search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு.
    • சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், வருகை பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள போலீசாருக்கு விசாரணையை துரிதப்படுத்துதல், விசாரணையை கையாளும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

    இந்த ஆய்வின் போது சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், சிவக்குமார், இன்ஸ்பெக்டர் உலக ராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியன், முனியாண்டி, கார்த்திகா செல்வி ஆகியோர் இருந்தனர். முன்னதாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்த எஸ்.பி. முத்தரசிக்கு போலீசார் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு திடீர் வருகையால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்காமல் இருந்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி வருகையினால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
    • சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கடந்த 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந் தேதி அதிகாலையில் அவர் இறந்திருக்கலாம் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ந் தேதி திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் இரவு 10.10 மணி அளவில் ஜெயக்குமார் சாதாரணமாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதும், அந்த கடையில் அவர் ஒரு டார்ச் லைட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    அவர் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பல்வேறு தடயங்கள் சிக்கியுள்ள நிலையில் மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில் இன்று 4-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    முன்னதாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் நடைபெற்ற ஆய்வில், 2-ந் தேதி இரவு திசையன்விளை பஜாரில் உள்ள கடையில் ஜெயக்குமார் வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
    • பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வெப்ப அலை வீசுவதால் வெளியில் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    நெல்லையில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் அனலாக சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாதவாறு தவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக 106 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.

    நெல்லையில் நேற்று முன்தினம் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளானார்கள். அப்போது நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பச்சைக்கிளி மயங்கி விழுந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் அந்த கிளியை எடுத்து சென்று, சக போலீஸ்காரர்கள் உதவியுடன் அங்குள்ள குடிநீர் தொட்டியில் வைத்து தண்ணீர் தெளித்தார்.

    அதற்கு தண்ணீரும் பருக கொடுத்தார். இதையடுத்து கண் விழித்த கிளி தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்தி கொண்டு பறக்க தயாரானது. அதற்கு பொரிகடலையை போலீசார் வழங்கினர். அவற்றை உண்ட பின்னர் கிளி பறந்து சென்றது. வெயிலில் மயங்கிய பச்சைக்கிளிக்கு தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய நிகழ்ச்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    • எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார் என்பதில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயந்தி புகார் கூறியிருந்தார்.
    • சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்மமரணம் வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ஜெயக்குமாரின் சகோதரர், மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது வழக்கு தொடர்பாக பல்வேறு விபரங்களை போலீசார் அவர்களிடம் கேட்டறிந்தனர்.

    இதற்கிடையே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார் என்பதில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயந்தி புகார் கூறியிருந்தார். எனவே மீட்கப்பட்ட சடலம் ஜெயக்குமார் தானா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக டி.என்.ஏ.பரிசோதனை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    • ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
    • சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் தனிப்படையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மமரண வழக்கில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது.

    கடந்த 2-ந்தேதி மாயமான அவர் 4-ந்தேதி வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்ததும், உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகில் கடப்பா கல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஜெயக்குமாரின் தொண்டை குழிக்குள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்கிரப்பர் துகள்கள் இருந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது வீட்டின் மாட்டு தொழுவத்தில் அந்த ஸ்கிரப்பரின் கவர் கிடந்துள்ளது. இதனால் அவர் அந்த இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

    தடயவியல் பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. எனினும் கொலையாளிகள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டவர்களை நேற்று நேரில் வரவழைத்து, தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோ பதிவு செய்து கொண்டதோடு பணம் வரவு-செலவு குறித்த தகவல்களை அவர்கள் கைப்பட கடிதமாக எழுதவைத்து போலீசார் வாங்கி கொண்டனர்.

    இதுஒருபுறம் இருக்க, ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் தனிப்படையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று புதிய வீடியோ ஒன்று வெளியானது. அதாவது எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஜெயக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும்போது அவரது கழுத்தில் தொடங்கி கால் பாதம் வரையிலும் மின் வயர் சுற்றப்பட்டிருப்பதும், முதுகு பகுதியில் கடப்பா கல் ஒன்று வைக்கப்பட்டு கட்டப்பட்டிருப்பதும் அந்த வீடியோவில் தெரிய வந்துள்ளது. மேலும் அதில் அவரது கழுத்து பகுதியில் வயரால் நெரிக்கப்பட்டு இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

    இதனால் அவர் கொலை தான் செய்யப்பட்டிருப்பார் என்று போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கூலிப்படையினர் தான் இதுபோன்ற முறையில் கொலை செய்வார்கள் என்பதால், ஜெயக்குமார் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    ஜெயக்குமார் அரசியலில் மட்டுமல்லாது அரசு ஒப்பந்ததாரராக பல தொழில்களை செய்து வந்தார். மேலும் வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இதனால் தொழில் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாமா? என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தியின் கோரிக்கையின் அடிப்படையில், இறந்த நபர் ஜெயக்குமார் தானா? என்பதை அறிய அவரது மகன்கள் 2 பேரிடமும் டி.என்.ஏ. மாதிரி எடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனிப்படை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஜெயக்குமார் தனது கடிதங்களில் தனக்கு வர வேண்டிய பணம் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கடன் வாங்கியது பற்றி எந்தஒரு இடத்திலும் அவர் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. அவரது செல்போன் இதுவரை கிடைக்காவிட்டாலும் அவருக்கு வந்த அழைப்புகள் பற்றி ஆய்வு செய்தோம்.

    அதுபோல அவர் யார்-யாரிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் என்பது பற்றி பட்டியல் தயாரித்து ரகசியமாக விசாரணை நடத்தினோம். அப்போது தான் அவர் 50-க்கும் மேற்பட்டவரிடம் கடன் வாங்கியிருப்பது எங்களுக்கு தெரியவந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் சென்று அவர் கடன் வாங்கி இருக்கிறார்.

    பெரும்பாலும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் அவர் கடன் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் இதுவரை திரட்டி உள்ள தகவல்படி அவர் ரூ.40 கோடி வரை கடன் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    கோடிக்கணக்கில் வாங்கிய கடன் பணத்தை வைத்து தான் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் கை கொடுக்காததால் பணத்தை திருப்பி கொடுக்க இயலவில்லை. இதனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.

    அந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் ஜெயக்குமார் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்னிடம் பணம் திருப்பி கேட்டவர்களை பதிலுக்கு மிரட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் அவருக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.

    அப்படி கொலை மிரட்டல் விடுத்தவர்களில் ஒருவர்தான் ஜெயக்குமாரை திட்டமிட்டு கொலை செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம். அந்த நபர் நேரடியாக இந்த கொலையில் ஈடுபடாமல் கூலிப்படையை ஏவி காரியத்தை முடித்து இருக்கிறார். தென் மாவட்டங்களை பொறுத்தவரை முக்கிய நகரங்களில் கூலிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.

    மதுரை கூலிப்படையினர் ஒருவிதமாகவும், தூத்துக்குடி கூலிப்படையினர் ஒரு விதமாகவும், நெல்லை கூலிப்படையினர் ஒருவிதமாகவும் தங்களது பாணியில் கொலை செயல்களில் ஈடுபடுவார்கள். ஜெயக்குமாரின் கை, கால்களை கட்டி கொலை செய்து இருப்பது மதுரை கூலிப்படையினர் நடத்தும் பாணியாகும்.

    எனவே மதுரையைச் சேர்ந்த ஏதாவது ஒரு கூலிப்படைதான் ஜெயக்குமாரை கொலை செய்து எரித்து இருக்க வேண்டும். அது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

    கூலிப்படையை ஏவிய பிரமுகர் அரசியல் பிரமுகரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுப்பவரா? என்பது தெரியவில்லை. அது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். ஜெயக்குமார் கொன்று எரிக்கப்பட்டது பல ஆய்வுகள் மூலம் உறுதியாகி விட்டது.

    அவர் தற்கொலை செய்து இருந்தால் அவரது கால் பாதம் எரிந்து இருக்க வாய்ப்பில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தீக்குளித்து இருந்தால் தீ புகையை அவர் சுவாசித்து இருப்பார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது நுரையீரலில் அத்தகைய புகை தாக்கம் எதுவும் இல்லை.

    எனவே ஜெயக்குமார் கை, கால்கள் கட்டப்பட்டு கடப்பா கல்லில் இணைத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பிறகு அவரை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த பாணியிலான கொலையாளிகள் பற்றி விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம்.

    இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

    • ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு வரவேண்டிய பணம், மற்றவர்களுக்கு தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் விளக்கமாக எழுதி இருந்தார்.
    • இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரையிலான பணம் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடந்த 30-ந்தேதி எழுதியிருந்த கடிதத்தில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்களின் விபரங்களை எழுதியிருந்தார்.

    மேலும் அவர் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு வரவேண்டிய பணம், மற்றவர்களுக்கு தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் விளக்கமாக எழுதி இருந்தார்.

    இந்நிலையில் தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொழில் அதிபர்கள் உள்பட சுமார் 5-க்கும் மேற்பட்டோர் ஜெயக்குமாருக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி ஒப்படைத்து விடுவதாக போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராகும்போது தெரிவித்திருந்தனர்.

    அதன்படி இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரையிலான பணம் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • ஜெயக்குமார் மாயமான அன்று கையுடன் எடுத்துச்சென்ற 2 செல்போன்களும் மாயமாகி விட்டது.

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலையில் மாயமானார். 4-ந்தேதி தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

    இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கெல்லாம் சென்றார்? யாரையெல்லாம் சந்தித்தார்? என்பது குறித்து தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இதற்காக திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு 10.20 மணியளவில் அவர் திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரித்து வரும் நிலையில் இரவு 10.30 மணிக்கு பிறகு அவரது செல்போனுக்கு பெயர் சேமித்து வைக்காத 2 வெவ்வேறு எண்களில் இருந்து போன் வந்துள்ளது. அதில் ஜெயக்குமார் பேசியுள்ளார். அந்த எண்களை போலீசார் ஆய்வு செய்து போன் செய்து பார்த்தனர். அவை சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

    ஏற்கனவே அவர் மாயமான அன்று கையுடன் எடுத்துச்சென்ற 2 செல்போன்களும் மாயமாகி விட்டது. அதனை இதுவரை போலீசார் கண்டுப்பிடிக்கவில்லை. அந்த செல்போன்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரது மரண வழக்கில் ஒரு உறுதியான முடிவு கிடைத்துவிடும் என்று போலீசார் நம்புகின்றனர்.

    அதேநேரத்தில் அவர் மாயமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த 2 அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து அவர்கள் யார்? எங்கிருந்து போன் செய்தார்கள்? எதற்காக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டார்கள்? என்பதை அறிய தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது. தற்போது போலீசார் ஜெயக்குமார் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இரும்பு பிரசின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் உள்ளே உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார்.
    • விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார். அந்த கடிதங்களில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை எழுதி யாரெல்லாம் தனக்கு பணம் தர வேண்டும், மிரட்டல் விடுத்தவர்கள் யார், யார் என குறிப்பிட்டு இருந்தார்.

    அந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த நிலையில், விசாரணைக்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படையினர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

    இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு தொடர்பாக நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

    • ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது
    • கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    பல்வேறு கோணங்களில் விசாரணையை நகர்த்தி வரும் சூழ்நிலையில் கொலையா? அல்லது தற்கொலையா? என்று உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் இருந்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது. அதில் ஒன்று கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எனவும், மற்றொரு கடிதம் 27 மற்றும் 30-ந்தேதி என குறிப்பிடப்பட்டு அவரது மருமகனுக்கும், குடும்பத்தாருக்கும் என்றும் எழுதியதாக வெளிவந்தது

    இந்த 2 கடிதங்களையும் அவர், தன் கைப்பட எழுதினாரா அவரது கையெழுத்து தானா என்று போலீசார் உறுதி படுத்துவதற்காக அதனை தடய அறிவியல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கடிதத்தை ஆய்வு செய்த நிலையில், அவரது பழைய கடிதங்களில் உள்ள எழுத்துக்களை இந்த கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.

    அதில் 2 கடிதங்களையும் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதியுள்ளார் என்று தடய அறிவியல் அலுவலர்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    • ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

    பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும்.

    இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.

    முன்னதாக, 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பல கோடி ரூபாய் லோன் வாங்கித் தருவதாக கூறி மோசடி.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையத்து அருகே உள்ள பாலாமடையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார்.

    இவருக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்க முடிவு செய்துள்ளார்.

    இதனை அறிந்த கேரள மாநிலம் கொல்லம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிபின் (35) உள்பட 4 பேர் பாலசுப்பிரமணியனை சந்தித்துள்ளனர்.

    பின்னர் வங்கி அதிகாரியை தங்களுக்கு தெரியும் என்றும், அவர்களுக்கு ரூ.16 லட்சம் கமிஷன் கொடுத்தால் பல கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியன் ரூ.16 லட்சம் பணத்தை சிபின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சிபின் வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதைத்தொடர்ந்து சிபினை சந்திக்க முயன்ற போது அவர் தலை மறைவாகிவிட்டார்.

    இதுகுறித்து பால சுப்பிரமணியன் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி, துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், பிச்சையா ஆகியோர் தலைமறைவான சிபினை தேடி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் கொல்லம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நெல்லை நீதிமன்றத்தில் சிபின் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×