என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை.
    • தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நெல்லையில் கடந்த ஜூலை 27-ந்தேதி கவின் எனும் இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கவினை படுகொலை செய்த சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தையும் ஜூலை 30-ந்தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    ஆனால் சுர்ஜித்தின் தாயார் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதோடு கொலை செய்யப்பட்ட கவினை ஏற்கனவே காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மிரட்டியதாக கவினின் தந்தை புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. வழக்கை விசாரிக்கும் காவல் கண்காணிப்பாளரும் சுர்ஜித்தின் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

    ஆகவே நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பின் கீழ் சி.பி.சி.ஐ.டி. வழக்கை விசாரிக்கவும், கவினின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும், ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, ஜூலை 25-ந்தேதி 2.30 மணிக்கு கவின் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு புகார் அளிக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு சுர்ஜித் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 செல்போன்கள், 7 சி.சி.டி.வி. காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    எஸ்.சி. எஸ்.டி பிரிவின் கீழ் முன்பு ரூ.8.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 6 லட்ச ரூபாய் கவினின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விசாரணை முறையாக சென்று கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.சி.ஐ.டி. தரப்பில், 2 மாத கால அவகாசம் கோரப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினைய் காஸ், சுர்ஜித்தின் தாயார் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் ஏற்கனவே சாதி ரீதியாக செயல்படுவதாக புகார் எழுந்ததால், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது புகார் வைக்கப்பட்ட அன்றே அவருக்கு ஆதரவாக தகவல் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட இடத்தில் மாவட்ட கலெக்டரும், ஆணையரும் ஆய்வு செய்யவில்லை. ஆகவே மாவட்ட நீதிபதி விசாரணையை கண்காணிக்க உத்தரவிட வேண்டும். ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், இதில் அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை. சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணை குறித்து எந்த புகாரும் இல்லை என்பதால், மனுதாரர் தன்னிடம் உள்ள விபரங்களை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கலாம். தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது. ஆகவே சி.பி.சி. ஐ.டி., விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை 8 வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • சட்டமன்றத்தில் கூறியது போல அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும்.
    • மக்கள், விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமாக செல்லவில்லை.

    மதுரை:

    மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் வேறு விவசாயத்திற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் கூறியது போல அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதே ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தான். மக்கள், விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமாக செல்லவில்லை.

    சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. சட்டமன்றத்தில் சாதி ஆணவக்கொலைகள் குறித்து விவாதித்த பொழுது தற்போதுள்ள சட்டங்களை போதுமானது. புதிய சட்டங்கள் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்,

    ஆனால், தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறக் கூடிய சாதி ஆணவக் கொலைகள் தமிழகத்திற்கு தனி சட்டம் தேவை என்பதை தான் வலிறுத்துகிறது. சாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் வண்ணம் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வற்புறுத்தி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளோம்" என கூறினார்.

    • சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.
    • பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லும் நடைபெறுவதாக தெரிகிறது.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நெல்லையில் நடந்த சம்பவம் போன்று தமிழகத்தில் பல பகுதிகள் மற்றும் மாநிலங்களிலும் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் வலியுறுத்தி வருகிறோம். பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியும், உள்துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதி உள்ளோம்.

    தேசிய அளவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கின்ற இந்த கொடூரமான படுகொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் பரவலாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு பொருட்படுத்தவில்லை.

    உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் இதுபோன்ற கொலைகளை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை வலியுறுத்தி தீர்ப்பளித்துள்ளது. சட்டபேரவையில் அதனை நிறைவேற்றும் வகையில் அதற்குரிய விதிகளை பயன்படுத்த வேண்டும். அதில் காவல்துறையினருக்கு வழிகாட்டுதலை வழங்கி சில நெறிமுறைகளை வரையறுத்துள்ளது. 2018ல் அந்தத் தீர்ப்பையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினரும் நடைமுறைபடுத்துவதில்லை என்பது வேதனை அளிக்கிறது.

    இச்சூழலில் இச்சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கும் பொறுப்பு, அதிகாரம் உள்ளது. முதலமைச்சர் இது குறித்து ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சட்டம் இயற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். இதை வலியுறுத்தி வருகிற 9, 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். கிங்டம் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக கூறுகிறார்கள். இதுவரை நான் அந்த படத்தை பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன்.

    பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லும் நடைபெறுவதாக தெரிகிறது. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, வெளி மாநிலங்கள் உள்ளவர்களுக்கு பீகார் மாநிலத்தில் வாக்காளர்களாக சேர்த்து அவர்களை வாக்களிக்க செய்வது கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்திருக்கிறார்கள்.

    அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இந்தியா கூட்டணி உள்ள கட்சிகள் யாவும் கூறி உள்ளது.

    இதனை பாராளுமன்றத்தில் குறிப்பாக விவாதிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. ஜூலை 21-ந் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இதுபற்றி விவாதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தும் ஆளும்கட்சி அதை ஏற்க மறுக்கிறது. அந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகிறோம்.

    அவர்கள் அதனை ஏன் விவாதிக்க தயங்குகின்றனர். தமிழகத்திலும் அதுபோன்று செய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதறுகிறது.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறது. அது சுதந்திரமாக இயங்கவில்லை. பா.ஜ.க.வின் முழுமையான கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் சிக்கி உள்ளது.

    பா.ஜ.க. எந்த தில்லு முல்லையும் செய்வார்கள். பீகாரில் இதை ஒரு பரிச்சாத்தமாக வெளிப்படையாக செய்கிறார்கள்.

    சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற ஒரு நடவடிக்கையாக இது இருக்கிறது. டெல்லியில் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி.யின் கழுத்தில் இருந்த செயினை பதட்டம் இல்லாமல் ஒருவர் பறித்து சென்று இருக்கிறார்.

    இது குறித்து புகார் கொடுத்தும் அதனை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. தலைநகர் புதுடெல்லியில் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது நாட்டின் மீதான நன்மதிப்பை உலக அரங்கில் வெளிநாடுகளில் வரக்கூடியவர்களிடையே களங்கத்தை உருவாக்க கூடியதாக இருக்கிறது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகள் இணைந்து இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு, சிதறப்போகிறார்கள் என்ற தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் அணியில் இருந்தவர்களே வெளியேறுகிறார்கள் என்றால் அந்த கூட்டணியின் உறுதிப்பாடு எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    வட மாநிலத்தவர்கள் லட்சக்கணக்கில் தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிற சூழலில் அவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளது.

    இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
    • ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

    தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அறப்போராட்டத்தையும், 30 ஆண்டுகாலம் மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் மறப் போராட்டத்தையும் நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.

    இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • அன்புமணி தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று நிறைவு செய்கிறார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் டாக்டர் அன்புமணி இடையே பா.ம.க.வில் கட்சி அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

    இரு தரப்பினரும் பொதுக்குழுவை கூட்டப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் பா.ம.க.வை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    டாக்டர் ராமதாஸ் வருகிற 17-ந்தேதி பட்டானூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் அன்புமணி தரப்பில் மாமல்லபுரத்தில் வருகிற 9-ந்தேதி பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் டாக்டர் அன்புமணி தரப்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து டாக்டர் ராமதாசும் பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஆதரவு திரட்ட தொடங்கி இருக்கிறார்.

    இதற்காக டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதங்களை அனுப்பி வருகிறார். டாக்டர் ராமதாஸ் கையெழுத்துடன், கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர் ஆகியோரின் பெயரில் இந்த அழைப்பு கடிதம் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று நிறைவு செய்கிறார். இதையடுத்து அவரும் பா.ம.க. நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்ட தொடங்கி உள்ளார்.

    இதனால் பா.ம.க. நிர்வாகிகள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர். யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பா.ம.க.வில் உள்ள பிரச்சனைகள் விரைவில் சரியாகும் என்று கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இது தொடர்பாக கும்பகோணத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூறியதாவது:-

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடி முடி வெடுக்கும்.

    அதன் முடிவுகளை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிவிப்பார். வழக்கமாக டிசம்பர் மாதம் கடைசி வாரம் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும். தேவைப்படும்போது பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.

    தற்போது பா.ம.க.வில் நிலவும் சின்ன சின்ன சலசலப்புகள் அனைவருக்கும் தெரியும். அவை அனைத்தும் மிக விரைவில் நல்ல முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது.
    • அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்?

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க., அ.தி.மு.க.வை பேய் பிசாசு என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    * பிசாசு வேண்டாம் என்று பேயை 5 ஆண்டுகள் கட்டி கொள்கின்றனர்.

    * அ.தி.மு.க. வைத்து தி.மு.க.வை எப்படி ஒழிக்க முடியும்?

    * தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது.

    * மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும், கூட்டணியால் அல்ல...

    * அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது.

    * அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க., அ.தி.மு.க. பயணிக்கிறது.

    * அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்?

    * விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது.

    * திரை வெளிச்சத்தில் அவ்வப்போது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருப்பார்கள் என்றார். 

    • திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
    • டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி திவ்யா படித்து வந்தார்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.

    திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி, 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
    • துரோகத்தை எதிர்த்து போராடும் தமிழக மக்களுடன் இ.பி.எஸ். துணை நிற்கவில்லை.

    இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தமிழ்நாட்டிற்கு எதிராக துரோகம் செய்யும் கட்சியாக பா.ஜ.க. செயல்படுகிறது.

    * தமிழக மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.

    * துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க.வுடன் அணி சேர்வது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாகும்.

    * துரோகத்தை எதிர்த்து போராடும் தமிழக மக்களுடன் இ.பி.எஸ். துணை நிற்கவில்லை.

    * தமிழக மக்களை காட்டி கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முகிலனின் சகோதரி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
    • அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 2-வது நாளாக இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.

    முகிலன் காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் கூறிய நிலையில் அதிர்ந்து போன அவர்கள் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதே பள்ளியில் மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

    இதனை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். பள்ளியில் உள்ள கிணற்றின் மேல் பகுதி இரும்பு கம்பியில் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு முகிலன் அதில் விழுந்தான் என பெற்றோர் கேள்வி எழுப்பினர்.

    இதற்கிடையில், முகிலனின் சகோதரி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும், பள்ளியை மூட வேண்டும். பாதிரியாரை கைது செய்ய வேண்டும். தனது மாணவன் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து சாலை மறியல், போலீஸ் நிலையம் முற்றுகை, ரெயில் மறியல் என பல போராட்டங்களை நடத்தினர்.

    நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கூறியதன்பேரில் முகிலனுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர்.

    இதன் காரணமாக நேற்று பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டது.

    இந்த நிலையில் 3-வது நாளான இன்று பாதிரியாரை கைது செய்து பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என கூறி முகிலனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, அவர்களிடம் டி.ஐ.ஜி மற்றும் எஸ்பி பாதிரியார், வார்டன் மற்றும் சம்பந்தப்பட்ட சிலரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக இன்று உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 2-வது நாளாக இன்றும் பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் இன்று முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வை-பை மூலம் சட்டவிரோதமாக ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராமதாஸ் இல்லத்தில் வைபை மற்றும் சிசிடிவி பொருத்தப்பட்டது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

    இதையடுத்து ராமதாஸ், தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான். தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் வை-பை மூலம் சட்டவிரோதமாக ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராமதாஸ் இல்லத்தில் வைபை மற்றும் சிசிடிவி பொருத்தப்பட்டது. அன்புமணி மேலாளர் சசிகுமார் மூலமாகவே ராமதாஸ் இல்லத்தில் வைபை, சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக ராமதாசின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    • விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார்.
    • விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2538 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தலைமை தாங்கி 2538 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். அரசு முதன்மை செயலாளர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசுகிறார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நகராட்சி நிர்வாக துறையில் 2538 இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டோன்மென்ட் பட்ரோடு அண்ணா சிலை அருகே நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கழக நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் பலர் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர்.
    • சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரிய வருகிறது.

    திருப்பூர்:

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆயத்தமாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி, தேசியக்கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் வந்துள்ளது. ஆண்டுதோறும் தேசிய கொடிகளை தயாரித்து வருகிறோம். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தேசிய கொடிகளை இப்போது விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம்.

    ஆர்டர்களின் பேரில் பெற்ற கொடிகள் தயாரிப்பு பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. சில பின்னலாடை நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. பெண்கள் பலர் வீடுகளிலேயே வைத்து தயாரிக்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பலர் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர். முன்பெல்லாம் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் தேசிய கொடியை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது பலர் புதிதாகவே வாங்கி ஏற்றுகின்றனர். இதன் மூலம் எங்களுக்கு லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் கிடைக்கிறது.

    வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரிய வருகிறது.

    10க்கு 16 இன்ச், 18க்கு 22 இன்ச், 20க்கு 26இன்ச், 20க்கு 40 இன்ச், 40க்கு 60இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.2 முதல் ரூ.300 வரை கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது. ஐதராபாத்தில் பிரிண்டிங் செய்து, அங்கிருந்து கொண்டு வந்து வெட்டி தைக்கிறோம். தற்போது தேசியக்கொடி தைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அனைவரும் 10-ந்தேதிக்குள் தைத்துத்தர கேட்டிருப்பதால் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன என்றார். 

    ×