search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode Corporation"

    • மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.

    இதே போல் ஆர்.கே.வி. சாலையில் இருந்து மணிக்கூண்டு வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள பிருந்தா வீதி, வேலா புக்ஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ஜவுளி கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

    இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இதையடுத்து இன்று மாநகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிருந்தா வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    கச்சேரி வீதி, முத்துரங்கம் வீதி, சிவா சண்முகம் வீதி, அண்ணாச்சி வீதி, நேதாஜி வீதி, மணிக்கூண்டு, கொங்கலம்மன் கோவில் போன்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் பாஸ்கர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் கழிவுநீர் ஓடை செல்ல தடையாக இருக்கும் கான்கிரீட் தளங்களையும் இடித்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உடன் உள்ளனர். ஒருசில நாட்களுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தூய்மை பணியாளர்களின் 8 நாள் போராட்டம் காரணமாக 800 டன் குப்பைகள் குவிந்தன.
    • தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும், இதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,

    குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம், கலெக்டர் அலுவலகத்தில் மனு, கோரிக்கை அட்டைகள் ஏந்தி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகரில் குப்பைகள் ஆங்காங்கே குவியத்தொடங்கியது.

    தூய்மை பணியாளர்களின் 8 நாள் போராட்டம் காரணமாக 800 டன் குப்பைகள் குவிந்தன. உடனடியாக தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தலைமையில், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி முன்னிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளான ஏ.ஐ.டி.யு.சி. சின்னசாமி, சி.ஐ.டி.யு. சுப்பு, எல்.பி.எப். கோபால், ஆதித்தமிழர் தொழிற்சங்கம் மாரியப்பன், எல்.பி.எப். கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. மணியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தை இரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், சம்பளம் தொடர்பான குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து இன்று காலை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை விபரங்களை தொழிற்சங்க நிர்வாகிகள் விளக்கி கூறினர். இதையடுத்து 8 நாட்களாக நீடித்து வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தூய்மை பணியாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    இதையடுத்து டெங்கு காய்ச்சல் பரவி விடாமல் இருக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு மண்டலங் களிலும் வார்டு வாரியாக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக கடந்த சில நாட்களாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று பார்க்கின்றனர். அவ்வாறு தண்ணீர் தேங்கி இருந்தால் அந்த தண்ணீரை அகற்ற வலியுறுத்திகின்றனர். மேலும் அந்த இடத்தில் மஞ்சள், உப்பு போட்ட சொல்லி வருகின்றனர்.

    இதுபோல் வீட்டு அருகே தண்ணீர் தேங்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டி பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    சிரட்டை, பழைய டயர் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி கொள்ளாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையை ஏற்படுத்து பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 4 மண்டலத்திலும் வார்டு வாரியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பெரிய வாகனங்களில் ராட்ச எந்திரங்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.

    மிகக்குறுகிய சந்துகள், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ×