என் மலர்tooltip icon

    இந்தியா

    • நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா-அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளது.
    • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தையைத் திறந்துவிடும்.

    மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

    நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா-அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,700 லட்சம் கோடி) சந்தையைத் திறந்துவிடும்.

    ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தம் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழிப்பண்ணை, பால், பாலாடைக்கட்டி, எத்தனால், புகையிலை, சில காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட முக்கியமான விவசாய மற்றும் பால் பொருட்களை முழுமையாகப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், கிராமப்புற வாழ்வாதாரங்களைத்தக்க வைப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

    இந்த ஒப்பந்தம் நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிலையான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதில் இந்தியாவும் அமெரிக்காவும் கவனம் செலுத்த உதவும் என்று தெரிவித்து உள்ளார்.

    • தனது காரில் வந்து இறங்கிய சந்தர்கனி நேராக கட்டிடத்தின் 17வது மாடியில் ஏறினார்.
    • வாட்ச்மேன் அவரை சமாதானம் செய்து 10வது மாடி வரை அழைத்து வந்தார்.

    மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்த தொழிலதிபர் சுனில் மோதிலால் சந்தர்கனி (59). இவர் முல்தானி என்ற பிரபல பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

    நேற்று மதியம், சோலாப்பூரின் விஜய்பூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு தனது காரில் வந்து இறங்கிய சந்தர்கனி நேராக கட்டிடத்தின் 17வது மாடியில் ஏறினார்.

    மொட்டை மாடியின் விளிம்பில் நின்று கடவுளிடம் கைகூப்பி சந்தர்கனி பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தார். அவரை கண்ட வாட்ச்மேன் வேகமாக மேலே சென்று அவரை கீழே அழைத்து வர முயன்றார்.

    அவரை சமாதானம் செய்த வாட்ச்மேன், அவருடன் கீழே இறங்கினார். ஆனால் 17வது மாடியில் இருந்து 10வது மாடிக்கு இருவரும் வந்தபோது சந்தர்கனி, தனது கார் சாவியை மேலேயே மறந்து வைத்துவிட்டதாக கூறி மீண்டும் 17வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

    அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.

    அவர் கைகூப்பி பிரார்த்தனை செய்த சிசிடிவி காட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது. 

    • அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட ஆர்வம் கொண்டவர்கள் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் விபரீதத்தில் முடிகிறது.

    லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான முறையில் வீடியோவை எடுக்க முயன்று உயிரிழக்கும் சம்பவங்களும் தினசரி நடைபெறுகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியானாலும் விழிப்புணர்வு என்பது இல்லாததே வேதனையாக உள்ளது. லைக்கிற்கு ஆசைப்பட்டு 27 வயதான பெண் செய்த செயலால் இன்றைக்கு அப்பெண்ணின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

    உத்தரபிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த மோகினி என்பவர் இணையதளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சம்பவத்தன்று வித்தியாசமான ரீல்ஸை எடுக்க முடிவு செய்த அவர், அறைக்கு சென்று ஒரு நாற்காலியில் நின்று கொண்டு கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு அதனை போனில் படம் பிடித்துள்ளார். அப்போது கால் தடுமாறி கழுத்தில் கட்டிக்கொண்ட கயிறு இறுக்கியதால் மோகினி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள எவருக்கும் தெரியவில்லை.

    சில மணிநேரம் கழித்து மோகினியின் 4 வயதான மகள் அறைக்குள் நுழைந்த போது தனது தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு சத்தம் போடவே இச்சம்பவம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், ரீல்ஸ் எடுக்க முயன்ற போது இச்சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ரீல்ஸ் எடுக்க ஆசைக்கப்பட்ட மோகினி செய்த செயலால் இன்று அவரின் 4 வயது மகள் தாயை இழந்து தவிக்கிறாள். 

    • மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • மனுவை வாபஸ் பெறும் நாளில் தான் தேர்தல் நடக்கிறது.

    30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க அந்த மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.

    மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன.

    பெரும்பான்மைக்கு 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.கவுக்கும், துணை முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார். சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் மேயர் பதவி வேண்டும் என்று போர்க் கொடி தூக்கினார்.

    மேயர் பதவி தொடர் பாக பா.ஜ.க-ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பா.ஜ.கவுக்கு மேயர் பதவியும், ஏக்நாத் ஷிண்டே சிவ சேனாவுக்கு துணை மேயர் பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மும்பை மேயர் பதவிக்கு பெண் உறுப்பினரான ரிதுதவ்டே பா.ஜ.க பெயரை பரிந்துரை செய்து அறிவித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவ சேனா சஞ்சய் சாடியை துணை மேயர் பதவிக்கு பரிந்துரைத்தது.

    மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடக்கிறது. மனுவை வாபஸ் பெறும் நாளில் தான் தேர்தல் நடக்கிறது.

    போட்டி இருந்தால் தேர்வு நடைபெறும். பா.ஜ.க-வை சேர்ந்த ரிதுதவ்டே மும்பை மேயராகவும், ஏக்நாத் ஷிண் டேயின் சிவசேனா வேட்பாளர் சஞ்சய் சாடி துணை மேயராகவும் தேர்வாகிறார்கள்.

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்‌ஷா வாங்கி உள்ளனர்.
    • இ-ரிக்‌ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது.

    மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சில மின்வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாகவும், அவற்றை பழுது நீக்கி கொடுப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வருவதில்லை என்றும் இணையத்தில் அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    இதுபோன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஷிவ்புரி பகுதியை சேர்ந்தவர் நாராயன். இவரது மனைவி குடியா மஹூர். இவர்கள் இருவரும் இ-ரிக்ஷா ஓட்டி வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.2.50 லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு இ-ரிக்ஷா வாங்கி உள்ளனர். அதனை ஓட்டி வருமானம் ஈட்டி தங்கள் 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தனர்.

    இந்நிலையில் வாங்கிய 2 மாதத்திலேயே இ-ரிக்ஷா சரியாக வேலை செய்யாமல் பழுதானது. இதுகுறித்து குடியா மஹூர் இ-ரிக்ஷா வாங்கிய நிறுவனத்தினிடம் புகார் செய்த போதும் அவர்கள் இ-ரிக்ஷாவில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்காமல் 4 மாதங்களாக அலைக்கழித்து வந்துள்ளனர்.

    இ-ரிக்ஷாவில் பேட்டரி வெடித்துள்ளது. இதை நீங்கள் தான் புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மழுப்பலாக பதில் கூறி உள்ளனர். இதனால் இ-ரிக்ஷாவை ஓட்ட முடியாமல் அவர்களின் வருமானம் தடைபட்டது. இதனால் ரிக்ஷா வாங்குவதற்கு வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் குடியா மஹூர் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த குடியா மஹூர் சம்பவத்தன்று தனது இ-ரிக்ஷாவை ஷோரூம் கொண்டு சென்ற நிலையில் திடீரென ஆவேசமடைந்து ஷோரூம் முன்பு வைத்து இ-ரிக்ஷாவுக்கு தீ வைத்து எரித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்ததோடு, குடியா மஹூரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    • வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
    • பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகள் மற்றும் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இருக்கின்றன.

    கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம், நகரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் கரிப்பூர் என்ற இடத்தில் உள்ளது. இங்கிருந்து துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட நாடுகளுக்கும், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    கேரள மாநிலத்தில் பரபரப்பாக இயங்கக்கூடிய விமான நிலையத்தில் ஒன்றாக கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 பஸ்கள் மற்றும் ஒரு ஆம்புலன்சு வாகனம் உள்ளிட்டவைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

    வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. விமான நிலையம் அருகில் என்பதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக மஞ்சேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் அதிநவீன தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டன.

    தீயை அணைக்கும் பணியில் உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகளும் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 4 பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு உள்ளிட்ட 5 வாகனங்களும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகின. விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது தெரியவில்லை.

    தீப்பிடித்த 4 பஸ்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தில் இருந்து முனையத்திற்கும், முனையத்தில் இருந்து விமான நிலையத்தில் உள்ள விமானத்திற்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டவை ஆகும். அந்த வாகனத்தை இயக்கிய நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனங்கள் எப்படி தீப்பிடித்து எரிந்தன? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும், விமான நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பஸ்களுக்கு யாரேனும் மர்மநபர்கள் தீ வைத்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவித செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டு பிடிக்க, விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மற்றும் ஆம்புலன்சு வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காஷ்மீர் பாகிஸ்தானின் முக்கிய உயிர்நாடி- பாகிஸ்தான் பிரதமர்.
    • அவர்களால் ஏற்கனவே இருப்பவர்களையே சமாளிக்க முடியவில்லை- உமர் அப்துல்லா.

    காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் "காஷ்மீர் பாகிஸ்தானின் முக்கிய உயிர்நாடி. அது ஒரு நாள் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக மாறும்" என்று கூறியிருந்தார்.

    இதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா "நாம் அவர்களுடன் சேரப் போகிறோமா? அவர்களால் ஏற்கனவே இருப்பவர்களையே சமாளிக்க முடியவில்லை. நம்மை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்?" என பதிலடி கொடுத்துள்ளார்.

    பாகிஸ்தானால் காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் பேசும்போது மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

    இந்திய தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியா அதை திரும்ப பெறும் எனத் தெரிவித்து வருகிறார்கள்.

    • சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடினர்.
    • பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுஹைல் (வயது20). இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியில் வசித்துவரும் தனது குடும்பத்தினரை சந்திக்க வந்திருந்தார்.

    அப்போது அவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அறிமுகமானார். சம்பவத்தன்று அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அதனையறிந்த சுஹைல், சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார்.

    இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டன் காரணமாக, அந்த சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சுஹைல் கேரளாவில் இருந்து தப்பிச் சென்றார். வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பந்திரங்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சுஹைலை வலைவீசி தேடினர். ஆனால், தான் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம்கார்டு உள்ளிட்டவைகளை கேரளாவிலேயே கைவிட்டுவிட்டு தப்பியதால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதே நேரத்தில் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க, கோழிக்கோடு பந்திரங்காவில் தங்கியிருந்த சுஹைலின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபடி இருந்தனர். இந்தநிலையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் இருக்கும் தகவல் பந்திரங்காவு போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து உதவி கமிஷனர் பரோக் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மகாராஷ்டிரா மாநில போலீசாரின் உதவியுடன் சுஹைலை தேடினர். பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர்.

    பின்பு அவரை அங்கிருந்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமக்கிய விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    • தங்கம் மாயமான வழக்கில் தந்திரி மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
    • 16-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் புதிதாக தங்கத் தகடுகள் பதிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கிலோ கணக்கில் தங்க நகை மாயமானது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ண போற்றி என்பவர் முதல் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் சபரிமலை முதன்மை தந்திரி கண்டரரு ராஜீவரு அடங்குவார்.

    இவர் உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாகவும், இந்த பணத்தை திருவல்லாவில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் கண்டரரு ராஜீவரு சபரிமலை தந்திரியாக தொடர வேண்டுமா? என்பது குறித்து TDB ஆராயும் என போர்டு உறுப்பினரான வழக்கறிஞர் பி.டி. சந்தோஷ் கமார் தெரிவித்துள்ளார்.

    தங்கம் மாயமான வழக்கில் தந்திரி மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது பக்தர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர் தொடர்ந்து தந்திரியாக செயல்பட முடியுமா? என்பது குறித்து ஆராயப்படும்.

    போர்டு இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன், கேரளா உயர்நீதிமன்றத்தின் பார்வையை பரிசீலனை செய்யும். TDB எப்போதும் பக்தர்களுக்காகவே உள்ளது. அவர்களின் நம்பிக்கை மற்றும் சபரிமலையின் வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நிலையை எடுக்கும் என்றார்.

    தங்க நகை மாயமான வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு 16-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    • எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன்.
    • நமது புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா புறப்பட்டு சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன்.

    அன்வர் இப்ராகிமுடனான பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளுக்கிடையே ஏற்பட போகும் வலுவான உறவை எதிர்பார்த்துள்ளேன்.

    இந்தப் பயணம் நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை அதிகரிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

    மலேசியா துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தோரின் தாயகமாகும். அங்கு நமது புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் மலேசியப் பயணத்தின்போது செமிகண்டக்டர் துறையில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    • அவர்கள் நம்மிடம் விளையாட மாட்டோம் எனச் சொல்கிறார்கள்.
    • மக்களாகிய நாம் அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

    இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து வங்கதேசம் விலகியது. வங்கதேசத்திற்கு ஆதரவாக, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில் "இந்தியா டி20 உலகக் கோப்பையை நடத்துகிறது. பயனற்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக விளையாடமாட்டோம் எனச் சொல்கிறது. நாம் அவர்களிடம், "நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று சொல்ல வேண்டும். அவர்கள் நம்மிடம் விளையாட மாட்டோம் எனச் சொல்கிறார்கள். மக்களாகிய நாம் அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கேட்டுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு.
    • விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கும்.

    அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் உருவாகும் புதிய வாய்ப்புகளால் மேக் இன் இந்தியா வலுப்பெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு நல்ல செய்தி!

    நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு ஜனாதிபதி டிரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    இந்த கட்டமைப்பு நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், MSMEகள், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் இது 'மேக் இன் இந்தியா'வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்.

    இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த கட்டமைப்பு நமக்கு இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும்.

    இந்த கட்டமைப்பு நெகிழ்ச்சியான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். ஒரு விக்ஸித் பாரத்தை உருவாக்குவதை நோக்கி இந்தியா முன்னேறும்போது, எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட, நமது மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கு பங்களிக்கும் உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×