search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிமூட்டம்"

    • இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    • டெல்லியில் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வருகின்றன.

    புதுடெல்லி:

    வடஇந்தியாவில் குளிர்காலம் என்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. காலையில் மக்கள் எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    டெல்லி ரெயில் நிலையத்திற்கு வரும் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது.
    • வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவும், மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது. இதில் இன்று அதிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

    கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.

    மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நீலகிரிக்கு வந்தவர்கள் நேற்று மாலை முதல் சமவெளி பகுதிகளுக்கு திரும்பி கொண்டு வருகின்றனர். இன்று காலையும் ஏராளமானோர் ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன. கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கி செல்கிறார்கள். வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உறைபனி அதிகமாக உள்ளது. இன்றும் உறைபனி அதிகமாக காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உறைபனி கொட்டி புல்தரை முழுவதும் மறைந்து, வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காணப்பட்டது.

    இதுதவிர கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களிலும் உறைபனி கொட்டி இருந்தது. அதனை பொது மக்கள் அகற்றி விட்டு தங்கள் பணிக்கு சென்றனர்.

    இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 23.07 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து காத்து கொள்ள குல்லா, சுவர்ட்டர் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

    ஆங்காங்கே தீ மூட்டியும் மக்கள் குளிர் காய்ந்து வருகிறார்கள். ஊட்டியில் கொட்டி வரும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவர்கள் சுவர்ட்டர் அணிந்து கொண்டும், தலையில் குல்லா அணிந்து சென்றதையும் காணமுடிந்தது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

    • டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் பனியால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    லக்னோ:

    வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.

    டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாகின. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிதில் ஒருவர் பலியானார்.

    இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அங்கு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

    • 24-ந் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

    24-ந் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் நிலவும். 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    • ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

    இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    • கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது கேரளாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான தூண்பாறை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கேரள சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கொடைக்கானலில் காலை முதல் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்தி வருகின்றனர். மலைச்சாலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    கடும் பனி மூட்டத்தால் சுற்றுலாத்தலங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். 

    • பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
    • தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டுதோறுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் இங்குள்ள காட்சி முனைகளை ரசித்து பார்த்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள்.

    குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏற்காடு நகரமே களை கட்டும்.

    கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். மேலும் தொடர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவட்டர், உல்லன் ஆடைகளை அணிந்து வந்து செல்கிறார்கள். மேலும் பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    மதியம் 3 மணிக்கு மேல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அது காலை 10 மணி வரை நீடிக்கிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி வந்து செல்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் உல்லன் ஆடைகளை அணிந்து கொண்டு பனிமூட்டத்தில் நடைபயிற்சி சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சிலர் பனிமூட்டத்தில் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. ஆனால் சேலம் மற்றும் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பேர் தினமும் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் நிலவி வரும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.

    • காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.
    • சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் குறைந்த அளவு வெயில் மற்றும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.

    மாறுபட்ட இந்த சூழ்நிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் மேகமூட்டம் நிலவிய நிலையில் அவ்வப்போது மழை பெய்து பின்னர் இரவில் கனமழையாக கொட்டி தீர்த்தது.

    இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டமும், சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில் மாணவ-மாணவிகளும் சிரமத்துடனேயே பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. காலை நேரத்தில் நீண்டநேரம் இதேபோல் பனிமூட்டம் நிலவியதால் ஏரிச்சாலையில் ஒரு சில இடங்களில் தீமூட்டி குளிர்காய்ந்தும் வந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு இந்த சீதோஷ்ண நிலை ரம்மியமாக இருந்தாலும் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    • 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது
    • அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தது

    போளூர்:

    போளூர் பகுதியில் கடந்த வாரம் திடீரென்று தொடர்ந்து 5 நாட்கள் கோடை மழை பெய்தது.

    இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. ஒரு சில பகுதியில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தது.

    இந்த நிலையில் 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது இன்று காலை ஒரே பனிமூட்டமாகவும் இருந்தது இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.

    • கடந்த வாரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.
    • சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் அதிகாலை 5 மணி முதல் நடைபயிற்சியில் பொதுமக்கள் ஈடுபடுவார்கள்.

    சென்னை:

    பருவமழை காலம் முடிந்த போதிலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பனியும் குளிரும் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது.

    தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்ட போதிலும் அதிகாலை வேளையில் ஒருசில மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

    கடந்த வாரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.

    இந்த நிலையில் இன்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. சாலைகள் தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் இருந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    காலை 7 மணிவரை பனிப்பொழிவு இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தினார்கள். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நகரின் முக்கிய சாலைகள், வீதிகளில் மட்டுமின்றி பூங்காக்களிலும் பனிமூட்டம் காணப்பட்டதால் நடைபயிற்சி செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

    சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் அதிகாலை 5 மணி முதல் நடைபயிற்சியில் பொதுமக்கள் ஈடுபடுவார்கள். பனிமூட்டத்தின் காரணமாக நடைபாதையே தெரியாததால் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    தலையை துணியால் முழுமையாக மூடியவாறு நடந்து சென்றனர். தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் அதிகம் பாதிக்கப்படுவதால் பனியில் வெளியே வருவதை தவிர்க்கின்றனர்.

    • பனிமூட்டத்துக்கிடையே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர்.
    • கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 15 நாட்களாக கடும் குளிருடன் உறைபனி பொதுமக்களை வாட்டி எடுத்தது. கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் கடும் உறைபனி நிலவியதால் பொதுமக்களின் அன்றாடப்பணிகள் பாதிப்படைந்தது.

    அதிகாலை நேரங்களில் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாத விவசாயிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி வந்தனர். மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. ஏரிச்சாலை பகுதியில் கடும் உறைபனி நிலவியதால் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முழுமையான பனிமூட்டம் நிலவியது.

    இதன் காரணமாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மாலை வேளையில் திடீர் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. விட்டு விட்டு பெய்த சாரல் மழை இரவு 12 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக உறைபனி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இன்னும் ஓரிரு நாட்கள் மழை தொடர்ந்தால் பனிக்காலம் குறைந்து இதமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்றும் காலையில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் காலை நேரங்களில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.

    பனிமூட்டத்துக்கிடையே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். பனிக்காலம் ஓரளவு குறைந்தாலும் கடும் பனிமூட்டமும், சாரல் மழையும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது.

    இருந்தபோதும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    • டெல்லியில் இந்த குளிர்கால பருவத்தின் போது பல்வேறு பகுதிகளில் மிக கடுமையாக பனி சூழ்ந்து காணப்படுகிறது.
    • காலை நேரத்தில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது.

    இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அங்கு 2.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே பதிவானது.

    அதாவது 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பமே காணப்பட்டது. இதனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. இதனால் காலையில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    மேலும் டெல்லியில் இந்த குளிர்கால பருவத்தின் போது பல்வேறு பகுதிகளில் மிக கடுமையாக பனி சூழ்ந்து காணப்படுகிறது. காலை நேரத்தில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    இதனால் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே செல்கின்றன. ஆனாலும் வாகனங்களில் செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    டெல்லி விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் விமானங்கள் வந்து இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வந்து சேரும் விமானங்கள் காலதாமதமாகவே வருகின்றன.

    அதன்படி டெல்லியில் 20 விமானங்களில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவை காலதாமதமாக வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனி மூட்டம் காரணமாக விமானங்கள் வேறு எங்கும் திருப்பிவிடப்படவில்லை. காலதாமதமாக தரை இறங்குகிறது.

    ×