என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • செயலியை அணுகுவதில் 71% சிக்கல்.
    • #InstagramDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

    மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை முதல் இன்ஸ்டாகிராம் உலகளவில் பெரிய அளவிலான தொழில்நுட்பக் கோளாறுகளால் முடங்கியுள்ளது.

    காலை முதல் இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்ட கோளாறால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    பயனர்கள் தங்களது 'டைரக்ட் மெசேஜ்' பக்கத்தை அணுக முடியவில்லை. நோட்டிபிகேஷன் வந்தாலும், மெசேஜ் பக்கம் காலியாக தெரிவதாகப் புகார் அளித்துள்ளனர்.

    தேடல் வசதி வேலை செய்யவில்லை என்றும், காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ளவர்கள் மறைந்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    இணையதள சிக்கல்களை கண்காணிக்கும் 'டவுன் டிடெக்டர்' தளத்தின்படி, இதுபோல சுமார் 10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலான புகார்கள் அமெரிக்காவிலிருந்தும், குறிப்பிடத்தக்க புகார்கள் இந்தியாவில் இருந்தும் பதிவாகி உள்ளன. 

    71% புகார்கள் செயலியை அணுகுவதிலும், 19% புகார்கள் சர்வர் இணைப்பு தொடர்பாகவும், 5% புகார்கள் Feed தொடர்பாகவும் பதிவாகியுள்ளன.

    பலர் எக்ஸ் தளத்தில் #InstagramDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். 

    • தனக்கே உரித்தான பாணியில் சிரித்துக்கொண்டே திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலை திருச்சி சென்றார். அவரிடம் நிருபர்கள் பிரதமர் மோடி வருகை பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர் நிருபர்களை பார்த்து கொஞ்சம் தள்ளுறீங்களா தம்பி, நான் இப்பதான் வரேன். அப்புறம் பேசிக்கலாம் என்றார்.

    இருப்பினும் நிருபர்கள் விடாமல் அடுத்த கேள்வியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவதாக தகவல் வெளியாகியுள்ளதே? என்று கேட்டனர். இதற்கு தனக்கே உரித்தான பாணியில் சிரித்துக்கொண்டே திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார்.

    என்னை மாட்டி விட்டு கட்சியில் இருந்து நீக்கப் பாக்குறீங்களா? என்று கலகலப்பாக பதில் அளித்து விட்டு அங்கிருந்து சென்றார். அவரது இந்த பேட்டி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஃபேண்டஸி காமெடி ஜானரில் இந்தப் படம் தயாராகிறது.

    ஜே.பி. சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ' புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 'மகாராஜா' படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

    அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார்.

    படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் கவனிக்க கலை இயக்கத்தை வி. சண்முகராஜா மேற்கொள்கிறார். சண்டை பயிற்சியை ராம் குமாரும், ஆடை வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ நிஷா பாலாஜியும், நடன அமைப்பை சந்ததோசும் கையாள்கிறார்கள். ஃபேண்டஸி காமெடி திரைப்படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜே.பி. சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் தயாரிக்கிறார்.

    படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ``பழைமையான கேமரா ஒன்றை மையமாக வைத்து ஃபேண்டஸி காமெடி ஜானரில் இந்தப் படம் தயாராகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பு நடத்துகிறோம்'' என்றார்.

    • திருமண காட்சிகளை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒவ்வொன்றாக பகிர்ந்து வருகின்றனர்.
    • புதுமண ஜோடிகள் தங்களது மெஹந்தி விழா புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த மாதம் 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. திருமணம் நடந்து 14 நாட்களாகி உள்ள நிலையில் திருமண காட்சிகளை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒவ்வொன்றாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் புதுமண ஜோடிகள் தங்களது மெஹந்தி விழா புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

     

     

    கண்களை கவரும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய புடவை, கைகளில் சிவன் ஓம் வடிவில் மெஹந்தி மற்றும் தாமரை மலர் மாலையுடன் ராஷ்மிகா அமர்ந்திருக்க விஜய் தேவரகொண்டா அவரது நெற்றியில் முத்தமிடுவது மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளனர் புதுமண தம்பதிகள்.

    • கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே ரூ.13 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.
    • பிரதமருடைய இந்த வருகை, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புகின்ற வருகையாக இருக்கும்.

    திருச்சி:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவது என்று தமிழக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே அது உறுதி செய்யப்படுகின்ற நேரமாக இந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இருக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுதெல்லாம் தமிழகத்திற்கு வருகிறாரோ, அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் நிதியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி மட்டும்தான் அவர் கனவாக உள்ளது. கடந்த மார்ச் 1-ந்தேதி மதுரையில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்களை வழங்கினார். இன்று மீண்டும் கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரம் கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களைத் தமிழ்நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார். இதில் ரெயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கும்.

    கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே ரூ.13 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடியை அன்போடு வரவேற்பதற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சகோதரர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம். பிரதமருடைய இந்த வருகை, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புகின்ற வருகையாக இருக்கும் என்றார்.

    இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வருவார்கள் என்றார்.

    • மத்திய பெய்ரூட்டில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது.
    • பலியான 4 பேரும் ஈரான் தூதரக அதிகாரிகள் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

    மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. மேலும் மத்திய பெய்ரூட்டில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் பலியானவர்கள் எண்ணிக்கை 570-ஆக உயர்ந்து உள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்ரூட்டில் உள்ள ஒரு ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இந்த நிலையில் பலியான 4 பேரும் ஈரான் தூதரக அதிகாரிகள் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

    லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள பல இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்தனர்.

    • ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது?
    • தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப்பட்டுவிட்டதா?

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும் போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுகின்றன.

    கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும், வயது வித்தியாசமின்றி தொடரும் பாலியல் வன்கொடுமைகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செவிகளுக்கு எட்டுகிறதா இல்லையா? தமிழகத்தில் தினந்தினம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களால் தமிழக மக்கள் அச்சத்தில் உறக்கத்தை தொலைத்து தவிக்கையில், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது? முரசொலி மட்டும் படிப்பதனால், குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா? அல்லது தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப்பட்டுவிட்டதா?

    மொத்தத்தில், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பறிபோனதை, நிம்மதியாக வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே தமிழகம் பேரழிவில் இருந்து மீட்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை! என்று கூறியுள்ளார். 

    • 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மோடி ஆட்சிக்கு வந்தும் படிப்படியாக அழிக்க ஆரம்பித்தார்.
    • எந்தவொரு செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

    100 நாள் வேலை புதிய சட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை என்றும், கிராமப்புறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்திற்கும், துணை போகும் பழனிசாமியின் பச்சைத் துரோகத்திற்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான பிரதமர் மன்மோகன் ஆட்சியில், 2006-ல் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள்.

    கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.

    வறுமை ஒழிப்புத் திட்டமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மோடி ஆட்சிக்கு வந்தும் படிப்படியாக அழிக்க ஆரம்பித்தார். திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டினார்கள்.

    2021-2022-ல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் 2022 – 2023-ல் 73,000 கோடி ரூபாயும் 2023-2024-ல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டு தோறும் குறைத்து நிதியை ஒதுக்கி வந்தார்கள்.

    இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்குச் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது. இதனால், கிராமப்புறத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

    100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால், அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மோடி அரசு வஞ்சித்தது. 2023-2024-ல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான்.

    இந்தத் திட்டத்தில் 100 நாட்கள் கிடைத்த வேலை, மோடி ஆட்சியில் 30 நாட்கள் கூட கிடைப்பதில்லை. 2021-ம் ஆண்டு முதல் 7.6 கோடி தொழிலாளர்களின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணி அட்டைகள் நீக்கப்பட்டன.

    இப்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வாய் ஜாலங்களுடன் 'விபி-கிராம் ஜி' எனும் புதிய சட்டத்தை எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கொண்டு வந்தது.

    கிராமப்புற ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதும், தேசப்பிதா காந்தியாரின் பெயரை நீக்குவதும்தான் பாஜக அரசின் ஒரே நோக்கம் என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பலமுறை சுட்டிக்காட்டினார்கள்.

    இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதற்குக் கடுமையான எதிர்ப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்தார்கள்.

    இந்தப் புதிய சட்டத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கும், மக்கள் கூடுதலாகப் பயன் பெறுவார்கள் என்றெல்லாம் சமாளிப்பு பதில்களைக் கூறிக் கொண்டிருந்த ஒன்றிய பாஜக அரசு, இதுவரை இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    சட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம்? என்ற எந்தவொரு செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

    ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த இருக்கிற இந்தச் சட்டத்திற்கான அடிப்படை விதிகளையே இன்னும் வகுக்காமல் ஒன்றிய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றது.

    மாநிலங்களுக்கு எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும் என்பதற்கான எந்தத் தெளிவான வழிகாட்டலும் இன்னமும் வகுக்கவில்லை. கிராம ஊராட்சிகளை எந்த அளவுகோல்களின் அடிப்படையில் தரம் பிரிப்பது என்பதும் இறுதி செய்யவில்லை.

    புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும் ஒன்றிய பாஜக அரசு எடுக்காததைப் பார்க்கும் போது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாஜக அரசு முற்றிலும் பறிக்க முயல்வது அப்பட்டமாகத் தெளிவாகிறது. விபி-கிராம் ஜி சட்டத்திற்கு இதுவரை ஒன்றிய அரசு செய்தது விபி-கிராம் ஜி திட்டத்திற்கு 50 ஆயிரம் ரூபாயில் லோகோ உருவாக்கியது மட்டுமே.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டச் சட்டத்தால் கிடைத்த பலன்கள் கூட விபி-கிராம் ஜி சட்டத்தால் கிடைக்காத போதும், புதிய சட்டத்தைக்கூட அமல்படுத்த மோடி அரசு தயங்குகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது 100 நாள் வேலைத் திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக் கட்டும் முடிவில் மோடி அரசு இருப்பதையே இன்றைய செயல்பாடுகள் காட்டுகின்றன.

    வாயில் நுழையாத வட மொழி பெயர் கொண்ட விபி-கிராம் ஜி திட்டத்தில் மாநிலங்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருக்கிறார்கள். 'வேலை என்பது அடிப்படை உரிமை' என்ற நிலையிலிருந்து 'தேவை அடிப்படையில் வேலை' என மாற்றம் செய்யப்பட்டது. 100 சதவிகித ஒன்றிய அரசின் நிதிப் பங்கீடு என்பதை 60:40 என மாற்றி மாநிலங்கள் மீது கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது.

    கிராமங்களை மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளும் புதிய திட்டத்தால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு கோடி கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 கோடி கிராமப்புற தொழிலாளர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

    நூறு நாள் வேலைத் திட்டத்திற்குரிய ஊதியத்திற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்காத போதெல்லாம் அந்த உரிமைக்காகச் சட்டப்பூர்வமாகவும் மக்கள் மன்றத்திலும் திமுக போராடியது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது

    ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியோ இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கி தமிழ்நாட்டுக்குத் துரோகத்தைச் செய்தார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து தனது துரோகப் பணியைச் செவ்வனே செய்து முடித்த பழனிசாமி, தான் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதும் தெரிந்தும் 150 நாட்களாக வேலையை உயர்த்துவேன் என நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.

    புதிய சட்டத்தை ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்று கூடச் சொல்ல பழனிசாமிக்கு துணிவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு செய்து வரும் வஞ்சகத்திற்கும் பழனிசாமியின் பச்சைத் துரோகத்திற்கும் மிக விரைவில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது.
    • தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிப்பார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் 14 வயது சிறுமி இரு மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுக்கத் துப்பில்லாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    சென்னை தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்தை அடுத்த கீழக்கண்டை கிராமத்தை நோக்கி இரு சக்கர ஊர்தியில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்த நிலையில், தேவத்தூர் பகுதியில் மது போதையில் இருந்த இரு மனித மிருகங்கள் அவர்களை இரு சக்கர ஊர்தியில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். அதனால் இரு சக்கர ஊர்தியில் சென்ற சிறுவனும், இரு சிறுமிகளும் தவறி விழுந்த நிலையில், அவர்களை இரு மனித மிருகங்களும் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களில் சிறுவனும், ஒரு சிறுமியும் தப்பி ஓடிவிட்ட நிலையில், சிக்கிக் கொண்ட ஒரு சிறுமியை இரு மிருகங்களும் சிதைத்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உதவுவதற்கு கூட ஆள் இல்லாமல் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இந்த கொடிய நிகழ்வு தான் சான்று ஆகும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வரிசையில் இந்தக் கொடூரமும் இணைந்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு இது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. நாளொரு விழாவும், பொழுதொரு கொண்டாட்டமாகவும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் தான் கொடூரமான சான்று ஆகும். தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார். 

    • பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றபோது தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.

    சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னின் மேற்கே உள்ள கெர்சர்ஸ் நகரில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றபோது தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் சில பயணிகள் பஸ்சுக்குள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.

    இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, சிசுக் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது உள்ளன.
    • எப்ஸ்டீன் உடன் டிரம்ப் நெருக்கமாக, பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    எபிஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார்.

    அவை எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் இடம்பெற்றுள்ளது. 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, சிசுக் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும், எப்ஸ்டீன் உடன் டிரம்ப் நெருக்கமாக, பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்த சூழலில் அமெரிக்க தலைநகரான வாஷிங்கடன் டிசியில் உள்ள நேஷனல் மால் என்ற வணிக வளாகத்தில் எப்ஸ்டீன் உடன் டிரம்ப் இருக்கும் சிலை திறக்கப்பட்டுள்ளது.

    டைட்டானிக் படத்தில் ஆருயிர் காதலர்களாக ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முகப்பில் கைநீட்டி நிற்கும் காட்சி உலகப் பிரசித்தம். அதேபோல எப்ஸ்டீன் - டிரம்ப் நிற்பதுபோல இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சீக்ரெட் ஹேண்ட்ஷேக் என்ற கலை அமைப்பு இந்த சிலையை நிறுவியுள்ளது. டிரம்ப்புக்கு எதிரான போராட்ட வடிவமாக இந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக நேஷனல் மாலில் எப்ஸ்டீனும் டிரம்ப்பும் கைகோர்த்து நிற்கும் சிலை நிறுவப்பட்டு பின் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இந்தப் படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    `இறுதிப்பக்கம்' மற்றும் 'டியர் ரதி' ஆகிய கவனிக்கத்தக்கத் திரைப்படங்களைத் தொடர்ந்து, இன்சோம்னியாக் ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை (Production No. 3) பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    முந்தைய படம் `இறுதிப்பக்கம்' மூலம் ஒரு நேர்த்தியான மர்டர் மிஸ்டரியைக் கொடுத்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்கே திரும்பியுள்ளார். ஆனால், இது வழக்கமான பாணியில் அமையாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது.

    இந்தப் படத்தில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் `குமார சம்பவம்' புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

    முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் விறுவிறுப்பு நிறைந்த திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தின் திரைக்கதை, திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சுற்றியே நகர்கிறது. எதார்த்தமான சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தப் பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்தப் படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பங்கேற்கவுள்ள மற்ற நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    ×