search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"

    • சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
    • ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுனர்கள் நியமனம் செய்வது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே இருக்கிறார்.அந்த சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

    மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு அது தயார் செய்யப்படாமல் இருந்தது. வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா-வங்கி புத்தகங்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.

    சென்னை:

    மழை காலங்களின்போது, பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எடுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அந்தவகையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், எந்தெந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது? என்ற முன்னெச்சரிக்கையின்படி, முந்தைய நாளோ அல்லது மழை பெய்யக்கூடிய நாளில் காலையிலோ விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. சமீபத்தில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.

    நேற்று கூட கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையையொட்டிய சில பகுதிகளும் வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் விரைவில் தீர்வு காணும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதேபோல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.
    • பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும்.

    சென்னை:

    6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதேபோல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.

    அதன்படி, 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பாடங்களுக்கான வினாத்தாளை 'எமிஸ்' என்ற தளத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்யவேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • திருவாரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
    • தில்லைவிளாகம் அரசு பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:-

    திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

    இதில் தில்லை விளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

    கேடயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

    இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடப்பு கல்வியாண்டில் 2023 அக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • உயர் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொழி ஆய்வகத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

    சென்னை:

    6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி 'தமிழ்நாடு மொழி ஆய்வகத்திட்டம்' தொடங்கப்பட்டது. இது மாணவர்கள் தங்கள் கணினிகள் வாயிலாக டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி சுய வேக கற்றலை அதிகரிக்கும் தளமாக பயன்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 2023 அக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஹெட்செட்டுகளும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

    இந்த திட்டத்துக்காக 6,029 அரசு பள்ளிகளில் ஆங்கில பாடத்தை கையாளும் ஆசிரியர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்தில் ஒரு நாள் ஆங்கில பாடவேளை மொழி ஆய்வக திட்டத்துக்காக ஒதுக்கப்படும். அந்த நாளில் மாணவர்கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொழி ஆய்வகத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரிசெய்வதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த மாத இறுதிக்குள் அதற்கான பாடவேளை அட்டவணைகளை உருவாக்க வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பள்ளி நலன் சார்ந்த சில அறிவுரைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பருவமழை காலத்துக்கு முன்பாக பள்ளி வகுப்பறைகளின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் தேங்கியுள்ள இலைகளை அகற்றி மழைநீர் எளிதாக வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

    பள்ளியில் உள்ள மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை எக்காரணம் கொண்டும் மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது. பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் மின் இணைப்புகள் முறையாக பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மின் கம்பிகள், மின்சாதனங்கள் பழுதுப்பட்டிருந்தால் மின் இணைப்பினை துண்டித்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளி வளாகத்தில் திறந்தநிலை நீர்நிலைகள், பள்ளங்கள் மாணவர்கள் அணுகா வண்ணம் சுற்றுவேலி அமைத்தல், கிணறு மற்றும் நீர்நிலை தொட்டிகளில் மேற்புறம் முழுவதும் மூடிய அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

    புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை, மதியம் வழங்கப்படும் சிற்றுண்டி மற்றும் உணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.
    • பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பள்ளி பாதுகாப்பிற்கென, ஆய்வு அலுவலர்களும், பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

    1. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    2. கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மேற்கூறிய அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    3. மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும்.

    4. மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும்.

    5. தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

    6. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    7. அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்புகொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.

    8. மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    9. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    10. மழைக்காலங்களில் ஏரிகள், ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    11. பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    12. மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    13. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    14. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

    15. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றப்படவேண்டும்.

    16. சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    17. பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள், கைப்பிடிச்சுவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சன்னல், கதவுகளுக்கு மேல் உள்ள கைப்பிடிச் சுவர்கள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    18. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

    19. பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள

    சுகாதார நிலையங்களுக்கு சென்று அறிவுறுத்தவேண்டும்.

    20. மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும் சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீர் தேங்குவதினால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும்.

    21. பள்ளிகளில் இடிக்கக்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரை தொடர்ப்பு கொண்டு இடித்திடல் அவசியம். இல்லையெனில் அக்கட்டடத்திற்கு அருகில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

    22. பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.

    23. மழைக்காலங்களில் சுட வைத்த நீரைப் பருக அறிவுறுத்த வேண்டும்.

    24. கடலோர பகுதிகள் கொண்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கடும் மழை அல்லது புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் கடலோர பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கவைப்பதற்கான உரிய இடவசதி இருப்பின் உரிய முன்னேற்பாடுளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்படுகிறது.

    • 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
    • நிகழ்ச்சி நடைபெறும் தினத்தன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் மாநில அரசு சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 342 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 38 பேர், ஆங்கிலோ இந்தியன், மாற்றுத்திறனாளிகள், சமூக படையில் (என்.சி.சி., என்.எஸ்.எஸ்.) தலா 2 பேர் என மொத்தம் 386 சிறந்த ஆசிரியர்கள் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

    இவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவர்களுக்கான விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்க இருக்கிறார். இந்த நிலையில் விருதுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் தங்களுடன் இரண்டு பேரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வரலாம். நிகழ்ச்சி நடைபெறும் தினத்தன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதே போல் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் அதற்கான அத்தாட்சியுடன் பள்ளியில் இருந்து விடுவித்து இந்த விழாவில் பங்கேற்க அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    • அடுத்த மாதம் நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
    • தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது.

    சென்னை:

    6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.

    அதாவது, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டி.ஐ.இ.டி.) வாயிலாக விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது.

    இந்த நிலையில் தற்போது மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்து இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் இருந்து இதனை அமல்படுத்த திட்டமிட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் பழைய நடைமுறையில்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, மாநில அளவில் தயாராகும் பொது வினாத்தாள்கள் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (டி.என்.எஸ்.சி.இ.ஆர்.டி.) வந்து சேரும். பின்னர், அங்கிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதற்கேற்றாற்போல், வருகிற 2-ந் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் 2 செட் வினாத்தாள்களை தயாரிக்க, தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, '6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொது வினாத்தாள் நடைமுறை சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது' என்றார்.

    பொது வினாத்தாள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    கடந்த தேசிய சாதனை ஆய்வு மற்றும் மாநில அளவிலான சாதனை ஆய்வில் மாணவ-மாணவிகளின் கற்றல் விளைவு மிகவும் மோசமாக இருப்பதாக தெரியவந்தது. அதற்கான காரணத்தை தீவிரமாக ஆய்வு செய்ததில், மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் மாணவர்களின் கற்றல் நோக்கங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்கள் வடிவமைத்தது கண்டறியப்பட்டது. இதனை கருத்தில் கொண்டுதான், தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் முடிவை ஒரே சீராகவும், சரியாகவும் மதிப்பிட முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை தேர்வு.
    • வினாத்தாள்கள் முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

    மேலும், தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கு முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதனை சார்ந்த அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
    • மாணவர்களை தமிழில் பெயர் எழுதவும், கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும்.

    சென்னை:

    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பித்தது.

    அந்த அரசாணையை பின்பற்றும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, அதனை சார்ந்த அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் அரசாணையை செயல்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் வருகைப்பதிவு மற்றும் இதர ஆவணங்களில் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவர்களையும் தமிழில் பெயர் எழுதவும், கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
    • திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடக்கும் என்று மாநில தலைவர் தெரிவித்தார்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

    அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 25-ந் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் இந்த அழைப்பில் பொதுவாக குறிப்பிட்டுள்ள சங்கம் என்பது குழப்பமாக இருக்கிறது என்றும், எங்களுக்கு அப்படி ஒரு அழைப்பு வரவில்லை என்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். மேலும் அவர், வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

    இதேபோல், 1.6.2009-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கமும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது. அதன் மாநில தலைவர் ராபர்ட், 'திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடக்கும்' என்று தெரிவித்தார்.

    ×