என் மலர்
இந்தியா
- 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் (வயது23). இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20).
இவர்கள் 2 பேரும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் புவனேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.
இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருகாலமும் திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
- ஆள் பிடிக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது.
பாஜகவின் ஆள்பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆள் பிடிக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது.
முதுகெலும்பில்லாத கோழைகள் பாஜகவிற்கு அடிபணியலாம் ஒருகாலமும் திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது, என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜக, தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத் துறை மூலம் நீட்டியது. பாஜகவின் ஆணவத்திற்கான அடிதான் உயர்நீதிமன்றம் இப்போது எழுப்பிய கேள்விகள்.
"இரவில் சோதனை நடக்கவில்லை; அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்; அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை" என்றெல்லாம் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சொன்ன போது, "பொய் சொல்ல வேண்டாம்.
அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது" என நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. 'டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25-ஆம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது' என அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
* எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் எனத் தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் எப்படித் தடுத்து வைக்க முடியும்?
* அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதைச் செயல்படுத்திய விதம் தவறு.
* அமலாக்கத்துறை சோதனை நடத்தக் காரணமான வழக்குகள், விவரங்களைப் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்.
* இரவு வரை பெண் அதிகாரியை சிறைபிடித்து சோதனை நடவடிக்கை எடுப்பது அச்சுறுத்தல்.
என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம்.
எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.
பாஜக ஆளாத மாநிலங்களில் முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளைப் புனைந்து, எதிர்க்கட்சிகளை முடக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத் துறை.
மோடி அரசின் 10 ஆண்டு ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை 193 ஆனால், இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது CONVICTION RATE வெறும் 1.03 சதவிகிதம்தான்.
இதனை நாடாளுமன்றத்திலேயே பாஜக ஒத்துக் கொண்டிருக்கிறது. சோதனைகள், கைதுகள் மூலம் தனது அரசியல் எதிரிகளை மிரட்டிப் பழிவாங்கவும் அவர்களது செயல்பாடுகளை முடக்கவும் அமலாக்கத் துறை அரசியல் சதியை நடத்தி கொண்டிருப்பதைத்தான் CONVICTION RATE வெளிக்காட்டுகிறது.
அமலாக்கத் துறையால் வழக்குகள் பதியப்பட்டவர்கள், பாஜகவில் இணைந்ததும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் நின்றுவிடுவது அமலாக்கத்துறையின் அறிவிக்கப்படாத விதியாகும். அமலாக்கத்துறை சோதனை நடத்துவதும் வழக்கு பதிவதும் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆள்பிடிக்க மட்டுமே.
எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து சோதனை நடத்துவது அதை வைத்து வழக்கு போடுவேன் எனச் சொல்லி மிரட்டி அவர்களை பாஜகவிற்கு ஆதரவாளராக மாற்றுவது என ஒன்றிய பாஜக அரசின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த ED பேர அரசியலுக்கு அடிபணியாதவர்களை மட்டும் சிறையில் வைத்து மிரட்டிப் பார்ப்பது என்ற மிக மிகக் கேடுகெட்ட கேவலமான வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.
அமலாக்கத் துறையை வைத்து பூச்சாண்டி காட்டியதால் பாஜகவோடு இணைந்தவர்களைப் பட்டியல் போட்டால், சுவேந்து அதிகாரி, முகுல் ராய், ஷிண்டே, அஜீத் பவார், பிரேம் காந்த் என அவர்கள் நம்பும் அனுமார் வால் போல அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
வடக்கே அமலாக்கத்துறையை வைத்து பாஜகவிற்கு ஆள் பிடித்த பார்முலாவை இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது பாஜக ஆனால் முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டிற்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம் ஆனால், ஒருகாலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத்துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் சோதனை மேற்கொண்டது.
தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் இப்போது எடுத்திருக்கும் முயற்சி நாடாளுமன்ற மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு பாஜக-வை நிலைகுலையச் செய்திருக்கிறது.
தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டத் தொகுதி சீரமைப்பின் பெயரால் பாஜக போட்டிருந்த பாசிசத் திட்டத்தை முளையிலேயே முதலமைச்சர் அம்பலப்படுத்திவிட்டார் என்ற ஆத்திரத்திரத்தில் ஆற்றாமையிலும் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு ஏவிவிட்டுள்ளது.
வரும் மார்ச் 22-ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிற ஆலோசனைக் கூட்டம் பாஜகவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதனால்தான் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையைப் புனிதமான விசாரணை அமைப்பாகக் காட்டி வந்த பாஜகவின் பிம்பம் தமிழ்நாட்டில்தான் முதல்முறையாகத் துடைத்தெறியப்பட்டது. திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானார்.
கொள்ளையனோடு கூட்டுச் சேர்ந்த காவலனாக அமலாக்கத்துறை பாஜகவோடு கூட்டு வைத்து, பாஜகவின் குற்றங்களுக்குத் துணை போய்க் கொண்டிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
- நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று மதியம் 1,007 புள்ளிகள் உயர்ந்து 76,456 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக சென்செக்ஸ் 899.02 புள்ளிகள் உயர்ந்து 76,348.06 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று மதியம் 309 புள்ளிகள் அதிகரித்து 23,216 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக நிஃப்டி 283.05 புள்ளிகள் உயர்ந்து 23,190.65 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1% உயர்ந்து வர்த்தகம் ஆனது.
- நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக பிரவேஷ்குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, காவல்துறை விரிவாக்கம் ஐஜியாக இருந்த லட்சுமி ஐபிஎஸ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக பிரவேஷ்குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன
- நாக்பூரில் கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தின் அவுரங்கபாத் நகரில் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகளின் போராட்டம் நாக்பூரில் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஆக்கிரமிப்பாளர்களை (அவுரங்கசீப்) புகழ்வது தேசத்துரோகமாகும். நமது முன்னோர்களை அவமதித்தவர்களை, நமது பெண்களை துன்புறுத்தியவர்களை, நமது நம்பிக்கையை பழித்தவர்களை புகழ்வதை புதிய இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது
ஒவ்வொரு இந்திய குடிமகனும் நமது அடையாளத்தை அழிக்க முயன்றவர்களை பாராட்டுவதை விட, நமது புகழ்பெற்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
- பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் சதாம் உசேன் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ருஷிகொண்டா மலைகளில் உள்ள ஜெகன் மோகனின் ஆடம்பர மாளிகை குறித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், "ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஆந்திராவின் 'சதாம் உசேன்' என்றும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்றும் நினைத்தார்.
என் தாத்தா முதல்வராக இருந்தார், என் அப்பா முதல்வராக இருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய அறைகளை நான் பார்த்ததில்லை. அவரது சகோதரி மற்றும் தாயார் ஜெகன் மோகன் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
அரண்மனை போன்ற இந்த வீட்டை என்ன செய்வது என்பது குறித்து தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருந்தார், 1979 முதல் 2003 வரை அந்த நாட்டை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நிர்வாகம் சர்வாதிகாரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. தடை விதித்தது.
- மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி:
கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. தடை விதித்தது.
இந்நிலையில், கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கேப்டன்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்தத் தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.
இந்த நடைமுறை நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே அமலுக்கு வருகிறது என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார்.
- விகல் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள ஜகத்பூரில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் மைத்துனர் ரகுநந்தன் யாதவின் வீட்டில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் இரண்டு மருமகன்களான ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு கொலையில் முடிந்துள்ளது.
இதில், விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார். விகல் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஜெய்ஜித் ஆபத்தான நிலையில் பாகல்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- அய்யலூர் ஆட்டுச்சந்தை சாலையிலேயே நடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- சந்தைக்கு வரும் வியாபாரிகளை குறிவைத்து சூதாட்ட கும்பலும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், கட்டுச் சேவல்கள் கண்வலிக்கிழங்கு, பழு பாவற்காய், சீத்தாபழம் உள்ளிட்ட அரியவகை காய்கறிகளும் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 8 மணிவரை சந்தை நடைபெறும்.
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு ஆடுகளை கொண்டு வருவார்கள். தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு வைத்துள்ள நிலையில் தற்போதே வியாபாரிகள் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.7000 வரை விற்பனை ஆனது. தரமான நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.400ம், கட்டுச் சேவல்கள் ரூ.3500 முதல் ரூ.7000 வரை விற்பனையானது. தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை குறைந்த போதும் வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
அய்யலூர் ஆட்டுச்சந்தை சாலையிலேயே நடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சந்தை நடத்தும் உரிமையாளர் வசூலில் மட்டுமே தீவிரம் காட்டி வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்வதில்லை. எனவே சந்தையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வாரச்சந்தையில் போதிய மின்விளக்கு, குடிநீர், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வேதனை அடைகின்றனர். வருடத்திற்கு சுமார் ரூ.80 கோடிக்கு விற்பனையாகும் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் அடிக்கடி திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.
மேலும் சந்தைக்கு வரும் வியாபாரிகளை குறிவைத்து சூதாட்ட கும்பலும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பங்குனி திருவிழா மற்றும் ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகள், கோழிகள், சேவல் விற்பனையாகி வரும் நிலையில் விவசாயிகள், வியாபாரிகள் பல்வேறு குறைபாடுகளை கூறி நொந்து செல்லும் நிலையிலேயே உள்ளனர்.
- உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து அவர்கள் அவிழ்த்துள்ளனர்.
பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஒட்டியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும் அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
- பீஜப்பூரில் நடந்த என்கவுண்டரில் 18 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாவட்டத்தின் பீஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கான்கர் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டரில் 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நமது வீரர்கள் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். சத்தீஸ்கரின் பீஜப்பூர் மற்றும் கான்கரில் நமது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மோடி அரசாங்கம் நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. மேலும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு நக்சலைட்டுகளிலிருந்து விடுபடும் என பதிவிட்டுள்ளார்.
- தமிழகத்தில் எல்கோசெஸ் பூங்கா மட்டுமே தகவல் தொழில்துறையிடம் உள்ளது.
- டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையிடம் தான் உள்ளது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, "கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுமா" என்று சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "தமிழகத்தில் எல்கோசெஸ் பூங்கா மட்டுமே தகவல் தொழில்துறையிடம் உள்ளது. டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையிடம் தான் உள்ளது.
எனவே சரியான இடத்தில் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த துறையில் கேட்டால் கிடைக்கும். என்னுடைய துறையில் அந்த உரிமைகள் இல்லை" என்று பதில் அளித்தார்.






