என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ராம் பவன், துர்காவதி தம்பதி 10 வருடங்களாக இயங்கி வந்தனர்
    • சிறுவர்கள் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள்,கண் கோளாறுகள்,உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    உத்தரப் பிரதேச நீர்ப்பாசன துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய வந்தவர் ராம் பவன். இவரது மனைவி துர்காவதி.

    சித்ரகூட் நகரை சேர்ந்த இவர்கள் கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 வருட காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல சிறுவர்களை கடத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுத்தி அதை படம் பிடித்து டார்க் வெப் உள்ளிட்ட சட்டவிரோத இணயதளங்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    3 வயது முதல் 16 வயது வரையிலான 33 சிறுவர்கள் இவர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

    ராம் பவன், குழந்தைகளுக்கு ஆன்லைன் வீடியோ கேம்கள், பணம், பரிசுகள் கொடுத்து ஆசை காட்டி அவர்களை தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளார்.

    சில சிறுவர்கள் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள்,கண் கோளாறுகள், உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சிறார் பாலியல் வீடியோக்களை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்தபோதுதான் ராம் பவன், துர்காவதி தம்பதி சிக்கியுள்ளது.

    இந்தப் பாலியல் வீடியோக்கள் மற்றும் படங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட தளங்கள் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டது உறுதியானது.

    2020 அக்டோபரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அடுத்த சில மாதங்களிலேயே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

    அவர்கள் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த கடந்த 6 ஆண்டுகளாக பாண்டா போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

    33 சிறுவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வீடியோ உள்ளிட்ட ஆதரங்கள் சிபிஐ தரப்பில் சமர்பிக்கப்பட்டன.

    இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அரிதினும் அரிதான வழக்கு என்று கூறிய நீதிமன்றம், ராம் பவன் மற்றும் துர்காதேவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் தலா ரூ. 10 லட்சம் வீதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தம்பதியின் வீட்டில் இருந்து சிபிஐ பறிமுதல் செய்த ரொக்கப் பணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • 40வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதி வருகின்றன.
    • 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

    20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இன்றுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது.

    இன்றைய 40வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய ஓமன் பேட்டிங் இறங்கியது. ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஓமன் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

    16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஓமன் அணி மொத்தமே 104 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து 105 என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரலியா பேட்டிங் ஆடி வருகிறது.

    ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஓமன் தரப்பில் வாசிம் அலி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். 

    • புரோமோ வீடியோவில் அதிகாரப்பூர்வமான முழு நட்சத்திரப் பட்டியல் தெரியவரும்
    • இப்படத்திலும் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை 12:07 மணிக்கு வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இயக்குநர் நெல்சன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். படப்பிடிப்பு ரஜினி தனது தற்போதைய படங்களான ஜெயிலர் 2 மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படங்களை முடித்த பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்சனின் முந்தைய படமான 'ஜெயிலர்' பாணியிலேயே, இப்படத்திலும் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    நெல்சனின் ஆஸ்தான நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை வெளியாகவுள்ள புரோமோ வீடியோவில் அதிகாரப்பூர்வமான முழு நட்சத்திரப் பட்டியல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    • மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது
    • படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.

    இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரின்படி படம் 1980-களில் நடக்கும் ஒரு இசைக் கலைஞனின் கதை மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலக்கட்டங்களில் பயணிக்கிறது. இதில் மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறான்.
    • 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன்-ஐ உருவாக்கினான்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ தாக்க சர்வதேச உச்சிமாநாடு இன்றுடன் நிறைடைகிறது.

    இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் நடந்த கண்காட்சியில் பலவேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தின.

    இந்தச் சர்வதேச மேடையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ரவுல் ஜான் அஜு என்ற 16 வயது சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

    மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரஸ் உள்ளிட்ட பல தலைவர்களை ரவுல் ஜான் அஜு சந்தித்தான்.

    ரவுல் ஜான் அஜு

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளியை சேர்ந்த ரவுல், ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) செயல்பட்டு வருகிறான்.

    இந்த நிறுவனத்தின் கீழ், இந்திய நீதித் துறைக்காக நியாயசாதி என்ற ஏஐ உதவியாளரையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்காக ஜஸ்ட்ஈஸ் என்ற சட்ட உதவிக்கான சாட்பாட்-ஐயும் உருவாக்கி உள்ளான்.

    6 வயதிலிருந்தே ஏஐ மீது ஆர்வம் கொண்ட ரவுல், தனது கல்வி தளத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் 'Vbot' என்ற ஒரு ஏஐ-ஐ உருவாக்கினான். மேலும் தனது 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன் மற்றும் MeBot என்ற ஹூமனாய்டு ரோபோவை உருவாக்கினான்.

    கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் தனது தந்தையையே ஒரு ஊழியராக நியமித்து செய்திகளில் இடம்பிடித்தான். பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு ஏஐ குறித்து பயிற்சி அளித்துள்ளான். ஏஐ மாநாட்டுக்கு முன்னதாக கடந்த வாரம் பிரதமர் மோடியை ரவுல் சந்தித்தான்.

    மேலும் அண்மையில் வந்தே பாரத் ரெயிலில் கேரள காங்கிரஸ் எம்பி சசி தரூர் ரவுல் உடன் பயணம் செய்தபோது அவனின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஊக்குவித்ததும் கவனம் பெற்றது.  

    • இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை; ஒரு தெளிவோடு முடிக்கிறேன்.
    • அதிக அறிவோடும், சுய விழிப்புணர்வோடும், எனக்குத் தகுதியான வாழ்க்கையை அமைப்பேன் என்ற உறுதியோடும் நான் முன்னோக்கிச் செல்கிறேன்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், தனது மனைவி இஷானி ஜோஹரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "நான் என்னைப்பற்றியோ, எனது மதிப்பு குறித்தோ அல்லது நான் விரும்பிய வாழ்க்கையைப் பற்றியோ முழுமையாகப் புரிந்துகொள்ளாத இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து நான் எதிர்பார்க்காத பல பாடங்களைக் கற்றேன். கடந்த பதினைந்து மாதங்களாக நீதிமன்ற அறைகளில் பொறுமையையும், மீண்டு வரும் குணத்தையும், உண்மையால் கிடைக்கும் வலிமையையும் அறிந்துகொண்டேன். 

    இன்று, என் வாழ்வின் அந்த அத்தியாயம் முறைப்படி முடிவுக்கு வருகிறது. உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, பெரும் விலைகொடுத்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இது என் வாழ்வின் இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளதோடு எனக்கு ஒரு தெளிவையும் தந்துவிட்டது.

    இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை; ஒரு தெளிவோடு முடிக்கிறேன். சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்கல்ல; அவை நம்மை விழிப்படையச் செய்யவும், பாடம் கற்பிக்கவும், நம்மை மாற்றியமைக்கவுமே வருகின்றன.

    அதிக அறிவோடும், சுய விழிப்புணர்வோடும், எனக்குத் தகுதியான வாழ்க்கையை அமைப்பேன் என்ற உறுதியோடும் நான் முன்னோக்கிச் செல்கிறேன். இது ஒரு முடிவல்ல; இது ஒரு விடுதலை. ஒரு புதிய தொடக்கம். இனி நான் உருவாக்கும் அனைத்தும் சுயமரியாதை, அமைதி மற்றும் சிறந்த தேர்வுகளின் அடிப்படையில் அமையும் என்ற உறுதிமொழி. என்னிடம் கசப்பான உணர்வுகள் எதுவுமில்லை, கற்றுக்கொண்ட பாடங்களும், கண்ணியமும், மீண்டும் தொடங்குவதற்கான துணிச்சலும் மட்டுமே உள்ளன." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    நீண்ட காலமாகக் காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த மார்ச் 9, 2022 அன்று கோவாவில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது ராகுல் சாஹரின் வயது 22. தற்போது ராகுல் சாஹர், வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார். 

    • ஒரே நேரத்தில் 7 கிராமங்களிலும் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • மக்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பதாக கூறி வந்த இவர்கள், பின்னர் தாங்களே வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கால்நடைகளை திருடிச் செல்ல, பயங்கரவாதிகள், 33 பேரை சுட்டுக் கொன்ற கொடூரம் அரங்கேறி உள்ளது.

    நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தின் ஏழு கிராமங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு பிவு என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த புதன்கிழமை பக்கத்து மாநிலமான சோகோட்டோவில் இருந்து வந்த லகுராவா என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் 7 கிராமங்களிலும் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்ட நிலையில், மாமுனு என்ற கிராமத்தில் அதிகபட்சமாக 16 பேர் கொல்லப்பட்டனர். அங்கு வீடுகள் மற்றும் கடைகளுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில், கால்நடைகளைத் திருடுவதற்காகவே இந்தத் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தெரியவந்துள்ளது.

    தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட கூடுதல் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

    லகுராவா என்பது வடமேற்கு நைஜீரியாவில் சமீபகாலமாக உருவெடுத்துள்ள ஒரு புதிய ஆயுதக்குழுவாகும்.

    ஆரம்பத்தில் உள்ளூர் மக்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பதாகக் கூறி வந்த இவர்கள், பின்னர் தாங்களே வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த ஆண்டு நைஜீரிய அரசு லகுராவாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

    • கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.
    • 2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உரையாற்றிய அவர்,

    "இந்தியாவிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜெண்டுகளை வைத்திருக்கும் ஒரே அரசியல் இயக்கம் தி.மு.க.தான். ஆன்லைன் மட்டுமின்றி, ஆஃப்லைனிலும் கலக்கும் அணியாக தி.மு.க. ஐடி அணி இருக்கிறது. ஆன்லைனில் உங்கள் வேலை ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வது மட்டுமில்லை. அஜந்தாவை செட் செய்வது. ஏனெனில் கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.

    நம்மை களங்கப்படுத்தி, தமிழ்நாட்டிற்குள் நுழைய, சிதைக்க எதிரிகள் நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அவதூறுகள். அவதூறு பரப்புவோருக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளும் செய்ய வேண்டும்.

    டிஃபென்ஸ் மட்டுமே ஆடக்கூடாது. அவ்வப்போது அட்டாக் மோடிலும் செயலாற்ற வேண்டும். அடித்து ஆட வேண்டும். நிறைய திட்டங்களை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டுமே எவ்வளவோ பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்ள என்னுடைய சமூக வலைதளப் பக்கம், திமுகவின் பக்கங்கள், அரசு சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடருங்கள். ஐடி விங்கின் வாட்ஸ் ஆப் சேனலை அனைவரையும் பின்தொடர வைய்யுங்கள். நம் சாதனைகள்தான் பேச்சுப் பொருளாக இருக்கவேண்டும். 

    தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய எதிரிகள் நினைக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் பல திட்டங்களை போட்டனர். பொய் செய்திகளை பரப்ப முயன்ற திட்டங்கள் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கின்றனர். பொய் செய்திகளை பரப்ப நிறைய ரைட் விங் கணக்குகளை பாஜக நடத்தி வருகிறது. அவர்கள் நம்மை குறித்து பொய் செய்தி பரப்பினால், உரிய ஆதாரத்தோடு உடனே பதிலடி தர வேண்டும்; இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் இருக்கும். பொய் செய்திக்கு நூற்றுக்கணக்கில் தரும் பதிலடியால், அவர்கள் அதை நீக்கிவிட்டு ஓட வேண்டும். 

    காமெடியாக பதில் கூறுங்கள், கிண்டலாக பதிவிடுங்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் கூலாக, பொறுமையாக செய்யுங்கள். அவர்களக்கு வந்தால் ரத்தம், திமுகவிற்கு வந்தால் தக்காளி சட்னி என செய்தி சேனல்களும், தேர்தல் ஆணையமும் செயல்படுகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சொல்லையும், எழுத்தையும் பொறுப்போடு உருவாக்குங்கள்.

    தோழமை கட்சியினருடன் சிண்டுமுடிக்கும் வேலையில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவர். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக்கூடாது. திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்பி செயல்படுங்கள். மற்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். களத்திலும், ஆன்லைனிலும் சரியாக செயல்பட்டால் நமது இலக்கை நாம் நிச்சயம் எட்ட முடியும். அதற்கான அடித்தளம்தான் இந்த ஆடுகளம் செயலி. 

    2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. யார் ஜெயிப்பார்கள் என எல்லோருக்கும் தெரியும். தி.மு.க.கூட்டணிதான் வெல்லும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் எத்தனை தொகுதிகள், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்ற முடிவுகளுக்காகத்தான் காத்திருப்போம்.

    2026 தேர்தலும் அதே போலத்தான். திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. ஆனால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமையும் என்பதை நோக்கிதான் இந்த உழைப்பு. செயல்வீர ர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பார்கள். ஆனால் கொள்கைக்கான அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாமல், இணையத்தில் களமாடும் தோழர்கள் தி.மு.க.வில் மட்டும்தான் உண்டு. ஆஃப்லைன், ஆன்லைன் இரண்டிலும் தி.மு.க.தான் சிங்கம் எனக் காட்டுவோம். வெல்வோம் ஒன்றாக' என தெரிவித்தார்.

    • மக்களை தீவிரவாதிகள் போலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
    • சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தேர்தல் ஆணையம், ஆளும் மத்திய பாஜக அரசின் ஏவலின் பேரில் தேர்தலுக்கு முன்னனதாக அவசர அவசரமாக வாக்காளர்களை நீக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த எஸ்ஐஆர் பணிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், வாதாடியும் உள்ளார்.

    மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வங்காள மக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்டார்.

    வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மக்களைத் தீவிரவாதிகள் போலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் முரண்பாடு என்ற பெயரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே போதிய ஒத்துழைப்பு மாநில அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தனது தரப்பில் தெரிவித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பான மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இரு மேற்கு வங்கம்அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை சுட்டிக்காட்டி அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.

    அதாவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பான புகார்களை விசாரிக்க, தற்போதைய மற்றும் முன்னாள் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை தேர்தல் பதிவு அதிகாரிகளாக நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நம்பிக்கை பற்றாக்குறையை ஒரு அசாதாரணமான சூழல் என்று கருதி உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 28 அன்று வெளியிடவும், விடுபட்டவர்கள், நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட பின்னர் துணைப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  

    • அதிகாலை 4 மணியளவில் நகைகள் வழங்கும் சடங்கு நடைபெற்றுள்ளது.
    • ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் திருமணம் முடிந்துவிட்டது

    உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி, தனு கேசர்வானி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.18) கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் மாலைமாற்றும் சடங்கு உள்ளிட்ட சில திருமண சடங்குகள் நிகழ்ந்துள்ளது. மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மண்டபத்திற்கு வந்துள்ளனர்.

    மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் நகைகள் வழங்கும் சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது சிறிது தூரத்தில் கட்டப்பட்டிருந்த மணமகள் வீட்டு செல்லநாயான 'சிக்ஸர்' குறைத்துள்ளது.

    சடங்குநேரத்தில் குறைத்துக் கொண்டிருந்ததால் மணமகன் வீட்டார் நாயை அடித்துள்ளனர். இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாய்மோதல் கைகலப்பாக மாற இரு தரப்பினரும் நாற்காலிகள் மற்றும் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மணமகள் உட்பட சுமார் 8 பேர் காயமடைந்தனர். மணமகளுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, மேலும் மணமகள் தரப்பைச் சேர்ந்த சிலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது. மணமகன் தரப்பைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    மோதல் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேசியுள்ளனர். அப்போது கருணை இல்லாத குடும்பத்தில் தன்னால் வாழ முடியாது எனக் கூறி மணமகள் திருமணத்தை நிறுத்தக் கூறியுள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரும் சீர் வரிசைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சமரசமாகப் பிரிந்து சென்றனர்.

    இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த ஜோடி ஏற்கனவே காதலர்கள். ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்திருந்த நிலையில், முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்ட சடங்கின் போது இந்த விபரீதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாக்கெட் நாவல் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா "பாக்கெட் நாவல்" படத்தை இயக்குகிறார்.

    இந்தப் படத்தின மூலம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைகின்றனர். சூப்பர் டீலர்க்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

    இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    • பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது.
    • ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன் என்றார்.

    வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்று உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டில் இருந்தே பல விவாதங்கள் இருந்து வருகிறது.

    அவற்றுக்கு வலு சேர்க்கும் வானில் ஏற்படும் வினோதமான நிகழ்வுகள், விண்கலம் போல் தென்படும் வினோத வாகனங்கள் குறித்த புகைப்படங்கள் கசிவது உண்டு.

    அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளை பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான 'ஏரியா 51'-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

    இதற்கிடையே அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, "பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்த ஆதாரமும் தனக்குக் கிடைக்கவில்லை" என்றார்.

    ஒரு முன்னாள் அதிபரே வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்று கூறியது அமெரிக்காவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இந்த சூழலில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

    இதன்மூலம் அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகன், மற்றும் தொடர்புடைய துறைகள் தங்கள் வசம் உள்ள வேற்றுகிரகவாசிகள் தொடர்புடைய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

    அதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. நான் அதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நிறைய பேர் அதை நம்புகிறார்கள். நான் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன்" என்று தெரிவித்தார். 

    ×