என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொளத்தூர் தொகுதியிலும் வாக்குத்திருட்டு நடந்துள்ளது- நயினார் நாகேந்திரன்
- பலமுறை டி.டி.வி. தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
- தி.மு.க.வுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும்.
நெல்லை:
நெல்லையில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களை தனது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நிறைய கிரகணங்கள் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் வேண்டும், கிரகணம் விரைவில் நடைபெறும். அகில இந்திய தலைமை என்ன கூறுகிறதோ, அதைத்தான் நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
அ.தி.மு.க. கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. தி.மு.க.வுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அ.தி.மு.க. கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். தோல்வியையே பிறருக்கு கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போல. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வியைத் வழங்குவோம்.
2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் மேலே வந்ததில் டி.டி.வி. தினகரனுக்கு முக்கிய பங்கு உண்டு. 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. ஒரு கூட்டணியாக இருந்தது. அப்பொழுது டி.டி.வி. தினகரன் கூட்டணியில் இல்லை. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணியோடு இருந்து போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றோம்.
பாட்டாளி மக்கள் கட்சியும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன்.
பலமுறை டி.டி.வி. தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு விளங்கவில்லை.
கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளோம். விரைவில் அதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய நபர். சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரும் தற்போது ஜாதி தலைவராக மாற்றப்பட்டு விட்டார்கள். இப்போது அந்த சர்ச்சை வேண்டாம். ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது செங்கோட்டையனை பா.ஜ.க.வுக்கு அழைப்பது நாகரீகமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.






