என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இதனால் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
மும்பை:
இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து சரணடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில் அந்த அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் சோனு என்ற மல்லோஜூல வேணுகோபால ராவ் தலைமையில் 60 மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.
- ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
- இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தது.
புதிய டெண்டர் பணிகள் நிறைவடையாததால் தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தன.
ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
2026 மார்ச் மாதம் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.
இதையடுத்து 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என டிரம்ப் கேட்டார்.
- இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக வாழ்வார்கள் என நம்புகிறேன்" என கூறிவிட்டு, பின்புறம் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என கேட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய டிரம்ப், "இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலைகளை செய்கிறார்" என்று தெரிவித்தார்.
- தீபாவளி டபுள் தமாக்கா சலுகை வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும்.
- ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
தீபாவளி பண்டியையொட்டி ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மாடல்களை வாங்குபவர்களுக்கு ரொக்க சலுகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள பரிசுகளை வழங்குகிறது. ரிவோல்ட் அதன் மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.13,000 வரை தள்ளுபடியையும், ரூ. 7,000 வரை மதிப்புள்ள இலவச காப்பீட்டையும் வழங்குகிறது.
அனைவரையும் ஆர்வமாக வைத்திருக்க, சலுகை காலம் முழுவதும் ஒவ்வொரு வாங்குபவருக்கும் உறுதியான பரிசுகள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது. இந்த பண்டிகை கால சலுகைகளில் தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், மைக்ரோவேவ்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் ரிவோல்ட் பொருட்கள் ஆகியவை அடங்கும். ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
தீபாவளி டபுள் தமாக்கா சலுகை வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள ரிவோல்ட் ஹப்பைப் பார்வையிட்டு வாங்கலாம். பண்டிகைக் கால சலுகைகளைப் பெறலாம்.
பண்டிகை காலம் முழுக்க மின்சார பைக்குகளை வாங்குபவர்களை பெரிய அளவிலான கொள்முதல்களை ஊக்குவிக்கும் என்பதால், நிறுவனம் அதன் மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கான விற்பனையை அதிகரிக்க முடியும்.
- உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன.
- ஆஸ்திரேலிய தொடருக்கு ரோகித், விராட் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இதனால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன. நாம் இப்போதைக்கு எது முக்கியம் என்பதை யோசிக்க வேண்டும். இந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன்.
என கம்பீர் கூறினார்.
- பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது.
- கேரள அரசின் இச்சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், இடைக்கால நடவடிக்கையாக முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க மட்டத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். தேவைப்பட்டால், விரிவான அணை பாதுகாப்பை மறுமதிப்பீடு செய்வதற்கோ, அணையைச் செயலிழக்கச் செய்வதற்கோ அல்லது அணை புனரமைப்பு திட்டத்தைத் தயாரிப்பதற்கோ வழிமுறைகள் உருவாக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.கிரி, இது 130 ஆண்டுகள் பழமையானது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
ஆனால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது'' என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா மாநில அரசு, கேரள பாதுகாப்பு பிரிகேட் போன்ற அமைப்புகள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கேரள அரசின் இச்சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.
- உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டது. இந்த 2 அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள் என்றும் அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள் என்றும் ஹர்ஷித் ராணாவின் கூறியுள்ளார்.
உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள். வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள். நான் அதைத் தாங்கிக் கொள்வேன். அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள்.
இது கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம்தான். நான் உங்ககிட்ட ரொம்ப நேர்மையா சொல்றேன். உங்க யூடியூப் சேனலுக்காக ஒரு 23 வயது பையனை குறிவைக்கிறீங்கன்னு சொல்றது ரொம்ப நியாயம் இல்ல. ஏன்னா, அவங்க அப்பா முன்னாள் தலைவரோ, முன்னாள் கிரிக்கெட் வீரரோ, வெளிநாட்டுல பிறந்த இந்தியரோ இல்ல.
இதுவரைக்கும் அவர் எந்த கிரிக்கெட் விளையாடியிருந்தாலும், அவரு தனியா விளையாடியிருக்காரு, தொடர்ந்து தனியா விளையாடுவாங்க. நீங்க யாரையாவது தனியா குறிவைச்சீங்கன்னா, அது நியாயமில்லை.
என கம்பீர் கூறினார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல்- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:-
இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்து விட்டு கரூருக்கு விஜய் சென்ற வழித்தடத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
- கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தி சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் நியமிக்கப்படும் அந்த அதிகாரிக்கு கீழ் செயல்படுவதற்கு டி.எஸ்.பி. இன்ஸ் பெக்டர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்படுகிறது.
விசாரணை அதிகாரி புதிதாக நியமிக்கப்பட்டதும் உடனடியாக அவர் விசாரணையை தொடங்குகிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் இருந்தே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சி.பி.ஐ. இயக்குனர்தான் யாரை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார் என்பதால் வேறு மாநிலங்களை சேர்ந்த வரும் சி.பி.ஐ. அதிகாரியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறப்பு அதிகாரி இன்று அல்லது நாளை நியமிக்கப்பட உள்ளார். இதன் பிறகு புதிய அதிகாரி கரூருக்கு சென்று தனது விசாரணையை தொடங்குகிறார்.
கரூரில் 41 பேர் பலியான இடமான வேலுச்சாமிபுரத்துக்கு சென்று ஆய்வு செய்ய உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழு 41 பேர் பலியானது தொடர்பாக அதிரடி விசாரணையை நடத்துகிறார்கள்.
கரூர் சம்பவத்தின்போது உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடமும் தகவல்களை சேகரிக்க முடிவு செய்துள்ள அதிகாரிகள் நெரிசலில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விரிவாக கேட்டறிகிறார்கள்.
நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்து விட்டு கரூருக்கு விஜய் சென்ற வழித்தடத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனும் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த 2 விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இதுவரை நடத்திய விசாரணை விவரங்கள் அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினரும் நீதிபதி அருணா ஜெகதீசனும் தாங்கள் நடத்திய விசாரணை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒப்படைத்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை வேகப்படுத்த உள்ளனர்.
ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவம் நடந்த மறுநாள் கரூர் வந்தார். பின்னர் 2 நாட்கள் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சம்ப வத்தை நேரில் பார்த்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டோ ரிடம் விசாரணை நடத்தினர். டிரோன் கேமரா காட்சிகள், சி.சி.டி.வி. பதிவுகள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அது தொடர்பாக எழுந்துள்ள சந்தேக கேள்விகளுக்கும் விடை காண வேண்டிய கட்டாயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்க உள்ள விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னையில் மற்ற பகுதிகளைவிட தி.நகர் பகுதியில்தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் மற்ற இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த பகுதிகளில் 28 கேமராக்கள் உள்ள நிலையில் பாண்டி பஜார் மாம்பலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 155 கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
3 டிரோன் கேமராக்கள் மூலமாக தீபாவளி திருடர்களைப் பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தீபாவளி நெருங்கும் நேரங்களில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
தி.நகர் பகுதியில் தினமும் 200 போலீசார், 100 ஊர்க்காவல் படையினர், 100 ஆயுதப் படை காவலர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் 150 போலீசாரும், புரசைவாக்கத்தில் 120 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 250 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகர் பகுதியில் 16 ஒலி பெருக்கிகள் மூலமாகவும் போலீசார் பொதுமக்களை உஷார்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடமைகளை தவறவிட்டு விடாதீர்கள் என்பது போன்ற எச்சரிக்கை தகவல்களை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே உள்ளனர். மக்களின் வசதிக்காக 4 காவல் உதவி மையங்கள், 2 தற்காலிக உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
தி.நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சோமசுந்தரம் மைதானம், ராமகிருஷ்ணா பள்ளி மைதானம், தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே என இடங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளன.
பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு 8939977649, 91504 72278 ஆகிய செல்போன் எண்களும் அவசர உதவி எண்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தையும் மாம்பலம் போலீசார் கையாண்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் அது போன்ற குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு வணிகப் பகுதிகள் அனைத்திலும் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த 2 நாட்களும் தற்போது இருப்பதைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தா லிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் விமல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு உயர்வு.
- பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-யை தாண்டி உள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு 15 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.
ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில் குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரெயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-யை தாண்டி உள்ளது. ஆம்னி பஸ்களை விட ரெயில்களில் கட்டணம் குறைவு என்பதால் வழக்கமான ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் அடுத்ததாக பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க காத்து இருக்கிறார்கள்.
எனவே தீபாவளியை முன்னிட்டு மேலும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.
- ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா?
சென்னை:
அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், "தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்" என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.
அ.தி.மு.க.வுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது.
ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அ.தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் 'பொண்டாட்டி இலவசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயர்ந்துள்ளது, கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு.
பெண்களை இழிவுபடுத்தி வரும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.






