என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
- நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை இன்று (22-ம் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 17 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க அணியும் இந்தத் தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய அணி மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அவர் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம். அபிஷேக் சர்மா 2 முறை சுழற்பந்து வீரருக்கு டக் அவுட் ஆனார். எனவே தென் ஆப்பிரிக்காவும் அவரை உடனே வெளியேற்ற சுழற்பந்து வீச்சாளரை தொடக்கத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
பேட்டிங்கில் இஷான் கிஷன் (176 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (162), ஷிவம் துபே (116), திலக் வர்மா (106) ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி (9 விக்கெட்), அக்சர் படேல் (6), பும்ரா (4) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக சுழற்பந்து வீரருக்கு வாய்ப்பா அல்லது 3 வேகப்பந்து வீரரா என்பது ஆடுகள தன்மையை பொறுத்த முடிவாகும்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா சமநிலையுடன் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மார்கிராம் (178 ரன்), ரிக்கெல்டன் (145), குயின்டன் டி காக் (118) ஆகியோரும், பந்துவீச்சில் நிகிடி (8 விக்கெட்), மார்கோ யான்சென் (7 விக்கெட்), ரபாடா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- எஸ்.ஐ.ஆரில் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக.
மதுரை:
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளின் 1.9 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் மூர்த்தி வெள்ளி செங்கோல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வீரம் என்றால் அது மதுரைதான். பாசம் என்றால் அது மதுரைதான். கோயில் என்றால் அது மதுரைதான். சாப்பாடு என்றால் அதுவும் மதுரைதான். இங்கே எல்லாமே FAMOUS தான்.
எஸ்.ஐ.ஆரில் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளின்போது வாக்காளர்களை நீக்கவிடாமல் உழைத்த இயக்கம் திமுக.
கடந்த 2 மாதங்களில் மட்டும் தி.மு.க. 7 மாநாடுகளை நடத்தியுள்ளது. பூத் அளவில் நம்மை போன்று வலிமையாக உள்ள கட்சி இந்திய அளவில் இல்லை.
மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க. நமது இயக்கத்தைத் தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும்.
200 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெறுவதே நமது லட்சியம். அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி, எனக்கும் சரி No Rest. வாக்குப்பதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்கக்கூடாது. தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும். சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
- இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி சுமார் 50 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என கண்டித்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.
- இந்த புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அபிஷேக் சர்மாவை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் கவலைப்படுகிறேன்.
- கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார் என்றார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து கவலைப்படுபவர்களைக் கண்டு நான் கவலைப்படுகிறேன்.
அவரது ஆட்டத்தை நினைத்து ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? அவர் இன்னும் ரன் அடிக்கத் தொடங்கவில்லை என்பதால், இனி அவரை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். அவர் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.
இது ஒரு குழு விளையாட்டு. அணியின் தேவைக்கேற்ப அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.
அவர் சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி. தவறினால் அதை ஈடுகட்ட நாங்கள் இருக்கிறோம்.
கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார். இந்த முறை அவருக்காக நாங்கள் அதைச் செய்வோம் என தெரிவித்தார்.
- சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வாரணாசியில் தனது வித்யா மடம் ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுவர்களை 5வது மாடியில் வைத்து துன்புறுத்தினார்.
- வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலத்தை போக்சோ நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார், சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி.
சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வாரணாசியில் தனது வித்யா மடம் ஆசிரமத்தில் தங்கியிருந்த 'சிறுவர்'களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்தன.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மாச்சாரி மஹாராஜ் மற்றும் சிலர் இணைந்து போலீசில் இதைப்பற்றி புகார் அளித்தனர்.
ஆனால் பிரயாக்ராஜ் காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்ய மறுத்ததால், அசுதோஷ் நீதிமன்றத்தை நாடினார்.
அவரது புகார் மனுவில், வித்யா மடத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியால், அந்த மடத்தின் 5வது மாடியில் வைத்து பாலியல் துன்புறுத்ததலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதற்கான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சி.டியை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்களை நீதிமன்றத்தில் அசுதோஷ் ஆஜர்படுத்தினார்.
மேலும், அவிமுக்தேஸ்வரானந்தர் தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆன்மீகப் பணியின் போர்வையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை பிரயாக்ராஜ் சிறப்பு போக்சோ நீதிமன்றம் இன்று விசாரித்தது. சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வினோத் குமார், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மீது FIR பதிவு செய்ய காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.
- இதில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
கதாநாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கதாநாயகியோ கடந்த கால சச்சரவான சில சம்பவங்களால் தனது காதலை அவனிடம் சொல்லத் தயங்குகிறாள். சில நாட்களில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இது கடந்தகால கதையாக இருக்க, நிகழ்காலத்தில் நாயகன் தன் மனைவி இறந்துவிட்டதாக கருதி அதற்கு காரணமானவர்களை பழி வாங்கப்பட்டதாக திரைக்கதை பரபரக்கிறது.
கதாநாயகிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்ன? அவள் இறப்புக்கு காரணம் என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஹீரோ தில் நட்ராஜ் கதையில் போலீஸ் ஆஃபீஸர் என்றாலும் அதற்கேற்றபடி மிடுக்கான தோற்றத்தை ஓரளவுக்கு கொடுக்கிறார். காதல் மனைவியை சீரழித்தவர்களை பழி வாங்க களமிறங்கும்போது கோபத்தின் உச்சத்தை காட்டுகிறார். இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம்.
கிராமத்து லட்சணம் கொண்ட ஹீரோயின் ஷிவானி காதலும் காதல் சார்ந்த காட்சிகளில் நடித்திருப்பது பரவசமாக இருக்கிறது.
இப்படத்தை இயக்கியிருக்கிற பகவதி பாலா அப்பாவி பெண்களைக் குறிவைத்து, விதவிதமான தோற்றங்களில் சென்று, அவர்களை திருமணம் செய்து அடிமையாக்கி, தவறான செயல்களுக்கு பயன்படுத்தும் கொடூர வில்லனாக தெரிகிறார். மோசடிப் பேர்வழிகளுக்கு உதவுகிறவராக காமெடி நடிகர் செந்தில் காட்டும் வில்லத்தனம் பரவாயில்லை.
இயக்கம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நபர் பலரை திருமணம் செய்கிற மோசடி விவகாரத்தை விவகாரத்தை கிரைம் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பகவதி பாலா. படத்தில் குறைகள் காணப்டுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
பாடல் வரிகளுக்கு இசை மெருகூட்டியிருக்கும் ஏ.சி ஜான்பீட்டரும், பின்னணி இசையை காட்சிகளுக்குப் போதுமானதாக கலந்திருக்கிறார் தேவா.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ரேட்டிங்-2/5
- காங்கிரஸ் கட்சிக்கு ஊடுருவல்காரர்களே வாக்கு வங்கி.
- ராகுல் காந்திக்கு துணிவிருந்தால் செய்ய வேண்டும்.
அசாம் மாநிலம் காம்ரூப் பகுதியில் காவல்துறை பட்டாலியன் புதிய வளாகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் இன்று அடிக்கல் நாடினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "மார்ச் 31 க்குள் நாட்டில் இருந்து நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்படும். நக்சலைட்டுகளை ஒழிப்பதைப் போலவே ஊடுருவல்காரர்களையும் ஒழிப்பது சாத்தியமே. ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மட்டுமல்ல, 2031 க்குள் அவர்களை நாட்டை விட்டே விரட்டுவோம்.
ஊடுருவல்காரர்கள் ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கிருந்து விரட்டப்பட்டால், மற்றொரு இடத்தில் குடியேறுகிறார்கள். எனவே, அவர்களை நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேற்றுவதே தீர்வு.
காங்கிரஸ் கட்சிக்கு ஊடுருவல்காரர்களே வாக்கு வங்கி என்பதால், அவர்களை வெளியேற்ற காங்கிரஸ் ஒருபோதும் முன்வராது.
ராகுல் காந்திக்கு துணிவிருந்தால், ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது குறித்துத் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்" என்று சவால் விடுத்தார்.
- தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார்
- கருத்து வேறுபாடு பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை திருமணம் செய்துள்ளார்.
இந்தத் திருமணம் டெல்லி-என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனியார் நிகழ்வாக நடைபெற்றது. திருமண புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் சாஹல் வெளியிட்டார்.
பல ஆண்டுகளுக்கு முன் துபாயில் சந்தித்த இவர்களுக்கு இடையே முதலில் நட்புறவு மலர்ந்து, பின்னர் காதலாக மாறியது. 2025 மே மாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சோஃபி ஷைன், அமெரிக்காவைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்'-இல் இரண்டாம் துணைத் தலைவர். மேலும், ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தொண்டுப் பிரிவான 'ஷிகர் தவான் ஃபவுண்டேஷன்' அமைப்பின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
தவான் முன்னதாக 2012-ல் ஆயிஷா முகர்ஜியை மணந்தார். இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் பிரிந்த இவர்களுக்கு, அக்டோபர் 2023-ல் டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
- அமெரிக்காவுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்த பொறியில் விழ அவசரப்பட்டது ஏன்?
- பல அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய வரிகள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறி பல்வேரு நாடுகள் மீது விதித்தவரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் அவசர கதியில் அமெரிக்காவுடன் இந்தியா ஏன் ஒப்பந்தம் செய்தது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திறனற்ற வெளியுறவு கொள்கையா அல்லது சரணடைதலா? மோடி அரசு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரிகள் தொடர்பான தீர்ப்புக்காக காத்திருக்காமல், அமெரிக்காவுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கும் ஒரு வர்த்தக ஒப்பந்த பொறியில் விழ அவசரப்பட்டது ஏன்?
இந்தியாவிற்கான பல அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூஜ்ஜிய வரிகள், கிட்டத்தட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் விவசாயத்தைத் திறந்து விடுதல், 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டம், நமது எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாடு மற்றும் டிஜிட்டல் துறையில் பல வரிச் சலுகைகள் பற்றி அமெரிக்க - இந்திய வர்த்த ஒப்பந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி ஜி இந்தியர்கள் முன் நின்று உண்மையைச் சொல்ல வேண்டும். இந்தியாவின் தேசிய நலன் மற்றும் சுயாட்சியை சமரசம் செய்ய உங்களுக்கு என்ன அல்லது யார் அழுத்தம் கொடுத்தார்கள்? அது எப்ஸ்டீன் கோப்புகளா?
மத்திய அரசு, அதன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து 140 கோடி இந்தியர்களின் சுயமரியாதையையும் நமது விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகங்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனையும் பாதுகாக்கும் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை வழங்குமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்கியது
- தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது
நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது.
தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கனமழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும்






