search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுபிறவி"

    • மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை.
    • தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன.

    மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன.

    பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளில் இருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

    எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்ம கணக்குகளை நேர் செய்த பின்னர் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.

    இதுபோன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்த பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

    • இறப்பு என்பது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது.
    • ஈஸ்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.

    இந்து மதம் பற்றியும் வேத நெறி குறித்தும், சடங்குகள் குறித்தும் தயானந்த சுவாமிகள் ஏராளமான, அற்புதமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அவரது விளக்கங்கள் ஒவ்வொன்றும் உயர்வான சிந்தனைகளைக் கொண்டவை. ஆழமான கருத்துக்கள் கொண்டவை.

    ஒருவர், `ஆத்மா எப்போது சாந்தி அடையும்?' என்று கேட்ட கேள்விக்கு தயானந்த சுவாமிகள் சிறப்பான பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இறப்பு என்பது நமது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது. இந்த ஜீவன் சரீரத்திலிருந்து போகும் பொழுது, ஒரு சூட்சமமான தேகத்தோடுதான் பிரிய வேண்டும்.

    எப்படி சொப்பனம் காணும் ஜீவன், சொப்பனத்தில் தனக்காக ஒரு சூட்சமமான தேகத்தை எடுத்துக் கொள்ளுகிறதோ, அதேபோல் இறக்கும் போதும், அம்மாதிரியான ஒரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. சொப்பனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த சூட்சம தேகமானது, சொப்பனம் காணும் மனிதனின் படுத்திருக்கும் தேகம் போலவே இருக்கும். அம்மாதிரியே இறக்கும் போதும், ஜீவன் இந்த சரீரம் போலவே ஏற்பட்ட ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும். - அதற்கு பிரேத சரீரம் என்றுபெயர்.

    இந்த பிரேத சரீரம் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நமக்கு நூறு வருசமாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அதனால் தான் நாம் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லி உள்ளபடி, அந்த பிரேத சரீரத்தில் இருந்து ஜீவனானவன் விடுபட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால், பல ஈமச்சடங்குகளையும், தெய்வ கர்மாக்களையும் செய்கிறோம்.

    அதன்பிறகு கூட ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆண்டுதோறும், திதியன்றும் சில கர்மாக்களை செய்கிறோம். அந்த ஜீவன் மறுபிறவி எடுத்தால், செய்த சடங்குகள் வீணாகுமே என்று நாம் நினைக்கவேண்டாம். ஈஸ்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.

    ஜீவனுக்கு `தன்னுடைய ஆத்மாவும், ஈஸ்வரனுடைய ஆத்மாவும் ஒன்று' என்று தெரிகிறவரை மறுபிறவி உண்டு.

    ×