என் மலர்
தலைப்புச்செய்திகள்
- உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.
- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி அவர்கள், நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018-2019 ஆம் ஆண்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) தொடர்பாக சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தனிப் பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் ICT Labs அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவற்றை அமைக்க மூலதனச் செலவுகளுக்காக, ரூ.6.40 லட்சமும், இந்தப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக ரூ. 15,000 மற்றும் இதர செலவுகள் சேர்த்து, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி.
ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வயதிலிருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டு என்ற இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்திருக்கிறது.
டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எல்லாம் ஆறாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில் ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.
ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Kelton நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, கணினி அறிவியல் ஆசிரியர்கள் B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவர்களை, அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற பெயரில் நியமித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.
தமிழகம் முழுவதும் கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் சுமார் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்?
கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1.050 கோடி எங்கே சென்றது? அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.
- கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.
- போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப் பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் கார் ஓட்டிச்செல்லும் பெண் ஒருவர் ஸ்டியரிங் மீது லேப்டாப்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தி வருகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து போலீசார் அப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், ஆனால் கார் ஓட்டும் போது வேலை செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, மஞ்சள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு முதல் கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை சமையல் புளி, 1 லட்சம் எண்ணிக்கையிலான இங்கிலாந்து நாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும்.
இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து கொண்ட கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கடற்கரை ஓரமாக போட்டுவிட்டு பைபர் படகில் தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
- உயர்கல்வி மன்றத்திற்கு நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்கான புதிய திட்டங்களை வகுப்பது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது, பேராசியர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவது போன்ற பணிகளில் உயர்கல்வி மன்றம் செயல்பட்டு வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யும் உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.
இந்தநிலையில், உயர்கல்வி மன்றத்திற்கு நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் பன்னீர் செல்வம், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் முரளிதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்ட இயக்குனராக இருந்தபோது, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். இக்கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார். சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி இரட்டை இலை, சின்னம் விவகாரத்தில் அடுத்த நகர்வு குறித்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. சட்டவிதிகளை மாற்றி கட்சியை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
- போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பான கண்காணிப்பு அலுவலர்கள், ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,
* பார்வை மாற்றுத் திறனாளிகள் 12-ம் வகுப்பு தேர்வை கணினி வழியாக எழுத உள்ளனர்.
* பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவரின் கோரிக்கையை ஏற்று கணினி வழியில் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.21 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.23 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
* பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர் என்று கூறினார்.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பள்ளிக்கல்வித்துறையில் 238 போக்சோ வழக்குகள் உள்ளன. அதில் 11 பேர் குற்றமற்றவர்கள். 7 பேர் இறந்து விட்டார்கள்.
* போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.
* புகார்கள் தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பள்ளிக்கூடமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
* தவறு என்று வரும்போது அது எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
- வெளியிடங்களில் இருந்து வரும் ஊழியர்கள் தங்குவதற்கு 3-வது கோபுரத்தில் 80 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தரை தளத்தில் 5 படுக்கை வசதியுடன் கூடிய ஆஸ்பத்திரியும் இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரில் அமைந்துள்ளது. இருந்தாலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
1939-ம் ஆண்டு முதல் உள்ளூர் அலுவலகம் தற்போது டெல்லியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ள இந்த இடத்தில்தான் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் 2-வது தளம் 1962-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்டமாக அலுவலகம் கட்ட திட்ட மிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
டெல்லி கேசவ்குஞ்சில் 4 ஏக்கர் பரப்பளவில் 3 கோபுரங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோபுரத்திலும் 12 மாடிகள் உள்ளது. சாதாரண கட்டடமாக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்.சின் அளப்பரிய சேவைகளின் நினைவு சின்னமாக கட்டி எழுப்பி இருக்கிறார்கள்.
குஜராத்தை சேர்ந்த கட்டடக் கலைஞரால் 75 ஆயிரம் தன்னார்வலர்களால் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் திரட்டப்பட்ட ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கு 300 அறைகள், சித்தாந்த கூட்டங்கள் நடத்த 2 பிரமாண்டமான ஆடிட்டோரியங்கள், ஷாகாக்கள் நடத்த ஹெட்கேவார் சிலை அமைக்கப்பட்டுள்ள பரந்த புல்வெளி மைதானம். இந்த புதிய அலுவலகத்தின் மையப் பகுதியில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பவுத்த நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் என 8,500-க்கு மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன.
விவாத அரங்கம் 473 மற்றும் 123 பேர் அமரக் கூடிய வகையில் இடம் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்து சாப்பிடும் உணவு அறை ஆகியவையும் உள்ளன.
முதல் கோபுரத்துக்கு சத்னா டவர் என்றும 2-வது கோபுரத்துக்கு பிரார்னா டவர் என்றும், 3-து கோபுரத்துக்கு அர்ச்சனா டவர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2-வது கோபுரத்தின் 9-வது மாடியில் பத்திரிகையாளர்கள் அறை மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தங்கும் அறை இடம் பெற்றுள்ளது.
வெளியிடங்களில் இருந்து வரும் ஊழியர்கள் தங்குவதற்கு 3-வது கோபுரத்தில் 80 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 5 படுக்கை வசதியுடன் கூடிய ஆஸ்பத்திரியும் இடம்பெற்றுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 3,500 முழுநேர ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த புதிய அலுவலகம் உருவானதன் மூலம் பணிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்கள்.
- இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார்.
- இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படம் இது என்று இப்படம் குறித்து இயக்குனர் சண்முக பிரியன் தெரிவித்தார்.
- கடந்த சில சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக டூ பிளெஸ்சிஸ் வழிநடத்தி வந்தார்.
- மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
பெங்களூரு:
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.
சில சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்ட டூ பிளெஸ்சிசை கழற்றி விட்டது. அவரை நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஏற்கப்பட்டது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இதனையடுத்து பாராளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக் குழுவில் அவசரம் அவசரமாக விவாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த 572 திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.
வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாக கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஏற்கப்பட்டது.
இதையடுத்து வக்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். இதனால் மாநிலங்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை.
- அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே-சி வோட்டர் மூட் ஆப் தி நேஷன் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் 3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் வாக்கு 3 சதவீதம் சரிந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அ.தி.மு.க. கூட்டணி 23 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 5 சதவீதம் உயர்ந்து 52 சதவீதம் ஆக அதிகரித்திருக்கும்.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வாக்குகள் 3 சதவீதம் அதிகரித்து 21 சதவீதம் ஆகி இருக்கும். அ.தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்திருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது. இதில் தி.மு.க. 22 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. இப்போது தேர்தல் வைத்தாலும் அதே நிலை தான் நீடிக்கும். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய், 2026 சட்டசபை தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருப்பார். பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் விஜய் கட்சி ஆகியவை இணைந்து ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே தி.மு.க.வுக்கு சவாலாக மாற முடியும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- தனது மனைவியால் அபினவ் சிங் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
ஒடியா பாடகர் அபினவ் சிங் (32) பெங்களூரில் அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அபினவ் சிங் மீது அவரது மனைவி பொய்யான குற்றசாட்டுகளை கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






