search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special session"

    • சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா?

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேறி உள்ளது.

    இந்த மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.

    சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று மாலையே சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு இன்றே அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதே மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை முன்மொழிந்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனுக்குடன் ஒப்புதல் கொடுக்காமல் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    கவர்னர் ரவி வசம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

    இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அதில் அவர் "அனுமதி இல்லை" என்று மட்டும் ஒற்றை வரியில் குறிப்பிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒப்புதல் அளிக்காததற்கான காரணத்தை கவர்னர் விரிவாக தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து தமிழக அரசும் பதிலடி நடவடிக்கையை மேற்கொள்ள நேற்று முன்தினம் தீர்மானித்தது. அதன்படி கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

    10 மசோதாக்களை மீண்டும் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்காக 18-ம் தேதி (இன்று) தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கி நடந்தது.

    முதலில் மறைந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பங்காரு அடிகளார், சங்கரய்யா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:

    பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 2 சட்ட முன்வடிவுகள், பதினாறாவது சட்ட மன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 8 சட்ட முன்வடிவுகள் கவர்னரின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நெடுநாட்கள் நிலுவையில் வைத்திருந்து கடந்த 13.11.2023 அன்று எவ்வித காரணமும் குறிப்பிடாமல், ஏற்பிசை அளிப்பதை நிறுத்திவைப்பதாக சட்ட முன்வடிவுகளில் குறிப்பிட்டு கவர்னர் அச்சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் கவர்னர் ஏற்பிசை அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்து சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல என இப்பேரவை கருதுகிறது.

    இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன் வரம்புரையின் கீழ் மேற்காணும் சட்டமுன் வடிவுகள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், கவர்னர் அதற்கு ஏற்பிசைவு அளித்திடவேண்டும் என்பதை அவை கவனத்தில் கொள்கிறது.

    ஏற்கனவே பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையில் 8.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 9.1.20 20-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2020-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்ட முன்வடிவு.

    9.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, 2020-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தச்) சட்டமுன்வடிவு ஆகியவற்றுடன் பதினாறாவது சட்டமன்றப் பேரவையில், 25.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவு

    5.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 10.5.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு.

    9.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 10.5.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச்) சட்ட முன்வடிவு.

    10.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு.

    18.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 19.10.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்ட முன்வடிவு.

    19.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்ட முன்வடிவு.

    19.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 21.4.2023-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் 20.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்ட முன்வடிவு ஆகிய சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 143-ன் கீழ் இப்பேரவை மறுஆய்வு செய்திட இம்மாமன்றம் தீர்மானிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 10 மசோதாக்களை அப்படியே மீண்டும் நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதன்மீது அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துப் பேசினார்கள்.

    அதைத் தொடர்ந்து கவர்னர் திருப்பி அனுப்பிய 10 சட்டமசோதாக்களையும் சட்டசபையில் மறுஆய்வு செய்ய தாக்கல் செய்யுமாறு அமைச்சர்களை சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

    அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் ஆகிய 6 அமைச்சர்கள் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மசோதாக்களை தனித்தனியாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். அதன்படி 10 மசோதாக்கள் மீண்டும் இன்று நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இன்றைய சபை நிகழ்ச்சிகள் முடிவடைந்தது.

    சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று மாலையே சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு இன்றே அனுப்பப்படும் என தெரிகிறது.

    சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதே மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

    • முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • தனித்தீர்மானம் மீது பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்து வருகிறது. இதில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். 10 சட்ட முன்வடிவுகளையும் ஆளுநர் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக கருதுகிறேன்.  மேலும், ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் சுப்ரீம் கோர்ட்டை அரசு நாடியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருவதற்குள் ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்டவேண்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும்.

    அவசர, அவசரமாக ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    • சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை முன்மொழிந்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை முன்மொழிந்தார்.

    அந்த மசோதாக்களின் விவரம் வருமாறு:

    சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா

    தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா

    • தமிழக கவர்னர் அவசர அவசரமாக 10 சட்ட மசோதாக்களை எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
    • தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது:

    எனது உடல்நலனை விட மாநில மக்களின் நலனே முக்கியம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை.

    தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி.

    ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அவசர அவசரமாக இந்த சட்ட மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.

    இந்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது.
    • மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

    தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, வெங்கடசாமி, பா.வேல்துரை ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

    அதன்பிறகு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    இதைத் தொடர்ந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர்.

    • மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, இந்த மசோதா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர்.

    இந்த மசோதா மீது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மசோதாவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறேன். இது நிறைவேற்றப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

    இரவில் மாநிலங்களவைக்கு வந்த பிரதமர் மோடி, இந்த மசோதா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மசோதாவுக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதன்மூலம் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

    இதையடுத்து, கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து பெண் எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அதன்பின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

    • 454 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்
    • இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்

    பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.

    454 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம் என ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். நானும், எனது கட்சியின் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தோம் என்றார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''மகளிர் இடஒதுக்கீடு மசோதா முஸ்லிம் மற்றும் ஓபிசி பெண்களுக்கான துணை ஒதுக்கீட்டை வழங்கவில்லை. ஓபிசி மற்றும் முஸ்லிம்களை ஒதுக்கீடு வரம்பில் சேர்க்கக்கோரி இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் போராடுகிறார்கள் என்பதை நாடு அறியும் வகையில் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம்.

    நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமாக ஓபிசி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு போதுமான பிரதிநித்துவத்தை பாராளுமன்றம் மற்றும் சட்டசபை ஆகியவற்றில் இந்த மசோதா வழங்கவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், அரசு அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது?. நாட்டில் 7 சதவீத முஸ்லிம் பெண்கள் உள்ளனர். ஆனால், அவர்ளுடைய பிரநிதித்துவம் சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் 0.7 சதவீதம் மட்டுமே ஆகும்'' என்றார்.

    • 2029-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என தகவல்
    • உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இன்றைய 3-வது நாள் முழுவதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மக்களவை தொடங்கியதும், பாராளுமன்றத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

    அப்போது அவர் "காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'' என்றார்.

    • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
    • இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்ய முடிவானது.

    புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று பிற்பகல் கூடின. அந்த கூட்டத்தில் முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.

    மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இந்நிலையில், மக்களவையில் மகளிர் இட ஓதுக்கீடு மசோதா குறித்து பேச தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி இன்று உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் இன்று புதிய கட்டிடத்துக்கு செல்கிறோம்.
    • இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரும் என்று உலகம் நம்புகிறது.

    புதுடெல்லி:

    பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் புதிய எதிர்காலத்திற்கான புதிய தொடக்கங்களை தொடங்க உள்ளோம். வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் இன்று புதிய கட்டிடத்துக்கு செல்கிறோம்.

    இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய பயணத்தை தொடங்குகிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். நமதுஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது. அரசியல் சாசனத்திற்கு பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் வடிவம் கொடுக்கப்பட்டது.

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவுகள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் எடுக்கப்பட்டு உள்ளன.

    முத்தலாக்கை எதிர்க்கும் சட்டம் இங்கிருந்து ஒற்றுமையாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முஸ்லீம் தாய்மார்கள் சகோதரிகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில் திருநங்கைகளுக்கு நீதி வழங்கும் சட்டத்தையும் பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு ஒளி மயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை நாங்கள் ஒற்றுமையாக நிறைவேற்றி உள்ளோம்.

    பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370-வது சட்டப்பிரிவு இந்த பாராளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது நமது அதிர்ஷ்டம். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு-காஷ்மிரில் அமைதி நிலவுகிறது.

    இன்று பாரதம் 5- வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. உலகின் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாட்டை மாற்ற வேண்டும். இங்குள்ள சிலர் அப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரும் என்று உலகம் நம்புகிறது.

    அனைத்து சட்டங்களும், பாராளுமன்றத்தில் நடக்கும் அனைத்து விவாதங்களும் நமது விருப்பங்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிபாட்டை இன்று மீண்டும் உறுதி படுத்துகின்றோம். என்னிடம் ஒரு ஆலோசனை இருக்கிறது. புதிய பாராளு மன்றத்துக்கு செல்லும் போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் கவுரவம் ஒருபோதும் குறைய கூடாது. இதை பழைய பாராளுமன்ற கட்டிடமாக விட்டு விடக்கூடாது. எனவே நான் கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் ஒப்புக்கொண்டால் இது சம்விதன் சதன் (அரசியல் சாசன மாளிகை) என்று அழைக்க பரிந்துரை செய்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பழைய கட்டிடத்திற்கு சம்விதான் சதன் என பெயர் சூட்ட பிரதமர் பரிந்துரை
    • காங்கிரஸ் தலைவர் சவுத்ரி இந்திய அரசியலமைப்பை கையில் ஏந்தியபடி புதிய கட்டிடத்திற்குள் நுழைந்தார்

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் இந்த கட்டிடம் திறக்கப்பட்டாலும் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக அங்கு பணிகள் நடக்க தொடங்கி உள்ளன.

    இதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், பழைய பாராளுமன்றத்தில் இருந்து புதிய பாராளுமன்றத்துக்கு இடமாற்றம் செய்தனர். மதியம் 12.55 மணிக்கு பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட புத்தக நகலை ஏந்தியபடி முன் வரிசையில் நடந்து செல்ல எம்.பி.க்கள் அனைவரும் தொடர்ந்து சென்றனர்.

    புதிய பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததும் முறைப்படி அலுவல்கள் தொடங்கின. பிற்பகல் 1.15 மணிக்கு மக்களவை அமர்வு தொடங்கியது. அதுபோல பிற்பகல் 2.15 மணிக்கு மாநிலங்களவை அமர்வு தொடங்கியது.

    இதன் மூலம் புதிய பாராளுமன்றத்தில் முறைப்படி பணிகள் தொடங்கி உள்ளன. இனி அனைத்து பாராளுமன்ற கூட்டங்களும் புதிய கட்டி டத்தில்தான் நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தி தினம் வட மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. இதை வெற்றி தரும் தினமாக வட மாநில மக்கள் கருதுகிறார்கள். இதை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று முதல் நாள் எம்.பி.க்கள் வருகையும், பூஜையும்தான் இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் முதல் நாள் கூட்டத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்பேரில்தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதாவை இன்றே தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முதல் கட்ட பணிகள் நடந்தன. 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2 ஆண்டுகளில் மிக குறுகிய காலத்தில் இந்த பிரமாண்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 600 சதுரடி கொண்டது. 3 நுழைவு வாயில்களுடன் கட்டப்பட்டுள்ளது. உள் அலங்காரங்கள் நிறைய செய்யப்பட்டு இருப்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கண்கவர் வகையில் அமைந்துள்ளது.

    ×