என் மலர்
நீங்கள் தேடியது "asaduddin owaisi"
- 29 தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டது.
- சீமாஞ்சல் பிராந்தியத்தில் மட்டும் 24 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது. பிரசாந்த் கிஷோர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
அதேவேளையில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. சீமாஞ்சல் பிராந்தியத்தல் மட்டும் 24 இடங்களில் போட்டியிட்டது.
இதில் அக்தருல் இமான் அமோர் தொகுதியில் 38,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 1,00,836 வாக்குகள் பெற்றார்.
கொச்சதாமன், பைசி, ஜாகிகாத், பஹாதுர்கஞ்ச் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எந்த கட்சியிடனும் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்டது.
சீமாஞ்சலில் வளர்ச்சியை கொண்டு வருவதும், குழந்தைகள் இறப்பை குறைப்பதும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாலங்கள், தொழிற்சாலைகள் கட்டுவதிலும் கவனம் செலுத்துவோம் என ஒவைசி தெரிவித்துள்ளார்.
- இதில் காஷ்மீரிகள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.
- பயங்கரவாதிகள் மதத்தைப் பற்றிக் கேட்டு மக்களைக் கொன்ற விதத்தை நான் கண்டிக்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் இந்தியா இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு நாடுகளும் முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.
இதற்கிடையே நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன்பின் மத்திய அரசின் எதிர் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தெரிவித்தன.
அந்த வகையில் கூட்டத்தில் கலந்துகொண்டபின் தங்கள் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
பாகிஸ்தானுக்கு எதிராக தற்காப்புக்காக வான்வழி மற்றும் கடற்படை முற்றுகையை மேற்கொள்ளவும், ஆயுத விற்பனையில் பாகிஸ்தானுக்கு தடைகளை விதிக்கவும் சர்வதேச சட்டம் அனுமதிக்கிறது. தாக்குதல் நடந்த பைசரன் புல்வெளியில் சிஆர்பிஎஃப் ஏன் நிறுத்தப்படவில்லை?. குழு அங்கு செல்ல ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது ஏன்?
பயங்கரவாதிகள் மதத்தைக் கேட்டு மக்களைச் சுட்டுக் கொன்றனர். இதில் காஷ்மீரிகள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.
பயங்கரவாதிகள் மதத்தைப் பற்றிக் கேட்டு மக்களைக் கொன்ற விதத்தை நான் கண்டிக்கிறேன். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் நல்லது, ஆனால் தண்ணீரை எங்கே வைத்திருப்போம்?. மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம். இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. என்று தெரிவித்தார்.
- மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது.
- AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.
வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதாக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று காலை அறிவித்தார்.
இந்நிலையில் வக்பு வாரிய சட்டத் திருந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
"இந்த மசோதா வக்பு சொத்துக்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை மீது தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும், முஸ்லிம் சமூகத்தின் மத சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
புதுடெல்லி:
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், ஐதராபாத் எம்பியான அசாதுதின் ஒவைசி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் குறித்து பேசியதாவது:
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் சட்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மகாத்மா காந்தி கிழித்து எறிந்தார். அதுபோலவே, நானும் இந்தச் சட்டத்தைக் கிழிக்கிறேன்.
கோவில்கள் மற்றும் மசூதிகளின் பெயரால் இந்த நாட்டில் பிரிவினையை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது. இதை நான் கண்டிக்கிறேன். மேலும் 10 திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
- அனைத்து எதிர்க்கட்சிகளும், பாஜக வெற்றி பெற உதவுகின்றன.
- நேரு பிரதமராக இருந்தபோது பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன.
அகமதாபாத்:f
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் யார் சிறந்த இந்து என்பதை காட்டிக் கொள்வதில் பிரதமர் மோடியுடன் போட்டி போட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது. அது டெல்லி முதல்வராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் சரி, அல்லது சமாஜ்வாதி கட்சி அல்லது ராஷ்டிரிய ஜனதாதள கட்சியாக இருந்தாலும், இதை காட்டிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.
காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும், வெறுப்புடன் சேர்ந்து வெறுப்பை எதிர்த்துப் போராடுகிறார்கள். இதன் மூலம் பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது. பாஜக ஏன் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறது என்பது குறித்து ராகுல் காந்தி அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜெய் சியா ராம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸுக்கு இதுபோன்ற அறிக்கைகள் வருவது சகஜம், ராகுலின் இது போன்ற கருத்து எனக்கு ஆச்சரியமாக இல்லை,
நேரு பிரதமராக இருந்தபோது பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன. பாபர் மசூதி வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டபோது, ராகுலுடையது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். பாபர் மசூதி உடைக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். எனவே, காங்கிரசார் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது இயல்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- குழந்தை திருமணத்திற்கு எதிரான அசாம் அரசின் நடவடிக்கையை அசாதுதீன் ஒவைசி கண்டித்துள்ளார்.
ஐதராபாத்:
அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்நிலையில், குழந்தை திருமணத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அசாதுதின் ஒவைசி, கணவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு திருமணம் செய்து கொண்ட சிறுமிகளை யார் கவனிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
- சரத்பவார் பிரதமர் மோடியை தோற்கடிக்க விரும்புகிறார்.
- காங்கிரஸ் தலைவர்களுக்கு பாரத் ஜோடா யாத்திரைக்கு நேரம் இருக்கிறது.
மும்பை :
எம்.ஐ.எம். கட்சியின் பொதுக்கூட்டம் தானே மாவட்டம் மும்ரா பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் ஓவைசி உத்தவ் தாக்கரே, சரத்பவார் போன்றவர்கள் தேவையான நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என கூறினார். மேலும் அவர் பேசியதாவது:-
அஜித்பவார், சுப்ரியா சுலே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிசால் தலைவராக முடியும் போது, உங்களால் ஏன் முடியாது?. எம்.ஐ.எம். கட்சி 65 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது கட்சி கூட்டங்களில் குறைவான மக்களே கலந்து கொள்வார்கள். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் நமது கட்சியினர் உள்ளனர். இந்த வளர்ச்சி தொடர வேண்டும். இளைஞர்கள் நிர்வாகத்திற்குள்ளும் நுழைய முயற்சி செய்ய வேண்டும். தேர்தல் மூலமாகவும் நிர்வாகத்துக்குள் செல்ல வேண்டும். இஸ்லாமியர்கள், தலித்துகளுக்காக போராட இளைஞர்கள் எம்.ஐ.எம். கட்சியை பலப்படுத்த வேண்டும்.
நமது மதத்தினருக்கு எதிரான சம்பவங்கள் நடந்த போது உத்தவ் தாக்கரே ஏன் அமைதியாக இருந்தார். சரத்பவார் பிரதமர் மோடியை தோற்கடிக்க விரும்புகிறார். அதற்காக அவருக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு தேவையான நேரத்தில் உதவி செய்ய அவர்கள் மறந்துவிடுவர். நமது விதி என, நம்மை அவர்கள் விட்டுவிடுவர். இது என்ன மாதிரியான மதச்சார்பின்மை. காங்கிரஸ் தலைவர்களுக்கு பாரத் ஜோடா யாத்திரைக்கு நேரம் இருக்கிறது. ஆனால் கும்பலால் கொலை செய்யப்படும் நமது மக்களை சந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. தங்களின் கோட்டை என நினைப்பவர்களுக்கு எதிராக எம்.ஐ.எம். பலமான வேட்பாளர்களை நிறுத்தும். உங்களால் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது.
எங்களுக்கு விசுவாசமாக உள்ளவர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் உங்களை தோற்கடிப்பேன். பண பலத்தால் எங்களை நீங்கள் வாங்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
- அப்போது அவர், உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்கள் என்றார்.
ஐதராபாத்:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மாநிலத்தை ஆட்சி செய்வது டிஆர்எஸ் என்ற கார், ஆனால் அதன் ஸ்டீயரிங் ஒவைசி கைகளில் உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தலாமே? - அமித்ஷாவுக்கு ஒவைசி கேள்வி
எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், தெலுங்கானா அரசு கோவில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை ஒப்புதல் அளித்து வருகிறது. ஆனால், ஸ்டீயரிங் என் கையில் உள்ளது என்று அவர் (அமித் ஷா) கூறுகிறார். ஸ்டீயரிங் என் கையில் இருந்தால், உங்களுக்கு ஏன் வலி ஏற்படுகிறது?
பழைய நகரில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்கிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடியுமா என தெரிவித்தார்.
- 454 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்
- இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்
பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
454 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம் என ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். நானும், எனது கட்சியின் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தோம் என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''மகளிர் இடஒதுக்கீடு மசோதா முஸ்லிம் மற்றும் ஓபிசி பெண்களுக்கான துணை ஒதுக்கீட்டை வழங்கவில்லை. ஓபிசி மற்றும் முஸ்லிம்களை ஒதுக்கீடு வரம்பில் சேர்க்கக்கோரி இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் போராடுகிறார்கள் என்பதை நாடு அறியும் வகையில் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமாக ஓபிசி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு போதுமான பிரதிநித்துவத்தை பாராளுமன்றம் மற்றும் சட்டசபை ஆகியவற்றில் இந்த மசோதா வழங்கவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், அரசு அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது?. நாட்டில் 7 சதவீத முஸ்லிம் பெண்கள் உள்ளனர். ஆனால், அவர்ளுடைய பிரநிதித்துவம் சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் 0.7 சதவீதம் மட்டுமே ஆகும்'' என்றார்.
- பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
- பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது
வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.
தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.
இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.
நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:
ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.
இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.
எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2018ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது
- காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் என்றார் ஒவைசி
இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து, இறுதி முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட உள்ளது.
தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 47 சதவீத வாக்குகளை பெற்று பாரத ராஷ்டிரிய சமிதி (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸால் 19 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 30 அன்று தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு அங்கு பாரதிய ராஷ்டிர சமிதியை தவிர, காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் களத்தில் உள்ளன. பிரசாரத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, வாக்கு சேகரிப்பின் போது ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானா தேர்தலில் ஐதராபாத்திற்கு உட்பட்ட 9 இடங்களுக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அங்குள்ள நம்பள்ளி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் பிரசாரம் செய்தார்.
அப்போது ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.
காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது:
பிறரை குற்றம் சாட்டும் முன் ராகுல் காந்தி கண்ணாடியில் தன்னை பார்த்து கொள்ள வேண்டும். 2019ல் 540 பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட தலைமையேற்ற ராகுல் காந்தியால் அக்கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் கிடைத்தது. இது ஏன்? நீங்கள் (ராகுல்) பிரதமர் மோடியிடம் இருந்து எவ்வளவு தொகையை பெற்றீர்கள்? மைனாரிட்டி ஆதரவாளர்கள் என சொல்லி கொண்டு, பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு காரணமான சிவசேனையுடன் காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் கூட்டணி வைத்திருக்கிறது. மைனாரிட்டிகளுக்கும் ஏழைகளுக்கும் குரலாக ஏ.ஐ.எம்.ஐ.எம். வளர்ச்சி பெற்று வருவதால் எங்களை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இங்க் தெளிக்கப்பட்ட வெறும் காகிதம்; அதில் ஒன்றுமில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமண திட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பலன் கிடைக்குமே தவிர இஸ்லாமியர்களுக்கு பலன் எதுவும் இல்லை. எங்கள் ஆடைகளையும், தொப்பிகளையும் நோக்கி காங்கிரஸார் விரல் நீட்டும் போது அன்பு குறித்து அவர்கள் பேசுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? தெலுங்கானாவில் அவர்கள் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவர் என்பதை மறக்காதீர்கள்.
இவ்வாறு ஒவைசி பேசினார்.
- இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது.
- தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதுடெல்லி:
18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்பட 279 பேர் நேற்று எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.
இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் வென்ற ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி மக்களவை எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.
ஒவைசி பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டதும், 'ஜெய் பாலஸ்தீனம்' என முழக்கமிட்டார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வரும் சூழலில் வாழ்க பாலஸ்தீனம் என முழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓவைசி, ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கூறினர். அதுபோல நானும் ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என கூறினேன். இது எப்படி நாட்டிற்கு எதிரானதாக இருக்கும்? அரசியல் சட்டத்தில் உள்ள விதியைக் காட்டுங்கள் என கேள்வி எழுப்பினார்.
அசாதுதீன் ஒவைசி பதவியேற்கச் செல்லும் முன் 'ஜெய் ஸ்ரீராம்' என பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"Jai Bhim, Jai Meem, Jai Telangana, Jai Palestine" @asadowaisi taking oath as MP in parliament pic.twitter.com/V4oveIK4HL
— Nabila Jamal (@nabilajamal_) June 25, 2024






