search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை ஆடி 18- பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாளை ஆடி 18- பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

    • பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது.
    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானிசாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையையொட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. அணை மேற்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதியை பொதுமக்கள் பார்வையிட ஆண்டு தோறும் ஆடி 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட வருவது வழக்கம். பவானிசாகர் அணையை முழுவதுமாக நடந்தே பார்ப்பது ரம்மியமாக இருக்கும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது. மேலும் அணை மேற்பகுதியில் உள்ள தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அணை மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கப்பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை. அதே சமயம் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர்.

    இதேபோல் நேற்று பவானிசாகர் அணை மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி அணை மேற்பகுதி வழியாக பூங்காவுக்குள் நுழைந்து வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த யானை மீண்டும் நீர்த்தேக்க மேற்பகுதியில் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானிசாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு இந்த தடை அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×