என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
    • ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

    விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.

    இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

    இந்நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

    திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியலால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
    • இபிஎஸ் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு எம்.எல்.ஏ. பதவியை விட முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவன் என்பதையே பெருமையாகதான் நினைக்கிறேன். அதில் எனக்கு அக மகிழ்ச்சி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யக்கூடியவர். இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் நாம் மன்னித்துவிடலாம். ஆனால், நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    நிச்சயம் அதற்கான பலனை அவர் வாழும் காலத்திலேயே அனுபவிப்பார். முக்குலத்தோர் சமூதாயத்திற்காக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். அப்போதெல்லாம் செவி சாய்க்காத அவருக்கு இப்போது எங்கிருந்து தோன்றுகிறது.

    எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும், அடிநலையில் இருக்கக்கூடிய மக்கள் வரை போய் சேர்ந்துவிட்டது. அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தென் மாவட்டங்களில் நீங்கறே வந்து சிலையாக நின்றாலும், உங்களுக்கு வாக்கு கிடைக்காது.

    தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழிப்போடும் செயல். என்னை பொறுத்தவரையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகம் யார் ஒருவரும் பிரிக்கணும், அழிக்கணும் என்கிற வேலையில் இறங்கத் தேவையில்லை.

    அதிமுக-வை வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்கத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியே அதை அழித்து முடித்து விடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு.
    • பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியம்.

    TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வு பெற TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரிதன்யா தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
    • வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பயனும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கவினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை.
    • அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை.

    கோவை:

    பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (9-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:- பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம்.

    மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே போராட்டம்.
    • போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    சென்னை கொருக்குப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டில் உண்ணாவிரதம் இருந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதனால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    போலீசார் அராஜகம் ஒழிக என தூய்மைப் பணியாளர்கள் முழக்கம் நடத்தி வருகின்றனர்.

    • ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
    • ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.

    தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.க. ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தைவிட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    வேலூரை சேர்ந்ததாக கூறப்படும் இளம்பெண் தனது காதலனுடன் ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் பண்ணை பகுதிக்கு நேற்று இரவு வந்ததாக கூறப்படுகிறது.

    அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அவரகரையை சேர்ந்த 3 பேர் காதலர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் நகை, பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து இளம்பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.

    பின்னர் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக அந்த இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது.
    • தற்போது தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று இரண்டாவது முறையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. வார தொடக்கநாளான இன்று காலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து காலையில் விலை குறைந்த நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10, 060-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    காலையில் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் வழக்கம்போல் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது நடுத்தர மக்கள் மற்றும் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

    • 45 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் பேசுவதற்கு அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
    • ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி அளிக்கவில்லை.

    திருச்சி:

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

    ஏற்கனவே விக்கிரவாண்டி, மதுரை ஆகிய இடங்களில் இரண்டு மாநாடுகளை நடத்தி அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

    இதை தொடர்ந்து மக்களை நேரடியாக சந்திக்கும் அவரது பிரசார சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இருந்து வருகிற 13-ந்தேதி தொடங்கி அதே நாளில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி வருகை தந்தார். பின்னர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து வருகிற 13-ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலைய ரவுண்டானா, மேலபுதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை ஆகிய இடங்கள் வழியாக ரோடு ஷோ செல்வதற்கும், சத்திரம் பஸ் நிலையத்தில் சிறப்புரையாற்றுவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என மனு கொடுத்தார்.

    ஆனால் இதற்கு போலீஸ் தரப்பில் திருச்சி மாநகரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என அனுமதிக்கப்பட்ட 45 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் பேசுவதற்கு அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி அளிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திருச்சி மரக்கடை பகுதிக்கு சென்று விஜய் பேசுவதற்கான இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு திருச்சி வருகின்றனர். பின்னர் திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து திருத்தப்பட்ட மனுவை அளிக்க உள்ளனர்.

    • தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள்.
    • உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்ததுடன் அங்குள்ள தமிழர்களை சந்தித்தும் கலந்துரையாடினார். இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

    ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக இன்று காலை 8.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் திரளாக வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    அதன் பிறகு விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒருவார காலமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பயணத்தை நான் மேற்கொண்டேன். மனநிறைவோடு நான் திரும்பி இருக்கிறேன்.

    இந்த பயணத்தை பொறுத்தவரை மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்து இருக்கிறது. மொத்தம் 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள். உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    ஏற்கனவே இருக்கக் கூடிய 17 நிறுவனங்களும், மற்ற மாநிலங்களை நோக்கி போகாமல், நம்முடைய மாநிலத்திலேயே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

    எனக்கு முன்னாடியே நான் புறப்படுவதற்கு 4, 5 நாட்களுக்கு முன்னாடியே என்னுடைய ஒட்டு மொத்த பயணத்தை முறைப்படுத்துவதற்காக மிக சிறப்பாக ஒருங்கிணைத்து, அந்த பணியை வெற்றிக்கரமாக நடத்திய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதே போல் அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

    தொழில்துறை அமைச்சரை பொறுத்தவரை, ஒரு துடிப்பான தொழில்துறை அமைச்சராக ராஜா இந்த பயணத்தின் மூலமாக நிரூபித்து உள்ளார்.

    கடந்த 4½ ஆண்டு காலத்தில் மேற்கொண்டிருக்கக் கூடிய எனது பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

    இந்த வெளிநாட்டு பயணத்தில்தான், மிக அதிக அளவிலான, முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இது ரொம்ப வெற்றிகரமான பயணம். பெருமையான பயணமாகவும் இது அமைந்தது.

    அது ஏன் என்றால், உங்களுக்கே தெரியும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான, உலகின் முதன்மையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்தது தான் அந்த பெருமைக்கு காரணம்.

    அதுமட்டுமல்ல சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கையும், நாம் கடந்து வந்த பாதையையும் இனி அடைய வேண்டிய இலக்கையும் விளக்கமாக நான் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறேன்.

    அதோட அயலக தமிழர்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசியது, சோயாஸ் பல்கலைக்கழக மாணவர்களிடம் திராவிட மாடல் பற்றி பேசியது, லண்டனில் இருக்கக் கூடிய பொதுவுடைமை தத்துவ மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடம், சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை, ஜி.யு.போப் நினைவிடம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று, பல பெருமைகளோடு நான் திரும்பி இருக்கிறேன்.

    முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சராக மட்டுமல்ல, பெரியாரின் பேரனாக, திராவிட இயக்கத்தை சார்ந்த தலைவராக, சுயமரியாதை உள்ள ஒரு தமிழனாக இந்த பயணம் எல்லா வகையிலும் எனக்கு தனிப்பட்ட வகையிலும் மறக்க முடியாத பயணமாக அமைந்து உள்ளது.

    சிலரால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் எதுக்கு இந்த வெளிநாட்டு பயணம். இங்கிருக்கும் நிறுவனங்களை சந்தித்து பேசினால் போதாதா? என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு புலம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில், நிறைய ஜெர்மன் கம்பெனி வந்திருந்தார்கள்.

    அப்போது நம் தமிழ்நாட்டை பற்றி எடுத்து சொன்னதும் பல முதலீட்டாளர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? தமிழ்நாட்டில் இவ்வளவு கட்டமைப்பு இருக்கிறது என்று இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் தெரியுது. இதுக்கு முன்னாடி வேறு ஒரு மாநிலம்தான் தங்களது பொட்டன்ஷியலை பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    இனி நிச்சயம் தமிழ்நாட்டை நோக்கி நிறைய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.

    அடுத்து ஜெர்மனியில் என்.ஆர்.டபிள்யு. மினிஸ்டர் பிரசிடெண்ட் ஹன்ரிக் ஹிஸ்ட் அவர்களை சந்தித்து பேசினேன். அவரும் அதையேதான் சொன்னார்.

    இப்படியான தொடர்புகளை ஏற்படுத்தவும், பார்ட்னர்ஷிப் உருவாக்கவும்தான் வெளிநாடுகளுக்கு முதலமைச்சரான நானே நேரில் போனேன்.

    ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர் இன்னொரு நாட்டோட மாநிலத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவரை சந்திக்கும் போது பிசினசை தாண்டி இந்த உறவு வலிமையாகிறது. அதுதான் முக்கியம். அப்படித்தான் ஹென்றிக் ஹிஸ்ட், இங்கிலாந்து அமைச்சர் கேசரின் ஆகியோருடைய சந்திப்பு இருந்தது.

    அதே போல்தான் நீங்கள் கேட்கிற அடுத்த கேள்விக்கான பதில் என்னவென்றால், ஏற்கனவே தமிழ்நாட்டில் நிறுவனங்கள் இருந்தாலும், அவங்க புதிய திட்டங்களை இங்கேதான் தொடங்க வேண்டும். விரிவுப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

    அவர்களுடைய புதிய முதலீடுகளை தமிழ்நாட்டிலேயே மேற்கொள்வதாக உறுதி செய்ய வேண்டிய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிற போது தான் அதை அவர்கள் உறுதி செய்தார்கள். அதுக்காக இந்த மாதிரி பயணங்கள் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல தமிழ்நாடு கொண்டிருக்கக் கூடிய மனிதவளம், உள்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் இதைப் பற்றி முதலமைச்சராக இருக்கக் கூடிய நானே எடுத்துச் சொல்கிறேன்.

    இப்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, இன்னும் பல முதலீடுகளும், நிறுவனங்களும் இந்த சந்திப்பால் நிச்சயம் தமிழ்நாட்டுக்கு வரும் என்று நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார்கள்.

    உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் இன்று 8-ந்தேதி நான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து இன்னும் 2 நாளில் 11-ந்தேதி ஓசூருக்கு போகிறேன். அங்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, ஆட்டமெட்டல்லேன் அமைப்பையும், பணியாளர் தங்குமிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்து ரூ.1100 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன்.

    அதே மாதிரி ஏற்கனவே தூத்துக்குடியில் நடத்தியது மாதிரி ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த போகிறோம். அங்கேயும் பல ஆயிரம் கோடி முதலீடு வர இருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்களது வெளிநாட்டு பயணங்களும், இங்கே மேற்கொள்ளும் பயணங்களும் எப்போதும் நிற்காது. இது தொடரும், தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வந்ததும் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் வழிநெடுக கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். கத்திப்பாரா ரவுண்டானா வரை நிர்வாகிகள் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    • பலமுறை டி.டி.வி. தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
    • தி.மு.க.வுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லையில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களை தனது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிறைய கிரகணங்கள் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் வேண்டும், கிரகணம் விரைவில் நடைபெறும். அகில இந்திய தலைமை என்ன கூறுகிறதோ, அதைத்தான் நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

    அ.தி.மு.க. கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. தி.மு.க.வுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அ.தி.மு.க. கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். தோல்வியையே பிறருக்கு கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போல. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வியைத் வழங்குவோம்.

    2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் மேலே வந்ததில் டி.டி.வி. தினகரனுக்கு முக்கிய பங்கு உண்டு. 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. ஒரு கூட்டணியாக இருந்தது. அப்பொழுது டி.டி.வி. தினகரன் கூட்டணியில் இல்லை. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார்.

    2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணியோடு இருந்து போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றோம்.

    பாட்டாளி மக்கள் கட்சியும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன்.

    பலமுறை டி.டி.வி. தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு விளங்கவில்லை.

    கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளோம். விரைவில் அதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய நபர். சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரும் தற்போது ஜாதி தலைவராக மாற்றப்பட்டு விட்டார்கள். இப்போது அந்த சர்ச்சை வேண்டாம். ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது செங்கோட்டையனை பா.ஜ.க.வுக்கு அழைப்பது நாகரீகமாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×