என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி அம்பிகா சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகில் புதுப்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்பிகாசமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ராம பிரானும், அகத்திய மாமுனிவரும் வழிபட்ட கோவிலாகும். இக்கோவிலில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்ய வந்தார்.

    கோவில் நிர்வாகி வி.ஆர்.சிவராமன் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக திரண்டு பூரண கும்பம் மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். வருவாய் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கவர்னர் தரையில் அமர்ந்தபடி பயபக்தியுடன் கண்டு களித்தார். அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் முக்கிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தை கவர்னர் தொடங்கி வைத்து அந்த இணையதளம் மூலம் கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். 3 மணி நேரம் இந்த கோவிலில் கவர்னர் இருந்தார். அர்ச்சனையும் செய்தார்.

    விவேகானந்தா பள்ளி மாணவிகள் 108 பேர் சிவனின் பெருமையை விளக்கும் நாட்டிய நடனம் ஆடினார்கள். தொடர்ந்து ருத்ர தாண்டவ நிகழ்ச்சியும் நடந்தது.

    • இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    • ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

    சென்னை:

    சூடோபெட்ரின் என்னும் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி டெல்லியில் கைது செய்தனர்.

    அவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்குகள் உள்பட பல முதல் தகவல் அறிக்கைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியர்கள், சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜாபர் சாதிக் பணம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை கண்காணித்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை சினிமா, ஓட்டல் தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்ததும், அரசிய லில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்காக பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    ரூ.7 லட்சம் பணத்தை அவர் ஒரு அரசியல் பிரமுகருக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என 2 தவணைகளில் கொடுத்துள்ளார்.

    மேலும் இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாபர் சாதிக்கை அரசியலில் உயர்ந்த பதவிக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்து அந்த பிரமுகர் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அதனால் அவர் ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரித்து இருக்கிறார். அவர் சினிமா தயாரிப்பாளராக மாற யார் யார் உறுதுணையாக இருந்துள்ளனர் என்கிற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

    திரையுலகில் ஜொலிக்க ஜாபர் சாதிக் பல வகைகளில் பணம் வாரி வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் ஒருவரிடம் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. மேலும் நடிகர்கள் சிலரும் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் ஜாபர் சாதிக் கலந்து கொண்டுள்ளார்.

    அடுத்த கட்டமாக போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள், செல்போன் எண் ஆகியவற்றை வைத்து எந்தெந்த வகையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முறைப்படி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கொடுத்து உள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் மூலம் பணம் வாங்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை அடுத்தடுத்த நாட்களில் இன்னும் வேகம் எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.
    • வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன் பட்டியில் நடந்த தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று விஜய பிரபாகரன் பேசியதாவது:-

    தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து பணத்தை சுரண்டி வளமாக வாழ்ந்து வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெற நாம் கடுமையாக உழைப்போம்.

    பொருளாதார வசதி இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம். அமைச்சர் உதயநிதியின் தாத்தா முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை முதலமைச்சராக இருந்தவர்.


    உதயநிதியின் தந்தை ஸ்டாலின் முன்னாள் மேயர், தற்போதைய முதலமைச்சராக உள்ளார். அண்ணாமலைக்கு பா.ஜ.க. கட்சி உள்ளது. ஆனால் இது போன்ற எந்த பின்புலமும் இல்லாமல் விஜயகாந்த் மக்களை நம்பியே தேர்தலை சந்தித்தார். அதே போல் வருகிற தேர்தலிலும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் களம் காண்போம். நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். தயவு செய்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். நான் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு உள்ளது. தேனி தொகுதி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். யார் போட்டியிடுவார் என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய பிரபாகரன் மைக்கை எடுத்து பேசத் தொடங்கியதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியில் சிறிது நேரம் அருகில் இருந்த நிர்வாகிகளிடம் இந்த நேரத்தில் மின் தடை ஏற்படுமா எனக் கேட்டார். மின் தடை ஏற்படாது என்று தொண்டர்கள் தெரிவித்தனர். நான் பேச ஆரம்பிக்கும் நேரத்தை அறிந்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இது போன்ற பல இடையூறுகள் ஏற்படுத்தினாலும் நாம் சோர்ந்து விடக்கூடாது என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    • மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.

    இதே போல் ஆர்.கே.வி. சாலையில் இருந்து மணிக்கூண்டு வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பிருந்தா வீதி, வேலா புக்ஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஜவுளி கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

    இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இதையடுத்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    கச்சேரி வீதி, முத்துரங்கம் வீதி, சிவா சண்முகம் வீதி, அண்ணாச்சி வீதி, நேதாஜி வீதி, மணிக்கூண்டு, கொங்கலம்மன் கோவில் போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பாஸ்கர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உடன் உள்ளனர். ஒருசில நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளன.
    • இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமராக நரேந்திர மோடி பதவி யேற்றது முதல் அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் சுயேட்சையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    தேர்தல் தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிற நிலையில், எதிர்பாராத விதமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளன.


    இன்றைய தேர்தல் நடைமுறை என்பது சமநிலைத்தன்மை இல்லாததாக இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியாக கூறுகிறார். இதன்மூலம், ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்துக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.

    சர்வாதிகார அரசியலை செய்து வருகிற மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்றுவதே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு தலைவர் ராகுல் காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.
    • பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    சேலம்:

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பாராளுமன்ற தேர்தல் களம் நாடு முழுவதும் களை கட்டி உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசி வருகிறார்.

    இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்தில் 2 முறை தமிழகத்துக்கு வந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். பின்னர் மதுரைக்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இரவில் மதுரையில் தங்கிய அவர் மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த விழாவில் குலசேகர பட்டணம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் கடந்த 4-ந் தேதி 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது.

    இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதி வாக்காளர்களிடம் பிரதமர் மோடி பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர் காலை 11 மணி அளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்காளர்கள் மத்தியில் பேசுகிறார்.

    இதையொட்டி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். பிரதமர் மோடிக்கு பல்லாயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி சேலம் வருகையையொட்டி பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தொண்டர்கள் அமருவதற்கான இடமும், வாகனம் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சேலம் கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி பேச உள்ள மேடை அமையும் இடத்தில் நேற்று பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே நேற்று சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணை செயலாளருமான கே.பி.ராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்முருகன், சேலம் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் சேலத்திற்கு வருகை தரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது குறித்தும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.

    சேலம் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி 16-ந்தேதி கன்னியாகுமரி செல்கிறார். அவர் அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அவர் அந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

    பிரதமர் மோடி பேசுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களின் போதும், கன்னியாகுமரியில் இருந்து தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களை தொடங்கினார்.

    இந்த முறை பாராளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்த வாய்ப்பு உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் இணைந்து களம் இறங்கியது. தற்போது இந்த கட்சிகள் தனித்து களம் இறங்க உள்ளன.

    இந்த தொகுதிக்கான பா.ஜனதா வேட்பாளரையும் 16-ந்தேதி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்து ஆதரவு திரட்ட உள்ளார்.

    பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பிரதமர் மோடி வருகிற 18-ந் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் கோவையில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    இந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மைய பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். கோவையில் ஏற்கனவே கொடிசியா மைதானத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அங்கு ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் குவியும் வகையில் இட வசதி உள்ளன. இதனால் அந்த இடத்திலேயே இந்த முறையும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    கோவை பாராளுமன்ற தொகுதியை வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பா.ஜ.க. பார்க்கிறது. இதனால் இந்த தொகுதியில் வெற்றி பெறும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்களை பங்கேற்க செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது பிரதமர் வருகை தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்குவோம். பிரதமர் கேரளாவில் இருந்து கோவை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருவர்.
    • பூண்டி மலைஅடி வாரத்திலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்து உள்ளது. அடுத்தடுத்த 6 மலைத்தொடர்களை கடந்து சென்றால் தான், 7-வது மலையின் உச்சியில் வீற்றிருக்கும் சுயம்பு வடிவ சிவபெருமானை தரிசிக்க முடியும்.

    வெள்ளிங்கிரி மலைக்கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்ய வனத்துறையினர் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அனுமதி வழங்குவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி கிரிவலம் சென்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருவர்.

    இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மூங்கில் தடிகளின் உதவியுடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளிங்கிரி மலையேறி சென்று உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    அதிலும் குறிப்பாக மாசி மாத அமாவாசையை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலை உச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது மலர் அலங்காரத்துடன் காட்சியளித்த வெள்ளிங்கிரி ஆண்டவரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பூண்டி மலைஅடி வாரத்திலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே கோவை வீரபாண்டி லட்சுமி நகரை சேர்ந்த கிரண் (வயது 22) என்பவர் நண்பர்கள் சிலருடன் வந்து மலையேறினார். அப்போது 5-வது மலை ஓட்டன் சமாதி அருகே சென்றபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பூண்டி அடிவார பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த கிரணை மீட்டு அடிவாரம் கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிரண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம்.

    தஞ்சாவூா்:

    பிரதமர் மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், புதிய குட்ஷெட் யார்டுகள் போன்ற ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார்.

    இதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள 44 ரெயில் நிலையங்களில் 60 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ரூ.7 கோடி மதிப்பில் 2 குட்ஷெட் யார்டுகள் மற்றும் திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள மருந்தகமும் அடங்கும்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது. இதுவரை 28.5 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

    திருத்துறைப்பூண்டி குட்ஷெட் யார்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கி இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன.

    வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம். மேலும் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இத்தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    • மணி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த வடமதுரை கொல்லம்பட்டியை சேர்ந்த அழகுமலை என்பவரது மகன் மணி (வயது23). டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான மணி நேற்று இரவு கொல்லம்பட்டி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

    அதேபோல் திண்டுக்கல் அருகே செல்லமந்தாடியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரது மகன் மணிமாறன் (33). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். குடிபழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், தனிப்படை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    • சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை,

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்களிடம் பே.டி.எம். கியூஆர் கோடு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இது மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


    இதேபோல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் சுமார் 1000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை என்று மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுக்கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும் என்று நம்பி இருந்தோம். ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இருந்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் கிடைத்து விட்டது.
    • காங்கிரஸ் வசம் உள்ள ஆரணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியையும் தி.மு.க. எடுத்துக்கொண்டு வேறு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கும் என்றும் தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.

    கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அக்கட்சி எம்.பி.யாக உள்ள பாரிவேந்தர் பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் கடந்த முறை போட்டியிட்டிருந்தார்.

    இதனால் அந்த ஒரு இடத்தை தி.மு.க. எடுத்துக்கொண்டு 21 தொகுதிகளில் இந்த தேர்தலில் களம் காண்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகளும் கிடைத்து விடும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையோடு உள்ளனர்.

    இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் கிடைத்து விட்டது.

    ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சில தொகுதிகளை தி.மு.க. மாற்ற உள்ளது. இதில் புதுச்சேரி தொகுதியை வழக்கம் போல் காங்கிரசுக்கு தி.மு.க. கொடுத்து விடுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளில் கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் கேட்டு வருகிறது.

    ஆனால் இந்த முறை காங்கிரஸ் வசம் உள்ள சில தொகுதிகளை தி.மு.க. எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக புது தொகுதிகள் சிலவற்றை காங்கிரசுக்கு கொடுக்க உள்ளது.

    ஏனென்றால் காங்கிரஸ் வசம் உள்ள கரூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் போட்டியிட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். திருவள்ளூர் தொகுதியையும் சிவகங்கை தொகுதியையும் இம்முறை தி.மு.க. எடுத்துக்கொள்ளும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    காங்கிரஸ் வசம் உள்ள ஆரணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியையும் தி.மு.க. எடுத்துக்கொண்டு வேறு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கும் என்றும் தெரிகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இன்று தி.மு.க. ஆலோசிக்க உள்ளது.

    தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் சில தொகுதிகளின் வேட்பாளர் யார் என்று இப்போதே தெரிந்து விட்டது.

    தூத்துக்குடியில் கனிமொழி, நீலகிரியில் ஆ.ராசா, ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

    தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளில் 7 தொகுதிகளின் வேட்பாளர் யார்? என்று இப்போதே தெரிந்துவிட்டதால் மீதம் உள்ள 14 தொகுதிகளை தி.மு.க. அடையாளம் காண உள்ளது. அது சம்பந்தமாக இன்று காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    இதில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பேசி முடிவு செய்யப்படும் அதைத் தொடர்ந்து ம.தி.மு.க.வுக்கும் தொகுதி இறுதி செய்யப்படும்.

    எனவே எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை தி.மு.க. நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

    • பாசக்கார ஊர் என்றால் அது மதுரை தான்.
    • கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திரைப்பட சூட்டிங் இல்லாமல் இருந்தால், வாய்ப்பு கிடைக்குமேயானால் நிச்சயம் ஒரே கட்சி, ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அ.தி.மு.க.விற்கு தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். எனது பிரசாரம் பிற கட்சியினரையோ அல்லது பிற நபர்களையோ வசைபாடுவது குறித்து இருக்காது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்கள் மற்றும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தமிழக மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தல் பிரசாரம் செய்வேன்.


    பாசக்கார ஊர் என்றால் அது மதுரை தான். மேலும் நான் பிறந்த சொந்த ஊர் மதுரை அருகே தேனி இருப்பதால் இங்கு நடைபெறக் கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் கலந்துகொள்கிறேன்.

    தற்போதுள்ள சூழலில் வில்லன் மற்றும் கதாநாயகியின் தந்தையாக அது போன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நிச்சயமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். வில்லன்கள் காமெடியன் ஆகி விட்டார்கள், காமெடியர்கள் வில்லன்கள் ஆகி விட்டனர்.

    இந்த நிலையில் கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகனாக நடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×