என் மலர்
இந்தியா
- கும்பமேளா நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாச்சாரம்.
- எதிர்க்கட்சிகளுக்குப் பேச அனுமதி அளிக்கப்படுவதில்லை என்றார்.
புதுடெல்லி:
மக்களவையில் பிரதமர் மோடி கும்பமேளா விவகாரம் குறித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை பேச அனுமதி அளிக்காததைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கும்பமேளா விவகாரத்தில் பிரதமர் மோடி சொல்வதில் உடன்படுகிறேன். கும்பமேளா நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாச்சாரம்.
ஆனால் ஜனவரி 29-ம் தேதி மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சலி செலுத்தவில்லை?
நான் சொல்ல விரும்பிய மற்றொரு விஷயம் என்னவென்றால் கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்களுக்கு பிரதமரிடமிருந்து இன்னொரு விஷயம் தேவை.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. பிரதமர் வேலைவாய்ப்பு குறித்து பேச வேண்டும்.
எதிர்க்கட்சிகளுக்குப் பேச அனுமதி இல்லை. ஜனநாயக கட்டமைப்பின்படி மக்களவையில் பேச அனுமதி வழங்கப்பட வேண்டும், ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. காரணம் இது புதிய இந்தியா என தெரிவித்தார்.
- அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
- சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக தனக்கெதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கெதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முதல் தகவல் அறிக்கைகள் எங்கே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, எந்த விவரங்களும் இல்லாமல் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
- எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து, விஜயகாந்த் இல்லாமல் எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன். ஆனால் அவர்கள்தான் இந்த பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர் என்று கூறினார். மேலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, 2026 மார்ச் 18-ந்தேதி என்னுடைய அடுத்த பிறந்தநாளன்று தெளிவாக சொல்கிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
- கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைந்துள்ளதால் கேரளாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளன.
- மத்திய அரசு எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது
நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் போலவே கேரளா மாநிலமும் மத்திய அரசு கொடுக்கும் நிதி நெருக்கடிகளை எதிர்த்து வலுவாக எதிர்த்துப் போராடும் என்று கேரளா நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.
கேரளா சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய நிதியமைச்சர் பாலகோபால், "மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைந்துள்ளதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளன.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது மத்திய அரசின் அக்கறையின்மை அணுகுமுறையால், நிதி ரீதியாக வலுவான நிலையில் இருந்த தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கூட இப்போது மத்திய அரசின் நிதிக் கொள்கையால் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
மத்திய அரசு எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது. பல்வேறு சவால்களை சந்தித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸைப் போலவே, கேரளாவும் வலுவாக முன்னேறும்" என்று தெரிவித்தார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம் சுனிதா வில்லியம்சை மீட்க சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது.
இந்நிலையில்,க்ரு டிராகன் விண்கலம், நேற்று இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல் கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு
- பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?
கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபுதான் இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.
இவ்வாறு அண்ணாலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
- மேக் இன் இந்தியா திட்டத்தில் நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது:
மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையவில்லை. ஆனால் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
மேக் இன் இந்தியாவில் நம்பிக்கை வையுங்கள், அது நல்ல பலன்களைத் தருகிறது.
இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் சில வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்தவை.
மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்கள் மீது மோடி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
- இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காலை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நாகர்கோவில்:
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மேற்கு மாநகர தலைவர் சதீஷ் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கோபகுமார், முத்துராமன், கணேசன், சதீஷ், மீனாதேவ் உள்பட 160 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 140 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார்.
- நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசுபவர்கள் "துரோகிகள்" என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
எல்லோரும் அதையே விரும்புவதாகவும் அதை சட்டப்படி செய்வோம் என்றும் மகாரஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார். இதற்கிடையே இந்த பிரச்சனை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில் நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். தானே மாவட்டத்தின் டோம்பிவ்லி பகுதியில் உள்ள கர்தா சௌக்கில் நிறுவப்பட்ட சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று ஷிண்டே கூறினார்.
சத்ரபதி சிவாஜி, ஒன்றுபட்ட இந்தியாவின் பெருமையும், இந்துத்துவத்தின் கர்ஜனையுமாகும். சிவாஜி மகாராஜ் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சகாப்தத்தின் மனிதர், நீதியை ஊக்குவிப்பவர் மற்றும் சாமானிய மக்களின் மன்னர்.
மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற வரலாற்றை தொடர்ந்து நினைவூட்டும் விதமாக இந்த சிலை செயல்படும். இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் சிவாஜி மகாராஜின் துணிச்சல் மற்றும் நிர்வாகத்தின் மதிப்புகளை அறிந்துகொள்ள ஊக்கமளிக்கும். இந்த கர்தா சௌக் இனி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சௌக் என்று அழைக்கப்படும் என்று ஷிண்டே கூறினார்.

இதை கேட்டு பரவசம் அடைந்த கூட்டத்தினர் "ஜெய் பவானி, ஜெய் சிவாஜி" என்ற கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே அவுரங்கசீப் கல்லறை பாபர் மசூதியை போல வேரோடு பிடுங்கி எறியப்படும் என இந்து அமைப்புகள் சூளுரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
- காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
ஊட்டி:
மலை மாவட்டமான நீலகிரியில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் அங்கு குவிவது வழக்கம்.
அவ்வாறு நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
முன்னதாக கோத்தகிரியில் மே 3 மற்றும் 4-ந் தேதிகளில் 13-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் மே 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 11-வது வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 20-வது ரோஜா கண்காட்சியும் நடைபெற உள்ளது.
குன்னூரில் மே 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 65-வது பழக்கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
- அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் நேற்று தமிழக பாஜகவினர் (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், "மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும்.
- ஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த நபர் நுழைந்தார்.
"அங்காடியா" என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.
இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தார்.
அந்த நபர் வர்த்தகரை பின்தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்து செல்வதன்முன் பல முறை தனது துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






