் அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்து இருந்தனர். இதையடுத்து பக்தர்கள் அந்த ஷவர் மூலம் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர்.

    ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.

    கர்நாடகத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது. தற்போது காவிரி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அகண்ட காவிரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு நாளன்று காவிரி கரையோரங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் இருக்கும் நிலையில் பாரம்பரிய நிகழ்வான ஆடிப்பெருக்கை கொண்டாட தடை ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால் காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பாதுகாப்புடன் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் களை கட்டியது.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர். காவிரி ஆற்றிற்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர்.

    புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

    அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரத்திலும் மஞ்சள் கயிறு கட்டினர். சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர்.

    ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் மூலம் ஷவர் போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஆனாலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு பகுதிக்குள் நின்று நீராடினர். மேலும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் வைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடாமல் தவிர்ப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காவிரி கரையிலேயே கட்டுப்பாட்டு அறை அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் காவிரி ஆற்றில் ரப்பர் படகுகளில் தீயணைப்பு துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். தடுப்புகளை தாண்டி ஆற்றின் ஆழமான பகுதிக்கு வர யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தொடர்ந்து அவர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த வண்ணம் இருந்தனர்.

    இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளர்ச்சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த் தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி காவிரி கரையோர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 62 இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது.

    ஆடிப்பெருக்கையொட்டி மாலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு வந்தார். காலை 11.30 மணிக்கு அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். மாலை 4 மணிக்கு நம்பெருமாள் காவிரி அன்னைக்கு பட்டுப்புடவை, பழங்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அடங்கிய சீர் வரிசையை வழங்குகிறார்.

    சேலம் மாவட்டத்தில் மேட்டூர் மற்றும் அங்கிருந்து காவிரி புறப்படும் கரை யோரங்களில் ஆடிப்பெருக்கு விழா களை கட்டியது. தற்போது மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    மேட்டூர் அணை பாலம் பகுதி மற்றும் அணைக்கட்டு முனியப்ப சுவாமி கோவில் ஆகிய 2 இடங்களில் மட்டுமே ஆடிப்பெருக்கு விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டாக ஏமாற்றமடைந்த மக்கள் இந்த ஆண்டு திரண்டு வந்து உற்சாகமாக கொண்டாடினர். இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதிகளிலும் புதுமண தம்பதிகள், கன்னி பெண்கள், பொதுமக்கள் திரண்டு ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், ஜேடர் பாளையம், மொளசி, குமாரபாளையம், சோழசிராமணி, பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய ஊர்களில் காவிரி கரையோரம் திரண்ட மக்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். காவிரியில் கூடுதல் தண்ணீர் பாய்வதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காவிரி ஆற்றில் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    தஞ்சை மாவட்டத்தில் புத்திய மண்டபத்துறை மற்றும் காவிரி பாயும் திருவையாறு பகுதிகள், ஆடிப்பெருக்கை முன்னிட்டு களை கட்டியது. தஞ்சை கல்லணை கால்வாய் புது ஆறு, கும்பகோணம் மகாமக குளம், பகவத் படித்துறை பகுதியிலும் அதிக அளவில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

    மயிலாடுதுறை மாவட்டம் காவிரி துலா கட்டத்தில் ஆடிப்பெருக்கான இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் ஒன்றுகூடி காப்பரிசி, காதோலை, கருகமணி, பழங்கள் உள்ளிட்டவற்றை வாழை இலையில் படைத்து தங்களது வாழ்வு வளம் பெற காவிரி அம்மனை வழிபட்டன்.

    ஈரோடு மாவட்டத்தில் வெகு விமரியைாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா இன்று காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் களையிழந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் பவானி கூடுதுறை, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு அம்மாப்பேட்டை காவிரி கரையோர பகுதிகள், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆடிப்பெருக்கை கொண்டாட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில், நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கான இன்று ஏராளமான கன்னி பெண்கள், சுமங்கலி பெண்கள் திரண்டு வழிபட்டனர். அவர்கள் தாலி கயிறையும் மாற்றிக் கொண்டனர். இன்று மாலை தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் திரண்ட ஏராளமான சுமங்கலி பெண்கள் பொற்றாமரை குளத்தின் படிகளில் நின்று தாலி கயிறை மாற்றிக் கொண்டனர். பின்னர் மீனாட்சி-சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.

    • பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது.
    • திதி, தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை.

    பவானி :

    பவானி கூடுதுறையில் பவானி, காவிரி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது. மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். இதற்காக பரிகாரம் செய்ய தனித்தனி இடங்கள் உள்ளன. மேலும் வேத விற்பன்னர்கள் பலரும் அங்கு உள்ளார்கள்.

    இதேபோல் ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராட கூடுதுறையில் குவிவார்கள். குறிப்பாக புதிதாக திருமணம் ஆன பெண்கள் முளைப்பாரி விட்டு விரைவில் குழந்தை வரம் வேண்டும் என்று புனித நீராடி புது மஞ்சள் கயிறும் கட்டிக்கொள்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கன்று புனிதநீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை அன்றும், ஆடி முதல்நாள் அன்றும் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமானோர் அப்போது புனித நீராடினார்கள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கன்று புனித நீராட அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எண்ணினார்கள்.

    இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதனால் காவிரியில் வினாடிக்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஆடிப்பெருக்கான இன்று (புதன்கிழமை) பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை என பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், 'பவானி காவிரி ஆற்றங்கரையோரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பகுதி மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு,' வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதையொட்டி தேவையான ஏற்பாடுகளை செய்ய நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் தேவையான தயார் நிலையில் உள்ளதாகவம் அவர் தெரிவித்தார்.

    இதையொட்டி பவானி கூடுதுறையில் பாதுகாப்புக்காக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மும்மூர்த்திகள் தலமான இந்த கோவில் சிறந்த பரிகார தலம் ஆகும். இந்த நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் குளிக்கவும், திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் காவிரி ஆற்று பகுதிக்கு செல்லாதவாறு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளதால், உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காவிரி ஆற்றில் நீராடுவதற்கும், சடங்குகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    ×