search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்கு பூஜை"

    • விளக்கை நன்கு தேய்த்து துடைந்து பின்பு ஏற்ற வேண்டும்.
    • எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம்.

    விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது.

    சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி

    திருமார் கணநாதன் செம்மை படரொளியோ

    கந்த வேளடும் கருத்துக்கால் சற்றேனும்

    வந்ததோ பேத வழக்கு

    திருவிளக்கின் சுடரே-சிவபெருமான். சுடரிலுள்ள வெப்பம் பராசக்தி. சுடரின் செந்நிறத்தில் கணநாதனாம் கணபதியும் ஒளியிலே கந்தவேளும் இருப்பதாக தெய்வ நூல்கள் கூறுகின்றன.

    விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும். மானுட வாழ்வில் ஐம்பொறிகளையும் தன் வசப்படுத்தி ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐந்து முகங்கள் கொண்ட விளக்கினை வழிபடுகின்றார்கள்.

    இந்த ஐந்து முகங்களும், அன்பு, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை, மனஉறுதி எனும் ஐந்து குணங்களையும் குறிக்கின்றன. ஐந்து முகங்களிலும் திரியிட்டு தீபமேற்றி வழிபடும் பெண்கள் உன்னத பண்புகளைப் பெற்றிடுவார்கள்.

    விளக்கை நன்கு தேய்த்து துடைந்து பின்பு ஏற்ற வேண்டும். விளக்கில் விடும் எண்ணெய், நெய், இவற்றுக்கும் உரிய பலன்கள் உள்ளன. எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம்.

    சகல விதமான செல்வங்களையும் சுகபோகங்களையும் விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குலதெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில் கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும்.

    கணவன்-மனைவியரிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெயால் விளக்கேற்ற வேண்டும்.

    தேங்காய் எண்ணையால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசுநெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது.

    குடும்ப நலனுக்காகவும் உறவினரின் நலனுக்காகவும் விளக்கேற்றி பூஜிக்கும் பொழுது அதற்குரிய எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதைப்போல விளக்கில் போடப்படும் திரியையும் தேர்ந்தெடுக்க வேண்டும், எவ்வகையான திரியை பயன்படுத்தினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நமக்கு முன்னோர் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். அதைப் பின்பற்றினால் நாம் விரும்பும் பலனை அடைவதும் எளிது.

    பொதுவாக பஞ்சுத் திரியே விளக்கேற்றத் தகுந்தது. பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றினால் நல்லவையெல்லாம் பெறலாம். வாழைத்தண்டிலிருந்து நார் எடுத்து திரித்து காயவைத்து விளக்கேற்றலாம். இத்தகைய திரியைப் பயன்படுத்தி தெய்வ குற்றத்திலிருந்து விடுபடலாம்.

    இல்லத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று விரும்பினால், வெள்ளெருக்கின் இலைப் பட்டையினால் திரி செய்து அதனால் விளக்கேற்றலாம். இதுபோல தாமரைத் தண்டிலிருந்து பிரித்தெடுத்த நூலால் திரிசெய்து போட்டு தீபமேற்றினால் செல்வம் நிலைப்பதுடன், செய்த பாவங்களும் அகலும்.

    புதிதாக மஞ்சள் வண்ணத் துணி வாங்கி, அதில் திரி செய்து போட்டு தீபம் ஏற்றலாம். இதனால் அம்பாளின் பேரருள் கிடைக்கும். மேலும் நோய்களை அகற்ற வல்லது. சிவப்புத் துணியினால் திரி செய்து போட்டால், திருமண யோகம் கிட்டும். புத்திர பாக்கியமும் ஏற்படும்.

    'தீப மங்கள ஜோதி நமோநம' என்று விளக்கினை வழிபட்டவர் அருணகிரிநாதர். மங்கலங்களை அருளவல்ல தீபத்தை நாம் எந்த திசையில் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குரிய பலன்களை நாம் அடைவோம்.

    தென்திசை தவிர ஏனைய மூன்று திசைகளை நோக்கி தீபச்சுடர் இருக்குமாறு ஏற்றலாம். வீட்டில் ஏதேனும் பிரச்சினைகள், துன்பங்கள் இருந்தால் கிழக்கு நோக்கி ஏற்றி வழிபட்டு வந்தால் அவை விலகி விடும்.

    தடைகளை விலக்க நினைப்பவர்கள் வடதிசைநோக்கி விளக்கு ஏற்றி வழிபடலாம். கல்விக்கு ஏற்படும் தடைகள், திருமணத்தடை போன்ற தடைகள் விலகி, எல்லா நலன்களையும் பெறலாம்.

    பகை அகல வேண்டும், கடன் தொல்லை நீங்க வேண்டும், அமைதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கு திசை நோக்கி விளக்கின் சுடர் இருக்குமாறு ஏற்றி பூஜிக்கலாம். குத்துவிளக்கில் ஐந்து முகங்களிலும் திரியிட்டு விளக்கேற்றுவதால் புத்திர பாக்கியம் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவவேண்டுமென்று விரும்பும் பெண்கள் விளக்கின் இரண்டு முகங்களில் திரியிட்டு ஏற்ற வேண்டும்.

    சகல சவுபாக்கியங்களையும் அளித்திடும் திருவிளக்கு பூஜையை; அதற்குரிய நியமத்துடன் செய்ய வேண்டியது அவசியம்.

    திருவிளக்கை, புளி, எலுமிச்சம்பழம், அரப்பு, சாம்பல் இவற்றைப் பயன்படுத்தி விளக்க வேண்டும். ரசாயனம் கலந்த பொடிகளைப் பயன்படுத்தக்கூடாது. பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது.

    மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்கலாம். திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும், விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு, அதற்குக் கீழே மூன்றும், அதனடியில் இரண்டும், கீழ்ப்பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும். உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள். அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.

    விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்ற வேண்டும். இடையிடையே எண்ணெய் ஊற்றக்கூடாது. இரு திரிகள் இட்டு ஐந்து முகங்களிலும் ஏற்ற வேண்டும்.

    பூச்சரத்தையோ அல்லது மாங்கல்யச் சரட்டையோ விளக்கின் தண்டுப் பகுதியில் சுற்றலாம். விளக்கு பூஜை செய்கின்ற விளக்கின் சுடரிலிருந்து ஊது வத்தி, கற்பூரம் இவற்றை ஏற்றக்கூடாது.

    திருவிளக்கிலே தேவியே உறைகின்றாள். விளக்கை வழிபடுவதன் மூலம் தேவியை ஆராதனை செய்கின்றோம். அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப் பெற திருவிளக்கு பூஜை எளிமையானது.

    திருவிளக்கை அணைக்கும்பொழுது ஒரு துளிபாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம். குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும். 

    • பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
    • 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    இதையொட்டி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் இருந்து குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில்நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    அங்கு 5 மணிக்கு பஜனை, அதைத்தொடர்ந்து பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையை நடத்தினர்.

    • மூலஸ்தான தீபாராதனை நடந்தது.
    • பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாசி மாத கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 8 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. இரவு 7.30 மணிக்கு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான தீபாராதனை நடந்தது.

    இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சபரிமலையில் விளக்கு பூஜையை மானாமதுரை அய்யப்ப பக்தர்கள் நடத்தினர்.
    • விளக்கு பூஜை நிறைவாக மங்களாராத்தி முடிந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை வைகை ஆற்றுகரையில் உள்ள தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலைச் சேர்ந்த குருசாமிகள் சோடா மணி, அணைக்கட்டு பாண்டி ஆகியோர் தலைமையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை புறப்பட்டனர்.

    இவர்கள் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்த பின்னர் சன்னிதானம் அருகே தாங்கள் கொண்டு சென்ற இருமுடிகளை பிரித்து அதில் இருந்த காமாட்சி விளக்குகளை எடுத்து வரிசையாக வைத்து விளக்குகளுக்கு முன்பு அமர்ந்து விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர்.

    அதன் பின்னர் அய்யப்பன் புகழ் பாடும் பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர். விளக்கு பூஜை நிறைவாக மங்களாராத்தி முடிந்து பக்தர்கள் எடுத்துச் சென்ற விளக்குகள் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது.

    இது குறித்து குருநாதர்கள் அணைக்கட்டு பாண்டி, சோடா மணி கூறுகையில், உலக நன்மைக்காகவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் சுபிட்சமாக வாழவும், கொடும் நோய்தொற்றுகள் அழியவேண்டியும் முதல் முறையாக சபரிமலையில் எங்கள் குழு சார்பில் விளக்கு பூஜை நடத்தினோம் என்றனர்.

    • முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது. அதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் நடைபெற்றது. அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து 6.40 மணிக்கு சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளி தங்கரத புறப்பாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை, ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கார்த்திகை உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வாழைமரத்தால் ஆன 18 படிகள் உள்ளிட்ட அழகிய தோரணங்களுடன் அய்யப்பன் சன்னதி உருவாக்கப்பட்டிருந்தது.
    • செண்டைமேளம் முழங்க நடந்த இந்த விழா கேரள பாரம்பரிய முறைப்படி நடந்தது.

    உடுமலை : 

    உடுமலை தில்லை நகரில் ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீஅய்யப்பன் சன்னதி உள்ளது. இங்கு கேரள பாரம்பரிய முறைப்படி ஸ்ரீஅய்யப்பன் விளக்கு மஹோத்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முழுவதும் வாழைமரத்தால் ஆன 18 படிகள் உள்ளிட்ட அழகிய தோரணங்களுடன் அய்யப்பன் சன்னதி உருவாக்கப்பட்டிருந்தது.

    விழாவையொட்டி காலை 6 மணிக்கு கணபதிஹோமம், 7.30 மணிக்கு வாழைமரத்தால் உருவாக்கிய அம்பலத்தில், அய்யப்பசாமி பிரதிஷ்டை, மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை நடந்தது. மாலையில் உடுமலை ருத்ரப்பாநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இருந்து தாளப்பொலிவுடன் பாலக்கொம்பு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. செண்டை மேளம் முழங்க நடந்த இந்த நிகழ்ச்சியில் இரண்டு புறமும் பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீதர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் அய்யப்ப பஜனையும் நடந்தது. இரவு பாலக்காடு கடுக்கன்குளம் உன்னிகிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நிகழ்ச்சியும், பின்னர் ஸ்ரீஅய்யப்பன் சரித்திரம் உடுக்கை பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. செண்டைமேளம் முழங்க நடந்த இந்த விழா கேரள பாரம்பரிய முறைப்படி நடந்தது. நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நாள் தோறும் திருவிளக்கு வழிபாடு செய்து வர, 108 நாட்களில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நடக்கும்.
    • எண்ணெயில்லாமல் தானாக விளக்கை அணையவிடக் கூடாது.

    இரு விளக்குகளை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்துத்தான் வணங்க வேண்டும். காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி தினமும் வணங்கினால் செல்வம் பெருகும்.

    காலையிலும், மாலையிலும், குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் செல்வம் வற்றாது பெருகுவதுடன், நம் பாபமும் விலகும். விளக்கை கிழக்கு திரை நோக்கி வைப்பதுதான் சிறப்பு. எண்ணெய்யில்லாமல் தானாக விளக்கை அணையவிடக் கூடாது. பூஜை முடிந்து பத்து நிமிடம் கழித்து விளக்கைக் குளிர வைக்க வேண்டும். அன்றாடம் மாலையில் ஒரு முக விளக்காகிய `காமாட்சியம்மன் திருவிளக்கின்' திருவடியில் தாமரை மலரை வைத்து பாராயணம் செய்வது சிறப்பு ஆகும்.

    திருவிளக்குப் பூஜையில், விளக்கிற்கு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி வடுகிலும் வைத்து வர, அவர்களுடைய கணவர்கள் நலமுடன் வாழ்வார்கள். திருவிளக்கு பூஜை செய்யும் குத்து விளக்கை தலை வாழை இலை மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாக வையகத்தில் தழைத்தோங்கி, வாழ்வு பசுமையானதாக அமையும்.

    நாள் தோறும் திருவிளக்கு வழிபாடு செய்து வர, 108 நாட்களில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நடக்கும். தினசரி வீட்டில் திருவிளக்கு ஏற்றும் போது, `திருவிளக்கு அகவல்' படித்துவர நன்மை உண்டாகும். திருவிளக்குப் பூஜையின் போது இடது கையால் எந்த மங்கல காரியங்களையும் செய்யக் கூடாது. தீபம் ஏற்றும் போது ஒரே முயற்சியில் எரிவது நல்லது.

    தீபச் சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது, மெல்லத்தணிந்து அடங்கக் கூடாது. மிகச் சிறியதாக அல்லது மிகப் பெரியதாகச் சுடர் எரியாமல் திருவிளக்கின் அமைப்பிற்கும், அளவிற்கும் தகுந்தபடி எரிய வேண்டும்.

    சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அவற் றிற்குக் காரணமான திரியையோ அல்லது எண்ணெயையோ உடனே மாற்றிவிட வேண்டும்.பொதுவாக காமாட்சியம்மன் விளக்கின் திருச்சுடரைக் கொண்டு மற்றொரு விளக்கின் சுடரை ஏற்றமாட்டார்கள். பல அகல் விளக்குகளை அல்லது திருவிளக்குகளை ஏற்ற வேண்டியிருந்தால் முதலில் ஒரு விளக்கின் சுடரை ஏற்றி, அதன் மூலம் அனைத்து விளக்கின் சுடர்களையும் ஏற்றலாம்.

    திருவிளக்கு தொடர்ந்து எரிய வேண்டிய சூழ்நிலையில், விளக்கின் குழியில் எண்ணெயைத் தொடர்ந்து வார்த்துக் கொண்டிருப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். விளக்கில் குளம் போல் எண்ணெயை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.

    திருவிளக்கு பூஜையில் குத்து விளக்கிற்கு சிகப்பு வண்ண மலர்களைச் சாற்றலாம், லட்சுமி பூஜைக்கு செவ்வந்தி மலர் சாற்றலாம். விளக்கு பூஜையில் விளக்கு ஏற்றியவுடனே சந்தனம், குங்குமம் வைத்து விட வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு மெதுவாக மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு பொட்டு வைக்கக் கூடாது.

    திருச்சுடர் எதிர்பாராத காரணத்தால் தானே அணைவதும், எண்ணெய் இல்லாமல் அணைவதும் குற்றம் ஏற்படுத்தும் பூஜை நடைபெறும் போதும், மங்கலக் காரியங்கள் நடக்கின்ற போதும் லட்சுமிகரமாக எரிகின்ற திரிச்சுடரானது சட்டென்று அணைவது அமங்கலம் ஆகும்.

    திருச்சுடரில் மகாலட்சுமி நிறைந்து, நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது பெரிய குற்றமாகும். அன்புக் காணிக்கையாக ஒரு அரிசியை தீபத்தட்டில் வைத்து, `எப்பொழுதும் எம் உள்ளொளி பெருக வேண்டும்' என்று பிரார்த்தனை செய்து திரியை மெதுவாக உள்ளே இழுத்து ஒளியை நெய்யில் மறையச் செய்ய வேண்டும், அல்லது பூக்களால் அணைக்கலாம். அல்லது பால் துளிகளைக் தெளித்தும் திருச்சுடரைக் குளிர வைப்பது (அணைப்பது) மிகவும் பொருத்தமானது ஆகும்.

    அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். விளக்கைத் திரியால் தூண்டி விட வேண்டும். தீபம் லட்சுமி வாசம் செய்யும் இடம். மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க, எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். தீபம் வைத்த உடன் முகம் கழுவுதல், தயிர் கடைதல், காய்கறி நறுக்குதல், அரிசி களைதல் போன்றவைகளை செய்யக்கூடாது.

    • மதியம் உச்சிக்கால பூஜை, நெய்வேத்திய பிரசாதம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாலையில் மலர் பூஜை, மகா தீபாராதனை, ஐயப்ப பஜனை, இரவு அன்னதானம் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பிஞ்சலார் தெருவில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் 5-ம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், மூலவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், பக்தர்களுக்கு நெய்வேத்திய பிரசாதம், கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் உச்சிக்கால பூஜை, நெய்வேத்திய பிரசாதம், அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலையில் மலர் பூஜை, மகா தீபாராதனை, ஐயப்ப பஜனை, இரவு அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, வாண வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்நிகழ்ச்சியின்போது விரதம் இருந்த மாளிகைமார்கள் விளக்குகளை தட்டில் ஏந்திய வண்ணம் உலா வந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.
    • திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இந்த பூஜை நடைபெற்றது. பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சமயபுரம் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் பரமானந்தம், உள்துறை கண்காணிப்பாளர் அழகர்சாமி, அலுவலக பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், ஆதார் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று பணம் செலுத்தும் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேற்கண்ட பொருட்கள் விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பூஜையில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் 12 கோவில்களில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.
    • இன்று மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

    சென்னை :

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மாதம் தோறும் பவுர்ணமி அன்று தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தப்படும் என்று சட்ட சபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் இன்று மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடை பெற உள்ளது.

    சென்னையில் பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    மேலும் தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    இந்த பூஜையில் பங்கேற்கும் பெண்களிடம் இருந்து மொத்த செலவில் 4-ல் ஒரு பங்கு தொகையாக தலா ஒருவரிடம் ரூ.200 மட்டும் வசூலிக்கப்படுகிறது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்களின் புகைப்படம், முகவரி, செல்போன் எண், ஆதார் எண் ஆகியவற்றுடன் கூடிய பட்டியலை அந்தந்த கோவில்கள் பராமரிக்க வேண்டும் என்றும், ஒரு பூஜையில் பங்கேற்ற பெண்கள் அடுத்து வரும் பூஜைகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இந்த 12 கோவில்களிலும் 108 திருவிளக்கு பூஜையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

    திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு 125 கிராம் பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச்சிமிழ், மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுவத்தி, தீப்பெட்டி, தாலிக்கயிறு செட், விளக்கு திரி, தையல் இலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம், பூச்சரம், பூக்கள், 500 கிராம் பச்சரிசி, 100 மில்லி தீப எண்ணெய், பூஜை பை, சர்க்கரை பொங்கல் அல்லது புளியோதரை பிரசாதம், சேலை, ஜாக்கெட் துணி என ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

    தட்டார்மடம் அருகே கரிசல் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழாவை முன்னிட்டு 504 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.
    தட்டார்மடம் அருகே கரிசல் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா நான்கு நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. யாகசாலை பூஜை, விமான அபிஷேகம், முத்தாரம்மன், மாரியம்மன், பெரியம்மன், உஜ்ஜினியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேம் நடந்தது. பகல் 2 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அன்னதானம் நடந்தது.

    இரவு 7 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரண்டாவது நாள் பகல் 10 மணி, இரவு 7 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடுதல் நடந்தது. பகல் 2 மணிக்கு மஞ்சள் பெட்டி ஊர்வலமும், இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    மூன்றாவது நாள் காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. இரவு 7 மணிக்கு நாட்டில் கன மழை வேண்டி 504 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. நான்காவது நாள் காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை நடந்தது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பஜனையும் அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1,008 திருவிளக்கு பூஜைகள் மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

    அதனையொட்டி நடப்பு ஆண்டு வைகாசி முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று (22-ம் தேதி) கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் 50-வது ஆண்டு பொன்விழாவை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றம் திட்டம் சார்பில் 1,008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கன்னியாகுமரி சன்னதி தெரு வழியாக பகவதி அம்மன் கோவிலில் வந்தடைந்தார்கள்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 5.30 மணிக்கு பஜனையும் அதனைத் தொடர்ந்து 6.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
    ×