search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் தங்க மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனர். காலை 9.30 மணிக்கு அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் புறப்பாடாகி கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினர்.

    தீர்த்தவாரி உற்சவம்

    அங்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதர் குருக்கள் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவரை எடுத்துச் சென்று திருக்குளத்தில் 3 முறை மூழ்கி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு நின்ற பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் புதிய புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன் செட்டியார், பூலான்குறிச்சி சுப.முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
    • விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விழா நாட்களிலும், விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

     இந்த நிலையில் சித்திரை மாதம் 1-ம் நாளான நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி மூலவருக்கும், சம்பந்த விநாயகருக்கும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

     பஞ்சாங்கம் வாசித்தல்

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் தமிழ் புத்தாண்டையொட்டி நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தனர். மேலும் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை பக்தர்கள் பலர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    ஆரணி

    ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சப்த மாதாக்களுக்கும், அரியாத்தம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல புதுக்காமூர் பகுதியில் உள்ள குழந்தை வரம் அருளும் பெரியநாயகி சமேத புத்திர காமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரதராஜ பெருமாள் கோவில், பாப்பாத்தி அம்மன் கோவில், ஆண்டாள் அம்மன் கோவில், கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பூமிநாதர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மேலும் நகராட்சி அருகே உள்ள வீரஆஞ்சநேயர் கோவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அகல் தீபம் ஏற்றி லட்சதீப வழிபாடு செய்தனர்.

    போளூர்

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போளூரில் உள்ள கைலாசநாதர் கோவில், சோமநாத ஈஸ்வரர் கோவில், நற்குன்று பாலமுருகன் கோவில், குன்னத்தூர் தண்டபாணி முருகர் கோவில் ஆகிய கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு ஆகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு, வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகை எதிரொலியாக படிப்பாதை, யானைப்பாதை, சன்னதி வீதி, கிரிவீதிகளில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையத்திலும் கூட்டம் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    தமிழப் புத்தாண்டையொட்டி முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமான் சந்நியாசி அலங்காரத்திலும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரத்திலும் அருள்பாலித்தார். பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் செய்யப்பட்டது.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    பின்னர் உச்சிகால அபிஷேகமும், 10.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு திருச்செந்தூரில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
    • வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினந்தோறும் வள்ளி தெய்வ யானை சமேதராய் உற்சவர் முருகன் காலை, மாலை என இருவேளைகளிலும் புலி வாகனம், சிங்க வாகனம், வெள்ளி நாக வாகனம், ஆட்டுக்கிடாவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சித்திரை பிரம்மோற்சவ தொடக்க விழாவையொட்டி இன்று அதிகாலையில் மூலவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலவருக்கு தங்க கவசம், பச்சைக்கல் மரகத மாலை. அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுகசாமி கோவிலில் இருந்து 1008 பால்குடங்கள் எடுத்து வந்தனர். இதில் கோவில் இணைஆணையர் ரமணி,அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் உஷாரவி,மோகனன். சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது.
    • காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது. `விருப்பன் திருநாள்' என்றும் இந்தத் திருவிழா கூறப்படுகிறது. ஒரு வரலாற்று சம்பவத்தினால் இப்பெயர் வந்துள்ளது. தென்னகத்தை முற்றுகையிட்ட மாலிக்கபூர், திருவரங்கத்தில் இருந்து பெருமாளை 1310-ம் ஆண்டில் எடுத்துச் சென்றார். பின்னர் 1371-ம் ஆண்டில் விருப்பண்ண உடையார் என்னும் நாயக்கர் வம்சத்து மன்னரால் அந்த பெருமாள் மீட்டுக் கொண்டுவரப்பட்டது.

     60 ஆண்டுகள் கோவிலில் இல்லாமல் இருந்த பெருமாள் மீண்டும் வந்தவுடன், சித்திரை மாதத்தில் அந்த பெருமாளை தேரில் வைத்து திருவீதி உலா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, மன்னர் விருப்பண்ண உடையார் செய்தார். அதனால் இந்த சித்திரை தேர் திருவிழா `விருப்பன் திருநாள்' என்று பெயர் பெற்றது. சித்திரை மாதம் பவுர்ணமி அன்றுதான் திருவரங்கம் காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

     புராணத்தில் முதலை வாயில் சிக்கிய யானை, 'ஆதிமூலமே' என்று பெருமாளை அலறி அழைக்க, பெருமாள் அந்த யானையை முதலை வாயில் இருந்து மீட்ட புராண கதையின் நினைவாக கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி இன்றும் நடந்து வருகிறது. கோவில் யானையை காவிரி ஆற்றிற்கு அழைத்து வந்து, வெள்ளியாலான முதலை கவ்வுவது போலவும், யானைக்கு நம்பெருமாள் மோட்சம் அளிப்பது போலவும் அந்த நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்படும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். மஞ்சள் ஆடை அணிந்து, வேப்பிலை கட்டிக்கொண்டும், பால்குடம் எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தியும், சாரை சாரையாக தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஈரத்துணியுடன் அருள் வந்து, ஆர்ப்பரித்து சென்று, மாரியம்மனை தேரில் கண்டு வழிபடும் பெரும் விழா இதுவாகும்.

    மற்ற எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக சமயபுரத்தில் உற்சவ அம்மன் (பஞ்சலோக) திருவுருவம் 2 உள்ளது. சித்திரை தேருக்கு முதல்நாள் இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவதற்கு ஒரு உற்சவ அம்பாளும், மறுநாள் திருத்தேரில் பவனி வருவதற்கு ஒரு உற்சவ அம்மன் திருவுருவமும் இருப்பது, சமயபுரத்தில் மட்டுமே.

    இதுபோல் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெறும். கோவில்களில் இசை, கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள், சித்திரையில்தான் இரவு முழுவதும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
    • சித்திரை முதல் நாள் இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    கோவிலின் முகப்புத் தோற்றம்

    திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பாபவிநாசர் -உலகாம்பிகை கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழாவின் 10-ம் நாளில் சிவபெருமான்-பார்வதி தேவி திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

     முன் காலத்தில் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளில், சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி-அம்பாளை தரிசிப்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் இமயமலை அமைந்துள்ள வடபகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.

    எனவே உலகை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை அழைத்த பரமேஸ்வரன், அவரை உடனடியாக தென்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டார். இதனால் 'சுவாமி-அம்பாளின் திருமணக்காட்சியை காணும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமே' என்று அகத்தியர் வருந்தினார்.

    அகத்தியரின் வருத்தத்தை உணர்ந்த ஈசன், `இங்கு நடைபெறும் திருமணக் கோலத்தில் பொதிகை மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்தில், சித்திரை மாதப்பிறப்பு நாளில், சித்திரை விசு தினத்தன்று நேரில் வந்து காட்சி கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து அங்கிருந்து விடைபெற்ற அகத்தியரிடம், தாமிரபரணி தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கினார். அதை தன் கமண்டலத்தில் பெற்றுக் கொண்டு தென்பகுதிக்கு வந்து சேர்ந்தார் அகத்தியர்.

    சித்திரை 1-ந்தேதி பாபநாசத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர். மேலும் அகத்தியரை பொதிகை மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை பொதிகை மலையின் உச்சியில் இருந்து தாமிரபரணி நதியாக பாய விட வேண்டும் என்றும் ஈசன் கூறினார். அவ்வாறு பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் இப்பகுதி செழுமையுற்று திகழ்கிறது.

    சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை அகத்தியருக்கு அளித்த நிகழ்வு, ஆண்டு தோறும் பாபநாசம் கோவிலில் 10 நாள் உற்சவமாக நடைபெறும். சித்திரை மாத முதல் நாள் அன்று இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    இந்த ஆண்டுக்கான 10 நாள் உற்சவம், கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்வான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி அளவில் சுவாமி-அம்பாள் இருவரும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

     பாபநாசம் கோவிலில் அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அருளியது பற்றி, கல்வெட்டிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்க கூடாது.
    • தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.

    அன்னதானம் செய்வதை செலவு என்று சொல்ல முடியாது. தானத்தைப் பெறுபவன் போதும், போதும் என்று சொல்வது அன்னதானத்தில் மட்டுமே. மற்ற எந்த பொருளை தானமாகப் பெற்றாலும் இன்னும் கொஞ்சம் தந்திருக்கலாம் என்றே எண்ணுவான்.

    அன்னதானத்தின் போது மட்டுமே வயிறு நிறைந்துவிட்டது, போதும் என்று திருப்தி அடைவான். இத்தனை சிறப்பு வாய்ந்த அன்னதானத்தைச் செய்வது என்பது செலவுக் கணக்கில் சேராது. மாறாக கிடைத்தற்கரிய புண்ணியம் என்ற வரவுக்கணக்கில் சேரும்.

    அட்சய திருதியை நாளுக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உண்டு. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

    கானகத்தில் தங்களைக் காணவரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் விருந்தோம்பல் விதியின்படி உணவளிக்க வேண்டும் அல்லவா?

    உணவு சமைக்க என்ன செய்வது என்று மனம் கலங்கிய திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான்.

    க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை என்றும், சூரியன் அளித்த அந்த பாத்திரத்திற்கு அக்ஷய பாத்திரம் என்றும் பெயர் வந்தது.

    அந்த நாளில் எது செய்தாலும் அந்த செயலானது மீண்டும், மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும், தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் வாங்கிக் கொண்டிருப்போம் என்பதற்காக அட்சய திருதியை நாளில் ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்றவகையில் குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

    ஆனால், ஒரு விஷயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டுதான் தங்கம் வாங்க வேண்டுமே தவிர, கடன் வாங்கிச் செய்யக் கூடாது.

    அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் தங்களிடம் இருக்கும் பொருளைக் கொண்டுதான் அன்னதானம் செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கி செய்யக் கூடாது.

    ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவக்ரகங்களில் தந்தைக்குரிய கிரகமான சூரியனும், தாய்க்குரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில், உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாள். அதாவது தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.

    இந்த உலகை ஆளும் தாய்-தந்தையராகிய பார்வதியும் பரமேஸ்வரனும் பூரணமான சந்தோஷத்துடன் விளங்கும் நாள். இந்த நாளில் நாம் எந்த வரம் கேட்டாலும் குறைவில்லாமல் கிடைக்கும் அல்லவா? இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமையல்ல.

    திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.

    அட்சய திருதியை நாளின் இந்த உண்மையான அர்த்தத்தினைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தையும், பொருளுதவியையும் செய்தோமேயாகில் நம்மிடமும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    கிடைத்தற்கரிய இந்த நாளில் இவ்வுலகில் வாழ பொருட்செல்வத்தினைச் சேர்ப்போம், நம்மால் இயன்ற அன்னதானம் செய்து அவ்வுலகத்திற்கான அருட்செல்வத்தையும் சேர்ப்போம்.

    • மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை.
    • தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன.

    மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன.

    பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளில் இருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்ம கணக்குகளை நேர் செய்த பின்னர் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.

    இதுபோன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்த பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

    • சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர்.
    • சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

    விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.

    சேரநாடு என்று அழைக்கப்படும் மலைநாட்டில் திருச்செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளராக அவதரித்தவர் விறல்மிண்ட நாயனார். திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மலை வளமும் நிரம்பி வேளாண்மைக்கு சிறந்ததாக விளங்கியது.

    விறன்மிண்டர் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்த சிவப்பரம்பொருளிடம் மாறாத பக்தி கொண்டிருந்தார். சிவனிடத்தில் மட்டுமில்லாது சிவனடியார்களிடத்தும் பெரும் பக்தியும், மரியாதையையும் கொண்டிருந்தார்.

    அவர் இறைவழிபாட்டிற்கு சிவாலயம் செல்லும்போது ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இறைவனுடைய திருவருள் சிறப்பை எல்லோரும் உணரும்படி தம்முடைய ஒழுக்கத்தின் சிறப்பால் வெளிப்படுத்துபவர்கள் சிவனடியார்கள். ஆதலால் அரனின் அடியார்களின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் விறல்மிண்டர்.

    ஒருசமயம் சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருதலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்திருந்தார் விறன்மிண்டர்.

    ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில் திருவாரூரை அடைந்தார் விறன்மிண்டர்.

    திருவாரூரில் சிவனடியார்கள் குழுமி இருக்கும் இடத்திற்குப் பெயர் தேவாசிரியர் மண்டபம். அம்மண்டபம் தியாகேசர் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்தது.

    திருவாரூரை அடைந்த விறன்மிண்டர் முதலில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கி மரியாதை செய்துவிட்டு கோவிலுக்குள் சென்று தியாகேசரை வழிபட்டார்.

    பின்னர் மீண்டும் தேவாசிரிய மண்டபத்திற்குள் வந்து சிவனடியார்களிடம் அளாவிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வன்தொண்டரான சுந்தரர் வீதிவிடங்கரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கி சென்றார்.

    அதனைக் கண்ட விறன்மிண்டர் அருகில் இருந்தோரிடம் யார் என விசாரித்தார். அவரும் ஆரூர் பெருமானின் அருளால் பரவை நாச்சியாரை மணந்து இங்கே இருக்குமாறு பணிக்கப்பட்ட சுந்தரர். இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் செல்கிறார் என்று கூறினார்.

    "இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காது செல்கிறாரே? இவரே இப்படிச் சென்றால் அடியார்களிடம் யார் மதிப்புடன் நடப்பார்கள்? அடியார்களை மதிக்காமல் செல்லும் வன்தொண்டரைப் புறக்கணிக்கிறேன்" என்றார் விறல்மிண்டர். "அவர் ஆரூரானின் அருளுக்குப் பாத்திரமானவர்" என்றனர் அருகில் இருந்தவர்கள்.

    விறன்மிண்டர் கூறியவை யாவற்றையும் கேட்ட சுந்தரர் 'இறைவனை வழிபடுவது எளிது. அடியர்களை வழிபடுவது அரிது.

    அடியவர்களை வழிபட தகுதி மிகுதியானதாக இருக்க வேண்டும். ஆதலால்தான் அடியவர்களை நான் மனதிற்குள் வழிபட்டு ஒதுங்கிச் சென்றேன்' என மனத்திற்குள் கவலை கொண்டவராக தியாகேசரரை அடைந்தார்.

    "இறைவா, நான் அடியர்களுக்கு அடியவானாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தித்தார் சுந்தரர்.

    அதனைக் கண்ட விறன்மிண்ட நாயனார் மகிழ்ந்தார். பின் பலகாலம் சிவதொண்டுகள் புரிந்து இறுதியில் சிவனை அடைந்து சிவனாரின் பூதகணங்களின் தலைவரானார்.

    விறன்மிண்டர் சுந்தரரையும், வீதிவிடங்கரையும் புறக்கணித்தால் திருத்தொண்டர் தொகையை சுந்தரர் பாடினார். பெரியபுராணம் என்னும் மரத்திற்கு திருத்தொண்டர் தொகை விதை எனில் விறன்மிண்டரின் செயல் அதற்கு மழை என்றால் மிகையாகாது.

    விறல்மிண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரமான இன்று கொண்டாடப்படுகிறது.

    • ராமாயணத்தை `சரணாகதி தத்துவம்’ என வைணவங்கள் கூறுகின்றன.
    • கல்யாண வைபோகமாகவும் இதனை கொண்டாடுகிறார்கள்.

    ராமபிரான் அவதரித்த நாளே ராம நவமியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிலையான வெற்றியும், நீடித்த செல்வமும் நிலைக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கிய வேண்டுதலாக அமைந்துள்ளது.

    ராவண யுத்தம் புராண காலத்தில் நடந்த ஒன்று என ஒதுக்கிவிட முடியாது. இது தேவ சக்திகளுக்கும், அசுர சக்திகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தைக் குறிக்கின்றது. முடிவில் தேவ சக்தியே வெல்லும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராமாயணத்தை `சரணாகதி தத்துவம்' என வைணவங்கள் கூறுகின்றன. துளசி ராமாயணம் காந்தியடிகளின் மனங்கவர்ந்த நூலாக அமைந்திருந்தது. சகோதர தர்ம சாஸ்திரமாகவும், பேரிதிகாசமாகவும் கம்பராமாயணம் உள்ளது.

    ராமநவமி பழங்காலந்தொட்டு கொண்டாடப்பட்டு வருவதை திருவரங்கம், ஓரகடம் உள்ளிட்ட சில வைணவ திருக்கோவில் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன. அயோத்தி உள்ளிட்ட நாடெங்கிலும் உள்ள பல்வேறு வைணவ திருக்கோவில்களில் ராமநவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் கல்யாண வைபோகமாகவும் இதனை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் ரத உற்சவமும் நடைபெறும்.

    • மனக்கவலையின்றி வாழ்ந்திட, இறை வழிபாடே சிறந்த வழியாகும்.
    • சகல சவுபாக்கியங்களையும் அருளும் தலமாக திகழ்கிறது.

    கோவில் முகப்புத் தோற்றம்

    இவ்வுலகில் வாழ்பவர்களுக்கு தினமும் எண்ணற்ற கவலைகள் வந்து போகின்றன. அவற்றுள் சில நிலையாக இருந்து நம்மை வாட்டுகின்றன. நாம் அனுபவிக்கும் நன்மை - தீமைகள் யாவும் முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக அமைகின்றன.

     நமது வினைகளைப் போக்கி, மனக்கவலையின்றி வாழ்ந்திட, இறை வழிபாடே சிறந்த வழியாகும். அந்த வகையில் நமது குறைகளை போக்கி, சகல சவுபாக்கியங்களையும் அருளும் தலமாக திகழ்கிறது, மருதாடு திருத்தலம்.

    எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் நமக்கு வேண்டும் அல்லவா? சொர்க்கத்தின் அதிபதியாக விளங்கும் தேவலோக தலைவன் இந்திரனுக்கு, அப்படி ஒரு பாக்கியமற்ற நிலை ஒரு சமயம் உண்டானது. கேட்டதைத் தரும் காமதேனு, கற்பக விருட்சம், அரம்பையர்கள் என அனேக சுகங்களைப் பெற்ற இந்திரனுக்கு, திடீரென ஒரு இனம் புரியாத அச்சம் தொற்றிக் கொண்டது. அனைத்து சுகங்களும் அவனைத் தீயாய் சுட்டது. மனம் வாடினான். உடல் மெலிந்தான். அதைக் கண்டு இந்திரனின் மனைவி இந்திராணி மிகவும் வருந்தினாள்.

    ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அசுரப் படைத் தலைவனான விருத்திராசுரனை அழிக்க முடியாமல் இந்திரன் திணறினான். அவனை அழிக்கும் வழியை கேட்டு சிவபெருமானை வணங்கி நின்றான். விருத்திராசுரனை அழிக்கும் ஆயுதம், ததீசி முனிவர்தான் என்று உரைத்தார், சிவபெருமான்.

    சிவபெருமானின் உத்தரவின்படி, ததீசி முனிவர் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது வஜ்ஜிர தேகத்தில் இருந்து முதுகெலும்பை எடுத்து, அதில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே இந்திரன் கையில் இருக்கும் வஜ்ஜிராயுதம். அந்த ஆயுதத்தால்தான், விருத்திராசுரனை அழிக்க முடிந்தது. போரில் தேவர்கள் பெரும் வெற்றியைப் பெற்று விட்டனர். ஆனால் அதன்பின்னர்தான், இந்திரன் மனம் வருத்தத்தில் தோய்ந்து போனது. ததீசி முனிவரின் இறப்பு பிரம்மஹத்தி தோஷமாக மாறி, இந்திரனை வாட்டியது.

    மிகுந்த கலக்கமுற்ற இந்திரன், நாரதரின் உதவியை நாடினான். நாரத மகரிஷியோ, 'பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட, பூவுலகில் சிவபூஜை செய்வதே சிறந்த வழி' என்று கூறினார்.

    அதன்படி இந்திராணியுடன் பூவுலகம் வந்த தேவேந்திரன், கங்கையில் நீராடி முதலில் விஸ்வேஸ்வரரை வணங்கினான். அப்படியே பல சிவன் ஆலயங்களை வழிபட்டபடியே, பாலாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான். காஞ்சியில் புதனுடன் சேர்ந்து சிறப்புற சிவ பூஜை செய்தான். அங்கிருந்து தெற்கு நோக்கி வந்த தேவர்கோன் பெரிய மருதங்காட்டை அடைந்தான்.

    அங்கு தானாக பூமியில் இருந்து தோன்றியப் பெருமானைக் கண்டான். தீர்த்தம் அமைத்து, அந்த லிங்கத்திற்கு நாள்தோறும் நியமத்துடன் பூஜை செய்தான். இந்திராணி, வாசனை மலர்களை பறித்து, மாலையாக்கி, மருத வன ஈசனுக்கு சாற்றி மகிழ்ந்தாள். இவ்வாறு வழிபட்டு வரும் வேளையில், பார்வதி தேவியோடு சிவபெருமான் அங்கு தோன்றினார்.

    அவரிடம் இந்திரன், தனக்கு ஏற்பட்டுள்ள பிரம்மஹத்தி தோஷத்தையும், தேவையற்ற பயத்தையும் போக்கும்படி வேண்டினான். அப்படியே அருளிச் செய்தார், சிவபெருமான். பார்வதிதேவி விபூதி பிரசாதமும், தீர்த்த பிரசாதமும் வழங்கி இந்திரனை ஆசிர்வதித்தார்.

    அப்போது இந்திரன், இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் அருள் வேண்டும் என்று வேண்டினான்.

    அன்னையும் அப்படியே அருள செய்தார். இத்தல இறைவன் `புரந்தரீசர்' என்றும், இந்திரனுக்கு பிரசாதம் அளித்ததால் அம்பிகை `இந்தரபிரசாதவல்லி' என்றும் பெயர் பெற்றனர். இந்திரன் அமைத்த தீர்த்தம் `இந்திர தீர்த்தம்' என்றும், இந்த இடம் `புரந்தரபுரி' என்றும் போற்றப்பட்டது.

    ஊரின் கிழக்குப் பகுதியில் சாலையை ஒட்டியபடியே அழகிய மூன்று நிலை கோபுரத்துடன் எழுந்து நிற்கிறது, இந்த ஆலயம். கோபுர வாசலின் உள்ளே நுழைந்ததும், தென்மேற்கு திசையில் தல கணபதியின் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. மேற்கில், சுவாமி சன்னிதியின் பின்புறமாக வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சன்னிதி உள்ளது. கிழக்கு திசையில் கொடிமரம், நந்தி உள்ளனர்.

    அதன் அருகே தீப ஸ்தம்பம் ஒன்று அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் சுமார் நான்கடி உயர லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கின்றார், புரந்தரீசர்.

    இங்கு நந்திதேவருக்கு வலப்புறமாக இந்திரபிரசாதவல்லி, தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். அம்பாள் சன்னிதிக்கு எதிர்புறம் சுரங்கப்பாதை ஒன்றும் காணப்படுகிறது. ஈசான திக்கில் நவக்கிரகங்கள் மற்றும் சூரியன், கால பைரவர் வீற்றிருக்கின்றனர். வடபுறத்தில் மதில் சுவரின் உட்புறம் 63 நாயன்மார்களுக்கும் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு வாசல் ஒன்று இங்கே இருப்பது சிறப்பு.

    இந்த வாசல் வழியாக சென்றிட, ஆலயத் திருக்குளமான இந்திர தீர்த்தம் நாற்புறமும் படிகளுடன் அழகாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    மீண்டும் உள்ளே வந்தால், நந்திக்கு இடதுபுறம் தல விருட்சமான வில்வ மரமும், அதன் கீழே நாகர் சிலைகளும் காணப்படுகின்றன.

    பிணைந்த நாகங்களுக்கு இடையே கிருஷ்ணரும் காட்சி தருகின்றார். தென்முக வாசலில் 16 கால் மண்டபமும், அதன் தென்மேற்கில் தர்மசாஸ்தா சன்னிதியும் உள்ளது.

    இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. தவிர கந்தசஷ்டியில் சூரசம்ஹாரம், பங்குனியில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம், அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு போன்றவையும் கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மன் சன்னிதியில் குங்கும பிரசாதமும், தை மாத வெள்ளிக்கிழமையில் தீர்த்த பிரசாதமும் தரப்படுகிறது. அம்பாளுக்கு அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இத்தலத்தில் உள்ள சூரியன் மற்றும் புரந்தரீசருக்கு கோதுமைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் நோய்கள் நிவர்த்தியாகும்.

    ராகு - கேது மற்றும் நாக தோஷத்தினால் துன்பப்படுபவர்கள், இணைந்த நாகங்களுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

    அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த ஆலயம் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மருதாடு.

    • பன்னிரு திருமுறை பாராயணம் செய்வர்.
    • இடைவிடாத சிவபக்தியால், நாயன்மாரார் அந்தஸ்தை பெற்று, சிவனடி சேர்ந்தார்.

    சிவனடியார்களுக்கு இடைவிடாது தொண்டு செய்துவந்தார். நேச நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் அதாவது இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், எம்பிரான் நேச நாயனார் குருபூஜை நடைபெறும். திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 64 நாயன்மார்கள் சிலை அமைக்கப்பட்டு, நாயன்மார் குருபூஜை நடந்து வருகிறது. அர்த்த சாமபூஜை அடியார் திருக்கூட்டத்தினர், இதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று பங்குனி மாத, ரோகினி நட்சத்திர தினமான எம்பிரான் நேசநாயனார் குருபூஜை நடைபெறும். காம்பீலி என்ற ஊரில், அறுவையார் குலத்தில், செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர் நேசர். இவர், சிவனடியாருக்கு தொண்டு செல்வதையே வாழ்க்கையாக நினைந்து வாழ்ந்தார். குடும்ப தொழிலாக கைத்தறி நெசவு இருந்ததால், சிவனடியாருக்கு உடைகள், கோவணம் நெய்து கொடுக்கும் சேவையை செய்து வந்தார்.

    இடைவிடாத சிவபக்தியால், நாயன்மாராக போற்றும் அந்தஸ்தை பெற்று, சிவனடி சேர்ந்தார். அவரது குருபூஜை விழா விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெறும். அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்ட பக்தர்கள், எம்பிரான் நேச நாயனாருக்கு, அபிஷேக ஆராதனை செய்து, பன்னிரு திருமுறை பாராயணம் செய்வர்.

    ×