search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது வினாத்தாள்"

    • காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    திருப்பூர்:

    பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 19ந் தேதி முதல் 27ந் தேதி வரை, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு வழக்கமாக, அந்தந்த மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    ஆனால் தற்போது நடக்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து வரும் வினாத்தாளை அந்தந்த மாவட்டங்களில் நகலெடுத்து தேர்வு நாளன்று காலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், காலாண்டு தேர்வை பொதுவினாத்தாள் முறையில் நடத்துவதன் மூலம், கல்வியில் பின்தங்கிய பள்ளிகளை கண்டறியலாம்.

    அங்குள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணலாம். குறிப்பாக 6-ம் வகுப்பில் இருந்தே, பொது வினாத்தாள் முறையில் இனிவரும் தேர்வுகளை நடத்த வேண்டும்.

    அப்போது தான் மாணவர்களின் கற்றல் நிலையை பரிசோதிக்க முடியும் என்றனர்.

    • அடுத்த மாதம் நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
    • தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது.

    சென்னை:

    6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.

    அதாவது, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டி.ஐ.இ.டி.) வாயிலாக விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது.

    இந்த நிலையில் தற்போது மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்து இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் இருந்து இதனை அமல்படுத்த திட்டமிட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் பழைய நடைமுறையில்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, மாநில அளவில் தயாராகும் பொது வினாத்தாள்கள் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (டி.என்.எஸ்.சி.இ.ஆர்.டி.) வந்து சேரும். பின்னர், அங்கிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதற்கேற்றாற்போல், வருகிற 2-ந் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் 2 செட் வினாத்தாள்களை தயாரிக்க, தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, '6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொது வினாத்தாள் நடைமுறை சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது' என்றார்.

    பொது வினாத்தாள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    கடந்த தேசிய சாதனை ஆய்வு மற்றும் மாநில அளவிலான சாதனை ஆய்வில் மாணவ-மாணவிகளின் கற்றல் விளைவு மிகவும் மோசமாக இருப்பதாக தெரியவந்தது. அதற்கான காரணத்தை தீவிரமாக ஆய்வு செய்ததில், மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் மாணவர்களின் கற்றல் நோக்கங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்கள் வடிவமைத்தது கண்டறியப்பட்டது. இதனை கருத்தில் கொண்டுதான், தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் முடிவை ஒரே சீராகவும், சரியாகவும் மதிப்பிட முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×